தனித்தனியாகப் பிரிந்துசெல்லும்
பாதைகள் வழியும்
அடர்காட்டுக்குள்ளும்
பூத்துக்கிடக்கின்றன
சில வனாந்தரப்பூக்கள்

வாசத்தைப் பரப்பும்
பூக்களை ரசிக்கவோ
பூசைக்கென்று கொண்டாடவோ
யாருமற்ற வெளியிலும்
இயல்பினை மறக்காமல்
தத்தம் பாதையில் வெகு ஆனந்தமாக
பூத்துக்கொண்டே இருக்கின்றன

இயற்கையின் பன்னீர்த்தூவல்
ஒளிக்கீற்றின் களி நர்த்தனம்
இலை மிகுக்கப் பச்சையங்கள்
வட்டமிட்டபடியே சுற்றிவரும் தேன்குருவி
அனைத்தும் மிகைத்துக் கிடக்க
காட்டுப் பூக்களுக்குக் கவலையேதுமில்லை

ஒளி மறுக்கப்பட்டுக்
குளிர்விக்கப்பட்ட அறையில்
பூ மலர்ந்தபொழுதில்
தொட்டிச் செடிக்கு மனதும் வலித்தது
மூன்றாவதாகப் பிறந்ததும் பெண்ணாம்

- எம்.ரிஷான் ஷெரீப்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.