வகுப்பறை

இந்த நான்கு சுவர்களுக்குள்,
சன்னல் கதவுகள் அடைக்கப்பட்ட
சிறை அறைகளுக்குள் வரிசையாகப் போடப்பட்ட
பெஞ்சுகளுக்குக் கீழே
பிறர் அறியாமல்
சிறிய கால்களை
ரகசியமாக ஆட்டியாட்டிக்கொண்டு
எல்லாவற்றையும் ரசிக்கிறோம்
என்று சிரித்தும்
எல்லாம் புரிகிறது என்று
இடையிடையே தலையாட்டியும்
பாடங்களின் சிறையிலடைக்கப்பட்ட
இளம் வண்ணத்துப் பூச்சிகள்.
அடி வேரறுத்து
சிமெண்ட் சட்டியில் வரையறுக்கப்பட்ட கால
பராமரிப்பில்
பறித்து நடப்பட்ட மரங்கள்
வலையில் வீழ்ந்த கிளிகள்
எந்த தெய்வத்தைக் கண்டாலும்
மத்தகம் குனிந்து கால் மடக்கி
தும்பிக்கை உயர்த்தி வணக்கம் சொல்கின்ற
காடு மறந்துபோன
குட்டிப் பேரானைகள்

பகல் கனவு

வகுப்பறையில்
வாயைத் திறக்காதே என்று எரிகின்ற
கண்கள் முன்னால் எப்படியோ
கொண்டுவந்து உட்கார வைத்து அம்மா போனதும்
மனதின் சமையலறையில்
பதுங்கி நடந்து,
வாசலில் அலைந்து...
அதோ,
திருட்டுப் பூனை,
அம்மா விறகு எடுக்க
போன சமயம் பார்த்து
மீன் திருட வருகிறது.
கன்றுக்குட்டி
வேலியில் பாய்கிறது
சீதாப்பழ மரத்தின்
இலையடர் பசுமையில்
பச்சிலைக் குருவி கூக்குரலிடுகிறது...
மலைப்பாம்பு ஊர்ந்து ஊர்ந்து

தமிழில்: யூமா வாசுகி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.