கடவுள் இல்லை; எங்கே கடவுள் சக்தி? என்று நாத்திகர்கள் பேரணி நடத்துகிறார்கள் என்பதற்காக எந்த கடவுளும் கொந்தளிக்கவில்லை.
"இதோ அவதாரம் எடுத்து சம்ஹாரம் செய்கிறேன்,பார்!" என்று ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு ஓடி வரவில்லை. சரி, போகட்டும்; கொளத்தூர் கழக மகளிர் கனவில் வந்தாவது மிரட்டி இருக்கலாம் அதற்கும் தயாராக இல்லை உண்மையில் கொந்தளித்தது யார் தெரியுமா? கொளத்தூர் காவல்துறை தான்.
"அய்யோ கடவுள் எதிர்ப்புக்கு நாங்கள் அனுமதி தர முடியுமா? அது பாவமல்லவா?" என்பதற்காக காவல்துறை கொந்தளிக்கவில்லை. "சங்கிகள் கூச்சல்களை சந்திக்க வேண்டியிருக்குமே என்பதுதான் அவர்களின் பயம்.
"என்னை எதிர்ப்பவருக்கு பேரணி நடத்த அனுமதிக்காதே! அழித்து விடுவேன்" என்று ஏதேனும் ஒரு காவல் அதிகாரி கனவில் வந்தாவது கடவுள் மிரட்டி இருக்கலாம் அதுவும் இல்லை" அப்படி எதுவும் நடக்காமலேயே கடவுள் பக்தியோ, பக்தர்களின் மனம் புண்படும் செயல்களையோ நிகழ்த்த மாட்டோம் என்று எழுதிக் கேட்டது காவல்துறை.
"எதற்கு நாங்கள் எழுதித் தர வேண்டும்; கடவுளைப் புண்படுத்துகிறோம் என்றால் அந்த கடவுளுக்கு சக்தி இருந்தால் எங்களை கண்டிக்கட்டுமே; ஏதாவது ஒரு அவதாரம் எடுத்து வந்து சம்ஹாரம் செய்யட்டுமே! குறைந்தது ஒரு பன்றி அவதாரமாவது எடுத்து எங்கள் பேரணியை நிறுத்தலாமே?" என்று கருப்புச் சட்டை தோழர்கள் எதிர்க் கேள்வி கேட்டால் என்ன பதில் வரும் தெரியுமா?
"என்னங்க இது விதண்டாவாதம்! இதெல்லாம் நம்பும்படியா இருக்கு. காக்கா, நரி கதை எல்லாம் சொல்லி எங்க காதுல பூசுத்தாதீங்க கடவுளாவது, கனவில் வருவதாவது பேரணிக்கு அனுமதியில்லை" என்பதுதான் காவல்துறை அதிகாரியின் பதிலாக இருக்கும்.
ஆனால் பெரும்பாலான காவல்துறையினர் நெற்றியில் விபூதி, குங்குமத்தை குழைத்து பூசி இருப்பார்கள். அந்த காவல் நிலையங்களில் இவர்கள் நம்ப மறுக்கும் கடவுள் படங்களுக்கு விளக்கேற்றி பூ போட்டு பூசை செய்வார்கள். "இந்த பிரச்சினை எல்லாம் எங்கள் சரக எல்லைக்குள் வராது. நீங்க நீதிமன்றத்திற்கு போங்கள்" என்று ஆலோசனை வழங்கி விடுவார்கள்.
நீதிமன்றம் என்ன செய்யும்? வழக்கை விசாரணைக்கு ஏற்கும்.
“கடவுள் எதிர்ப்பை அனுமதித்தால் அது பாவமாயிற்றே? எனது பதவி உயர்வு என்னாவது? எனது குடும்பம் என்னாவது? என்று எந்த நீதிபதியும் கூறமாட்டார். வழக்குகளைக் கடவுளோடு முடிச்சுப் போட்டால் தீர்ப்பு வழங்க நீதிபதிகளே தேவையில்லை. நீதிமன்றங்களையும், காவல் துறையையும் இழுத்து மூடி விடலாம்.
கடவுள்களின் சக்தியை தங்கள் வளாகத்திற்குள் நுழைய விடாமல் ஓரம் கட்டி வைத்திருக்கின்றன. இப்படி அரசுத் துறைகளும் சட்டங்களும் கடவுளைப் புண்படுத்துகிறதே என்று எந்த சங்கிகளும், முன்னணிகளும் தொடைத்தட்டிக் கிளம்புவது இல்லை.
சென்னை இந்து அறநிலையத் துறை தலைமையகத்தில் கட்டுப்பாடு அறை ஒன்றை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் 2022-ல் திறந்து வைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 48 முக்கிய கோவில்களில் கடவுள் பாதுகாப்பு, கோயில் நகைகள் பாதுகாப்பு பக்தர்களிடம் நடக்கும் திருட்டு மோசடி போன்றவற்றை கண்காணிக்க 3057 கண்காணிப்பு கேமராக்களும், 42 தொலைக்காட்சிகளும் நவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளை கடவுள் கண்டுபிடிக்க மாட்டார், நாங்கள் இந்த தொழில்நுட்பத்துடன் கண்டுபிடித்து விடுவோம் என்ற நோக்கத்தோடு தான் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் இந்த 48 கோயில்களிலும் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மிகுந்த பக்தி உணர்வுடன் பரவசப்பட்டுள்ளார்
மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், 13 உண்டியல் திருட்டு, 105 காணமல் போன குழந்தைகள், 450 அலைபேசி திருட்டுகளைக் கடந்த 2 ஆண்டுகளில் எங்கள் கண்ட்ரோல் ரூம் கண்டுபிடித்துள்ளது என்று பெருமை கொண்டாடுகிறார் சேகர் பாபு. கடவுள் சக்தியை கண்ட்ரோல் ரூம் கையில் எடுத்து கொண்டுவிட்டது
வெளியே கடவுள் பேச்சு;
செயலில் கடவுள் மறுப்பு
இதைத் தானப்பா.....நாங்களும் கூறுகிறோம் என்று கம்பீரமாக கேட்கிறது கருஞ்சட்டைப் படை.
- கோடங்குடி மாரிமுத்து