மார்ச் 23, மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள். அவரோடு, சுகதேவ், ராஜகுரு ஆகியோரும் அன்றுதான் வெள்ளை அரசாங்கத்தால்  தூக்கிலிடப்பட்டனர். ஒரு புரட்சிவீரனை மட்டுமன்று, ஓர் அறிவாளியை இந்நாடு இழந்ததும் அன்றுதான்.

விடுதலைக்காகப் போராடும் ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்கள், வன்முறையை மட்டுமே அறிந்தவர்கள் என்ற கண்மூடித்தனமான கருத்து ஒருபக்கம் நிலவி வருகின்றது. இக்கருத்து, யாருடைய அடக்குமுறைகளுக்கு எதிராகப் புரட்சி முன்னெடுக்கப்படுகிறதோ அவர்களால் பரப்பப்படுகின்ற பொய் என்பதற்கு நம்மால் பல சான்றுகளை முன்வைக்க முடியும். புரட்சியாளர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரியமாற்றுபவர்கள் அல்லர். அவர்கள் ஆழமான வாசிப்புத் தன்மை உடையவர்கள். இந்தப் பூமிப்பந்தில் நடைபெற்ற பல்வேறு விடுதலைப் போராட்டங்களின் வரலாறுகளைப் படித்துத் தெளிந்தவர்கள். “வரலாறு எனக்கு வழிகாட்டி'' என்று விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் சொல்வது இங்கு குறிப்பிடத்தக்கது.

bhavathsingh_370பகத்சிங்கிற்குப் புத்தகங்களைப் படிப்பதில் இருந்த ஆர்வத்தை அவருடைய வரலாறு நமக்குக் காட்டுகிறது. தூக்கு மேடைக்குச் செல்வதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, லெனின் எழுதிய ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்திருக்கிறார். தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல வந்த காவலர்களிடம், கொஞ்சம் பொறுங்கள், ஒரு புரட்சியாளன், இன்னொரு புரட்சியாளனைச் சந்தித்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்ன துணிச்சல் மிக்க அறிவாளி பகத்சிங்.

சிறையில், புத்தகங்களை வாசிப்பதில் அதிகப்படியாக நேரத்தைச் செலவிட்டிருக்கிறார். புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர்களின் புத்தகங்களைத் தேடித்தேடிப் படித்திருக்கிறார்.

1930இல் லாகூர் மத்திய சிறையில் இருந்தபோது, தன் பள்ளித் தோழன் ஜெயதேவ் குப்தாவிற்கு எழுதிய கடிதம், பகத்சிங்கின் அறிவுத்தேடலுக்கும், புத்தக தாகத்துக்கும் சான்றாக இருக்கிறது. அந்தக் கடிதம் அப்படியே கீழே:

லாகூர் மத்திய சிறைச்சாலை,

24.07.1930

என் அருமை ஜெயதேவ்,

துவாரகதாஸ் நூலகத்திலிருந்து, என் பெயரில் கீழ்க்காணும் நூல்களைப் பெற்று, குல்வீர் (பகத்சிங்கின் தம்பி) மூலமாக, அவற்றை ஞாயிறன்று அனுப்பவும்.

1.  Militarism (Kari Liebknecht)

2.  Why men fight (B.Russel)

3.  Soviets at work

4.  Collaps of the Second International

5.  Left - wing Communism

6.  Mutual aid (Prince Kroptokin)

7.  Fields, Factories and Workshops

8.  Civil War in France (Marx)

9.  Land Revolution in Russia

10. SPY (Upton Sinclair)

பஞ்சாப் பொதுநூலகத்திலிருந்து, இன்னொரு நூலையும் தயவு செய்து அனுப்பவும்.

1.Historical Materialism (Bakkunin)

மேலும், போர்ஸால் சிறைச்சாலைக்கு, சில நூல்களாவது அனுப்பப்பட்டுள்ளனவா என்பதை, நூலகர் மூலம் அறிந்து கொள்ளவும். கடுமையான பஞ்சத்தை அவர்கள் சந்தித்துக் கொண்டுள்ளனர். சுகதேவின் சகோதரர் ஜெயதேவ் மூலம், அவர்கள் ஒரு புத்தகப் பட்டியலை அனுப்பியிருந்தார்கள். இதுவரை அவர்கள் எந்த நூலையும் பெறவில்லை. ஒருக்கால், அவர்களிடம் அப்பட்டியல் இல்லையாயின் லாலா பெரோஷ் சந்திடம் அவர் விரும்பும் சில நூல்களை அனுப்பும்படி தயவுசெய்து கேட்டுக்கொள்க. இந்த ஞாயிறு, நான் அங்கு போவதற்கு முன்பு, புத்தகங்கள் அவர்களைச் சென்றடைந்திருக்க வேண்டும்.

இது மிக முக்கியமான பணி. தயவு செய்து மனதில் கொள்க.

மேலும் டாக்டர் ஆலத்திற்கு, வறுமையிலும், கடனிலும் பஞ்சாப் விவசாயிகள் மற்றும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்களை அனுப்புக. தொந்தரவு கொடுப்பதற்கு என்னை மன்னிப்பாய் என்று நம்புகிறேன். இனிமேல் உறுதியாக உனக்குத் தொல்லை தர மாட்டேன். நம்முடைய எல்லா நண்பர்களுக்கும் என்னை நினைவுபடுத்துவதோடு, லஜபதிக்கு என் மரியாதைகளைத் தெரியப்படுத்தவும். தத்தின் சகோதரி வந்தால், என்னைப் பார்க்க மறக்கமாட்டாள் என்று உறுதியாக நான் அறிவேன்.

                                                                          மரியாதைகளுடன் 
                                                                                   பகத்சிங்

இக்கடிதத்தில் அவர் பட்டியலிட்டிருக்கின்ற புத்தகங்களே அவருடைய சீரிய சிந்தனைகளுக்குச் சான்று பகர்கின்றன.   எப்போதும் சாதி, மத, வர்க்க வேறுபாடுகளற்ற சமத்துவ சமூகம் பற்றியே சிந்தித்திருக்கிறார் அந்த வீரமகன்.

பகத்சிங்கின் விடுதலைப்போராட்ட நுழைவு, அக்களத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை வரலாற்றாசிரியர் வி.டி.மகாஜன் இப்படிப் பதிவு செய்திருக்கிறார்:

“பாரத மாதாவுக்கு ஜே! வந்தே மாதரம், ஓம் ராம் ஹரி, அல்லாஹு அக்பர், சத் ஸ்ரீ சகால் முதலிய முழக்கங்கள், இன்குலாப் ஜிந்தாபாத், ஏகாதிபத்தியம் ஒழிக, பாட்டாளி வர்க்கம் நீடுழி வாழ்க போன்ற முழக்கங்களால் இடம் பெயர்க்கப்பட்டன......பகவத் கீதையிலிருந்தும், விவேகானந்தர், அரவிந்தர், பங்கிம்  சந்திரர் ஆகியோரின் எழுத்துகளிலிருந்தும் ஊக்கம் பெற்றுக்கொண்டிருந்த புரட்சியாளர்கள், மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுத்துகளின் மூலம் அவர்களின் ஊக்கத்தைப் பெற்றனர்''.

தான் படித்ததோடு நின்றுவிடாமல், சக தோழர்களையும் படிப்பதற்கு ஊக்கப்படுத்தியிருக்கிறார். தான் படித்ததை அவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்தத் தொடர் வாசிப்பே அவரைப் பண்பட்ட புரட்சியாளராக உருவாக்கியிருக்கிறது.

பகத்சிங் தன்னை நாத்திகர் என்று அறிவித்துக் கொண்டவர். இந்நிலைக்கு அவர் உடனடியாக வந்துவிடவில்லை. தான் படித்த புத்தகங்களே தன் சிந்தனையைத் தெளிவாக்கின என்பதை இதோ அவரே கூறுகிறார்:

“பக்குனின் என்பவரின் நூல்களைக் கற்றேன். பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாகிய மார்க்சின் நூல்களில் சிலவற்றைக் கற்றுணர்ந்தேன். ஏகச் சக்ராதிபத்திய ஆதிக்க இருள் அடர்ந்திருந்த தங்களுடைய நாட்டில் புரட்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்த கர்ம வீரர்களான லெனின், ட்ராட்ஸ்கி இன்ன பிறரால் இயற்றப்பட்ட நூல்களில் பெரும்பாலான வற்றை அலசி அலசி ஆராய்ந்தேன்.

1926ஆம் ஆண்டு முடிவில் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து நடத்தி வரும் சர்வ சக்தி வாய்ந்த கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கை அடியோடு ஆதாரமற்றதென உணர்ந்து கொண்டு விட்டேன்''.

இந்தியா ஒரு மாவீரனை மட்டுமன்று, ஓர் அறிவாளியையும் இழந்துவிட்டது. 

Pin It