periyar with cadresஆசிரியர்: அடே! கண்ணப்பா! ஏண்டா பாடம் படித்துக் கொண்டு வரவில்லை?

மாணவன்: நீங்கள் நேற்று சொன்னபடிதான் சார் நான் செய்தேன்.

ஆசிரியர்: என்னடா சொன்னேன்?

மாணவன்: நேற்று சொல்லிக் கொடுத்த பாட்டில் உள்ளபடி நடந்து கொண்டேன்.

ஆசிரியர்: என்ன பாட்டு?

மாணவன்: பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்

சங்கத்தமிழ் மூன்றும் தா!

என்றுச் சொல்லிக் கொடுத்தீர்கள். அதன்படி ராத்திரி, பால், தேன், சர்க்கரைப்பாகு, முந்திரிப் பருப்பு எல்லாம் பிள்ளையாருக்கு வைத்துப் படைத்தேன். ஆகையால் பாடம் வராதது என் குற்றம் அல்ல சார்!

ஆசிரியர்: அடா முட்டாள் பயலே ! இது மாத்திரம் போதுமாடா? புஸ்தகத்தைப் பார்த்துப் படித்தால்தாண்டா பாடம் வரும்.

மாணவன்: புஸ்தகத்தைப் படித்தால்தான் பாடம் வரும் என்றால், பிள்ளையாரை ஏன் சார் கும்பிட வேண்டும்? அவரை வணங்கினால் ஆகாத காரியம் எல்லாம் ஆய்விடும் என்று சொன்னீர்களே! அதெல்லாம் பொய்தானே!

ஆசிரியர்: சீ அதிகப்பிரசங்கி உட்காரு கீழே.

(பகுத்தறிவு (மா.இ.) உரையாடல் மே 1935)