கிறுக்குத்தனம் என்று தான் எல்லோரும் பேசி கொண்டார்கள்.   

அவர்கள் வாழ்ந்த பகுதியிலேயே கல்லூரி சென்று பட்டம் பெற்ற முதல் பெண், வரக்கூடிய பொன்னான வாழ்வை உதறிவிட்டு சொந்தமாக சம்பாத்தியமோ இருப்பிடமோ இல்லாத ஊர் ஊராகச் சுற்றும் ஒரு காந்திய வழியிலான லட்சியவாதியைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி பலரும் அப்படித்தான் பேசியிருப்பார்கள். ஆனால் கிருஷ்ணம்மாள் நன்கு யோசித்துத்தான் அந்த முடிவை எடுத்தார்கள். தன் குடிகார அப்பா மிகக் கொடுமையாகத் தன் தாயை நடத்தியதையும் இளம் வயதிலேயே விதவை ஆகிவிட்ட தாய் அரும்பாடுபட்டு பிள்ளைகளை ஆளாக்கியதையும் கண்கூடாகப் பார்த்தவர் திருமணம் என்ற ஒன்றே தேவையில்லை என்று தான் வைராக்கியமாக இருந்தார். ஜெகந்நாதனின் பண்பு அந்த வைராக்கியத்தை அசைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஜெகந்நாதனும் சமூக சேவையால் காலத்தைக் கழித்து முடிவு செய்தவர் தான்.ஆனால் அவ்வாறு வாழ்பவர்கள் சிலர் கட்டுப்பாடில்லாமல் தாந்தோன்றித் தனமாகச் சீரழிந்ததைப் பார்க்க நேர்கையில் சரியான இல்லறத்துணை அவசியம் என முடிவு எடுத்த போது கண்ணில் பட்டவர் கிருஷ்ணம்மாள்.

கையிலோ காதிலோ கழுத்திலோ ஏன் மூக்குத்தி என்ற பெயரில் சிறு பொட்டு கூடத் தங்கம் அணியாத அந்த எளிமையான சேவை மனப்பான்மை கொண்ட பெண்ணை பார்த்தவுடன் செய்த தீர்மானம் அது. இயற்கை எவ்வாறு பொருத்தமான ஜோடிகளைச் சேர்த்து வைக்கிறது என வியக்காமல் இருக்க முடிய வில்லை. திருமணம் முடிந்த நாளில் இருந்து சமூகத் தொண்டே முதன்மையான இல்லறப் பணி என்று வாழ்ந்த அதிசய தம்பதிகள் இவர்கள்.   

தொடக்க கால திருமண வாழ்வும் சேர்ந்து இருந்து நடக்கவில்லை. திருமணமான இரண்டாம் நாளிலேயே சமூக தொண்டே பிரதானம் எனக் கிளம்பி போய்விடுகிறார் ஜெகந்நாதன். கிருஷ்ணம்மாள் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிலத் தொடங்கினார். சேர்ந்து வாழ முடியவில்லையே என்ற ஏக்கத்தை கடிதங்கள் மூலம் வெளிப்படுத்தினாலும் தீர்வு ஒன்றும் கிடைத்தபாடில்லை. ஆனால் வினோபாபாவேயின் பூதான் இயக்கம் மூலமாக அதற்கு வழி பிறந்தது.   

வினோபா காந்தியடிகளால் மிகவும் மதிக்கப் பட்ட ஒரு தலைவர். நாடு சுதந்திரம் அடந்த பின் இந்த நிலம் எல்லோருக்கும் பொதுவானது அதை பகிர்ந்து கொடுத்து வாழ்வதே ஒரு சமூகம் உய்யச் சிறந்த வழி என்ற உயரிய நோக்கோடு பூதான் இயக்கத்தை ஆரம்பித்தார்.உலகமே மிக வியப்போடு திரும்பி பார்த்த உதாரணமான திட்டம் அது. ஜெகந்நாதன் இந்த இயக்கத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டு வினோபாவேயின் அணுக்கத் தொண்டராக நாடும் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த பாத யாத்திரையில் கிருஷ்ணம்மாள் கலந்து கொள்வதே அவர்கள் சேர்ந்து வாழ ஒரே வழி கிருஷ்ணம்மாள் முழு மனதோடு அந்த முடிவுக்குச் சம்மதித்தார்.   

‘சமூக சேவைதான் எங்கள் லட்சியமாக இருந்தது என்பதால் மற்ற பெண்களைப் போன்ற வாழ்க்கையை எதிர்பார்க்கவில்லை தான்.ஆனால் எனது சமூக சேவை என்பதை ஒரிடத்தில் இருந்த ஏரி போல், மரம் போல பணியாற்றுவது என்பதாக இருந்தது.ஆனால் அவரோ காற்று போல் கதிரவன் ஒளி, ஆறு போல் நகர்ந்து கொண்டே இருப்பவராக இருந்தார். ஆறாக ஓடுவது நீருக்கு உகந்ததுதானே? நான் ஆறானேன்’எனச் சொல்லிய கிருஷ்ணம்மாள் மிக எளிதாக இயல்பாக அந்த வாழ்க்கைக்கு தன்னைத் தயார் படித்திக் கொண்டுவிட்டார்.   

வினோபாவாவின் நடைப்பயணம் எளிதன்று சூரியன் உதிக்கும் முன்பே தொடங்கிவிடும். நடை இரவுதான் ஓரிடத்தில் நிலை பெறும். நடுவில் எங்காவது கால் மணி நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதைத் தவிர வினோப ஓய்வு எடுத்து கொள்ள மாட்டார்.கூட வரும் தொண்டர்களும் அவ்வாறே நடப்பார்கள். அந்த வகையில் கிருஷ்ணம்மாள் கால் நடையாகவே இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். முதல் மகன் பூமிகுமார் பிறப்பதற்கு முதல் வரையும்கூட நடைப்பயணத்தை நிறுத்தவில்லை. பூதான் இயக்கத்தில் பணியாற்ற ஜெகந்நாதன் பிறகு வடநாடு சென்று விட தமிழக பகுதியில் சேவை செய்ய கிருஷ்ணம்மாள் வந்து விடுகிறார்.   

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் கை குழந்தையுடன் கையாள் சுமந்தபடி கிராமம் கிராமமாக நடைப்பயணம் செய்து பூதான் இயக் கத்துக்காக பாடுப்பட்ட கிருஷ்ணம்மாளின் உழைப்பு அசாத்தியமானது ‘ தமிழ்நாட்டில் என் குழந்தைகளின் தொட்டில் தொங்கிவிடப்படாத மரங்கள் கிடையாது. என் குழந்தைகள் பாராத கிராமம் கிடையாது’ என அவர் அடிக்கடி சொல்வதுண்டு.   

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியினருக்கு பூமிகுமார் என்ற மகனும் சத்யா என்ற மகளும் உண்டு. இருவருமே இப்போது மருத்துவர்களாக பணி புரிகிறார்கள். எவ்வளவு போரட்டக் காலத்திலும் குழந்தைகளுக்கான கல்வி என்ற முக்கியமான அம்சத்தைக் கிருஷ்ணம்மாள் மறக்கவே இல்லை. எங்கெல்லாம் சென்று போராட்டம் நடத்துகிறார்களோ அங்கிருந்த பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் ஆரம்பக் கல்வி பயின்றார்கள். தற்காலிகமாக அமைக்கப்பட்ட டெண்ட் கொட்டகைகள் தான் குடியிருப்பு போராட்டக் காலத்தில் அடிக்கடி இடம் மாற வேண்டியிருக்கும் என்பதால் பாத்திரபண்டங்கள் கூட சேர்த்து வைத்ததில்லை. மண்பாண்டங்களில் தான் சமையல். சுமந்து செல்லும் படியாக எப்போதும் எதுவும் இருந்ததில்லை. கட்டி யிருக்கும் புடவையோடு கூட ஒரு மாற்று கதர்ப் புடவை. ஜெகந்நாதனிடம் இரண்டு கதர் வேட்டி சட்டைகள், படிக்க பகவத்கீதை காணும் பொருட்களை எல்லாம் வாங்கிவிடத் துடிக்கும் நுகர்வுக் கலாச்சாரத்தில் உச்சியில் உறையும் உலகத்தில் இம்மாதிரியானவர்கள் கூட ஆச்சரிய மளிப்பவர்கள் தான்.   

தமிழ்நாட்டில் பணி சிறப்பாக நடந்து வந்த போது பீகாரில் இவர்களின் ஒத்துழைப்புக்கு அழைப்பு வந்தது மிகப் பின்தங்கிய அந்த குடிசைப் பகுதிகளில் வாழவே தகுதியற்ற அத்தகைய இடத்தில் அம்மக்களோடு மக்களாக வாழ்ந் திருக்கிறார் கிருஷ்ணம்மாள். அவ்வாறு தங்கி னால் தான் போராட்டத்திற்கு அம்மக்களின் ஆதரவைப் பெறுவதும் அவர்களைப் போராட்டத்திற்குத் திரட்டுவதும் எளிதாகும் என்பதை அவர் கருத்து ஒரு பெரிய சக்தி வாய்ந்த மடாலயத்துக்கு எதிராகப் போராடி நிலங்களை பங்கிட்டுக் கொடுக்கக் செய்திருக்கிறார். இதற்கிடையே மிகக் கொடுமையான சிறைவாசம்.   

கடுமையான தலைமறைவு வாழ்க்கை எனத் துன்பமயமான போராட்ட காலம். ஆனால் இந்த அனுபவங்கள் மேலும் மேலும் போராட வேண்டிய உத்வேகத்தைத் தான் அளித்தனவே தவிர துவண்டு போகச் செய்யவில்லை. காரணம் அவர்கள் பின் பற்றியது ஆன்ம வலிமையை அடிப்படையாகக் கொண்ட காந்திய வழியிலான போராட்டமுறை.  

சர்வோதய இயக்கத்தின் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வெளியே வந்துவிட்ட இத்தம்பதியினர் land for tillers (LAFIT) என்ற அமைப்பைத் தொடங்கினர். நிலமற்ற ஏழை மக்களுக்கு அரசிடமும் நில உரிமையாளர்களிடமும் போராடிப் பெற்று அதை நிலமற்ற ஏழை மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பதே இந்த அமைப்பின் முக்கிய பணி.   

அதோடு நின்று விடாமல் இந்த நிலத்தை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகளுப் பக்க பலமாக இருந்து உதவி செய்வதே இந்த அமைப்பின் நோக்கம்.அதன் மூலம் ஒவ்வொரு கிராமத்தையும் தன்னிறைவு பெற்ற கிராமாக மாற்ற முடியும் என்பதே இந்த அமைப்பின் நம்பிக்கை. அதோடு கிராம சபை ஒன்றையும் உருவாக்கி கிராமத்தில் அனைத்து தரப்பினரையும் அதில் பங்கு கொள்ளச் செய்தனர். கிராம சபைகள் அனைத்தும் பணியாற்றும்போது அம்மக்கள் இவர்களிடம் காட்டிய பிரச்சனையே இறால் பண்ணைகளுக்கு எதிரான போராட்டம்.   

இறால் பண்ணைகள் விவசாய நிலங்களைப் பெருமளவு பாதிக்கக்கூடியவை. ஏக்கர் கணக்கு களில் இறால் பண்ணைகள் நிறுவப் பட்டால் மீண்டும் அந்த நிலத்தை ஒரு போதும் விவசாயத் துக்கு பயன்படுத்த முடியாது இறால் பண்ணை களில் நீர் மாற்றும் போது முதலில் பயன்படுத்திய கழிவு நீரைக் கடலிலே கலந்து விடுவதால் கடல் மீன்களும் பாதிக்கப்படுகின்றது .

எனவே இறால் பண்ணைகள் மண் வளம் கடல் வளம் இரண் டையும் ஒருசேர பாதிக்கின்றன. ஒரு விவசாய நிலத்தில் பத்து பேருக்கு வேலை உண்டு என்றால், இறால் பண்ணையிலோ இரண்டு அல்லது மூன்று பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு. எல்லா வகையிலும் இறால் பண்ணைகள் மக்களுக்கு எதிரானவையே. இவற்றுக்கு எதிரான கவனத்தை ஈர்க்கும் படியாக போராட்டத்தை கிருஷ்ணம் மாள் தம்பதியினர் முன்னின்று நடத்தினர்.   

சர்வதேச அரங்கில் இந்தியாவின் ஜோன் ஆப் ஆர்க் என்ற பட்டம், இந்திய அரசின் பத்மஸ்ரீ பட்டம் Right for lively hood என்ற உயரிய பட்டம் போன்ற பல்வேறு கொளரவங்களைப் பெற்ற கிருஷ்ணம்மாள், ’நான் பெரிதாக புரட்சி செய்து விட்டேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் அடர்ந்து பரவியிருந்த இந்த இருளில் நான் சில விளக்குகளையாவது ஏற்றியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்ல லாம்’ என அடக்கத்தோடு சொல்லியிருக்கிறார்.   

கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதியன்று ஜெகந்நாதன் இயற்கை எய்தினார். வாழ்க்கை முழுக்க போராட்டக் களத்திலேயே அவருடன் கழித்த கிருக்ஷ்ணம்மாள் தன் கையாலேயே நெய்து அவர் அளித்த கதர்ப் புடவைதான் தங்கள் திருமணத்திற்காக அவர் அளித்த பரிசு, அதோடு அந்தப் போராட்டம் தொடங்கும் என நெகிழ் வோடு நினைவு தொடர்கிறார்.   

கவிஞர் தேவதேவனின் “யாரோ எங்கோ விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்”என்ற கவிதை வரி நினைவுக்கு வருகிறது. யார் யாரோ முயன்று விதைப்பதைத் தான் நாம் அறுவடை செய்து கொள்கிறோம். விதைத்த கைகளுக்கு நன்றி!

Pin It