கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அதிகரித்து வரும் என்கவுண்டரை (Extrajudicial Killings) கண்டித்து 75 இயக்கங்கள் கூட்டாக வெளியிடும் கண்டன கூட்டறிக்கை

குழந்தைகள் சுட்டுப் பிடித்து விளையாடும் கள்ளன் போலீஸ் விளையாட்டுபோல் தமிழ்நாட்டில் தினந்தோறும் போலீஸ் எவரேனும் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. மார்ச் 25ஆம் தேதி சென்னையில் ஜாபர் குலாம் உசேன், 31ஆம் தேதி மதுரையில் சுபாஷ் சந்திர போஸ் என அடுத்தடுத்து இருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவர்களின் குருதி காய்வதற்குள் ஏப்ரல் 1ஆம் தேதி கடலூரில் 19 வயது நிரம்பிய முட்டை விஜய் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்ற நாடகத்தை முன்னிறுத்தி, தற்காப்பு என்ற பெயரில் "பொய்யான மோதல் சாவுகளை" நடத்திவரும் தமிழ்நாடு காவல் துறையை, 75 இயக்கங்கள் கூட்டாக இணைந்து வன்மையாகக் கண்டிக்கிறது.

தினந்தோறும் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கும் போலீஸ்

தமிழ்நாட்டில் குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த பின்பு மீண்டும் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கும் மனித உரிமை மீறல் கலாசாரத்தை உருவாக்குவதில் இந்தியாவிற்கு வழிகாட்டியாகத் தமிழ்நாடு போலீஸ் திகழ்கிறது. கடந்த பத்து நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் பலர் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளனர். மார்ச் 18ஆம் தேதி ஈரோட்டில் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரைப் போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.

19ஆம் தேதி திருநெல்வேலியில், முன்னாள் காவல் துணை ஆய்வாளர் கொலை வழக்கில் முகமது தவுபிக் (எ) கிருஷ்ணமூர்த்தி என்பவர் சுட்டுப் பிடிப்பு. 20ஆம் தேதி சிதம்பரத்தில் ஸ்டீபன் என்பவர் திருடி வைத்திருந்த பொருளை அடையாளம் காட்டச் சென்ற இடத்தில் திடீரென போலீசாரைத் தாக்கியதாக போலீஸ் சுட்டுப் பிடித்தனர். 23ஆம் தேதி தேனியில் காவலர் கொலை வழக்கில் மூவேந்தர் என்பவரைச் சுட்டுப் பிடித்தனர். 28ஆம் தேதி செங்கல்பட்டு அடுத்த ஆம்பூர் வனப்பகுதியில் போலீசாரைத் தாக்கி விட்டுத் தப்பும்போது அசோக் என்பவரைப் போலீசார் சுட்டுப் பிடித்தனர். குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த பின்பு மீண்டும் வன்முறையில் ஈடுபடும் அளவிற்குப் போலீசார் பொறுப்பற்ற நிலையில் உள்ளார்களா? அல்லது உண்மையை மறைக்கும் நாடகமா? தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் மட்டும் இப்படிக் கைது செய்த பின்பு 6 பேரைச் சுட்டுப் பிடித்துள்ளனர். 3 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

போலீசாரால் சுடப்பட்டவர்களுக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் செய்த குற்றத்திற்கு ஆதரவாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக பணிபுரிபவர்கள் பேசவில்லை. காவல்துறை குற்றத்தில் ஈடுபட்டவர்களை முறையாகக் கைது செய்து, புலன்விசாரணை செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தந்து குற்றவாளிகளை குற்ற செயல்பாட்டில் இருந்து தடுத்து நிறுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் போலீசார் தாமே சட்டத்தைக் கையில் எடுத்துக் குற்றத்தில் ஈடுபட்டவரை தண்டிப்பதற்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. அதிகரித்து வரும் குற்றத்தை தடுப்பதற்காகத்தான் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம் என்ற கருத்தை முன்வைக்கும் போலீசார், திட்டமிட்டுப் பலர் மீது கொடிய வன்முறையை நடத்திய நிலையிலும், தமிழ்நாட்டில் குற்றம் குறைந்துள்ளதா? சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட்டுள்ளதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

திமுக அரசின் சட்டமன்றக் கூட்டத் தொடர்

2025ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாகக் கூட்டத் தொடர் நடக்கும் நாட்களில், அரசுத் துறைகள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கும். குறிப்பாகக் காவல்துறையின் சட்ட விரோதச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்துச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு விவாதம் செய்யும் சூழல் ஏற்படும் என்பதால் காவல் நிலையங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படும். ஆனால் தற்போதைய நிலை தலைகீழாக உள்ளது. கடந்த பத்து நாட்களில், 3 என்கவுண்டர்கள், 6 துப்பாக்கிச் சூடுகள், பலர் காவல் நிலையத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த சம்பவங்கள்… என சுதந்திர இந்திய வரலாற்றில் இல்லாத வன்முறையை, மனித உரிமை மீறலைத் தமிழ்நாட்டின் திமுக ஆட்சியின் கீழ் செயல்பட்டு வரும், காவல்துறை திட்டமிட்டு நடத்தி வருகிறது. இது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப நாதியற்ற நிலை உள்ளது. எதிர்க்கட்சி வாய்திறக்கவில்லை, ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும் கனத்த மெளனம் காப்பது ஏன்? என்று தெரியவில்லை. கூட்டணி கட்சிகள் ஆளுங்கட்சிக்கு எதிராக குரல் கொடுப்பதில், அரசியல் காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமிழ்நாடு போலீஸ் தற்போது முன்னெடுக்கும் இது போன்ற காவல் வன்முறைகளையும், பச்சைப் படுகொலைகளையும், அதிகாரத் திமிருடன் இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களையும் அனுமதித்தால், சட்டத்தின் மீதான நம்பிக்கை பறிபோகும். ஜனநாயகத் தேரின் அச்சு முறியும். சட்டம் காக்க வேண்டிய காவல் துறையைச் சட்டம் பற்றிக் கவலைப்படாத கொலைப் படையாகப் பயன்படுத்தும் போக்கு, நமது சமூகத்தில் கட்டுக்கடங்காத விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதே இந்தியாவெங்கும் கிடைத்துள்ள பட்டறிவாகும். மாற்று அரசியலுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்பும் தமிழ்நாட்டுக்கு அதிகரித்து வரும் காவல் வன்முறை ஒரு கறையாகப் படிந்து வருகிறது இந்தப் பொய் மோதல் கொலைத் தாண்டவம்.

வன்முறையை தடுக்க வன்முறை தீர்வல்ல

சமூகத்தில் நடந்து வரும் குற்றங்களை தடுப்பதற்கும், கொடுங்குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்களை செயல்பட விடாமல் தடுப்பதற்கும், வன்முறைக்கு எதிர் வன்முறை என்பது தீர்வாகாது. நீதிமன்றத்தால் வழங்கப்படும் மரண தண்டனையைப் பெரும்பாலான உலக நாடுகள் ஒழித்துவிட்ட நிலையில், விசாரணை அதிகாரம் மட்டுமே பெற்ற காவல்துறை தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சட்டத்தின் பெயரால் சட்டவிரோதமாக மனித உயிரைப் பறிப்பது குற்றமாகும். சமூகத்தில் அதிகரித்து வரும் குற்றங்களை தடுப்பதற்காக, கல்வி, பயிற்சி, தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய காவல்துறை குறுக்கு வழியில் வன்முறையில் ஈடுபட்டு என்கவுண்டர் (Extrajudicial Killings) செய்வதை 75 இயக்கங்கள் கூட்டாக வண்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற வன்முறை மற்றும் என்கவுண்டரில் (Extrajudicial Killings) ஈடுபடும் போலீசார், உத்தரவிடும் உயர் காவல் அதிகாரியின் மீது வழக்கு பதிவு செய்து பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். காவல் நிலைய சித்திரவதை மரணம் மற்றும் என்கவுன்டர் (Extrajudicial Killings) வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நடுவர்கள், வெளிப்படைத் தன்மையோடு விசாரணை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநில மனித உரிமை ஆணையம் (SHRC) தானாக முன் வந்து (suo motu) வழக்கு பதிவு செய்து நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் மாநில மனித உரிமை ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிடும்.

மாநில இலவசச் சட்ட உதவி ஆணைக்குழு இதுபோன்ற பொய்யான மோதல் சாவுகளில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டப்பிரிவு 12 இன் கீழ் தானாக முன்வந்து வழக்கு நடத்த வேண்டும். காவல் வன்முறைகள், குறிப்பாகப் பொய் மோதல் கொலைகள், வளர்ந்து வரும் நாகரீக சமூகத்தின் அருவருப்பாகும். 2022ஆம் ஆண்டு சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ் என்ற இளைஞன் காவல் சித்திரவதையில் இறந்த நிலையில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சட்டமன்ற உரையில், இனிமேல் இதுபோன்ற காவல் சித்திரவதைகள், வன்முறைகள் தமிழ்நாட்டில் நடக்காது என உத்தரவாதம் கொடுத்தார். முதல்வர் கொடுத்த உத்தரவாதத்தை நிலைநிறுத்த, இதுபோன்ற காவல் வன்முறைகளை தடுக்க மாண்புமிகு முதல்வர் அவர்கள் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் பொய் மோதல் சாவுகள், காவல் சித்திரவதைகள் தொடருமானால் மக்கள் இயக்கங்களைத் திரட்டி போராட்டம் நடத்தும் கட்டாய நிலை ஏற்படும். எனவே தமிழ்நாடு அரசு காவல் வன்முறைகளையும், என்கவுண்டர் (Extrajudicial Killings) கொலைகளையும் தடுப்பதற்கு உடனே ஆவண செய்யக் கோருகிறோம்.

இப்படிக்கு

கூட்டறிக்கையை இணைந்து வெளியிடும் 75 இயக்கங்கள்

(1) எஸ்.வி.ராஜதுரை

(மனித உரிமைச் செயல்பாட்டாளர்)

(2) கொளத்தூர் மணி

(திராவிடர் விடுதலைக் கழகம்)

(3) நெல்லை முபாரக்

(SDPI-கட்சி)

(4) தியாகு

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்

(5) கோவன்

(மக்கள் கலை இலக்கியக் கழகம்)

(6) ஹைதர் அலி

(ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்)

(7) திருமுருகன் காந்தி

(மே 17 இயக்கம்)

(8) மீ.த.பாண்டியன்

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ. மா)

(9) கே.எம். சரீப்

(தமிழக மக்கள் சனநாயகக் கட்சி)

(10) ஹென்றி திபேன்

(மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு)

(11) கண குறிஞ்சி

(தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை)

(12)பேராசிரியர் அ.மார்க்ஸ்

(மனித உரிமை செயல்பாட்டாளர்)

(13) பொழிலன்

(தமிழக மக்கள் முன்னணி)

(14) கிறிஸ்டினா சாமி

(சுய ஆட்சி இயக்கம்)

(15) ப.பா.மோகன்

(மூத்த வழக்கறிஞர்)

(16) வழ. வாஞ்சிநாதன்

(தமிழ்நாடு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்)

(17) பேரா. த. செயராமன்

(தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்)

(18) சுப. உதயகுமாரன்

(களப்பணியாளர்)

(19) ச.பாலமுருகன்

(மக்கள் சிவில் உரிமைக் கழகம்)

(20) சுதா ராமலிங்கம்

(மூத்த வழக்கறிஞர்)

(21) பிரபா கல்வி மணி

(பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்)

(22) வீ.அரசு

(பேராசிரியர்)

( 23) வழக்கறிஞர் பி.எஸ்.அஜிதா

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

( 24) இரா.முரளி

(மனித உரிமைச் செயற்பாட்டாளர்)

(25) செந்தில்

(தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

(26) குடந்தை அரசன்

(விடுதலைத் தமிழ் புலிகள் கட்சி)

(27) சௌந்தரராஜன்

(பூவுலகின் நண்பர்கள்)

(28) மகிழன்

(தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்)

(29) கோ.சுகுமாறன்

(மக்கள் உரிமைக் கூட்டமைப்பு -தமிழ்நாடு, புதுச்சேரி)

(30) வழக்கறிஞர் சி.சே.ராசன்

(சமம் குடிமக்கள் இயக்கம்)

(31) கருப்பையா

(தலித் விடுதலை இயக்கம்)

(32) ஈசன் ஆறுமுகம்

(தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்)

(33) இரா முருகானந்தம்

(மனித உரிமைகள் (ம) நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்)

(34) கெளசல்யா சங்கர்

(சமூக நீதி அறக்கட்டளை)

(35) வழக்கறிஞர் தமயந்தி

(தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்கறிஞர்கள் சங்கம்)

(36) கி.வே. பொன்னையன்

(தற்சார்பு விவசாயிகள் சங்கம்)

(37) வழ. கோ. பாவேந்தன்

(தமிழ்த் தேசநடுவம்)

(38) அரங்க குணசேகரன்

தமிழக மக்கள் புரட்சிக் கழகம்

(39) நிலவழகன்

(மக்கள் தமிழகம் கட்சி)

(40) தங்க. குமரவேல்

(தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம்)

(41) பேரா கோச்சடை

(மக்கள் கல்வி இயக்கம்)

(42) வழக்கறிஞர் கென்னடி

மனித உரிமைக் காப்பாளர்

(43) முனைவர் குழந்தை

(மனித உரிமைக் காப்பாளர்)

(44) வழக்கறிஞர் செயப்பிரகாசம்

(புரட்சிகர இளைஞர் முன்னணி)

(45) வழக்கறிஞர் குணசேகரன்

(சாமானிய மக்கள்நலக் கட்சி)

(46) பேரா. சங்கரலிங்கம்

(சுயஆட்சி இயக்கம்)

(47) நிலவன்

(நீரோடை)

(48) வழ. செ. குணசேகரன்

(தமிழ்நாடு விடுதலைப் புலிகள்)

(49) வழக்கறிஞர் விஸ்வராஜு

(பத்து ரூபாய் இயக்கம்)

(50) நல்வினை செல்வம்

(தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி)

(51) முல்லை வேந்தன்

(சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு இயக்கம்)

(52) துரை குணா

(கருத்தாயுதக் குழு)

(53) மு.ஞான சேகரன்

(கனிம வளக் கொள்ளை எதிர்ப்பு இயக்கம்)

(54) ராஜ்குமார்

(மக்கள் மன்றம்)

(55) ஐ.சைமன்

(இளைஞர் அரன்)

(56) ம.விவேகானந்தர்

(பன்னாட்டு சமூக செயற்பாட்டாளர் கவுன்சில்)

(57) தீ.வி. இரமேஷ்

(மக்கள் வழிகாட்டி இயக்கம்)

(58) அருள் ஆறுமுகம்

(உழவர் உரிமை இயக்கம்)

(59) நிவேதா

(தமிழ்நாடு பெண்கள் இயக்கம்)

(60) சி.சம்சுதீன்

(ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு)

(61) ந.அமுதா

(மக்கள் பாதை பேரியக்கம்)

(62) கா.அமுதன்

(சோசலிச தொழிலாளர் இயக்கம்)

(63) பாரி

(தமிழ் தேச இறையாண்மை)

(64) காஞ்சி அமுதன்

(பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம்)

(65) அண்ணாதுரை

(மக்கள் சட்ட உரிமை இயக்கம்)

(66) P.V. இரமேஷ்

(மக்கள் பாதுகாப்புக் கழகம்)

(67) ஏ. தேவேந்திரன்

(மக்கள் சட்ட விழிப்புணர்வு இயக்கம்)

(68) பேரா பாத்திமா பாபு

(ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்)

(69) வழக்கறிஞர். கமரூதீன்

(குடிமக்கள் உரிமைக்கான பொது மன்றம்)

(70) சேமா. சந்தானராஜ் பாண்டியன்

(தமிழர் விடியல் கட்சி)

(71) திலீபன் செந்தில்

(சுயமரியாதை சமத்துவக் கழகம்)

(72) மெய்யப்பன்

(தமிழ்த்தேச குடியரசு இயக்கம்)

(73) பார்த்தீபன்

(ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்)

(74) காளிதாஸ்

(தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம்)

(75) இ. ஆசீர்வாதம்

(காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்)