ஏழை-பணக்காரன், உயர்ந்த ஜாதி-தாழ்ந்த ஜாதி எல்லோரும் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க முடியாதா?
-டி. அப்துல்ரசாக், திருவள்ளூர்.

பணக்காரர்களால்தான் ஏழைகள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். தாழ்ந்த ஜாதி ஆனதே உயர் ஜாதிக்காரர்களால்தான். பணக்காரர்களின் செல்வத்தை எடுத்துதான் ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உயர் ஜாதிக்காரர்களின் ஜாதி ஆணவத்தை ஒழித்தால்தான், தாழ்ந்த ஜாதி தன்மை ஒழியும். ஜாதியும் ஒழியும்.

யாருக்கும் இழப்பு ஏற்படாமல் எல்லோருக்கும் நன்மை செய்ய, கடவுளால் கூட முடியாது.

கடவுள் புலிக்கு நன்மை செய்தால் மானைக் கொன்றுதான் ஆக வேண்டும். மானுக்கு நன்மை செய்தால் புலியைப் பட்டினி; போட்டு சாகடித்துத்தான் தீர வேண்டும்.

தனது கருத்தாழமிக்க திரைப்படப்பாடல்களால் கோடிக்கணக்கான தமிழர்கள் இதயங்களில் இடம் பிடித்தவர் கண்ணதாசன். அவர் பாடல்களை கேவலம் என்று சொல்லிவிட்டிர்களே?
-சுப.சீனிவாசன், காரைக்குடி.

தமிழர்களுக்கு இருக்கும் பல்வேறு மூடநம்பிக்கைகளில் கண்ணதாசன் பற்றிய மூட நம்பிக்கையும் ஒன்று. ‘கண்ணதாசனின் பாடல் வரிகள் மிகச் சிறப்பானவை’ என்று நினைத்துக் கொண்டிருப்பதும் ஒரு மூட நம்பிக்கைதான்.

சிறந்த பாடல் என்று சிலாகிக்கிற பெரும்பானமையான பாடல்களின் வரிகள் பல்லவியைத் தாண்டி பல பேருக்கு தெரியாது என்பதே உண்மை. காரணம் அந்தப் பாடலின் மெட்டுதான் அவர்களை வசீகரித்து இருக்கும். தனக்குத் தானே பாடிக் கொள்கிற பலபேர், இரண்டு வரிக்கு மேல் பாடல் வரிகளை தவறவிட்டு “தன னா தன னா...” என மெட்டைதான் பாடிக் கொள்வார்கள். அந்த இனிய மெட்டை தனக்கு தெரிந்த மொழியின் மூலமாக ஞாபகம் வைத்துக் கொள்வதால் இசையப்பாளருக்கு சேர வேண்டிய பெருமை, கவிஞனுக்குப் போய் சேர்ந்தது.

இளையராஜாவின் வருகைக்குப் பிறகு அவருடைய இசைதான் மிகத் துல்லியமாக இந்த வேறுபாட்டை பிரித்துக் காட்டி மக்களின் இசை ரசனையை தனியாக அடையாளம் காட்டியது. சினிமா வரலாற்றில் ஒரு நடிகனைவிடவும் மக்களிடம் அதிக செல்வாக்குப் பெற்ற நபராக ஒரு இசையமைப்பாளர் (இளையராஜா) உருவானார். (ஆனால் ஆபாச வரிகள் மெட்டையும் தாண்டி ஆக்கிரமிக்கும் என்பது வேறு)

ஒப்பீட்டளவில் பார்த்தால் தமிழ் சினிமாவில் கருத் தாழமிக்க பாடல்கள் எழுதிய ஒரே நபர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மட்டும்தான். மெட்டுக்களை உருவிவிட்டு வாசித்தாலும் வலிமையோடு இருக்கும் அவருடைய வார்த்தைகள்.

“தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்று குழந்தைக்கு அவர் சொன்ன சேதியில் தெறித்த பொதுவுடமையும்,

“நான் கருங்கல்லுச் சிலையோ, காதல் எனக்கில்லையோ, வரம்பு மீறுதல் முறையோ” என்று ஒரு பெண் தன் காதல் உணர்வை, தன்னுடைய சுயமரியாதை உணர்வோடு சேர்த்து பாடுவது போல் எழுதிய ஒரே கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்தான்.

காரணம் தனக்கென்று தத்துவமும் அரசியலும் கொண்ட திரைப்படப் பாடலாசிரியர் அவர் மட்டும்தான்.

அதேபோல் கவிரூர் சுரதா, குறைந்த பாடல்கள் எழுதினாலும் இலக்கிய தரமிக்க பாடல்கள் எழுதியவர்.

ஆனால் கண்ணதாசனிடம் இருந்தது வெறும் தொழில் நேர்த்திதான். கதையின் சூழ்நிலைக்கும், மெட்டுக்கும் பொருத்தமான வரிகளை விரைவில் எழுதுகிற ஆற்றல். அதனால்தான் அவர் அதிக பாடல்களை எழுதினார்.

சில நேரங்களில் சூழலுக்குப் பொருத்தமற்ற வரிகளையும் நிறைய எழுதியிருக்கிறார். ‘நெஞ்சில் ஒர் ஆலயம்’ படத்தில், “ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா? ஒரு மனதில் ஒரு முறைதான் மலரும் உறவல்லவா?” என்று தன்னை மறுமணம் செய்து கொள்ள நோய்வாய்ப்பட்ட கணவனைப் பார்த்து மனைவி பாடுவது போல் உள்ள பாடல். ஆனால் கதையின்படி அந்தப் பெண்ணுக்கு கணவன் இரண்டாவதாக மலர்ந்த மலர். முதல் மலர் டாக்டர்.

16 வயதினிலே படத்தில், கல்வி அறிவற்ற சப்பானி, “இது வள்ளுவனின் ஏட்டில் உண்டு பரம்பரை பாட்டில் உண்டு தவறில்லை மகராணி” என்று பெரிய பண்டிதனைப் போல் பாடியிருப்பார்.

ராஜபார்வை திரைப்படத்தில், பார்வையற்ற கதாநாயகன் தன் காதலியை, “சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன. சேர்ந்த பல் வரிசையாவும் முல்லை போன்றன” என்று நெற்றிகண்ணோடு சேர்ந்து மூன்று கண்களும் தெளிவாகத் தெரிகிற சிவபெருமான் பாடுவது போல் எழுதியிருப்பார்.

எனக்கு தெரிந்து மெட்டைத் தாண்டி வலிமையான வார்த்தைகளோடு ஒரே ஒரு பாடலைத்தான் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். அது ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் ஒர் அடிமை பாடுவது போல், அமைந்த பாடல்.

“காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
வானம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல், தாய்மை, பாசம் நம்மை வெறுப்பதில்லையே”

ஒரு வேளை இந்தப் பாட்டை யாராவது மண்டபத்துல எழுதிக் கொடுத்தாங்களோ என்னவோ?

ஆண்களோடு பெண்கள் நட்பு ரீதியாக வெளியில் செல்வது, ஹோட்டலுக்குச் செல்வது என்பது சகஜமாகியிருக்கிறது. ஆண் நண்பர்கள் பெண்ணிடம் நல்ல நண்பர்களாக நடந்து கொள்கிறார்கள். இந்த கணவன் மார்களாக இருக்கிற ஆண்கள்தான் கொடுமைக்காரர்களாக இருக்கிறார்கள்?

எல்.பிரேமாவதி, சென்னை.

ஆண் நண்பர்கள் அன்பானவர்கள்தான். உங்கள் ஆண் நண்பர்களின் ‘அன்பை' தெளிவாகப் புரிந்து கொள்ள அவர்களின் மனைவிமார்களிடம் விசாரித்துப் பாருங்கள். அன்பின் யோக்கியதை அம்பலத்திற்கு வரும். அன்பு வேறு; ஜொள்ளு வேறு. ஆண் நண்பர்களோடு ஹோட்டலுக்குச் செல்வதில் தவறில்லை. ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் ஆண்தான் பணம் தரவேண்டும் என்று அமைதியாக இல்லாமல் ஆணை முந்திக் கொண்டு பில்லுக்கு பணம் தருவதுதான், சுயமாக சம்பாதிக்கும் பெண்ணின் சுயமரியாதைக்கு அழகு, பொதுவாக ஆண்களிடம் ஓசியில் வாங்கித் தின்னுகிற பெண்களின் மேல் வாங்கித் தருகிற ஆண்களுக்கே மரியாதை இருப்பதில்லை. அவர்களுக்கு ஆண்கள் வைத்திருக்கிற பட்டப்பெயர்
‘அயிட்டம்'.

சில நேரங்களில் பெண்ணுரிமையோடு நடந்து கொள்வதில் பொருள் நஷ்டம் இருக்கலாம். ஆனால் மரியாதை கிடைக்கும். சில நேரங்களில் பெண்ணடிமைத்தனத்தோடு நடந்து கொள்வது லாபமாக கூட இருக்கலாம். ஆனால் மரியாதை கிடைக்காது.

காதல் ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு முறைதானே வரும்?
எல்.நிவேதிதா, சென்னை.

சின்ன திருத்தம். ஒரு நபரின் மீது ஒரு முறை தான் வரும்.

பார்ப்பனப் பத்திரிகைகள் பெரியார் படத்தைப் பாராட்டித் தள்ளியிருக்கின்றனவே?

பெரியார்பித்தன், கும்பகோணம்.

பெரியாரை பாராட்டி விட்டு, பெரியார் கொள்கைகளுக்கு குழிதோண்டுகிற வேலை பார்ப்பனர்களுக்கு ஒன்றும் புதியதில்லையே. (ஒரு வேளை திரையில் வந்த பெரியார், பார்ப்பனியத்திற்கு ஆபத்தானவர் இல்லை என்று அவர்கள் உணர்ந்திருக்கலாம்)

மழலைக் கல்வி தமிழ் வழியில் இருப்பதுதானே சிறந்தது?
க.குமார், சென்னை.

ஐந்து வயதுக்குள் கல்வி என்பது மழலைத் தனத்துக்கு எதிரானது. கொடுமையை ஆங்கிலத்தில் செய்தால் என்ன? தமிழில் செய்தால் என்ன? கொடுமை கொடுமை தானே?

எல்லாவற்றிலும் போலிகள் வந்து விட்டன. அதிலும் நிஜத்தை விட நேர்த்தியான வடிவத்தில்.. போலிகளினால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. போலிகளை ஒழிக்கவே முடியாதா?
ஜான்சன், களியக்காவிளை.

போலிகளினால் எப்போதுமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. நிஜங்கள் தீங்கு செய்யும் போது, போலிகள்தான் குறைந்தபட்ச பாதுகாப்பையே தருகின்றன.

‘கோகோ கோலாவில் அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்பட்டிருக்கிறது. அதைக் குடிப்பதினால் உடல் நலத்திற்கு தீங்கு’ என்று விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அந்த நிறுவனம் தன்னுடைய சக்தி வாய்ந்த விளம்பரத்தினால், ‘கோக் குடிப்பது நவீன நாகரிகத்தின் அடையாளம்’ என்று மீண்டும் மீண்டும் மக்களைக் குடிக்க வைக்கிறது. கோக்கில் போலி வந்தால் அது மக்களைப் பூச்சிக் கொல்லி மருந்திலிருந்து காப்பாற்றுகிறது.

பன்னாட்டு நிறுவனத்தின் கொள்ளையையும் குறைக்கிறது. கோக்கைப் போலவே மக்களுக்கு கெடுதலை செய்கின்ற ‘சிவாஜி’ போன்ற படங்களை மக்கள் பார்க்க ஆசைப்பட்டால், ஒரு டிக்கெட் 1000 ரூபாய் கொடுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதையே திருட்டு வீசிடியில் பார்த்தால் ஒரு குடும்பமே 50 ரூபாயில் படம் பார்த்துவிடுவார்கள். குறைந்த பட்சம் ஏவிஎம் செட்டியார்கள், ரஜினிகாந்த் இவர்களின் கூட்டுக் கொள்ளையில் இருந்து மக்களை திருட்டு விசிடி போன்ற போலிகள்தானே பாதுகாக்கிறது.

வெறிபிடித்தத் தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. இவைகளைக் கொன்றால்தான் என்ன?
ம.ரமேஷ், சென்னை.

இந்தத் தொல்லை வெறிநாய்களால் அல்ல. ஜீவ காருண்ய சீலர்களால். ஜாதி இந்துக்கள், சைவ உணவு முறை பழக்கமுள்ள உயர்ஜாதிக்காரர்கள் எப்போதுமே உழைக்கும் மனிதர்களை விட விலங்குகளை மேன்மையானவைகளாக கருதுவார்கள்.

“அம்மா தாயே, சாப்பிட ஏதாவது இருந்த குடும்மா” என்று தன் வீட்டு வாசலில் பிச்சை எடுக்கிற ஒரு குழந்தையை விரட்டி விட்டு, எங்கோ இருக்கிற காக்காவை அழைத்து அதற்கு உணவு வைப்பார்கள்.

தனக்காக உழைக்கிற மனிதனைத் தொட்டாலே தீட்டு என்று ‘தீண்டாமையை’ கடைப்பிடிக்கிற இந்த ‘சுத்தமானவர்கள்’ பசுமாட்டின் பின்புறத்தை தொட்டுக் கண்ணில்; ஒத்திக் கொள்வார்கள். பிறகு அதிலிருந்து வழிகிற மூத்திரத்தை பிடித்து தலையில் தெளித்துக் கொண்டு, அதை ஒரு வாய் குடிக்கவும் செய்வார்கள். (மாட்டு மூத்திரத்தைக் குடிப்பவர்கள் உயர்ந்த ஜாதி. மாட்டு கறியை தின்பவர்கள் தாழ்ந்த ஜாதியாம்)

இதன் தொடர்ச்சி தான் இவர்களுக்கு வெறி நாய்கள் மற்றும் தெருநாய்கள் மீது வந்திருக்கிற பாசமும்.

எந்த மக்கள் தங்கள் உணவின் ஒரு பகுதியை கொடுத்து தெருநாய்களை அன்போடு வளர்த்தார்களோ - அந்த மக்கள்தான் அதைக் கொல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்கள். காரணம் அது அவர்களை தொல்லை செய்வதால், அவர்களைக் கடித்துக் கொல்வதால்.

ஆனால், தெரு நாய்கள் உயிர் வாழ்வதற்கு ஒரு ரொட்டியைக் கூட வாங்கி வீசாத ‘இரக்கமானவர்’கள்தான் ‘அவைகளை கொல்லக் கூடாது’ என்று ஊளையிடுகிறார்கள்.

தெருநாய்களோடு தன் வீட்டு ‘உயர்வகையான’ நாய்கள்கூட பழகி விடக் கூடாது என்று கயிறு கட்டி வீதியில் நாய் மேய்கிற இவர்கள்தான், தெருநாய்கள் மீது ‘அன்பை’ப் பொழிகிறார்கள்.

இந்த நாய் அபிமானிகள் சொல்லுகிற ஆலோசனை, “தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்து விட்டு மீண்டும் தெருவிலேயே விட்டு விடவேண்டும்” என்பது.

தான் வளர்க்கிற அன்பு நாய்களுக்கு வயதாகி விட்டாலோ, நோய் வாய் பட்டாலோ தனக்கு தொல்லை தந்தாலோ ‘புளு கிராசில்’ கொண்டு விட்டு விட்டு புது நாய் வாங்கிக் கொள்பவர்கள் தான்.

மக்களுக்கு தொல்லை தருகிற நாய்களை மீண்டும் தெருவிலேயே விட சொல்லுகிறார்கள். தெருநாய்களையும் புளு கிராசில் விட்டால் என்ன?

கும்பலாக வீதியில் சண்டை இட்டு திரிகிற தெருநாய்களோடு வாழ்வது எவ்வளவு துன்பமயமானது, சுகாதாரக் கேடானது என்பது அவர்களுக்கு தெரிய வேண்டுமானால், வெறி பிடித்த நாய்களை கும்பலாக கொண்டு போய் அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வந்துவிடவேண்டும். அந்த நாய்கள் எங்காவது ஏடாகூடமான இடத்தில் பிடித்து கடித்து வைத்தால்தான் அந்த மகா ‘ஞாநி’களுக்கு புத்தி வரும்.

எவ்வளவோ நாகரீகம் வந்து விட்டது. ஆனால் இன்னும் அரசியல் கட்சி மேடைகளில் துண்டு போர்த்துவதும், அரசியல்வாதிகள் தோளில் துண்டு போட்டுக் கொள்வதுமாக இருக்கிறார்களே, இந்த அநாகரீகமான துண்டுக் கலாச்சாரம் ஒழியவே ஒழியாதா?

எஸ்.என்.சிவசைலம், சேலம்.

தோளில் துண்டு போடுகிற கலாச்சாரம், இடுப்பில் துண்டு கட்டுகிற கலாச்சாரத்திற்கு எதிராக வந்தது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதிக்காரர்களைத் தவிர, வேறு யாரும் சட்டை அணியக் கூடாது. தோளில் துண்டுப் போடக்கூடாது, அப்படியே போட்டாலும் ‘உயர் ஜாதி’க்காரர்களை கண்டால் அந்தத் துண்டை எடுத்து இடுப்பில் கட்ட வேண்டும் என்று இருந்த அநீதியை எதிர்த்து பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் கடுமையாக போராடியது.

ஒடுக்கப்பட்ட இசை வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த - நாதஸ்வரம், தவில் வாசிக்கிற கலைஞர்கள், தோளில் துண்டுபோடக்கூடாது, என்று இருந்த ஜாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து, பெரியாரின் போர்வாளான பட்டுக்கோட்டை அழகிரி தொடர்ந்து போராடி, அவர்களுக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்தார்.

இன்று கூட தோளில் துண்டு போடுகிற பழக்கம் அரசியல் கட்சிகளில் அதிகம் இருப்பது திமுகவிடம்தான். அதற்குக் காரணம் பெரியார் மூலம் ஏற்பட்ட பழக்கமே.

தோளில் துண்டு போடுகிற இந்தப் பழக்கம், திராவிட இயக்கங்களின் பழக்கம் என்பதினால்தான் பார்ப்பன பத்திரிகைகள் - அரசியல்வாதிகள் பற்றியான நகைச்சுவைகளில், கார்ட்டூன்களில் தோளில் துண்டுப் போட்ட உருவங்களையே வெளியிடுவார்கள்.

அரசியல்வாதிகள் தோளில் துண்டுப் போட்டுக் கொள்வது உங்களுக்கு எந்த வகையில் இடைஞ்சலாக இருக்கிறது? நீங்கள் ஏன் எரிச்சல் அடைகிறீர்கள்?

தோளில் துண்டுப் போடுவது அநாகரிகமல்ல, சுயமரியாதை. தோளில் பூணூல் போடுவதுதான் அநாகரீகம்

பகுத்தறிவாளர்கள் ஆயிரம் வீராப்பு பேசினாலும், நட்புக்கு உதாரணம் என்றால் அது கர்ணன்-துரியோதனன் நட்புதானே. பகுத்தறிவாளர்கள் உதாரணம் காட்டுவதுக் கூட இவர்களைத்தானே?
கே.ரகுராம், கல்பாக்கம்.

செரூசோற்றுக் கடன் தீர்த்தான் கர்ணன்.

சோறு வாங்கிக் கொடுத்தான், சாராயம் வாங்கிக் கொடுத்தான் என்பதற்காக விசுவாசமாக இருப்பவனுக்குப் பெயர் நண்பனல்ல. அடியாள். அதற்கு மனிதன் அவசியமல்ல. அந்த நன்றியை நாய் கூட செய்துவிடும்.

தான் உதவி செய்தோம் என்பதற்காக உபகாரம் எதிர்பார்ப்பவன் நண்பனல்ல. எஜமான். தான் கொண்டகொள்கையை எதிர்ப்பவன், தன் உடன்பிறந்தவனாகவே இருந்தாலும், ஒருமித்தக் கருத்துக் கொண்ட தன் தோழர்களோடு இணைந்து உறுதியோடு எதிர்ப்பவனே, நண்பன் - தோழன். கொள்கை சார்ந்த நேர்மையும், அதை வெளிபடுத்துவதில் உள்ள தெளிவையும் பார்த்து ஏற்படுகிற நட்பே உறுதியானது. இனிமையானது. பார்த்த மாத்திரத்தில் பத்திக் கொள்வது காதல் அல்ல - கொள்கை சார்ந்த நட்பு மட்டுமே. அதற்கு உலக உதாரணம், மார்க்ஸ்-எங்கல்ஸ்.

மார்க்சை முதன் முதலில் சந்தித்த எங்கல்ஸ் அந்தப் பிரிவுக்குப் பிறகு, மார்க்சுக்கு முதல் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் இப்படிதான் முடிகிறது்

“அன்பு கார்ல், தங்களுடனிருந்த அந்தப் பத்து நாட்களும் நான் கொண்டிருந்த மகிழ்ச்சி, நான் அனுபவித்த அந்த மகோன்னதமான மனிதத்துவ உணர்வு இப்போது என்னிடமில்லை”

யாரையும் விட மாட்டீர்களா? எல்லாரையும் திட்டுகீறீர்களே?
சு.விநாயகம், சென்னை

தன்னைப் பற்றியோ தனக்கு வேண்டியவர்கள் பற்றியோ விமர்சிக்கும்போது, அதை நேரடியாகக் கேட்க தைரியமற்றவர்களின் உளவியல் சார்ந்த கேள்வி இது. தன் விஷயத்தையே பொதுவிஷயமாக மாற்றி, தன்னையும் தனக்கு வேண்டியவர்களை விமர்சிக்கிற காரணத்தினாலேயே, தரமான ஒன்றைத் ‘தரமற்றது' என்று பிரச்சாரம் செய்வதின் மூலமாக, ‘பழிவாங்கிய மனத் திருப்தி'யை அடைவதற்கான முயற்சியே இந்தக் கேள்வியின் உளவியல் பின்னணி. நான் விமர்சிக்கிற விஷயம், சரியா? தவறா? என்பது பற்றிதான் உங்கள் கேள்வி இருக்க வேண்டும். தவறு என்றால் சுட்டிக் காட்டுங்கள்.

பாராட்டிக் கொண்டிருப்பதற்கு ஆயிரம் பேர்கள் வருவார்கள். பாராட்டி அதன் மூலம் பலனும் பெறுவார்கள். சமூகப் பொறுப்புள்ளவன் யாரையும் தேவையற்று பாராட்டிக் கொண்டிருக்க மாட்டான். 151927ம் ஆண்டு தந்தை பெரியார் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

"பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், ‘குடியரசி'னால் நான் செய்து வந்த பிரச்சாரத்திலும் அரசியல் இயங்கங்களைக் கண்டித்தேன். வேதம் என்று சொல்லுபவற்றை, சாத்திரம் என்பதைக் கண்டித்தேன். பார்ப்பனியம் என்பதைக் கண்டித்தேன். சாதி என்பதைக் கண்டித்தேன். அரசாங்கம் என்பதைக் கண்டித்தேன். உத்தியோகம் என்பதைக் கண்டித்தேன். நீதிஸ்தலம் என்பதைக் கண்டித்தேன். தேர்தல் என்பதைக் கண்டித்தேன். கல்வி என்பதைக் கண்டித்தேன். ஸ்ரீமான்கள் கல்யாண சுந்தரம் முதலியார், வரதராஜூலு நாயுடு, ராஜகோபாலாச் சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்தேன். இன்னும் என்னெனவற்றையோ, யார் யாரையோ கண்டித்தேன். கோபம் வரும்படி வைதும் இருக்கிறேன். எதைக் கண்டித்திருக்கிறேன்? எதைக் கண்டிக்கவில்லை? என்பது எனக்கு ஞாபகத்திற்கு வர மாட்டேன் என்கிறது. இன்னமும் ஏதாவது எழுதலாம் என்று பேனாவை எடுத்தாலும், பேசலாம் என்று வாயைத் திறந்தாலும், கண்டிக்கவும், வையவும், துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகின்றதே ஒழிய, வேறில்லை. கண்டிக்கத்தகாத தியாகமோ, திட்டமோ, அபிப்ராயமோ என் கண்களுக்கு படமாட்டேன் என்கிறது.''

உங்கள் கேள்வி பதில் பகுதியில் வெவ்வேறு கேள்விகளுக்கான பதில்களின் போது, சிவாஜியை சிறந்த நடிகர் என்று இரண்டு முறை குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் அவர் நடிப்பு மிகைப்படுத்தப்பட்ட நடிப்பாகவே இருந்தது. மிகைப்படுத்தப்பட்டது என்பதே யதார்த்தத்திற்கு எதிரானது. யதார்த்தத்திற்கு எதிரானது எப்படி சிறப்பானதாக இருக்கும்?
- டி. சிவராமன், நன்னிலம்.

அன்னையின் ஆணை, திரிசூலம், லாரி டிரைவர் ராஜாகண்ணு போன்ற பல திரைப்படங்கள் அவருடைய மிகைப்படுத்தப்பட்ட நடிப்பால் பார்வையாளர்களைத் துன்புறுத்தியது என்பது உண்மைதான். இவைகளை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு சிவாஜியை ஒட்டு மொத்தமாக திறமையற்றவராக நிராகரிப்பது, தந்திரமான மதிப்பீடு.

தமிழின் மிகச் சிறந்தப் பொழுதுபோக்கு படமான ‘தில்லான மோகனாம்பாளில்’ சிவாஜி கணேசனின் ‘அண்டர் பிளே’ அவரின் நடிப்புத் திறமைக்கு ஒரு சான்று.

‘உத்தம புத்திரன்’ திரைப்படத்தில், ‘யாரடி நீ மோகினி’ பாடலில் சிவாஜியின் வேகமான மிக நேர்த்தியான அசைவுகள் மிக மிக நவீன பாணியிலான அழகு. இப்படி நிறைய சொல்லலாம்.

கலைவடிவங்களில் யதார்த்தம்தான் சிறப்பானது என்பதில்லை. மிகைப்படுத்தப்பட்டது கூட அழகியலோடு இருந்தால் சிறப்பாக இருக்கும். உலகத்தையே தன் வசப்படுத்தி வைத்திருந்த சாப்ளின் நடிப்பு யதார்த்தமானது அல்ல. ‘ஒரு வினாடிக்கு 24 பிரேம்ஸ்’ என்கிற தொழில்; நுட்பம் வளராத காலத்தில் வந்த அவரது திரைப்படங்கள் யதார்த்தத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத வேகம் கூடிய காட்சிகளாகவே இருக்கும். (தண்டி யாத்திரை பற்றியான டாக்குமெண்டரி படத்தில், காந்தி ஓட்டப்பந்தய வீரனைப் போல் துள்ளிக் குதித்து ஓடுவதற்கும் அந்த தொழில் நுட்பக் குறைபாடே காரணம்.) கண், காது, வாய், முகம், கை என்று தனியாக குளோசப்பில் காட்டுவது யதார்த்தமில்லை.

சில நேரங்களில் யதார்த்தத்தை புரிய வைப்பதற்குக்கூட மிகைப்படுத்தல் தேவையான ஒன்றாகத்தான் இருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சிவாஜியின் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பினால்தான் இன்று வரை பேசப்படுகிறது. கம்பீரமான, மிடுக்கான சிவாஜின் நடிப்பினாலும், உச்சரிப்பினாலும்தான் அந்தப் படத்தின் வசனங்களில் தீப்பொறி பறந்தது. அதனால்தான் மாவீரன் கட்டபொம்மனை மக்கள் நினைவில் வைக்க முடிந்தது.

கொஞ்சம் இப்படிக் கற்பனை செய்து பாருங்கள், அந்தப் படத்தின் வசனங்களை தோளைக் குலுக்கி மிக அமைதியாக, யதார்த்த பாணியில் இப்படி பேசியிருந்தால்்

“இல்லிங்க, ஒத்துக்க முடியாதுங்க. மழை பெய்யுது, விவசாயம் நடக்குது. அப்புறம் நான் எதுக்குங்க உங்களுக்கு வரி குடுக்கணும். நீங்க யாருங்க? உங்களுக்கும் எங்களுக்கும் என்னங்க சம்பந்தம்? சாரி, முடியாதுங்க?”

கட்டபொம்மன் படம்; இன்னும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்றால், “ஏமிரா? எவருரா நூவு? தொங்கனா கொடுக்கா” இப்படித்தான் வசனம் இருந்திருக்க வேண்டும்.

முதலாளித்துவம் மிக மோசமானது சொல்கிறீர்கள். ஆனால் முதலாளித்துவ நாடுகள்தான் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடிப்படை உணவு வசதி, மருத்துவ வசதி, கல்வி வசதி போன்றவற்றை செய்கின்றன. இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருத்துவ வசதி, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் இவற்றிற்கெல்லாம் கோடிக்கணக்காக பணம் தருகிறார்கள். அப்புறம் எப்படி முதலாளித்துவம் மோசமானதாக இருக்கும்?
- ஜெனிபர் வில்சன், நாகர்கோவில்.

ஆப்பிரிக்க நாடுகள் அதோ கதிக்கு ஆனதிற்குக் காரணமே, முதலாளித்துவ நாடுகள்தான். உலகிற்கு மிக அதிகமாக தங்கத்தை தருகிற தென்ஆப்பிரிக்காவை சூறையாடின முதலாளித்துவ நாடுகள். தங்கத்தின் மீதும் பகட்டான வாழ்க்கையின் மீதும் விருப்பமற்று இயற்கையோடு இணைந்து வாழ்ந்த அப்பாவிகளான அந்த ஆப்பிரிக்க நாட்டு மக்களை, அடிமைகளாக நடத்தியது வெள்ளைக்கார முதலாளித்துவ நாடுகள். தனது திருட்டுத்தனத்தை மறைத்துக் கொள்வதற்கும், அதை தொடர்ந்து செய்வதற்கும் எப்போதுமே ‘தர்ம பிரபு’ வேடத்தையே கையாள்வார்கள் கொள்ளைக் கூட்டத்தார்.

கள்ளச்சாராயம் விற்று சம்பாதித்த பணத்திலும் கல்லூரிகள் கட்டி கொள்ளையடித்த பணத்திலும் இன்னும் ஊரை ஏமாற்றிச் சேர்த்த சொத்திலும் கால் துளியை எடுத்துக் கோயில் திருவிழா, ஏழைகளுக்கு இலவசத் திருமணங்கள், ஊனமுற்றவர்களுக்கு சைக்கிள் ரிக்ஷா என்று வாரி வழங்குபவர்கள் எப்படி கருணை உள்ள தொழில் அதிபர்களாகப் பார்க்கப்படுகிறார்களோ, அதுபோல்தான் முதலாளித்துவ நாடுகளும் தங்களைக் காட்டிக் கொள்கின்றன.

முதலாளித்துவத்தின் இந்த மோசடியை 150 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, தங்களது கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள் மார்க்சும் எங்கல்சும்.

முதலாளித்துவ சோசலிசம் என்று தலைப்பிட்டு இப்படி ஆரம்பித்திருக்கிறார்கள்;

“முதலாளித்துவ வர்க்கத்தில் ஒரு பகுதி, முதலாளித்துவ சமுதாயம் தொடர்ந்து நிலவும்படி உறுதி செய்து கொள்ளும் பொருட்டு சமூகக் குறைபாடுகளை அகற்ற விரும்புகிறது.

பொருளியலாளர்களும் கொடை வள்ளல்களும் மனிதாபிமானிகளும் உழைப்பாளி மக்களுடைய நிலைமையை மேம்படுத்துவோரும் தருமப் பணித் துறையாளரும் ஜீவகாருண்ய சழூகத்தாரும்,மதுக் குறைப்பு வீரர்களும் இன்னும் எல்லாவிதமான துக்கடாச் சீர்திருத்தக்காரர்களும் இந்தப் பகுதியை சேர்ந்தவர்களே.” இப்படிச் சொல்லி கொண்டே வந்து இறுதியாய் முதலாளிகள் தங்கள் வாழ்க்கையைத் தொழிலாளர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள், என்று கூடச் சொல்வார்கள் என்கிற அர்த்தப்படும்படி இப்படிச் சொல்கிறார்கள், ‘முதலாளித்துவ சோக்ஷலிசத்தைச் சுருக்கமாய் ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடலாம் “முதலாளி முதலாளியாய் இருப்பது, தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காகவே.”
Pin It