இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பை முன்வைத்து...

புதுச்சேரி ஒன்றியம் என்பது புதுச்சேரி, காரைக் கால், மாகி, ஏனாம் என்னும் பகுதிகளை உள்ளடக்கிய தாகும். இப்பகுதிகள் நிலவியல் ரீதியாகத் தனித் தனியாகக் காணப்பட்டாலும், பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்தபோது இப்பகுதிகளை உள்ளடக்கியே அவர்களின் ஆட்சி அமைந்திருந்தது.

இவற்றில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைத் தமிழகத்தின் கிழக்குப் பகுதியிலும், மாகி கேரளா விலும், ஏனாம் ஆந்திராவிலும் அமைந்துள்ளது. மொழி யால், கலாசாரத்தால், பண்பாட்டால் மற்றும் அனைத்துச் சமூகப் பழக்கவழக்கங்களாலும் தமிழகத்தின் ஒரு அங்கமாகக் காணப்படுவது புதுச்சேரி மற்றும் காரைக்கால் மட்டுமே. தமிழ்ச் சமூக வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் தோன்றிய சாதிய முறை இன்றும் தமிழ்மக்களிடையே பெரும் பாகுபாட்டை வளர்த்துவருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டிலும் இப்பாகுபாடு புதுச்சேரி, காரைக் கால் வாழ்மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற் படுத்தியது. இச்சாதிய முறையைப் பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பல நாட்குறிப்புகள் தெளிவு படுத்துகின்றன. இவற்றுள் இக்கட்டுரைக்கு ஒரு நாட்குறிப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. அது இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பாகும்.

இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பு

பதினெட்டாம் நூற்றாண்டு புதுச்சேரி வரலாற்றை அறிய உதவும் முக்கிய முதல்நிலை ஆதாரமாகக் காணப்படும் ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு 1736 முதல் 1761ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றை மட்டும் தருகிறது. இரண்டாம் வீராநாயக்கர் நாட் குறிப்பு 1778 முதல் 1792 வரையிலான புதுச்சேரி வரலாற்றை அளித்துப் பதினெட்டாம் நூற்றாண்டைப் பூர்த்தி செய்கிறது. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு மற்றும் வாணிபம் போன்ற அனைத்து நிகழ்வுகளும் இந்நாட்குறிப்பில் பதிவு செய்யப் பட்டுள்ளன.

நாட்குறிப்பு எழுதிய வீராநாயக்கரின் இயற் பெயர் வீராசாமி நாயக்கர் எனச் சில இடங்களில் குறிப்புகள் உள்ளன. இவரின் கொள்ளுத் தாத்தா வான பெருமாள் நாயக்கர் 1700ஆம் ஆண்டு முதல் 1741 வரை புதுச்சேரியில் “இரண்டாம் நயினாராக” பதவி வகித்தார். அதாவது புதுச்சேரி வாழ் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும் மன்றத்துக்கு பிரெஞ்சு அரசு அமைத்த காவல்துறைத் தலைவருக்கு அடுத்த படியான அதிகாரியாகப் பணிபுரிந்தார். இவருக்குப் பின் இவரின் மகனான வீராநாயக்கர் அப்பதவியில் அமர்த்தப்பட்டார். இவரும் தன் தந்தையைப் போலவே தம் பணியைச் சீரிய முறையில் சிறப்பாகச் செய்தார். ஆனந்தரங்கம்பிள்ளை தமது நாட் குறிப்பில் இவரைப்பற்றிக் குறிப்பிடுகிறார். பின் 1748-இல் புதுச்சேரி ஆங்கிலேயர் வசம் வந்த போது இவரின் பணி நிறுத்தப்பட்டது.

1754ஆம் ஆண்டு மறுபடியும் புதுச்சேரி பிரெஞ்சுக் காரர்கள் வசம் வந்ததும் வீராநாயக்கரின் மகனான ராசகோபால நாயக்கர் பதவி ஏற்றார். அரசின் நம்பிக்கைக்குரிய பணியாளராக ராசகோபால நாயக்கர் விளங்கினார். இவர் சுமார் 38 ஆண்டுக்காலம் இரண்டாம் நயினார் பதவி வகித்தார். இவருடைய புதல்வர்களில் ஒருவரான வீராநாயக்கரே இந்நாட் குறிப்பு எழுதியவர். தாத்தாவின் பெயரைக் கொண் டிருப்பதனால் இவர் இரண்டாம் வீராநாயக்கர் என அழைக்கப்படுகிறார்.

புதுச்சேரி மறுபடியும் ஆங்கிலேயர் வசம் வந்ததால் தமது மூதாதையர்களின் பதவியில் இரண்டாம் வீராநாயக்கர் அமர முடியவில்லை. ஆங்கிலேயரிடம் இருந்து புதுச்சேரி 1816ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரரிடம் வந்தபின் இரண்டாம் வீரா நாயக்கர் தம் முன்னோர்கள் வகித்த பதவியைத் தமக்கு அளிக்குமாறு வேண்டி விண்ணப்பம் செய்தார். ஆனால் வேலை கிடைத்ததா என்பது சரிவரத் தெரியவில்லை. இவர் மறைந்த ஆண்டும் தெரியவில்லை.

புதுச்சேரியில் 1844-1854-ஆம் ஆண்டுகளில் அரசுப் பணியாற்றியவர் எதுவட் அரியேல். இவர் தமிழ்ப்பண்பாட்டிலும், தமிழ்மொழியிலும் அதிகப் பற்று கொண்டவர். இவர் தமிழை நன்கு கற்றதோடு நூல்கள், சுவடிகள், குறிப்புகள் போன்றவற்றைத் தேடிச் சேகரித்தார். இவரின் திடீர் மறைவுக்குப் பின் இவரின் சேகரிப்புகள் பிரான்சின் தலைமை நூலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.

புதுச்சேரியில் பிறந்து பிரான்சில் தம் உயர் கல்வியைப் பயின்ற கோபாலகிருஷ்ணன் என்பவர் ஒரு சிறந்த வரலாற்று ஆராய்ச்சியாளர். பாரிசில் உள்ள தேசிய நூல்நிலையத்தில் பற்பல ஆண்டுகள் தமிழ் வரலாற்றை ஆய்வு செய்தபோது, அங்கு இந் நாட்குறிப்பைக் கண்டுபிடித்தார். இவர் இந்நாட் குறிப்பைச் சரிவரத் தொகுத்து பிப்ரவரி 1992-இல் வெளியிட்டார். இந்நாட்குறிப்பு ஒரு வரலாற்றுக் கருவூலமாக விளங்குகிறது.

புதுச்சேரி வாழ்சாதிகள்

1778ஆம் ஆண்டு துவங்கி 1792ஆம் ஆண்டு வரையிலான வீராநாயக்கரின் நாட்குறிப்பு புதுச் சேரி வாழ் சாதிகளை அறியப் பெரிதும் உதவுகிறது. மேலும் சாதிகளுக்கிடையே உள்ள தொடர்பு, முரண்பாடுகள் போன்ற செய்திகளும் இடம்பெறு கின்றன. சாதிகளுக்குள் ஏற்பட்ட உட்பூசல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெள்ளாளர், கோமுட்டி, கைகோளர், செட்டி, கருமர், அகம்படையர், முதலி, நாயக்கர், சாடர், பிள்ளை, கவரை, சக்கிலி, இடையர், மேளக்காரர், காசுக்காரர், பவளக்காரர் எனப் பல சாதிகளைப்பற்றிய பதிவுகள் இந்நாட்குறிப்பில் உள்ளன.

இச்சாதிகள் வலங்கை சாதி, இடங்கை சாதி எனவும் பிரிக்கப்பட்டிருந்தன. பொதுவாக வலங்கை சாதியினர் இடங்கை சாதியினரைத் தமக்குக் கீழ்ப் பட்டவர்களாகவே கருதினர். சில நேரங்களில் வலங்கை சாதியினர் பெறும் உரிமைகளை இடங் கையினர் கோரும்போது முரண்பாடுகளும் சச்சரவுகளும் ஏற்படுகின்றன.

நாட்குறிப்பின்படி மேளக்காரர், செட்டி, கம்மாளர், கருமர், சக்கிலி போன்றவர்கள் இடங்கை சாதியினர் என்றும் பிள்ளை, கவரை, கோமுட்டி, கைகோளர், முதலி, அகம்படையர் போன்றவர்கள் வலங்கை சாதியினர் என்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் வீராநாயக்கர் மார்ச் மாதம் 2-ஆம் தேதி 1785ஆம் ஆண்டு நாட்குறிப்பில் வலங்கை, இடங்கை சச்சரவைத் தீர்க்கும்படியான பொறுப்பு ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பிமகனான ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளையிடம் கொடுக்கப்பட்டதாகப் பதிவுசெய்கிறார்.

சாதிகளின் நடமாட்ட உரிமையும், மறுப்பும்

பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் புதுச்சேரி அழகும், பொலிவும் பெற்றது எனலாம். பிரெஞ்சு நாட்டில் உள்ளது போன்ற நேரான, சரியாகப் பராமரிக்கப்பட்ட சாலைகள் இருந்தன. ஆயினும், சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வரும் சாலை, சாவடித்தெரு, இன்னும் சில தெருக்கள் மட்டுமே பொதுவழிகளாகக் கருதப்பட்டன. மற்ற அனைத்துத் தெருக்களும் சாதியின் பெயரைக்கொண்டு வழங்கப் பட்டன. உதாரணமாக, வெள்ளாளத்தெரு, பிராமணத் தெரு, பள்ளத்தெரு, செட்டித்தெரு, யாதவர் தெரு, கோமுட்டித்தெரு, முதலித்தெரு, கைகோளர் தெரு போன்றவற்றைக் கூறலாம். பெரும்பாலும் மக்கள் அவரவர் சாதியின் தெருக்களிலேயே குடியிருந்தனர்.

ஒரு சாதியினரின் தெருவுக்குள் மற்ற சாதியினர் செல்லும்போது சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. குடை யுடன் செல்லும்போதும், திருமண ஊர்வலங்கள் செல்லும்போதும் மற்ற சாதியினரை மதிக்காததாகக் கருதப்பட்டது.

1785ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி நாட் குறிப்பின்படி வரதராச பெருமாள் கோயில் தேர் இடங்கை சாதியினர் தெருவுக்குள் செல்லக் கூடாது என வலங்கை சாதியினர் பெரும் எதிர்ப்பைத் தெரி வித்துள்ளனர். இதனால் இடங்கை, வலங்கை சாதி களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இப்பிரச்சினை கவர்னர் செனரல் கோசிஜினிடம் கொண்டு செல்லப் பட்டது. இப்பிரச்சினை பெரிதானதால் கவர்னர் ஊர்வலத்தை நிறுத்தும்படி உத்தரவிட்டார்.

1789ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நாட் குறிப்பில் வலங்கை சாதியினரான யாதவருடைய தெருவில் இடங்கை சாதியினரான திருவம்பல செட்டி மகன் பல்லக்கில் சென்றார். இதற்கு வலங்கை சாதியினர் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

வலங்கை சாதியினர் இடங்கை சாதியினரின் தெருவுக்குள் செல்லும்போது அதிகமான சச்சரவு ஏற்படவில்லை. இவ்வாறு குடிகள் சாதியின் பெயரால் நடமாட்ட உரிமையை இழந்திருந்தனர்.

பல்லக்கு உபயோகம்

பதினெட்டாம் நூற்றாண்டில் வாகனப் போக்கு வரத்து மிகவும் குறைவாகக் காணப்பட்டது. பெரும் பாலான பொதுமக்கள் நடந்தே தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். சிலர் பல்லக்கு, குதிரை, மாட்டு வண்டி போன்றவற்றையும் பயன்படுத்தினர்.

இந்நாட்குறிப்புகள் சில, பல்லக்கு உபயோ கத்தைப் பதிவுசெய்கின்றன. 1785ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி இடங்கை சாதியைச் சேர்ந்த தேவரா செட்டி என்பவர் திருமண ஊர்வலத்தில் பல்லக்கு உபயோகித்தார். இதனை வலங்கை சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். கவர்னர் கோட்டேனஸ் இப்பிரச்சினையை விசாரிக்கையில், பல்லக்கு உபயோகிப்பது தங்களது உரிமை என்றும் இதனை இடங்கையர் உபயோகிக்கக்கூடாது என்றும் பிரச்சினை செய்தனர். இறுதிவரை சுமூக தீர்வு ஏற்படாத காரணத்தால், கவர்னர் அனைத்துப் பல்லக்கு ஊர்வலத்தையும் நிறுத்த உத்தரவிட்டார்.

பின்பு 1791ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி வலங்கை சாதியினரான முத்துவிஜய திருவேங்கிடம் பிள்ளையின் மகன் திருமண ஊர்வலம் பதிவு செய்யப் பட்டுள்ளது. திருமணம் வெகு விமரிசையாக பச்சைப் பல்லக்கில் யானையின் மேல் அமர்ந்து சகல தெருக் களிலும் ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது. ஒரு சச்சரவும் இன்றி ஊர்வலம் நடந்ததாக நாட்குறிப்பு கூறுகிறது. இது வலங்கையாருக்குக் கொடுக்கப் பட்ட உரிமை இடங்கையாருக்கு மறுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.

வெள்ளைக் குடை சச்சரவு

நாட்குறிப்பு வெள்ளைக்கொடி, குடை, உப யோகத்தில் வலங்கை, இடங்கையாருக்கிடையே சச்சரவு ஏற்பட்டதைப் பதிவு செய்துள்ளது. 1788 ஜனவரி 14 ஆம் தேதி நாட்குறிப்பில் இடங்கை சாதி யினரான பொன்னப்ப செட்டியின் மகன் ஒரு பட்டுக்குடையும், அழகிய மணவாள செட்டி மகன் ஒரு குடையும் பிடித்துக்கொண்டு வலங்கை சாதி யினர் தெருவில் சென்றனர். இதைப் பார்த்த மகா நாட்டார்கள் மிகவும் கோபம் கொண்டனர். மறு நாள் 30 வலங்கையார் கவர்னர் செனரல் கனுவே யிடம் முறையிட்டனர். இதன்படி கனுவே இரு வரையும் சிறையிலடைத்தார்.

மற்றொரு சமயம் வலங்கையினரான சுப்புராய பிள்ளை என்பவர் குடைபிடித்துக்கொண்டு செட்டித் தெருவுக்குள் சென்றார். அப்போது செட்டிகள் செனரலிடம் முறையிட, அவர் விசாரித்தார். சுப்புராய பிள்ளை செனரலிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டவுடன் மன்னிக்கப்பட்டுக் கூட்டம் கலைக்கப்பட்டது. இவ்வாறு குடை உபயோகத்தில் சச்சரவு ஏற்பட்டுள்ளது.

நகரா

நகரா என்பது பெருமுரசு வகைகளுள் ஒன்று. இந்த வாத்தியம் தற்போதும் சில இந்துக் கோயில் களிலும் இஸ்லாமியப் பள்ளிகளிலும் காணப்படு கிறது. இதன் ஓசை இனியதாக இல்லாவிட்டாலும், ஒலி அதிக தூரம் வரை செல்கிறது. இதனால் நகரா செய்தி அறிவிக்கும் கருவியாகச் செயல்பட்டது.

1785ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி நாட் குறிப்பில் நகரா வாத்தியத்தைப் பற்றிய செய்தி உள்ளது. வலங்கை, இடங்கை சாதியினருக்குத் தனித்தனியே கோயில்கள் உள்ளன. இதில் இடங்கை சாதியினர் கோவிலில் நகரா முழங்கும் சப்தம் கேட்டதும் வலங்கை சாதியினர் திரண்டு வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ‘நகரா வாத்தியத்தை இயக்கும் உரிமை வலங்கை சாதி யினராகிய எங்களுக்கு மட்டும்!’ என சச்சரவு செய்தனர். செனரல் சுலியாக் இப்பிரச்சினையை விசாரிக்கையில் எந்தவொரு தீர்வும் ஏற்படாததால், நகரா வாசிக்க இருதரப்பினர்களின் கோவில் களிலும் தடைசெய்தார்.

சாதித்தலைவர்

நாட்குறிப்பின் வாயிலாக ஒவ்வொரு சாதிக்கும் சாதித்தலைவர் இருந்ததை அறியமுடிகிறது. இவர் களில் இடங்கை சாதித்தலைவர் நாட்டார் எனவும், வலங்கை சாதித்தலைவர் மகாநாட்டார் எனவும் அழைக்கப்பட்டனர். புதுச்சேரியில் பதினெட்டு மகாநாட்டாரும் பல நாட்டாரும் இருந்ததாகச் செய்திகள் உள்ளன. அந்தந்தச் சாதி மக்கள் இணைந்து தங்கள் தலைவர்களைத் தேர்வு செய்தனர். தலைமை துபாசி இவர்களைப் பதவியில் அமர்த்துவார்.

தங்களது சாதிக்குள் ஏற்படும் சச்சரவுகளை சாதித்தலைவர் தீர்த்துவைப்பார். வரிவசூல் செய்து கம்பெனியாருக்கு அளிப்பது போன்ற பணிகளையும் இவர்கள் செய்துவந்தனர்.

இவர்கள் தங்களது சாதி உரிமைகளை நிலை நாட்டுவதில் பெரும் கவனம் கொண்டிருந்தனர். வலங்கையராகிய மகாநாட்டார்கள் வெள்ளைக் கொடி, குடை உபயோகித்தல், நகரா வாசித்தல், ஊர்வலங்கள் செல்லுதல் போன்றவற்றில் தங்களது சாதியப் பெருமையை நிலைநாட்டுவதில் பெரும் பங்கு வகித்தனர்.

1785ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நாட் குறிப்பில் கவர்னர் குத்தான்சோ மற்றும் மகா நாட்டார்களுக்கிடையிலான சந்திப்பு பதிவு செய்யப் பட்டுள்ளது. மகாநாட்டார்கள் பரிசுகொடுத்து கவர்னரை வாழ்த்தி மகிழ்வித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது.

1791 ஆகஸ்டு 23ஆம் தேதி கடைவீதிகளில் கடையடைப்பு நடந்தது. இதற்கான காரணத்தை உடனே அறிந்து பதிலளிக்குமாறு சாதித் தலைவர்கள் உத்தரவிடப்பட்டனர்.

1791 டிசம்பர் 1ஆம் தேதி நாட்குறிப்பில் மேயர் சவாரியேர் சாதித்தலைவர்களை முனிசிபலிலே கூடிவரச் செய்தனர். புதுச்சேரி மக்களின் பொது நலனுக்காக பிரெஞ்சு அரசு ரூ.16,000 செலவு செய்த தாகவும், அதனால் இதில் பாதிச் செலவுப் பணத்தைப் புதுச்சேரி மக்களிடம் வசூலித்துத் தரும்படியாகவும் உத்தரவிடப்பட்டனர். இவ்வாறு மக்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் சாதித்தலைவர்கள் பங்கு பெற்றனர்.

குழுநியமனம்

வீராநாயக்கர் நாட்குறிப்பில் 1787 ஆம் ஆண்டு டிசம்பர் 14 தேதியில் அரசால் நியமிக்கப்பட்ட குழுவைப்பற்றிய செய்தி உள்ளது. இதில் சிவில் நீதிமன்றத் தலைவர், தமிழ்ச் சாதிய முறை ஐரோப்பியர் களுக்கு விளங்காத காரணத்தால் எட்டு பேர் கொண்ட குழுவை நியமித்தார். இக்குழுவில் தமிழரும், தமிழ்க் கிறிஸ்தவர்களும் இருந்ததாகப் பதிவு உள்ளது. சாதிய முறை, சாதியக் கட்டமைப்பு, சாதிகளின் பாரம்பரிய உரிமைகள் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கையினைக் கொடுக்கும்படியாகச் செய்தி உள்ளது.

இவை பிரஞ்சுக்காரர்கள் சாதிய வேறுபாடு களைக் களைய முயலாமல் சாதிகளின் முன்பிருந்த வழக்கப்படி செயல்பட நிலைப்பட்டனர் என்பது தெளிவாகிறது.

தேவரடியார்கள்

தேவராயர் என்றால் இறைப்பணிக்காகத் தங்களை அர்ப்பணித்தவர் எனப்படும். கோவிலில் நடனமாடுவது, விளக்கு ஏற்றுவது, பாடல்கள் பாடுவது என இருந்தனர். பின் நாட்களில் இவர்களின் செல்வாக்கு குறைய வீட்டு விழாக்கள், பண்டிகை நாட்கள், பிரஞ்சுக்காரர்களை வரவேற்று ஆடுவது, பாடுவது, கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்துவது இவர்கள் வழக்கமானது.

நாட்குறிப்பில் இவர்களைப் பற்றிய பதிவுகள் அதிகம் உள்ளன. வலங்கை இடங்கை என்னும் சாதிப்பிரிவு தேவரடியார்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1788 ஜூலை 16 ஆம் தேதி நாட்குறிப்பில் வலங்கையிடங்கை தாசிகளுக்கிடையேயான சச்சரவு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராசப்பஐயரின் மகள் திருமண வரவேற்பு மேளதாளங்கள், வண்ண விளக்குகள், தாசிகளின் நடன நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடந்தது. செனரல் கனுவேயும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இடங்கை சாதிப் பிரிவைச் சேர்ந்த ஒரு தாசி மகுடி வாசித்துக் கொண்டு சற்று நேரம் ஒரு பாம்பை ஆட்டிக் கொண்டு மறுபடி தன் கழுத்தில் பாம்பைச் சுற்றிக்கொண்டு நாட்டியம் செய்தாள். இது அனை வரும் பாராட்டும்படியாக இருந்தது. இது வலங்கை தாசிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் உடனே கிளம்பிச் சென்று விட்டனர். பின் நிகழ்ச்சி நடத்துவோர் அனைவரும் இடங்கை தாசிகளை அனுப்பிவிட்டு வலங்கை தாசிகளை அழைத்து நாட்டியம் ஆடச் சொன்னார்கள். இவ்வாறு இடங்கை, வலங்கை சாதிப் பிரிவு தேவரடியார் மத்தியிலும் இருந்தது தெளிவாகிறது.

இவ்வாறு, பதினெட்டாம் நூற்றாண்டின் ஒரு முக்கிய ஆதாரமான இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பு சாதியைக் குறித்த பல தகவல்களைத் தெரிவிக்கிறது. புதுச்சேரி வாழ்சாதிகள், வலங்கை, இடங்கை சாதிகள், சாதிகளுக்கிடையேயான சச்சரவுகள், சாதித்தலைவர்கள் மற்றும் அவர்களின் பணிகள், சாதியின் பெயரில் தெருக்கள், தாசி களிடையே சாதிய உணர்வு, சாதிகளுக்காக உரிமைகள் மற்றும் தடைகள் போன்றவற்றை அறிய முடிகிறது. இவ்வாறு இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பு ஒரு சிறந்த முதல்நிலை ஆதாரமாகச் செயல்படுகிறது.

Pin It