ஆரியச் சிந்தனை என்பது அநீதிகளின் கூடாரம், அருவருப்புகளின் குவியல், ஆரியரல்லாதவர்க்கு நஞ்சு, பாகுபாடுகளின் பாசறை, பச்சோந்திகளின் சரணாலயம், பார்ப்பனர்களுக்கு சொர்க்கம், பாட்டாளிகளுக்கு நரகம் என்பதை ஆபே துபே முதல் அறிஞர் அன்ணா வரை பலர் எடுத்தியம்பியுள்ளார்கள். அவர்கள் மிகைபடக் கூறிவிட்டார்களோ என்று சிலருக்கு ஐயமிருக்கலாம். அந்த ஐயத்தைப் போக்கும் வகையில் “இந்து வாய்ஸ்” (Hindu Voice) என்ற ஆங்கில மாத இதழ் ஆசிரியர் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி அவர்களுக்கு எழுதியுள்ள மடல் அமைந்துள்ளது. அம்மடல் அவ்வேட்டின் சூன் மாத இதழில் வெளிவந்துள்ளது. இவ்வேடு மும்பையிலிருந்து வெளிவருகிறது. இதன் ஆசிரியர் பி. தெய்வமுத்து ( இவர் பிறப்பால் ஆரிய மரபல்லாதவராகக் கூட இருக்கலாம். ஆனால் ஆரியச் சிந்தனையின் முழுப் பிரதிநிதி )

தலைமை அமைச்சர் நரேந்திர மோடி என்னென்ன சீர்த்திருத்தங்களை, திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று இந்துவாய்ஸ் ஆசிரியர் பட்டியலிட்டுள்ளார்.

“இந்து வாய்ஸ் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வருகிறது. இவ்விதழ் நீங்கள் அறியாததல்ல; குசராத் அரசின் செய்தி இயக்குநரகம் இதன் வாழ்நாள் உறுப்பினர். உங்களுக்கும் நேரடியாக இவ்விதழ்கள் அனுப்பப்படுகின்றன. 2003 மார்ச்சு 7 – ஆம் நாளிட்டு நீங்கள் கூட இந்து வாய்சுக்கு வாழ்த்துமடல் அனுப்பியிருந்தீர்கள்” என்ற அறிமுகத்துடன் தொடங்குகிறது அம்மடல்.

மோடி அவர்களுக்கு அம்மடல் முன் வைத்துள்ள கோரிக்கைகள்:

1. இந்தியாவை இந்து தேசம் என்று அறிவிக்க வேண்டும். “இந்தியா” என்ற பெயரை நீக்கிவிட்டுப் “பாரதம்” என்று மட்டும் அழைக்க வேண்டும்.

2. ரூபாய்த் தாள்களிலும் நாணயங்களிலும் காந்தி படத்தை நீக்கி விட்டு மாதா லெட்சுமி படத்தைப் பொறிக்க வேண்டும்.

3. இந்துவோ, கிறித்தவரோ, இசுலாமியரோ யாராக இருந்தாலும் “பாரத மாதாவுக்கு ஜே” என்று முழங்க வேண்டும். இதைக் கட்டாயம் கடைபிடித்திட சட்டம் இயற்ற வேண்டும்.

4. இந்தியாவின் நாட்டுப்பண் (ஜன கன மன) பாடி முடித்ததும் “பாரத் மாதா கீ ஜே,” ”வந்தே மாதரம்” என்று முழங்குவதைச் சட்டக் கட்டாயமாக்க வேண்டும்.

5. தலைமை அமைச்சர், குடியரசுத் தலைவர், எல்லா மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் “பாரத் மாதா கீ ஜே” “வந்தே மாதரம்” என்று கூறித்தான் பதவி உறுதி மொழி எடுக்க வேண்டும் இவ்வாறு முழங்க மறுப்போரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

6. “சிறுபான்மை” என்ற சொல்லைத் தடை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் “தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் 1992” போன்றவை தானாகவே செல்லாததாகி விடும்.

7. சனாதன இந்து தர்மம், இந்து நாகரிகம், இந்து நடைமுறைகள், இந்து நம்பிக்கைகள், இந்துப் புனித நூல்கள் ஆகியவற்றைக் காப்பாற்ற “இடருற்றுள்ள நாகரிகக் காப்புச் சட்டம் “ ஒன்று கொண்டு வரவேண்டும். ( Endangered Civilisation Protection Act)

8. மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து கிராம மக்களைக் காப்பாற்ற “சல்வா ஜூடும்” என்ற குடிமக்கள் படை சத்தீசுகரில் உருவாக்கப்பட்டது போல், இந்து தர்மம், இந்துப் பண்பாடு, இந்துப் புனித நூல்கள், இந்துப் பாராம்பரியம், இந்து நம்பிக்கை போன்றவற்றைக் காப்பாற்ற இந்து அமைப்புகளுக்குக் காவல் துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

9. அரசு நிகழ்ச்சி எல்லாவற்றிலும் குத்து விளக்கேற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் ஆண்டுக்கொருமுறை சத்திய நாராயணா பூசை நடத்த வேண்டும்.

10. பாரத் மாதா கீ ஜே , வந்தே மாதரம் என்று சொல்லமறுப்பவர்கள், பாகிஸ்தான் வாழ்க என்போர், இந்தியத் தேசியக் கொடியை எரிப்போர், மனித உரிமை என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு உதவுவோர் முதலியவகளின் வாக்குரிமையை நிரந்தரமாகப் பறித்து விட வேண்டும். அவர்கள் உயிர்வாழ மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

11. சமசுகிருதம், வேதம் ஆகியவற்றைக் கற்போர்க்கு உதவித் தொகை வழங்க வேண்டும்.

12. குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும். “பெண்களுக்கு அதிகாரம்” என்ற பெயரில் பழைமையிலிருந்து பெண்கள் விலகிச் செல்ல அனுமதிக்கக் கூடாது.

13. இந்துக் கோயில்களை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்.

இவை போல் பல கோரிக்கைகளை சட்டமாக்க வேண்டும் என்று நரேந்திரமோடியை இந்து வாய்ஸ் ஏடு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆரியம், பார்ப்பனியம், இந்துத்துவா, ஆர். எஸ். எஸ், பாசக என்றால் என்னவென்று பொருள் புரியாதவர்கள் மேற்படி இந்து வாய்ஸ் கடிதத்தையும் அவ்விதழையும் முழுமையாகப் படித்தால் புரிந்து கொள்ள முடியும்.

அடுத்து இராபர்ட் கால்டுவெல் பற்றி இதே இதழில் ஒரு கட்டுரை வந்துள்ளது. தமிழ் தனித்து இயங்கக் கூடிய மொழி என்றும் திராவிடம் தனி இனம் என்றும் கூறி பார்ப்பன எதிர்ப்பு – சமற்கிருத எதிர்ப்பு என்ற நஞ்சைக் கால்டுவெல் விதைத்தாராம். அவருடைய இருநூறாம் ஆண்டு பிறந்தநாள் விழாவைத் தமிழக முதலமைச்சர் செயலலிதா கொண்டாடியது தவறு என்றும் அவ்விதழ் சுட்டிக் காட்டியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்காக செயலலிதாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக் கூறும் அவ்வேடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் உள்ள “ அண்ணா” “திராவிட” என்ற இரு சொற்களை நீக்கிவிட்டு அனைத்திந்திய முன்னேற்றக் கழகம் என்று மாற்றிக் கொண்டு அனைத்திந்திய அரசியலுக்கு வருமாறும் அழைத்துள்ளது.

தமிழர்களே,

இந்துத்துவா என்பது வெறும் மதவாதமன்று! அது ஓர் இனவாதம்!

இந்துத்துவா என்பது வெறும் பழமைவாதமன்று! அது பிறப்பு அடிப்படையிலான அதிகார வாதம்!

இந்துத்துவா என்பது வெறும் ஆன்மிகம் அன்று அது ஓர் அரசியல்!

ஆரிய மரபினரும் பார்ப்பனர்களும் மட்டுமே இந்துத்துவாவில் இருப்பர் என்று கருதக் கூடாது. அவர்கள் தலைமையில் ஆரியமல்லாத பார்ப்பனரல்லாத தன்னல வாதிகளும் இருப்பர்; விவரமறியா அப்பாவிகளும் இருப்பர்!

ஆரியத்தை முறியடிக்க நாம் தமிழினத்தை முன்வைக்க வேண்டும். பார்ப்பனியத்தை வீழ்த்த நாம் தமிழர் அறத்தை ஏந்த வேண்டும். இந்துத்துவா அரசியலை எதிர்கொள்ள நாம் தமிழ்த் தேசிய அரசியலை முன் வைக்க வேண்டும்.

மனித உரிமை – மனித சமத்துவம், மதச்சார்பின்மை என்ற கோட்பாடுகளை மட்டும் முன்னிறுத்தி இந்துத்துவாவை வீழ்த்த முடியாது. ஏனெனில் இந்துத்துவா தன்னுடன் வடபுல மண் சார்ந்த செய்திகளை, வடபுல மரபு சார்ந்த செய்திகளை ஏந்தி, அதைத் தமிழ்மண்ணுடன் மத அடிப்படையில் பொருத்திக் காட்டுகிறது. எனவே தமிழ்மண், தமிழ் இனம், தமிழர் ஆன்மிகம், தமிழர் மரபு என்ற ஆயுதங்களை ஏந்தித்தான் தமிழ்மண்ணில் இந்துத்துவாவை வீழ்த்த முடியும்.

தமிழ் முகமூடியுடன் இந்துத்துவா வரும்! புரட்சித் தன்மையுள்ள தமிழ்த் தேசியம்தான் அந்தப் போலித்தனத்தை அம்பலப்படுத்த முடியும். தமிழ்த் தேசியம் என்பதில் மனித சமத்துவத்திற்கான - மதச்சார்பின்மைக்கான தமிழர் அறம் இருக்கிறது.

பார்ப்பனியத்திற்கு வலதுசாரி முகமுண்டு, இடதுசாரி முகண்டு, திராவிடசாரி முகமுண்டு. அது தமிழ் முகமூடி மாட்டிக் கொண்டும் வரும். புரட்சித் தமிழ்த் தேசிய வாள்தான் அந்தப் போலி முகமூடிகளைக் குத்திக் கிழிக்கும்!

Pin It