(9.11.2013 அன்று தஞ்சையில் நடந்த முள்ளிவாய்க்கால் முற்ற திறப்பு விழா பாவரங்க நிகழ்வில் வாசிக்கப்பெற்ற கவிதையின் ஒரு பகுதி)

கற்கல்.. காவியமானது..
நெருப்பு ..ஓவியமானது..

தஞ்சை - இனி
நெற்களஞ்சியமில்லை!
கற்களஞ்சியம்”

இனத்திற்கு
உயிர்கொடுத்த
உடல்களுக்கு
உளி எடுத்து
உயிர்கொடுத்திருக்கிறார்
அய்யா நெடுமாறன்!

இராச இராச்சோழன்
நிற்க வைத்த கற்கல்
“கோயில் கலையானது!

சோழன் மிச்சம் வைத்த
கற்கல் - இன்று
கண்ணீர் சிலையானது!

கற்களில் சொற்கள்
விளைந்தால் - அது
கல்வெட்டு..
கற்களில் கண்ணீர் வடிந்தால் - அது
முற்றம்! முள்ளிவாய்க்கால்
சிற்பம்!

ஓவியர் வீரசந்தனத்தின்
விரல்கள் அழுதிருக்கிறது! சிற்பி
முருகனின் உளி- கல்லை
உழுதிருக்கிறது!

முள்ளிவாய்க்கால் -அது
அழுகுரலின்
தலைநகரம்..!
உயிர்நீத்த உடல்களை
தூக்கி சுமந்த சுடுகாடு!

சுடு.. சுடு.. என்று
உச்சரித்தப் புலிக்காடு
பிணங்களை எடு! எடு!
என்று புலம்பிய குருதி மண்!

இனப்பகையும்
விசப் புகையும்- எம்
மூச்சுக்காற்றை
குடித்த நிலம்..

வெள்ளைக் கொடியேந்திய
சமாதானப் பறவைகள்
எரிந்து சாய்ந்த இடம்!

காட்டேறி மகிந்தாவுக்கும்
கங்காணி சம்பந்தர் விக்கிக்கும்
நல்ல பொருத்தம்...
13 ஆவது சட்ட திருத்தம்!

“கிறுக்கப்பட்ட தாளிலேயே
கிறுக்குவதில் என்ன திருத்தம்”
அங்கே.. நடந்தது
மாகாணசபைத் தேர்தல் இல்லை
மயாண சபைத் தேர்தல்!

எலும்பும் தோளுமாய்
முள்வேலி முகாமில்
இன்னும் தேம்புகிறது
எம்மினம்!

இவர்களின்
பதவி நாற்காலியோ
எலும்பு கூடுகளுக்கு மேல் நின்று
பல்லிளிக்கிறது! இவர்கள்
எந்த இனம்?

ஈழக் கொடூரக் காட்சிகளைக்
கண்ணுற்று
பக்கம்.. பக்கமாய்
துரோகத்தின்
ஒப்பாரி சத்தம்!

பல நாடுகள் சூழ்ந்து
கொத்துக் கொத்தாய்
கொன்றழித்த போது..
நீங்கள்..
சக்கர நாற்காலிக்கு
சவுக்காரம்
போட்டுக் கொண்டிருந்தீர்கள்!

மூட்டை.. மூட்டையாய்
தமிழர் பிணங்கள்
முள்ளிவாய்க்கால் மூலையில்
முடங்கிக் கிடந்த போது..
நீங்கள்.. மூன்று மணி நேர
உண்ணா நோம்பை
உடனே முடித்தீர்!

இந்தியத்தின் ஆயுதம் - எம்
இனத்தின் உயிர்க் குடித்தது!

நீங்கள்..! பதவி நாற்காலி
பறந்துவிடாமல்
ஆணிகளை அடித்துக்
கொண்டிருந்தீர்!

சாவுக்களத்தில் தமிழினத்தை
காவு கொடுத்தவர்
பட்டியலில் உங்கள் பெயர்
எழுத்துப் பிழையின்றி
எழுதுப்பட்டுள்ளது!

உங்கள்..
அரிதார முகமூடியை
வரலாறு என்றோ
கழட்டிவிட்டது!

நீங்கள்
எத்தனை சொட்டுக்
கண்ணீர் விட்டாலும்
ஒரு சொட்டுக்கூட
ஒரு ஓட்டு விழாது!

அவதூறு வழக்குகள் போடவே
அவதாரம் எடுக்கிறது!
அரசு..

தண்ணீர் பாட்டில்
தருவதென்றாலும்
கழிவறை திறப்பதென்றாலும்
ஆசிப் பெற்றுதான்
ஆரம்பிக்க வேண்டுமென்பது
உங்கள் அரசு தர்பாரில்
நடக்கின்ற கும்பாபிசேகம்!

இங்கே.. முட்டி முளைத்து
எழுந்து நிற்கும் முற்றத்திற்கு
எதற்கு உங்கள் முட்டுக்கட்டை?

நாடா.. இது! அழுவதற்கும்
அனுமதி கேட்கும் சாபக்கேடு!

நீங்கள்..
நெருப்புத் துண்டுகளை
ஊதி அணைக்கலாம்!
நாங்கள்.. அதே
நெருப்புத்துண்டுகளை
ஊதி பெருக்குவோம்!
நெருப்புத்துண்டுகள் மேல்
எறும்புகள் ஏறமுடியாது!

நான்காண்டுகளாய்
கொலை ஆதாரக் கொடுமைகளை
சேனல்4 கொட்டிக் கொட்டிக் காட்டியது!
நம்பவில்லை நயவஞ்சகம்..

இசைப் பிரியாவின்
மூடா தசைகளை
இராணுவ அரம்பர்கள்
அள்ளும் காட்சியும்
கொல்லும் சாட்சியும்
காணொளிகளில்
குருதியாய் ஒழுகியது!
காட்சியைக் கண்ட
“காரைக்குடி கங்காணி”
சிறப்பாகக் கண்டித்தார்!

காரணம்?
கண்டுபிடிக்க முடியாத
கம்பசித்திரமில்லை..
மெல்ல.. மெல்ல..
நடந்து வருகிறது
நாடாளுமன்றத் தேர்தல்!

நடித்தால் தானே!
‘கை’காரர்களுக்கு
காசு!

காமக் கொடூரர்கள்
வாழும் நாட்டில்
காமன் வெல்தாம் - தமிழர்
இரத்தம் குடித்த காட்டேறிக்கு
தலைவர் பொருப்பாம்!

இந்தியாவின் இடுப்பை
ஒடித்தால்
காமன் வெல்த்
காணமல் போகும்
கயவன் சூழ்ச்சி
ஊனமாய்ப் போகும்!

தமிழகத் தமிழர்கள்
ஈழத்தை மட்டுமே
இதயத்தில் சுமப்பது
வரலாற்றுப் பிழை! அது
விடுதலைச் சாளரம்
திறப்பதற்கான சூத்திரமில்லை!

ஏன்.. நீ.. அம்மணமாக
இருந்து கொண்டு - உன்
தம்பிக்கு ஆடை கேட்கிறாய்?

இந்தியா ஒரு நாடல்ல.. அது
பாரத மாதாவின் பங்கு சந்தை!
ஆரியத்தின் ஆயுதக் கிடங்கு..

இந்தியாதான்
தமிழீழத்தை எட்டி உதைத்தது!
தமிழகத்தை கட்டி வதைத்தது!

இங்கே..
மண் புழுவிலிருந்து
மண் வரை மாண்டுவிட்டது!

மதங்கொண்ட
இந்தியா எனும் யானை
எம் வாழ்வை நசிக்குவிட்டது!

காவிரி நடக்க வில்லை
முல்லைப் பெரியாறு
முடியவில்லை..
கச்சத் தீவு காணவில்லை
கூடங்குளம் மூடவில்லை
மீனவர் உயிர் மீளவில்லை
மின்சாரம் வரவே இல்லை!

இப்படி எல்லாமே!
தமிழனுக்கில்லை - நாம்
தமிழர் என்பதால்தான்
இல்லவே இல்லை!

இந்தியா ஒரு குப்பை
குப்பையை அகற்றாமல்
கொசுக்களை
அடித்துக் கொண்டிருக்கிறோம்!

இங்கே..
கல்வி மொழியாக தமிழில்லை
ஆட்சி மொழியாக தமிழில்லை
நீதி மொழியாக தமிழில்லை
வீதி மொழியாக தமிழில்லை

தண்டவாளத்தில்
தலைவைக்கப் போனதெல்லாம்
உண்மைதான்.. நீங்கள்தான்
பிழைத்துக் கொண்டீர்கள்
தமிழை தண்டவாளத்திலேயே
நிறுத்திவிட்டு!

அரியனை ஏறிய
ஆரிய அரவம் - தமிழை
அழிக்க ஆணையிடுகிறது!
பூணூல் கயிறால்
தமிழ்வழிக் கல்வி
கழுத்தை நெறிக்கிறது!

இந்திய சிங்கள
ஆரிய முகங்கள்
இணைந்து நடத்திய
கொலைக் களத்தின்
மனக்காயம்
ஆறவே.. ஆறாது!

முள்ளிவாய்க்கால்...
முற்றுப்புள்ளி இல்லை
விடுதலைக்கான
தொடக்கப்புள்ளி!

வல்வெட்டித்துறை- எங்களின்
வரலாற்றுத் துறை அது
தேயும் பிறையில்லை- இனி
பாயும் புலிப் பிள்ளை
புதிய திசையில்
புதிய நெருப்பாய்
பிறப்பான் புலி வீரன்

பொருத்திருங்கள்..!
உடையும் சிங்களம்!
விடியும் தமிழீழம்!

Pin It