காஞ்சி ஜெயேந்திரனும் கருவறை புகழ் அர்ச்சகர் தேவநாதனும் நீதிமன்றம் வந்தபோது சந்தித்துப் பேசுகிறார்கள்
 
ஜெயேந்திரன் : அம்பி, தேவநாதா, நம்ம காஞ்சிபுரத்து பெருமையை பரப்புறதுல நீயும், என்னோட சேர்ந்துட்டே போலிருக்கே!

தேவநாதன் : எல்லாம், தாங்கள் காட்டிய வழி சுவாமி!

ஜெயேந்திரன் : போடா, அபிஷ்டு. நானாவது மடத்துக்குள்ளே அப்படி இப்படின்னு இருந்தேன். நீ கர்ப்பக கிரகத்துக்குள்ளேயே திருவிளை யாடல்களைத் தொடங்கிட்டியே, அபார துணிச்சல்டா, நோக்கு!

தேவநாதன் : இதுக்கு என்ன சாமி, துணிச்சல் வேண்டியிருக்கு. நம்ம பகவான்கள் செய்யாததையா நாம் செய்துட்டோம். பகவான்கள் கற்பழிப்பு நடத்தினா, ‘புனிதம்’ங்கிறான்! நாம் செய்தால் கிரிமினல் குற்றம்ங்கிறான். சே... பகவானோட நெருங்கி இருக்குற, நமக்கு, இந்த அற்ப உரிமைகள் கூட கிடையாதா?
 
ஜெயேந்திரன் : விவரம் தெரியாமப் பேசாதடா அம்பி! பகவானே, இப்ப நேரில் வந்து அந்த திருவிளையாடல்களை நடத்துனா, சட்டத்துலே யிருந்து, எவனும் தப்பிக்க முடியாது தெரியுமோன்னோ?

தேவநாதன் : பகவான் தப்ப முடியாதுங்கிறது, சரிதான்! ஆனா, நீர் தப்பிட்டேளே! கோயிலுக் குள்ளேயே சங்கர்ராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் உங்களுக்கு எதிரான சாட்சிகள் எல்லாம், பல்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாளே! தி.மு.க. ஆட்சியிலே, காத்து உங்க பக்கம் வீசுறதே!
 
ஜெயேந்திரன் : அம்பி, அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கனும்டா! இப்போ நேக்கு எதிரான சாட்சியெல்லாம் பல்டி அடிச்சுட்டாளே; இதை எவனாவது எதிர்த்து வாயை திறக்குறானா பாத்தியா? ஒரு பயலும் பேச மாட்டான். சுப்ரமணியசாமியி லிருந்து சோ ராமசாமி வரைக்கும் எல்லோரும் வாயை மூடிட்டா... என்னைக் கைது செஞ்ச அந்த அம்மாளே, இப்போ, எனக்கு எதிரா வாய திறக்குறதுல்லேயே! போலீசு எல்லாம்கூட இப்ப என் பக்கம் சாஞ்சிடுச்சு! ‘தினமணி’, ‘தினமலர்’ எல்லாம் மீண்டும் நம்மள புகழத் தொடங்கிட்டானே! கவனிச்சியோ!

தேவநாதன்: ம்... கவனிச்சுண்டுதான் இருக்கேன்.... தினகரன் எரிப்பு வழக்குல கூட குற்றவாளி எல்லாம் தப்பிச்சுட்டா! போலீசே பல்டி அடிச்சுடுத்து. அதேபோல உங்களுக்கும் அடிக்குது யோகம்!
 
ஜெயேந்திரன் : அம்பி, தினகரன் எரிப்பு வழக்குல, போலீசே பல்டி அடிச்சத துக்ளக் சோ கண்டிச்சு எழுதிட்டான். ஆனால் என் விஷயத்துல கண்டுக்கவே இல்லயே கவனிச்சியோ?

தேவநாதன் : அது, எப்படி சாமி கவனிக்காம இருப்பேன். நான் கர்ப்பகிரகத்துக்குள்ளே ‘கசமுசா’ செய்தேனே; அதை நம்ம ராமகோபாலன்னோ, துக்ளக் ராமசாமியோ, சு.சாமியோ கண்டுக்கலியே? இந்து விரோதின்னு எவனாவது சுண்டு விரலை அசைத்தானா? இல்லையே, சாமி! இப்படி நமக்குள்ள ஒரு நல்ல ‘அன்டர்ஸ்டான்டிங்’ இருக்கற துனாலதான் நம்ம, வண்டி ஓடிகிட்டு இருக்கு. ஆனா லும், நீங்க தப்பிச்சுட்ட மாதிரி, நான் தப்பிக்கிற துக்கும், ஏதேனும் வழி செய்ய மாட்டேளா சாமி.
 
ஜெயேந்திரன்: மடையா, செல்போன ஆத்துலேயே விட்டுட்டு வராம - ஏண்டா கர்ப்ப கிரகத்துக்குள்ளே எடுத்துட்டு போன! பூணூலை மட்டும் மாட்டிட்டு வந்தா போதாதோ? அது தானே வினையா வந்து ‘முடிஞ்சுருச்சு’! சமஸ்கிருத மந்திரம் மட்டும் ஒலிக்க வேண்டிய இடத்துல, ‘செல்போன்’ அபசுரம் கேட்கலாமோ!

தேவநாதன்: நீங்க சொல்றது சரிதான் சாமி! ஆனா ‘பார்ட்டிகளை’ அவசரமாக அழைக் கிறதுக்கு, செல்போன் வேணுமே சாமி. பக்தர்கள், கூட்டம் இல்லாத நேரம்பார்த்து, பகவான் மட்டும் தனியா இருக்குற நேரத்துல அவசரமா ‘பார்ட்டிகள’ அழைக்கணும்னா, பகவானையா அனுப்ப முடியும்? அவன்தான் போவானா? அவன் இருக்கிற இடத்துல கல்லா தானே உட்கார்ந்திருப்பான்! விவரம் தெரியாம பேசறேளே! அவசரத்துக்கு செல்போன் உதவுமே தவிர, ஆண்டவனா உதவுவான்?
 
ஜெயேந்திரன்: அந்த ஆண்டவன்தான் எதுக்கும் உதவ மாட்டான்ங்குறது நமக்குத் தெரியாதா? நன்னாவே தெரியும். அதனால் தானே, நீயும், நானும் மடத்தையும் கருவறையையும் நமக்கு வசதியா பயன்படுத்த முடியுது! ஆனா, காலம் கெட்டுப் போச்சுடா! இனி நம்ம இஷ்டம்போல விளையாட முடியாது போலிருக்கு.
தேவநாதன் : என்ன சொல்றேள்?
 
ஜெயேந்திரன் : கர்ப்பகிரகம், மடத்துக்குள்ளே எல்லாம், வீடியோ கேமராவைப் பொருத்திட்டான்னு வச்சுக்கோ, நம்ம கதை அம்போ தான்!

தேவநாதன்: அந்த அளவுக்கு ஏமாந்துருவோமா? அதெல்லாம் சாஸ்திரத்துக்கு விரோதம்னு நம்ம, இராமகோபாலன், துக்ளக், ராமசாமி எல்லாம் கூச்சல் போட வச்சுட்டா போச்சு!
 
ஜெயேந்திரன்: ஆமாண்டா, அம்பி! கவர்ன்மென்ட்ல அப்போ பயந்துடுவான்ல. இந்த “சாஸ்திர விரோதம்”, “ஆச்சார விரோதம்”, “பழக்க வழக்க விரோதம்” என்கிறதையெல்லாம் நாம இறுக்கிப் பிடிச்சுக்கனும். இல்லாட்டா, நம்ம பாடு அவ்வளவுதான்!

தேவநாதன்: அதாவது, இந்த “விரோதங்”களை யெல்லாம் செய்யறதுக்கு பூதேவராகிய நமக்கு மட்டுமே உரிமை. மற்றவர்களுக்கு இல்லேங்கிறேள். அப்படித்தானே?
 
ஜெயேந்திரன் : இதையெல்லாம் நோக்கு விளக்கி விலாவாரியாக சொல்லணுமாடா? புரிஞ்சுக்க வேண்டியது தான்.

தேவநாதன்: புரிஞ்சுகிட்டேன் சாமி. அப்படியே என்னை வழக்கிலேயிருந்து காப்பாத்துறதுக்கு ஏதாவது வழிசொல்லுங்களேன்.
 
ஜெயேந்திரன் : யோசனை இருக்குடா, அம்பி! காஞ்சிபுரத்தை - தமிழ்நாட்டிலேயிருந்து தனியா பிரிச்சு, நம்ம தலைமையிலே தனி ஆட்சியக் கொண்டு வந்துட்டோம்னா, ஒரு பயலும் நம்மை அசைச்சுக்க முடியாதுடா. அதைத்தான் ஆலோசனை பண்ணிகிட்டு இருக்கேன்.

தேவநாதன் : சபாஷ்! சரியான யோசனை சாமி. அதுல, என்னையும் சேர்த்துக்கோங்க! காஞ்சிபுரத்த நாம் எல்லாம் சேர்ந்து “புண்ணிய” பூமியா மாத்திடுவோம்! அப்ப, எந்த கூட்டம், எந்த போலீசு வந்துடுவான், பார்த்துடுவோம்!

- கோடாங்குடி மாரிமுத்து

Pin It