போராட்ட வடிவங்களை சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகிய சூழலில் ஆவேசத்தின் வெளிப்பாடாய் வெடித்துக் கிளம்பும் போராட்டங்களின் உணர்வுகளைக் கவனத்தில் கொள்ளாமல் சட்டங்களைப் புரட்டிக் கொண்டிருக்க முடியாது. 1965 இல் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது தமிழகமே பற்றி எரிந்தது. மாதக்கணக்கில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு கிடந்தன. ரயில்கள் தீ வைக்கப்பட்டன. காவல்துறை ஆய்வாளர் ஒருவரே உயிருடன் எரிக்கப்பட்டார். கலைஞர் கருணாநிதியை அன்றைய காங்கிரஸ்ஆட்சி பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது. பின்னர் 1967 இல் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன், வன்முறை குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

இந்தியை எதிர்த்து தமிழகத்தில் மூண்டெழுந்த ஆத்திரத்தின் ஆவேசத்தின் வெளிப்பாடாகவே அந்தப் போராட்டத்தை அவர் பார்த்தார். அதுதான் அண்ணாவின் அணுகுமுறை. அதேபோல் ஒவ்வொரு நாளும் ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படும்போது இனப்படுகொலைக்கு உதவிட இந்தியாவின் ஆயுதம் போகிறதோ என்ற கொந்தளிப்பில் கொதித்து எழுந்த உணர்வுகளின் வெளிப்பாடாகவே இந்த இராணுவ வாகன மறிப்பையும், கலைஞர் பார்த்திருக்க வேண்டும். அதுதான் அண்ணா காட்டிய வழிமுறை. ராணுவத்துக்கு எதிராக ரகசிய திட்டம் தீட்டி நடத்தப்பட்ட போராட்டம் அல்ல அது. அதனால் தான் பத்திரிகையாளர்களுக்கும் தொலைக்காட்சியினருக்கும் தகவல் தெரிவித்து அங்கே வரச் சொல்லி இருக்கிறார்கள். இயக்கங்களைக் கடந்த பொது மக்களும், பெண்களும் ஆவேசமாய் இராணுவ வாகனங்களைத் தடுத்துள்ளனர். உணர்வுகள் வரம்பு மீறி விடாமல் தடுத்து நிறுத்தும் பொறுப்பான கடமையை கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் செய்துள்ளார். உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படும் அண்ணாவின் அணுகுமுறையைக் கைவிட்டு, சட்டங்களைப் புரட்டும் அணுகுமுறையை இந்த அரசு கைவிட வேண்டும்; அது தமிழின உணர்வுக்கு எதிரான அணுகுமுறை.

- கோவை கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்.

Pin It