2009 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னால், எங்கு பார்த்தாலும் 1,76,000 கோடி ஊழல் நடந்து விட்டதாக நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. திமுக, காங்கிரஸ் கட்சிகளின் மீது அவதூறுகள் அள்ளி வீசப்பட்டன. எங்கோ ஹாங்காங்கில் இருக்கும் ஒரு வீட்டைப் படம் பிடித்துப் போட்டு, இதுதான் ஆ. ராசாவின் வீடு என்றார்கள்.

உண்மைகளை மக்களுக்கு விளக்கிச் சொல்வதற்குள், 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது! அதன் பின்னால் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டிற்கு எந்த ஓர் ஆதாரத்தையும் அரசு காட்டவில்லை என்று கூறி, ஆ.ராசா உள்ளிட்டவர்களை விடுதலை செய்தது!

ஆனால் இன்று 7,50,000 கோடி ஊழல் நடந்துள்ளதாகத் தலைமைக் கணக்காயர் அறிக்கை கூறுகின்றது. ஆயுஷ்மான் திட்டம் முதலான ஏழு திட்டங்களில் இவ்வளவு பெரிய தொகை காணாமல் போய் இருப்பதை அந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது. ஒன்றிய அரசில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, அதனைக் கண்டு கொள்ளவே இல்லை. அதற்கு எந்த விடையும் சொல்லவும் இல்லை!modi scamஇந்நேரம் இதனை “இந்தியா” கூட்டணி நாடு முழுவதும் பெரிய அளவில் கொண்டு சென்றிருக்க வேண்டும். சில மாநிலங்கள்,சில கட்சிகள் தவிர பல இடங்களில் எதிர்க்கட்சிகள் இது குறித்துப் போதுமான அளவிற்குப் பேசவில்லை.

மாறாக, ஒன்றிய அரசு இப்போது ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கை, அந்த ஊழலை ஏற்றுக் கொள்வதாகவோ, திருத்தம் செய்வதாகவோ அல்லாமல், அந்த அறிக்கையைத் தந்த முதன்மையான மூன்று அதிகாரிகளை இடம் மாற்றுவதாக அமைந்துள்ளது.

அந்த அறிக்கையைத் தயாரிப்பதில் முக்கியப் பங்கு வகித்த அருவா சின்கா, அசோக் சின்கா, தத்தம் குமார் ஆகியோர் அப்பொறுப்புகளில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். இதுதான். ஊழலற்ற, நேர்மையான அரசு என்று மார்தட்டிக் கொள்ளும் பாஜக அரசின் நடவடிக்கை!

நம் நாட்டில் நடக்கும் எது குறித்தும், பிரதமர் மோடியோ, இந்திய ஒன்றிய அரசோ கவலை கொள்ளவில்லை. மணிப்பூர் பற்றி எரிந்தாலும், 7,50,000 கோடி ஊழல் கொடி கட்டிப் பறந்தாலும், எதுவுமே நடக்காதது போல் இருக்கும் இவர்கள், இஸ்ரேல் - பாலஸ்தீனத்தில் நடைபெறும் போரில், ஹமாஸ் செய்தது தவறு என்று தீர்ப்பளிக்கும் யோக்கியர்களாக இருக்கிறார்கள்.

பாஜக அரசு செய்துள்ள ஊழலையும், நாட்டில் நடைபெறும் மதவெறி வன்முறைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு, எல்லா எதிர்க்கட்சிகளுக்கும், ஜனநாயகவாதிகளுக்கும் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது!

- சுப.வீரபாண்டியன்

Pin It