தென்னிந்திய உணவுப் பட்டியலில் (குறிப்பாக தமிழகத்தில்) இரசம் ஓர் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மதிய உணவு விருந்துகளில் இதன் முக்கியத்துவம் அதிகம். தென்னிந்தியாவில் இரசம் இல்லா மதிய உணவு இல்லை என்றே கூறலாம்.

இதன் செய்முறை பலவகைகளில் செய்யப் படுகிறது. உணவு சமைப்பது என்பது ஒரு கலை. உணவுப் பொருட்களின் சத்துக்கள் பாழாகி விடாமல் கெடுதல் தரும் அம்சங்களை நீக்கி நன்மை தரும் அம்சங்களை மேம்படுத்திடும் வகையிலும் சமையல் செய்யப்படவேண்டும். நாவுச்சுவையை மட்டுமே கருத்தில் கொண்டால் உணவுகளின் நன்மைதரும் தன்மைகளில் பலவற்றை இழக்க நேரிடுகிறது. இவ்வகையில் இரசம் பல்வேறு பக்குவங்களில் தயாரிக்கப் படுகிறது. எனினும் அவற்றில் ஒரு சிறப்பான முறையைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பழைய புளி - ஒரு எலுமிச்சையளவு சீரகம், மிளகு தலா அரை தேக்கரண்டி, பூண்டு 5 பல், பச்சை மிளகாய் இரண்டு, கருவேப்பிலை, பெருங்காயம், கொத்துமல்லி இலை, மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, (கரும்பு) வெல்லம் சிறிய துண்டு, தக்காளி இரண்டு (நாட்டுத்தக்காளி சிறப்பானது), உப்பு தேவையான அளவு, முளைக்க வைத்துக் காயவைத்து தூள் செய்யப்பட்ட கொள்ளு தானியப் பொடி 11/2 தேக்கரண்டி.

செய்முறை :

அரிசி கழுவிய நீர் சுமார் 500 மில்லியில் புளியை முப்பது நிமிடங்கள் ஊறவைத்து நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்த புளிக்கரைசலுடன் சீரகம், மிளகு மற்றும் பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக அரைத்து, பூண்டுட பல்லை ஒன்றிரண்டாக நசுக்கி, தக்காளியை சிறு துண்டுகளாக அரிந்து (அல்லது பிசைந்து) விதையை நீக்கி சேர்த்து வெல்லம், மஞ்சள் பொடி, உப்பு, கொள்ளுப்பொடி அனைத்தையும் போட்டுக் கலக்கியபின் வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம் சேர்த்து தாளித்து புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடாமல் வெள்ளை நுரை தோன்றியதும் இரசத்தை அடுப்பிலிருந்து இறக்கி சல்லடையில் வடிகட்டியபிறகு கொத்துமல்லி இலை தண்டு வேருடன் நீரில் அலசி இரசத்தில் போடவும். கறிவேப்பிலையை ஈர்க்குடன் அடுப்புத்தணலில் (அல்லது கேஸ் தணலில்) லேசாக வாட்டி இரசத்தில் போட்டு முப்பது நிமிடங்கள் மூடி வைத்தபின் உட்கொள்ளலாம். துவரம்பருப்பு வேகவைத்த நீர் சிறிது சேர்த்தால் இரசத்தின் சுவை அதிகப்படுவதுடன் குடல்கள் பலமடைந்திடவும் உதவுகிறது. இரசத்தைக் கொதிக்கவிடுவதனால் அதன் சுவை குறைந்து விடுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் இரசத்தில் சேர்க்கப்படும் சிறந்த மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்ட உணவுப் பொருட்களின் நன்மை தரும் அம்சங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இது எப்படி எனில்:

சீரகம் :

உடலின் உள் உறுப்புக்களை சீர்படுத்தும் தன்மையை தன்னகத்தே கொண்டது. உடல் உறுப்புக்களின் சீர்கேடுகளை, குறைபாடுகளை சீர்ப்படுத்துகிறது என்னும் காரணமாகவே சீர்-அகம் (அகம் என்றால் உடலின் உள்ளே எனப் பொருள்படும்) என நம் முன்னோர் காரணப் பெயரிட்டார்கள். செரிமான செயல்கள் துரிதமாகவும் முறையாகவும் நடைபெற உதவும் செரிமானச் சாறுகளை சீரகம் இதமாகத் தூண்டுகிறது. உடலின் பித்த அதிகரிப்பை இயல்புநிலைக்கு மாற்றுகிறது.

மிளகு :

மலையில் விளையும் மருந்துப் பொருளான மிளகு சில வகை இயற்கை வேதிப் பொருட்களையும் சிறு அளவில் கொழுப்பும் கொண்ட மருத்துவ உணவுப் பொருளாகவும் மற்றும் சுவையூட்டியாகவும் பயன்படுகிறது. உணவில் நாமறியாமல் சேர்ந்துவிடும் நச்சுக்களை முறித்து உடலை விட்டு வெளியேற்றும் மருந்தாகவும் உதவுகிறது. (பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம் என்னும் மருத்துவ பழமொழி உள்ளது) செரிமானச் செயல்பாட்டை இதமாகத் தூண்டுகிறது. குடலில் தேங்கும் அழுக்குகளை நீக்குகிறது.

பூண்டு :

உடலுக்குப் பல நன்மைகளைத் தரும் இயற்கை அமிலங்களைக் கொண்டது. இரைப்பை மற்றும் குடல்களில் தேங்கும் வாயுக்களைக் கலைத்து வெளிப்படுத்துகிறது. இரத்த நாளங் களில் உறைந்த நிலையில் தேங்கிக் கிடக்கும் கெடுதல் தரும் கொழுப்புக்களைக் கரைத்து உடலைவிட்டு வெளிப்படுத்துகிறது. பெருங்குடலில் தேங்கிக் கிடக்கும் உணவுகளின் காரண மாக பெருங்குடலில் புளிப்புத்தன்மை ஏற்படுகிறது என்பதால் அவ்விடத்தில் புழுக்கள் உற்பத்தியா வதைப் பூண்டு தடுத்துவிடுகிறது. இரத்த ஓட்டத் தில் தடையை ஏற்படுத்தும் சிறு இரத்தக்கட்டிகள் மற்றும் கெடுதல் தரும் கொழுப்புக் கட்டிகளையும் படிப்படியாகக் கரைத்து விடுகிறது.

பச்சை மிளகாய் :

மனித உடலில் அடிக்கடி சளி ஏற்படாம லிருக்கவும், சருமத்தில் நோய் தாக்காமல் இருக்கவும் மூட்டுக்களில் நீர் தேங்கி மூட்டுவலி ஏற்படாமலிருக்கவும் உண்ணப்படும் உணவுகளி லிருந்து சுண்ணாம்புச்சத்து (Calcium) உடலில் சேர்க்கப் படவும் அஸ்கார்பிக் அமிலம் என்ற விஞ்ஞானப் பெயரால் அழைக்கப்படும் (விட்டமின் - சி) தேவைப்படுகிறது. இந்த அமிலச் சத்து உடலில் தேக்கப்படுவதில்லை. இச்சத்து அன்றாடம் மனித உடலுக்கு மிகமிகச் சிறு அளவில் தேவைப்படுகிறது. வளரும் குழந்தைகளுக்கு இந்த அமிலம் ஈடில்லா நன்மைகளைச் செய்கிறது.

குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு இச்சத்து பல்வேறு சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்கிறது. நாம் உண்ணும் உணவுகள் ஒரு சிலவற்றில் அஸ்கார்விக் அமிலம் சிறு அளவில் உள்ளது, ஆனால் தரமானதாக சமைக்கப்படாத பச்சை மிளகாயில் மட்டும் அதிக அளவில் உள்ளது. சமையல் வெப்பத்தினால் பச்சை மிளகாயில் உள்ள இந்த அமிலம் வெளியேற்றப்பட்டு வீணாகிவிடுகிறது. நம் தமிழகத்தில் தேங்காய் சட்னி தவிர பச்சை மிளகாய் சமையலில் சமைக்கப்பட்டோ, எண்ணெயில் பொரிக்கப்பட்டோ மட்டும் உண்ணப்படுகிறது. வட இந்தியர்களின் உணவுப் பட்டியலில் தவறாமல் பச்சை மிளகாய் இயற்கை நிலையில் வாரத்தில் சில பல நாட்கள் தவறாமல் இடம் பெறுகிறது.

நடைபாதை சிற்றுண்டி சாலைகள் முதல் ஐந்து நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டல்களிலும் வெஞ்சனமாக (Side dish) பச்சை மிளகாய், சிறு துண்டு, முள்ளங்கி வட்டமாக நறுக்கி நீரில் கழுவப்படாமல் காற்றில் உலர்த்தப்பட்ட வெங்காயம், நறுக்கப்பட்ட எலுமிச்சம் பழம், தக்காளி துண்டுகள் ஆகிய இவையனைத்துமோ அல்லது அவற்றில் ஒன்றிரண்டோ தவறாமல் உணவுகளுடன் வழங்கப்படுகிறது. அல்லது பச்சை மிளகாய், புதினா, உப்பு ஆகியவைகளை ஒன்றிரண்டாக அரைத்த சட்னி வழங்கப்படுகிறது. இவைகளை அடிக்கடி உட்கொள்ளுபவர்களுக்கு சரும நோய்

எளிதில் பற்றுவதில்லை. எலும்புகள், பற்கள் ஆகியவைகளில் வலி மற்றும் சீர்கேடுகள் ஏற்படுமுன்னரே தடுக்கப்பட்டுவிடுகின்றன. செரிமானம் முழுவீச்சில் நடைபெறுகிறது. தசைகள் மற்றும் எலும்புகள் இறுக்கமானவை களாகவும் உறுதியானவைகளாகவும், எடை உயர்ந்த ஆரோக்கியமான கட்டுடல் ஏற்படுகிறது.

சமைக்காமல் இயற்கை நிலையில் உண்ணப்படும் தேங்காய், தக்காளி பழம், (நாட்டுத் தக்காளி, விதை நீக்கி) எலுமிச்சம் பழம் (குடிநீரில் சிறு அளவில் எலுமிச்சம்பழச்சாறு கலந்து உணவுக்கு இடையீடாக பருகுதல் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது) பச்சை மிளகாய், முள்ளங்கி, கொத்துமல்லி இலை, காரட் போன்ற உணவுகளின் சிறப்புச் சத்துக்கள் வீணாகாமல் முழுமையான நன்மைகளைத் தருகின்றன. இவைகளை நெருப்பில் சூடுபடுத்தினாலும் நீரில் கொதிக்க வைத்தாலும்; எண்ணெயில் பொரித்தாலும் இவைகளின் நன்மை தரும் அம்சங்களில் பெருவாரியான சத்துக்கள் அவ்வுணவுப் பொருட்களிலிருந்து வெளியேற்றப் பட்டு வீணாகிவிடுகின்றன. இந்த வரிசையில் பழ வகைகள், நெல்லிக்காய் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.

இளம் வயதில் அடிக்கடி சளித்தொல்லை கள் (அதாவது சைனஸ் தொல்லை, ஆஸ்த்மா, தும்மல், இருமல் என நீங்கா சளித்தொல்லைகள்) அதனை சீர்ப்படுத்தும் வகைக்காக (Control) இரசாயன மருந்துகளை மாத்திரை வடிவிலும், ஊசியினால் உடலுக்குள் பலவந்தமாகத் திணித்தும், உடலாரோக்கியம் பலமாக சேதமடைந்து இயல்பு நிலையிலிருந்து வேறுபட்டு நோயாளராகவே வாழ்க்கையை ஓட்டும் துர்ப்பாக்கிய நிலை. நடுத்தர வயதான 40 வயதில் எலும்புகள் உடலின் பல பகுதிகளிலும் தேய்ந்து சீர்படுத்திட இயலா மூட்டு நோய், எலும்பு நோய் என நொந்து நூலாகிவிடாமல் இயல்பான ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்திட இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும் (Prevention is better then cure)

வடஇந்தியர்களில் பொருளாதாரத்தின் மிக நலிந்த நிலையிலுள்ள (ஏழ்மையான மக்கள், சாலைப் பணியாளர்கள், கல் உடைக்கும் தொழி லாளிகள், கட்டிட வேலை போன்ற) கடின உழைப்பு செய்து வாழ்க்கை நடத்துபவர்களின் உணவுப் பட்டியல் என்பது மிக மிகச் சிறியது. ஆனால், ஆரோக்கியம் மிகுந்தவர்களாக உடல் பருக்காத, விரைவில் களைப்படையாத இறுக்க மான தசைகளுடன் பகல் முழுவதும் கடின உடல் உழைப்பை இச்சமுதாயத்திற்குக் கொடுப்பதன் சூட்சுமம்தான் என்ன?

விலை உயர்ந்த டானிக்குகளா? பட்டியலிடப் பட்ட சிறப்புச் சத்துக்களைக் கொண்ட உணவு களா? எண்ணைக் கலப்பில்லாமல் நேரடியாக நெருப்பினால் வாட்டப்பட்ட கோதுமை சப்பாத்தியும் அதனுடன் பச்சை மிளகாய், துண்டாக நறுக்கப்பட்ட பெரிய வெங்காயம், முள்ளங்கி, உப்பு இவைகள் மட்டுமே. துணை உணவாக (Side dish) உட்கொள்ளுகிறார்கள். கடின உடல் உழைப்பினால் இவ்வுணவுகள் முழுமையாக செரிக்கப்பட்டு உடலாரோக்கியம் சீராகப் பராமரிக்கப்படுகிறது.

இந்த உணவுகளை சமைத்தோ, எண்ணெ யில் பொரித்தோ (நாவுச் சுவையை மட்டும் கருத்தில் கொள்ளுபவர்கள்) உண்ணுபவர்களுக்கு இயற்கை உணவுகளின் நன்மைதரும்ந இன்றியமை யாச் சிறப்புக்களில் பெரும்பகுதி வீணாக்கப்பட்டு சக்கைகளைமட்டுமே உண்டு உடலில் போதுமான ஜீவாதார சத்துக்களில்லா பலவீனமான உடல் நிலை ஏற்பட்டு பல்வேறு (டானிக், சிறப்பு சத்துணவு போன்ற) ஆர்ப்பாட்டங்களை மேற் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுத்தப்படுகின்றன.

சிறுவயது முதலாகவே மேலே குறிப்பிடப் பட்டுள்ள இரசத்தை பகல், இரவு உணவுகளில் வாரத்தில் சில நாட்கள் உண்டு வந்தால் பற்பல நன்மைகளை எளிதில் படிப்படியாக அடைந்து ஆரோக்கியத்தை தக்கவைக்கலாம்.

வியர்வையின் வழியாக உடலின் கழிவுகள் தினசரி 300 கிராம் அளவு கெடுதல் தரும் உப்புக்கள் (நச்சுக்கள்) வெளியேற்றப்படுகின்றன என நவீன ஆய்வறிக்கை பேசுகிறது.

உடல் உழைப்பு குறைவானவர்கள், மற்றும் வியர்வை வெளியேறுவது கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் (?) மின் விசிறி மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் அருகில் அமருபவர்கள் (Air Condition) உடலின் மிகப்பெரிய ஜன்னலான சருமத்தின் வியர்வை நாளங்களின் வழியாக (வியர்வையின் வழியாக) தேவையற்ற கழிவுகளான உப்புக்கள் வெளியேற்றப்படாமல் மறுக்கப் படுகிறது என்பதின் காரணமாக அவ்வகைக் கழிவுகளை சிறுநீரகங்கள் (Kidney) வெளியேற்று கிறது. தனது வேலைப் பளுவுடன் அதிகப்படியான இக்கழிவுகளையும் உடலை விட்டு நீக்கிட சிறுநீரகங்கள் வரம்புமீறி (தனது சக்திக்கும் அதிகப்படியாக) வேலை செய்து விரைவில் சோர்வடைந்து முடிவில் செயலிழப்பு ஏற்பட்டு, உயிராபத்தாகிவிடும் வாய்ப்பாகிறது.

இவ்வகையில் வியர்வை ஏற்படாமல் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களின் வியர்வை நாளங்கள் படிப்படியாக செயல்திறனை இழந்து விடுகின்றன. அவ்வாறான வியர்வை நாளங்களை இதமாகத் தூண்டி செயல்படச் செய்யும் இயற்கை வேதிப் பொருட்கள் சமைக்கப்படாத பச்சை மிளகாயில் உள்ளன.

புளி-மிளகாய் வற்றல் ஆகிய உணவுகள் மேலை நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்தில் உண்ணப்படுவதில்லை. அந்நாடுகளில் மூட்டு வலி - சிறுநீரகச் செயல் இழப்பு ஆகியவை அதிக அளவில் உள்ளன என புள்ளிவிபரம் கூறுகிறது.

பலமில்லா உடல்பருமன் கோளாறு இன்றைய நாட்களில் சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்பட்டு பல்வேறு சிகிச்சை முறைகளிலும் உடல் பருமனைக் குறைத்திட முடிவதில்லை. மேலே குறிப்பிட்ட இரசத்தில் இயற்கை நிலையில் பல்வேறு உணவுப் பொருட்கள் பச்சை மிளகாயுடன் கூட்டுப் பொருளாக இருப்பதன் காரணமாக, வாரத்தில் பல வேளைகள் இந்த இரசத்தை உண்டு வந்தால் வாழ்நாள் முழுவதும் உடல் பருமன் நோய் ஏற்படாமல் தடுக்கலாம். விஞ்ஞான மருத்துவங் கள் தேவையில்லாதவைகளாகிவிடும்.

அமெரிக்க ட்யூக்பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் சிவப்பு மிளகாய் குறித்த ஆய்வு முடிவுகள் விஞ்ஞானிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நாள் வரையிலும் (காலங்காலமாக) மிளகாய் குடலுக்குக் கேடு தரும் என அறிவியலார் நம்பிவந்தனர். ஆனால் ஆய்வில் மிளகாய் குடலில் ஏற்படும் பல்வேறு வகையிலான சீர்கேடுகளை சீர்ப்படுத்துகிறது என ஆய்வில் அறியவந்துள்ளது.

பண்டைய காலம் முதல் நம் முன்னோர் பட்டறிவில் பதிவு செய்த பற்பல ஆய்வுகளை அறிவியல் உலகம் மிகமிகத் தாமதமாக (மிகச் சிறு அளவில்) கண்டுபிடித்து வியக்கிறது.

மேலும் இதய நோய்கள் - குறிப்பாக மாரடைப்பு நோய் ஏற்படு முன்னரே மிளகாய் அதைத் தடுத்துவிடுகிறது. குடலில் தேங்கும் பூச்சி புழுக்களை அங்கு சேரவிடாமல் தடுத்துவிடுகிறது. சிவப்பு மிளகாயிலுள்ள கேப்சாய்ஸ்எனப்படும் இயற்கை வேதிப்பொருளை புற்றுநோயாளியின் உடலின் செலுத்தியதில் புற்றுநோயின் வீரியம் குறைகிறது என ஆய்வறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

கருவேப்பிலை :

வாசனைப் பொருளாகவும், உடலைக் காக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. வாய் முதல் ஆசனவாய் வரையிலுள்ள உடலின் உள் உறுப்புகளில் புண்கள் ஏற்படாமலும், அவை இருந்தாலும் விரைவில் அவற்றை கருவேப்பிலையில் உள்ள இயற்கை வேதிப் பொருள் ஆற்றுகிறது. மூளையை சுறு சுறுப்பாக செயல்படத் தூண்டு கிறது. கறிவேப்பிலையில் விட்டமின் - அசத்து அதிக அளவில் உள்ளதாக நவீன மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. கண்களைப் பாதுகாக்கும் இந்த உயிர்ச்சத்து சில உணவுப் பொருட்களில் இருந்தாலும் தரமானதாகவும் போதிய அளவிலும் கறிவேப்பிலையில் உள்ளது.

கொத்துமல்லி இலை :

சமையல் சூட்டினால் பெருவாரியான சத்துக்களை இழந்துவிடுகிறது. இயற்கை நிலையில் பல்வேறு நன்மைகளைச் செய்கிறது. மனநிலை சீர்கேட்டை சீர்படுத்துகிறது. உடலில் சேரும் அதிகப்படியான பித்தத்தை சமனப்படுத்து கிறது. குறிப்பாக குழப்பமான மனநிலையைத் தெளிவுபடுத்துகிறது.

மஞ்சள் பொடி :

சக்திவாய்ந்த கிருமிநாசினி, உடலின் எந்தப் பகுதியிலும் சேர்ந்துவிடும். தீமை தரும் கிருமிகளை அழித்துவிடுகிறது. குடலில், இரைப்பையில் புண் போன்ற குறைபாடுகளை நீக்குகிறது. உள் உறுப்புகள் முறையாகச் செயல்பட உதவுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. தமிழகத்தில் மழைக்கால தொற்றுநோய்கள் பரவி வருகின்றன.

எனினும் இந்தியர்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களை விட அதிகமாக உள்ளது. இதற்கு இந்தியர்கள் வாழும் சூழலே அவர்களது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதற்கு அவர்கள் சமையலில் பயன்படுத்தும்; வாசனைப் பொருளான மஞ்சளும் ஒரு காரண மாக இருக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

மஞ்சளுக்குத் தொற்றுநோய்கள் மட்டுமன்றி கேன்சரை குணப்படுத்தும் ஆற்றலும் உள்ளது என வெப்செஸ்டர் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர். மஞ்சளை பயன்படுத்தி நோய் எதிர்ப்புசக்தி தரும் மருந்துகள் எதிர்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் என இந்த ஆய்வு முடிவுகள் நம்புகின்றன.

(கரும்பு) வெல்லம் :

புளி நீருடன் சேர்ந்து, செரிமான அமிலங் களின் சுரப்புகளை ஒழுங்குபடுத்தி, செரிமான செயல்பாட்டினை தீவிரத்தை விரைவு படுத்து கிறது. உடலில் தேங்கும் அதிகப்படியான பித்தத்தின் கெடுதல் தரும் தன்மையை மாற்றி, பித்தத்தின் அளவை இயல்பு நிலைக்கு மாற்று கிறது.

பண்டைய காலம் முதல் கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை நாட்களில் நடைபெறும் கோவில் விசேஷங்களின் போது பானகம்எனப்படும் பானம் அனைவருக்கும் இலவசமாக கொடுக்கும் வழக்கமிருந்தது. (இன்றைய நாட்களில் அப்பழக்கம் மறைந்து விட்டது) நீராகக் கரைக்கப்பட்ட பழைய புளியின் கரைசல் நீரில் சரியளவாக நாட்டுச் சர்க்கரை மற்றும் சிறுஅளவில் ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பானம்தான் பானகம்என அழைக்கப்பட்டது. கோடை வெப்பத் தாக்குதல் காரணமாக பலருக்கும் குடல் வறட்சி ஏற்படும். இதன் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, அடிவயிற்றில் வலி (சூட்டுவலி), வாய் உலர்வு மற்றும் உதடுகளில் வறட்சி காரணமாக அடங்கா நீர்த்தாகம் - உதடுகள் உரிந்து - வெடித்து இரத்தக் கசிவு போன்ற சீர்கேடுகளில் ஒன்றிரண்டோ அல்லது அனைத்துமோ ஏற்படும்.

குடலில் ஏற்படும் வறட்சியைப் போக்கி அவைகளின் செயல் மேம்பாடுகள் மேம்பட பானகம் உதவுகிறது. பழைய புளியின் கரைசலும் நாட்டுச்சர்க்கரையும் (அல்லது மண்டவெல்லம் எனப்படும் கரும்பு வெல்லம்) சமஅளவில் சேர்க்கப்பட்டால் இவை இரண்டும் சேர்ந்து வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி விடும் காரணமாக மேலே கண்ட நன்மைகளை அடையலாம். இயற்கையை நமக்கு சாதகமாக்கி வாழ்வியல் நடைமுறைகளை மற்றும் (நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திடும் நடைமுறை) உணவே மருந்தாகும் தந்திரத்தை உலகிலுள்ள எந்த நாட்டிலும் இல்லை. நம் கலாச்சாரத்தில் மட்டுமே பரந்து விரிந்து வாழ்க்கை முறையாயிற்று. எலும்பு மஜ்ஜைகளில் வரம்புமீறிய வெப்பம் தாக்கப்பட்டால் அம்மை ஏற்பட்டு விடும் வாய்ப்பாகிறது. கடுமையான வெயில் காலங்களில் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுவிடுமுன்னரே தவிர்க்கப்பட்டுவிடும் வாய்ப்பாகிறது மழை மற்றும் குளிர்காலங்களில்; இத்தகைய பானங்களை பருகலாகாது.

பெருங்காயம் :

பசியைத் தூண்டுகிறது. வயிற்றிலும் குடலிலும் சேரும் வாயுக்களைக் கலைத்து, உடலை விட்டு வெளியேற்றி செரிமானம் முறையாக நடைபெற உதவுகிறது. இதன் மணம் உணவுச் சுவையை அதிகப்படுத்துகிறது. நரம்பு மண்டலத் தில் வாயு தேங்கினால் மட்டுமே பக்கவாத நோய் ஏற்படும். அவ்வகை வாயுக்களைக் கலைத்து வெளி யேற்றுகிறது.

புளி :

பழைய புளி மட்டுமே உட்கொள்ளச் சிறந்தது. (சுவை மிகுந்தது. அதிக நன்மை தருகிறது) புதிய புளி சுவை குறைவானது. ஒரு சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. புதிய புளி செரிமான அமிலங்களை வரம்புமீறி சுரக்கத் தூண்டுகிறது. பழைய புளி செரிமான அமிலங் களின் சுரப்புகளில் ஏற்படும் ஏற்றக் குறைவுகளை ஒழுங்குபடுத்தி, அளவாக சுரக்கச் செய்து, செரிமானச் செயலின் குறைபாட்டை சீர்படுத்து கிறது. (காட்டில் புலி வீட்டில் புளிஎன கிராமப் புறங்களில் கூறுவதுண்டு. இதன் பொருள், வரம்பு மீறி உட்கொள்ளப்படும் புளி உடல்நலத்தைக் கெடுக்கிறது எனக் கொள்ளலாம்).

நம் உடலின் சிறு தொழிற்சாலை எனக் கூறப்படும் கல்லீரலின் செயல்திறனை இதமாகத் தூண்டி அதனை சிறப்பாக முழுத்திறனுடன் இயக்க நீராகக் கரைக்கப்பட்ட புளி உதவுகிறது. மேலும் நீராகக் கரைக்கப்பட்ட புளியுடன் (கரும்பு) வெல்லம் சேர்க்கப்பட்டால் கல்லீரலின் செயல்பாடுகள் மேம்படும். கெட்டியான புளிக்கரைசல் கல்லீரலை வரம்பு மீறி தூண்டுகிறது என்பதன் காரணமாக கல்லீரல் வரம்புமீறி செயல்பட்டு அதன் செயல்திறன் படிப்படியாக குறைவுபட நேரிடுகிறது. புளி மட்டுமல்ல, (அதிகப்படியான புளிப்புச்சுவை கல்லீரலை பாதிக்கிறது. அதிகப்படியாக புளிக்க வைத்த தயிர், மோர், வரம்புமீறிய புளிச்சுவை கொண்ட பழங்கள், பழச்சாறுகள் போன்றவை) தயிர் மற்றும் மோருடன் சூடான சாதத்தை இணைத்து உண்டால், அவ்வுணவு வயிற்றில் வரம்புமீறிய புளிப்புச் சுவையை ஏற்படுத்திவிடுகிறது.

இதன் காரணமாக கல்லீரல் பலமாகத் தாக்கப்பட்டு மஞ்சள் காமாலை போன்ற உயிராபத்தான நோய்கள் ஏற்படும் வாய்ப்பாகிறது. சாதம் ஆறிய பின்னர் தயிர் மற்றும் மோர் இணைத்து உண்பது சிறந்தது. சாம்பார், இரசம் போன்றவற்றில் நீராகக் கரைக்கப்பட்ட பழைய புளி சேர்க்கவேண்டும். இது கல்லீரலை இதமாகத் தூண்டி அதன் செயலாற்றல் மேம்பட உதவுகிறது. அதிகப்படியான அடர்த்தியான புளி ரத்தத்தின் அடர்த்தியை அதிகப்படுத்துகிறது. இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் விரைந்து நடைபெற அடர்த்தி குறைந்த இரத்தம் உதவும். அடர்த்தி அதிகம் கொண்ட ரத்தம் ரத்த ஓட்டத்தை மந்தப்படுத்தும். உடலிலுள்ள சன்னமான ரத்த நாளங்களில் அடர்த்தி அதிகமுள்ள ரத்தம் பாய்ந்தால் ரத்தம் அழுத்தம் அதிகப்படுகிறது. (High Blood Pressure) இரத்தம் இயல்புக்கும் குறைவான வேகத்தில் ஓட்டம் நடைபெற்றால் (Low Blood Pressure) குறைந்த இரத்த அழுத்தம் எனக் கூறப்படுகிறது.

இவை இரண்டுமே இயற்கை நிலைக்கு முரண்பட்டவைகளாகும். இரத்தத்தின் அடர்த்தி குறைவானதாக இருந்தால் உடலின் பொது ஆரோக்கியம் பாதிக்கப்படவில்லை என நம்பலாம். நம் உடல் முழுவதும் உள்ள இரத்த நாளங்களில் கண்கள் மற்றும் ஆண் பெண் இன உறுப்புக்களில் மிகமிக சன்னமான இரத்த நாளங்களுள்ளன. இரத்தத்தின் அடர்த்தி இயல்பு நிலையிலிருந்தால் - இவ்வுறுப்புக்களில் அமையப் பெற்றுள்ள மிகமிக சன்னமான இரத்த நாளங்களில் இடைவிடாமல் ரத்த ஓட்டம் பாய்ந்து அவ்வுறுப்புகளின் செயல்திறன் இயல்பாக செயல்படும் வாய்ப்புண்டாகிறது. மாறாக இரத்தத்தின் அடர்த்தி அதிகமானால் இவ்விரு உறுப்புக்களிலும் இரத்த ஓட்டம் குறைந்து விடுவதன் காரணமாக கண்களிலும் இன உறுப்பு களிலும் அனைத்து வகைகளிலான குறைபாடு களும் படிப்படியாக (சிறுவயது முதலாகவே) ஏற்படுகின்றன.

கெட்டியான புளியினால் மட்டுமே இரத்தத்தின் அடர்த்தி அதிகப்படும் என்பதல்ல. பல்வேறுவகைக் காரணங்களினால் இந்நிலை ஏற்படுகிறது. அவற்றில் ஒரு காரணியாக கெட்டிக் கரைசலான புளியும் உள்ளது என்பதே கருத்தாகும். உடல் உழைப்பில்லாமல் சத்தான உணவுகளை மட்டுமே உண்ணுதலை வழக்கமாக்கிக் கொண்டவர்கள் உடலில் வியர்வை ஏற்படாத சொகுசான வாழ்க்கை வாழ்பவர்கள், எண்ணெயினால் பொரிக்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்ணு பவர்கள், குறைபாடான (அதாவது அரைகுறை யான செரிமான செயல்திறன் கொண்டவர்கள்) சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் ஆகியோருக்கு உடலில் இரத்தத்தின் அடர்த்தி அதிகப்பட்டு விடும் வாய்ப்பாகிறது.

-(அடுத்த இதழில் நிறைவுபெறும்.)

-Dr.சௌடையா

காந்திகிராமம். Cell: 94437 02778

Pin It