சிறந்த கல்வியாளரும் அறிவியல் அறிஞரு மான டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் அண்மையில் தம் வாழ்க்கை வரலாற்றை ‘ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி’ என்னும் பெயரில் நூலாக வெளியிட்டு உள்ளார். நூலின் பெயருக்கேற்ப, தமிழகத்தின் சிற்றூரிலிருந்து உலக நாடுகள் வரை நூல் விரி கிறது. ஆடு மாடு மேய்த்த ஒருவர், தம் உறுதியான குறிக்கோளோடும், தளராமுயற்சியாலும், உலையா உழைப்பாலும் உலகம் தெரிந்த விஞ்ஞானியாக வளர்ந்ததை விரிக்கும் நூல்தான் இந்நூல். ஆம், அண்ணா பல்கலையைத் தாண்டி அகிலத்தைக் காட்டும் நூல்தான் இது; இதில் எத்தனை எத்தனை யோ அரிய மனிதர்களையும், அரிய செய்திகளையும், சீரிய நிகழ்வுகளையும் ஆங்காங்கே காண்கிறோம்.

தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள் பேராசிரியர்கள், தலைவர்கள் ஆகியோரின் அரிய பணிகளையும் சில வேறுபட்ட தோற்றங்களையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளவை சிந்தனைக்கு விருந்தாக உள்ளன; குறிப்பாகத் தமிழகத்தின் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சி, பல்கலைக் கழக வளர்ச்சி, ஆகியவற்றோடு, அரசின் நிருவாகத் துறைக்கும் கல்வித்துறைக்குமிடையே நடந்த முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டும் நூலாகவும் இந்நூல் உள்ளது; நூலாசிரியர் சில உண்மை களையும், நாம் அறிந்திராத செய்திகளையும் இரகசியங்களையும் வெளிப்படையாகக் கூறிச் செல்வது நூலுக்குச் சுவையூட்டுகிறது; வாசகர் களை மேலும் படிக்கத் தூண்டுகிறது. சிந்திக்க வைக்கிறது; இவற்றின் மூலம் அறிவியல் அறிஞரின், கல்வியாளரின் திறமையையும், செயல்திறனையும் காட்டுவதோடு, கொள்கை உரம் கொண்ட ஒரு நேர்மையான அரிய மனிதரையும் அடையாளம் காட்டுகிறது.

நூலாசிரியர் தொழில்நுட்பக் கல்வி இயக்கு நராகவும், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் இருந்தபோது மற்றவர்கள் போன போக்கில் செல்லாமல், எடுத்துக்காட்டாகப் புதுப் பாதையை அமைப்பவராக இருந்துள்ளார். இது தான் அவரது தனித்திறன். அந்தத் தனித்திறன் களில் சிலவற்றை நோக்கினாலேயே அவரைச் சரியாக உணரலாம். தமிழகத்தில் பெண்கள், குறிப்பாக மருத்துவக் கல்வியில் மட்டுமே ஆர்வம் காட்டுபவர்களாக இருந்துள்ளனர்; நாளும் வளரும் அறிவியல் உலகில் இது வேண்டாதது; முன்னேற்றம் இல்லாதது; இதனைத் தொலை நோக்கோடு உணர்ந்த நூலாசிரியர், பெண்கள் மனம் உவந்து கற்க நல்ல சூழலை ஏற்படுத்த, தூய்மையான உணவகங்கள், நல்ல விடுதிகள், நூல்நிலையம் ஆகியவற்றை ஏற்படுத்தி, கணிப் பொறி, மின்னியல் போன்ற பல புதுப் பட்டப் படிப்புகளை ஏற்படுத்திப் பெண்கள் கூடுதலாகக் கற்க வழியமைத்துள்ளார். இவற்றைப் போன்றே மாணவ-மாணவியர் புதியதாகக் கற்கப் பல துறைகளை உருவாக்கியுள்ளார். அவற்றிற்காகப் பல ஆய்வு மையங்களையும் அமைத்துள்ளார்.

படிக வளர்ச்சி மையம், உயிரியல் தொழில்நுட்ப மையம், கடல் வள மேலாண்மை மையம் போன்ற “புதியமையங்களை ஏற்படுத்தி அறிவியல் துறை களை விரிவாக்கித் தமிழகத்தை அறிவியல் மாநில மாக மாற்ற மூலவராக இருந்துள்ளார். புதிய துறைகளை மாணவ-மாணவியர்க்கு நன்கு கற்பிக்க, வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளி லிருந்தும் சிறந்த வல்லுநர்களை அழைத்துக் கற்பிக்க வைத்துள்ளார். இந்தியாவிலேயே அச்சுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பையும், இரப்பர் தொழில்நுட்பக் கல்வியையும் முதன்முதலாக உருவாக்கியுள்ளார். இவற்றிலும் அவர் முன்னோடி யாக இருந்துள்ளார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோதும் பல புதிய பாடத் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளார். பேராசிரியர் களுக்கும், பணியாளர்களுக்கும், இருப்பிடம், சாலை, குடிநீர் வசதி ஆகியவற்றை நன்றாக அமைத் துள்ளார்.

இந்நூலில் புதிய செய்திகளும், புதிய திட்டங் களும் நூலாசிரியரின் சிறந்த செயல்திறனும், தனியாற்றலும் ஆங்காங்கே வெளிப்பட்டாலும், நம்மைத் திகைக்க வைப்பதும், மலைக்க வைப்பதும் அவரது நேர்மையும், கொள்கையுறுதியும்தான். “வைரமுடைய நெஞ்சு வேணும் / அது வாழும் முறைமையடி பாப்பா” என்றார் பாரதியார். அந்த வைர நெஞ்சை இந்நூலில் காண்கிறோம். இந்நூல் சொல்லும் பல செய்திகளில் இரு செய்திகள் மிக முக்கியமானவை. அவை, அவரது நேர்மையும், உறுதியும்தான்; தலைவர்களானாலும், கல்வியாளர் களானாலும், அதிகாரிகளானாலும் இவையிரண்டும் இரு கண்கள் போன்றவை. இவையில்லாவிடில் சமுதாயம் பின்னடைந்துவிடும்; இருண்டுவிடும். இப்படிச் சமுதாயம் பின்னடையாது, இருண்டு விடாது வழிகாட்டுபவர்தான் அவர். அவரது நேர்மைக்கு இரு நிகழ்வுகளை நோக்கினாலேயே உண்மை விளங்கும்.

ஒரு நிகழ்வு, அவருடைய மனைவி பற்றியது; இன்னொன்று அவருடைய மகனைப் பற்றியது. தில்லியிலுள்ள இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தில் அவர் துணைவேந்தராக வருவதற்கு முன்பாகவே மனைவியார் ஆங்கிலமொழி விரிவுரையாளராக இருந்துள்ளார். அவர் அத்துறையில் துணைப் பேராசிரியருக்காக விண்ணப்பித்துள்ளார். அப் போது துணைவேந்தராக இருந்த குழந்தைசாமி அவரது விண்ணப்பத்தை ரத்து செய்துள்ளார். தேர்வுக்குழு அவரைத் தேர்ந்தெடுத்தாலும் (தகுதியின் பொருட்டு) துணைவேந்தரின் பரிந்துரையால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்று பிறர் தவறாக எண்ணக்கூடும் என்பதால் அப்படிச் செய்துள்ளார். அவரது பதவிக்காலம் முடிந்தபின் தான் அவருடைய மனைவி பதவியுயர்வு பெற்று உள்ளார். அவருடைய மகன் அண்ணா பல்கலையில் B.E. படித்து தேர்வுக்குப் போவதற்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டதால் வருகைப்பதிவு ((ATTENDANCE) குறைந்திருந்ததால் தேர்வு எழுது வதற்குத் தடை இருந்துள்ளது. இதனைத் தனி வகுப்பு மூலம் சரிசெய்து தேர்வுக்கு அனுமதி வழங்கும் விதி இருந்தும் துணைவேந்தர் அதற்கு இசையாது தன் மகனை அடுத்த ஆண்டு தேர்வு எழுதப் பணித்துள்ளார்.

தனி வகுப்பு மூலம் தேர்வுக்கு அனுமதிப்பது விதிப்படி சரியானதேயாகும். தவறானது அன்று. பலர்க்கு இந்த வாய்ப்பைப் பல்கலைக்கழகம் அளித்திருந்தும் அந்த இரண்டாம் பட்ச உதவியைக் கூடத்தாம் பதவியிலிருக்கும் போது செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். இப்படியொரு நெறியை வழுவாது உறுதியாகப் பின்பற்றுபவர்தான்அவர். அவர் துணைவேந்தராக இருந்தபோது அதே பல்கலைக் கழகத்தில் அவருடைய மகனும் மகளும் படித்திருந்தாலும் அவர்களை ஒரு போதுகூடத் துணைவேந்தரின் காரில் ஏற்றிச் சென்ற தில்லை யாம். அவர்கள் பேருந்தில்தான் சென்று வந்து உள்ளார்கள். அவர் துணைவேந்தராக இருந்த போது காய்ச்சல், தலைவலி என்று ஒருநாள் கூடக் கால தாமதமாகவும் சென்றதில்லை; விடுப்பு எடுத்ததும் கிடையாதாம். பேராசிரியராக 25 ஆண்டுகள் இருந்தபோதும் ஒருநாள்கூட வகுப்புக்குக் கால தாமதமாகச் சென்றதில்லையாம்; இவ்வாறு எந்தத் துணைவேந்தர் இருப்பார்; துணைவேந்தர்கள் இக்காலத்தில் எப்படி எப்படியோ உள்ளார்கள்; ஆனால் இவரோ நேர்மையின் உச்சியில் சிகரமாகக் காட்சி அளிக்கிறார்;

அவரது கொள்கை உறுதியும் இது போன்றதே யாகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர்களுக்கு வருகைப்பதிவு குறைவாக இருந்த தால் அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை நிறுத்தி வைத்துள்ளார் துணைவேந்தர். மாணவர்கள் ஆளுநரிடம் முறையிட்டுள்ளார்கள்; ஆளுநரும் தம் செயலாளர் மூலம் தலித் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குமாறு துணைவேந்தரிடம் கூறியுள்ளனர். துணைவேந்தர் அதனைக் கேட்டு அசராது, அப்பிரச்சினையை என்னிடம் விட்டு விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் மாணவர்களை அழைத்துத் தக்க அறிவுரை கூறி, அவர்களின் தவற்றை அவர்கள் உணருமாறு செய்து அவர்கள் வகுப்புக்குச் சரியாக வந்த பின்னரே உதவித் தொகை வழங்கியுள்ளார். ஆளுநர் பரிந்துரைத்தார் என்பதற்காகச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல், உறுதியாக நின்று, மாண வர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து உறுதியளித்து வகுப்புக்கு வந்த பின்னர் வருகைப் பதிவு சரியாக இருந்த பின்புதான் உதவித்தொகை வழங்கியுள்ளார். இந்தத் துணிவும் உறுதியும் யாருக்கு வரும்?

இந்திரா தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழகத் தற்காலிக விரிவுரையாளர்கள் ஒருமுறை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள்; தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே நீதிபதியும், பின்னர் நடுவண் அரசின் கல்வியமைச்சரும் அவ்விரிவுரை யாளர்களை நிரந்தரப் பணியில் அமர்த்துமாறு பரிந்துரைக்கிறார்கள்; அதனை ஏற்காது விதி முறைப்படி செயல்பட்டுள்ளார். துணைவேந்தர், சட்டப்படி தம் வழக்குரைஞர் மூலம் உண்மையைக் கூறியதும் நீதிபதிகள் பின்வாங்கியுள்ளனர். இப்படிக் கொள்கையில் உறுதியாக நிற்பவர்தான் அவர்; ஒருமுறை, தமிழகத் தலைமைச் செயலாளர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றுதல் செய்யப் பரிந்துரைக்கிறார். உயர்நிலைப் பள்ளிக்கும், கல்லூரிக்கும் எவ்வித வேறுபாடு உள்ளதோ, அந்த வேறுபாடு தொழில்நுட்பக் கல்லூரிக்கும், தொழில்நுட்பப் பல்கலைக்கும் இருப்பதால் கணித ஆசிரியரை மாற்றுதல் செய்வது சரியாகாது என்று மறுத்து விடுகிறார். இந்த உறுதிப்பாட்டின் உருவம் தான் அவர். இவைபோன்ற பல நிகழ்வுகள் இந் நூலில் உள்ளன; அவற்றை நூலில் காண வேண்டு கிறேன்.

நேர்மையும் கொள்கையுறுதியும் அவரிடம் எப்படி இருந்தனவோ அப்படி அவரிடம் அஞ்சா மையும் இருந்துள்ளது. நிருவாகத் தலைமையில் இருப்பவர்களுக்கு இது மிகமிக வேண்டும். அஞ்சாமை இல்லையென்றால் குழப்பம்தான் ஏற்படும். பாதையும் தவறிவிடும். பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்னும் பெயர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த வருக்கும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்க்கும் உச்சரிப்பதற்குக் கடினமாக இருந்துள்ளது. ஆங்கிலச் செய்தித்தாள்களும் முழுப் பெயரைக் குறிப்பிடாமல் PAUT என்று சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தன. நாளடைவில் ஊடகங்கள் AUT என்றும் குறிப் பிடலாமென அவர் அஞ்சியுள்ளார். அப்போது முதலமைச்சராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், பேரறிஞர் எனக்குறிப்பிடாமல் அண்ணாவென அழைத்தால் அதனைப் பொறுக்கமாட்டார். அதனை மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதுவார். எம்.ஜி.ஆர் அவர்களும், ஏனைய அமைச்சர்களும் அதனை வெறுப்பார்கள் என நன்கு தெரிந்திருந்தும், பல்கலைக் கழகப் பெயர் சுருக்கமாக இருப்பதே ஏற்றது, சிறந்தது என்பதைத் தக்க காரணங்களோடு விளக்கிப் பல்கலைக்கழகப் பெயரைச் சுருக்கமாக அண்ணா பல்கலைக்கழகம் என்று முதலமைச்சர் இசை வோடு மாற்றியுள்ளார். முதலமைச்சர் என்ன கருதுவார் எனத் தயங்காமல், மயங்காமல் சரியான பெயரை அஞ்சாமையோடு நிலைநாட்டியுள்ளார்.

அவரது அஞ்சாமைக்கு இன்னொரு நிகழ் வையும் நோக்கலாம். தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக அவர் இருந்தபோது கவர்னரின் செயலாளர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர். என்றார். அவரும் அதற்கு நன்றியென்று கூறி யுள்ளார். பின்னர் செயலாளர் அவரிடம் “நான் ஏற்கனவே திருச்சியிலுள்ள ஒருவரை (ஆளுநரின் பரிந்துரைப்படி) கோவைக்கு மாற்றுதல் குறித்துச் சொன்னேன். அது என்னாயிற்று”. எனக் கேட்டு உள்ளார். காரணமும் தேவையும் இல்லாமலும், காலியிடம் (Vacancy) இல்லாமலும் ஒருவரை மாற்றுதல் கூடாது என்பதில் உறுதியான கொள் கையுடைய இவர், ஆளுநர் பரிந்துரை என்று அறிந்திருந்தும் மிகத் துணிவாகக் “கோவையில் இடமில்லை; மாற்றுதல் செய்யாநிலையில் உள்ளேன். இதனை இனி விட்டுவிடுங்கள்” எனக் கூறியுள்ளார். செயலாளரும் அடுத்து இதனைப் பற்றி அவரிடம் பேசவில்லை; வேறொருவராக இருந்தால் புதிய பதவி கிடைக்கும்போது இதை ஏன் செய்யக் கூடா தென எண்ணி வேகமாக மாற்றுதல் (TRANSFER) செய்வர். ஆனால், இவரோ எந்த அதிகார பீடத் திற்கும் அஞ்சாதவராக இருந்துள்ளார். இது போன்ற நிகழ்வுகள் இந்நூலில் பல இடங்களில் உள்ளன.

மேலும் நூலாசிரியரைப் பற்றிப் பல அரிய செய்திகள் இந்நூலில் உள்ளன; இந்நூல் வெளி வராவிடில் இவற்றையெல்லாம் நம்மால் அறிய முடியாமலேயே போயிருக்கும். இந்தியப் பல்கலைக் கழகங்களின் மானிய குழுத் தலைவர் பதவி, வெளி நாட்டுத் தூதர் பதவி, கல்வியைமைச்சர் பதவி, அறிவியல் ஆலோசகர், கரக்பூர் ஐ.ஐ.டி.யின் இயக்குநர் பொறுப்பு போன்றவை எல்லாம் இவருக்கு வந்து உள்ளன. தனிப்பட்ட சில காரணங்களால் அவற்றை அவர் தவிர்த்துள்ளார். அறிவியல் அறிஞராகிய இவர், அறிவியல் கல்வியையும், அறிவியல் கண் ணோட்டத்தையும் வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அதனால், சென்னையில் அறிவியல் நகரை உருவாக்கப் பெரிதும் முயன்றுள்ளார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் அது நிறைவேறாமல் போயுள்ளது. எனினும், பிர்லா கோளரங்கம், மாக்ஸ்முல்லர் பவன், அறிவியல் கண்காட்சி போன்றவை அமையக் காரணமாக இருந்துள்ளார்.

தொழில்நுட்பப் பல்கலையில் புதிய பாடத்திட்டங் களையும், புதிய துறைகளையும் உருவாக்கிய தோடு, அவர் பதவி வகிக்கும் இடங்களிலெல்லாம் மாணவர்களை ஆய்வுகளில் ஈடுபடுத்தியுள்ளார். இது குறிப்பிட்டுக் கூறத்தக்கதாகும். ஒருமுறை அவர் யுனெஸ்கோ உறுப்பினராக இருந்தபோது ஈரானில் நீர்வளத்துறையைக் குறித்துக் கருத் தரங்கு நடைபெற்றுள்ளது. அக்கருத்தரங்கில் பலர் ஆய்வுரை நிகழ்த்தியுள்ளனர். ஆனால், இவரது ஆய்வுரையைக் கேட்டவர்கள் அத்துறை இயக்கு நரிடத்தில் இதுபோன்ற பொழிவை இதுவரை கேட்டதில்லை என்றும், தம் பேச்சால் எங்கள் இதயங்களில் முழுமையாக இடம்பெற்றுள்ளார்” என்றும் பெருமையாகக் கூறியுள்ளனர். இது போன்று தமிழர்கள் பெருமிதம் கொள்ளத்தக்க பல அரிய குறிப்புகள் அவரைப் பற்றி உள்ளன. அவற்றை நூலில் பல இடங்களில் காணலாம்.

மொத்தத்தில் சுய வரலாற்று நூல்களில் இந் நூலுக்கு முக்கிய இடமுண்டு. நூலைப்பற்றி வேறுபட்ட ஓரிரு கருத்துகளைக் கூறித்தான் ஆகவேண்டும். டாக்டர் குழந்தைசாமி எழுதிக் கொடுத்த பக்கங்கள் நிறைந்த பெரிய நூலை வெட்டியும் குறைத்தும் திரு. ராணி மைந்தன் சரி (எடிட்) செய்துள்ளார். மீண்டும் நூலாசிரியர் திருத்தம் செய்துள்ளார். இப்படி இருமுறை அவர் ஈடுபட்டிருப்பதைக் காட்டிலும், அவரே அப் பணியைச் செய்து முடித்திருக்கலாம். ராணி மைந்தனின் பணி சிறப்பாக அமைந்துள்ளது. நூலும், குழந்தைசாமி அவர்களின் உரைநடை கொண்டதாகவே விரிந்துள்ளது. எனினும், சுய வரலாற்று நூலாக இருப்பதால், சுமை இருப்பினும் வேறொருவர் பங்கில்லாமல் அவரே எழுதியிருக்க வேண்டும். அதுவே ஏற்றது. மற்றும் நூலின் இறுதிப் பக்கங்களில் புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில், சிலவற்றில், நாள் மாதம் ஆண்டுகள் மட்டுமே உள்ளன. இவற்றிலும் நாளையும், மாதத் தையும் சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மற்றும் புகைப்படங்களைக் கால வரிசைப்படுத்தி யிருக்க வேண்டும்; முக்கியத்துவம் குறித்துச் சில படங்களை முன்வரிசையில் அமைத்திருக்கலாம். இதில் முக்கியத்துவம் பார்ப்பது சரியன்று. அதாவது முக்கிய படங்களைக் காணாமல் போய்விடுவர் என்னும் அச்சத்தால் இது ஏற்பட்டிருக்கக் கூடும். அப்படிக் கருதக்கூடாது. 614 பக்கங்களைக் கொண்ட ஒரு பெரு நூலைப்படிப்பவர் புகைப் படங்களைக் காணாமல் போய்விடுவரா? ஆதலின் காலவரிசை அமைந்திருந்தால் வருங்கால ஆய்வுக்கு அது சரியாகப் பயன்படும்; அதுவே ஏற்றது; சிறந்தது. நூலில் எழுத்துப் பிழைகள் சிலவே உள்ளன. அவையும் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எந்தத் தன் வரலாற்று நூலிலும் அமைந்திராத சொல்லடைவு இந்நூலில் அமைந்துள்ளது. இது பாராட்டத்தக்கது.

இந்நூல் தனிமனிதரின் வரலாறாக மட்டுமின்றி அறிவியல் கல்வி வரலாறாக, சமுதாய வரலாறாக, எதிர்காலத் தமிழகத்திற்கு வழி காட்டும் வரலாறாக உள்ளது. கல்வியாளர், அறிவியல் அறிஞர், சிறந்த ஆய்வாளர், நல்ல கவிஞர் என்று மட்டுமே அறிந்திருந்த நமக்கு, இந்நூல்தான் அவரை மிகச் சிறந்த திட்டவரையு நராகவும், பன்மொழி அறிஞராகவும் காட்டுகிறது. மொத்தத்தில் இந்நூல் ஒரு நன்னூல்; பாதை காட்டும் திசைகாட்டியும் ஆகும். மாதுளம் கனியைப் பிளந்தால் எண்ணற்ற இன்சுவை மணிகள் இருப்பதைப் போன்று, இந்நூலில் பற்பல அரிய செய்திகள் உள்ளன; அவை புதையலாக உள்ளது. அந்தப் புதையலை நீங்களும் காண வேண்டாமா? காணவேண்டும்.

Pin It