சபை
அவரவரிடமிருந்து
ஒரு ஆகச்சிறந்த என்னை
எடுத்து விரியுங்கள் மேசை மீது.
இசைந்த எண்களின் ஆட்டம்
ஜோராய் நடக்கட்டும்.
பலாபலன்
பட்சிகளோ பறிப்பவரோ
இல்லாத இடத்தில்
கனிகளுக்கென்ன வேலையென்று
மறுகுவதற்கில்லை
அர்த்தம் கைதாவிப்
பறிக்க ஏலாத
பேரதிக ஒளியைத்
தம் இரைப்பைகளில் இட்ட சொற்கள்
அவற்றிடமிருந்தே பெற்றன.
கருணை கொண்டொழுகு
மறதியெனும் நெடுங்கணக்கில்
கூடக் குறையக்
காத்துக்கொண்டிருக்கும்போது
மூன்று இலைகள் முதலில்விட்டு
கணக்கின்றி மூடிவிட்ட சிறுபரப்பு
ததும்ப
பொரிகள் இறைக்க வேண்டாம்.
கவனம்,
கொட்டும் மழையில்
அருங்கலைப் பொருட்களின்
பழங்கடைப்
பெயரும் ஒருத்தியின் பின்னே
கரைந்தோடிக்கொண்டே அழைக்கும்போது
வசதியற்றிருக்கிறேன்
என்று
தன்பால் இரக்கமுற்றும்
அவள் கைவிரித்துவிட வேண்டும்.
பூ வேர் ஆய்வு
ஒரு வயலட் பூ
உன் என் கண் திருஷ்டியைக்
கழிக்குமென்று
பறிக்கச் செல்கின்றனர்
காதலர் ஆண் பெண்.
காதலின் முதல் கோப்பை நிறைய
அம்மலர்களே உருகி வார்க்கின்றன
என்று
தேனாடித் திளைக்கும்
அவர்கள்
அறிவிக்கின்றனர் தம்மை
பெண் பெண் என்றும்
குடும்பப்பேழையில்
இன்பக்கொட்டு முழக்குகிறது
ஒரு கௌளி.
எம்மனச்சமாதானங்களில்
அவரவர் கற்பனைக்கென்றே
பூத்து மணக்கின்றன
வெவ்வேறு
வயலட்கள் போன்றவை.
கடவுளரை தேவதைகளைப் போலும்
வயலட்களை
வேறென்ன வளர்க்கும்
கண்ணீரே அல்லது குருதியேயன்றி?
மல்கும் போராளிகள் எங்கும்
முளைபாரிக்க
வயலட்களைச் சுற்றியும்.
உண்மையில் உள்ளனவா அவை
என்று கேட்ட கற்றறிவாளன்
மறதிக்குச் சபிக்கப்பட்டான்.
மறைந்து போனது பின்னர் தான்
என்று முணுமுணுத்த இன்னொருத்தி
தன்னைத் தத்தம் கொடுத்துவிட்டாள்
அவற்றின் தத்துவத்துக்கு.
யாத்ரீகர்களோ
வயலட்களைப் பறிக்கச் செல்லும்
காதலர்பின் நகர்கிறார்கள்
அவர்களைக் காதலிக்கிறார்கள்
அவர்களின் நோட்டுப்புத்தகங்களில்
பூரேகை
தன்னைச் சிறிதுசிறிதாக வரைந்தவண்ணம்
'வயலட் யானையின் நிறம்'
என்றெழுதிவைக்கப்பட்ட
காலக்குறிப்பைத்
தின்று
தன்னைப்படர்கிறது.
ஆம், வயலட் நிஜ மலரல்லவா நம் தோட்டத்தில்?
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை