விசித்திர மூட்டையொன்றை
சுமந்தவண்ணம் வீதியெங்கும் அலைகிறாய்
அகப்பட்டவரிடமெல்லாம் பிரித்துக் காட்டியபடி...
வசீகர எண்ணங்களை விற்றுக் கொண்டிருக்கும்
வார்த்தை வியாபாரி... நீ!
யாரும் உட்புகா உன் தனிமைத் தாழினை
உடைத்து நடுநிசியைப் பகிர்ந்தளிக்கிறாய்
எனக்கு மட்டுமாய்!
பின்னிரவில் வானவில் ஒன்றை வரவழைத்து
யாகமொன்றை வளர்க்கத் துவங்குகிறாய்...
உன் மூட்டைக்குள்ளிருக்கும் மது தோய்ந்த
வார்த்தைகளை  அக்னிமேல் வீசியபடி...
மென்மொழிச் சுடரொன்று பற்றியெரிகிறது
உன்மத்தம் கொண்டபடி...
பதினான்காம் நூற்றாண்டின் இளவரசனென
முழந்தாளோடு, முத்தமுமிட்டு
உன் காதலைப் பகன்ற பொழுதினில்
வானவில்லுக்குள் வளர்சிதை மாற்றம்!
உனக்கென்னவோ மூட்டையோடு பயணிப்பது
இலகுவாகவும், பாதுகாப்பானதாகவுமிருக்க,
நானோ,
பறவை இறகை இழுத்துச் செல்லும் எறும்பாய்
உன் ஒற்றை வார்த்தையை இழுத்தபடி
தடுமாறி அலைந்தவண்ணமிருக்கிறேன்
இப்பிரபஞ்ச வெளியெங்கும்!

- ஜி.தேவி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.