தொடர்புடைய படைப்புகள்

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்!

29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு பிளக்ஸ் பேனர் வைத்த விவகாரத்தில் ஏற்பட்ட சிறுவாக்குவாதம் தீவிரமடைந்து வன்முறை தாக்குதலாகி 8 பேருக்கு அரிவாள் வெட்டு என இன்று தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பிற பகுதியிலும் பேசு பொருளாகியுள்ளது. கண்ணில் பட்டோரை எல்லாம் வெட்டிப்போடும் அளவிற்கு அங்கு என்ன நடந்தது என விசாரிக்கும் போது பிளக்ஸ் பேனர் கதையினை சொல்கிறார்கள். பட்டியலின இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் 6-பேர் கடும் காயங்களோடு நெல்லை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூர்மையான ஆயுதங்களோடு 10-க்கும் மேற்பட்ட நபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒரு இளைஞரது கைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. கால், கை என காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடந்தேறியுள்ளது. இதுவரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் நெட்டூர் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க நிரந்தர தீர்வை ஆலோசித்து தமிழ்நாடு அரசு நடைமுறைபடுத்த வேண்டும்.

நெட்டூர் சுற்றுவட்டாரங்களில் கல்வி இடை நிற்றல் அதிகம் என்பதாலும் போதைக்கு அடிமையாவதும் தான் முக்கியகாரணம் என்பதை அறியமுடிகிறது. இதில் கவனம் செலுத்தினால் மட்டுமே தொடர் கலவரங்கள் போன்ற வன்முறைகள் நடைபெறாமலிருக்கும். ஜாதிக்கு எதிரான பரப்புரையை அரசு செய்திட வேண்டும். ஜாதி கெளரவம் என பேசும் இளைஞர்களிடம் ஜாதி இழிவு என்பதை புரிய வைக்க வேண்டும். உழைக்கும் மக்கள் ஒருவருக்கொருவர் வெட்டிக் கொல்வதை நாகரீக சமூகமாக நாம் பார்க்க முடியவில்லை.

நெட்டூர் பகுதிகளில் உயர் கல்வியோ, பாலிடெக்னிக், அய்.டி.அய். போன்ற எந்த கல்வி நிறுவனமும் இல்லை. அதனை அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நெட்டூரில் காவல் நிலையம் அமைத்திட வேண்டும்; காவல்துறை தொடர் கண்காணிப்பில் இப்பகுதி இருக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவாகள் மீது விரைவான விசாரணை, விரைவான தண்டனை என்பதை உறுதி செய்ய வேண்டும். இளம் சிறார்களும் இந்த ஜாதிவெறியாட்டத்தில் பங்குபெற்றிருப்பதை அரசு கூர்ந்து கவனிக்க வேண்டும். தற்போதைய சம்பவத்திற்கு தக்க நடவடிக்கையும் நிரந்தர தீர்விற்கு ஒரு குழு அமைத்து விசாரித்து அதன் பரிந்துரையை நடைமுறைபடுத்துவதன் மூலமே இந்த ஜாதிய கலவரங்களை தடுக்க முடியும். வழக்கப்போல் கடந்த கால ஆட்சியாளர்கள் மீது குற்றம் சுமத்தாமல் தமிழ்நாடு அரசு மௌனம் கலைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பால்.பிரபாகரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.