பாலாவின் பரதேசி படம் பார்த்தேன்.

செழியனின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும் அற்புதக் கலவையாய் தலைவாழை இலைபோட்டு  அருமையான விருந்து படைத்திருந்தார் பாலா!.

விருந்தை சுவைக்க முற்பட்டபோதுதான் இலையின் ஓரத்தில் மலம் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

பாலாவிற்கு என்னவாயிற்று? கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்கு பெருமளவு கல்வி வழங்கியது கிறுத்துவ மிஷன்கள்தான் என்றால் மிகையாகாது. பிளேக் நோய் பரவியபோது மக்களைக் காப்பாற்றபெருமளவு கிறுத்துவ பாதிரியார்கள் பணியாற்றியிருக்கிறார்கள்.

அந்தத்தொண்டில் பலர் மதம் மாறியிருக்கலாம்.மாற்றப்பட்டும் இருக்கலாம்.ஆனால்இந்துத்துவாவின் ஊதுகுழலாய் மாறி பாலா இப்படி ஒரு காட்சியை வலிய திணித்திருப்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு எனும் பார்ப்பனப்பரதேசிகளின் கேரக்டரைகிறித்துவ டாக்டர் மீது திணித்து அவர் ரொட்டியை மக்கள்மீது வீசுவதாக அமைத்திருக்கிறார்.

பி.எச்.டேனியல் எழுதிய உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட அத்தியாயத்தைப் பற்றி பேசும் எரியும் பனிக்காடு (RED TEA) கதைதான் பாலாவால் பரதேசியாக உருவாக்கப்பட்டுள்ளது.

மூலக்கதையான எரியும் பனிக்காட்டில் வரும் கிறித்துவ மருத்துவர் ஆபிரஹாம் சிறந்த மனிதநேயராகவும் தொண்டுள்ளம் பெற்றவராகவும் சித்தரிக்கப்பட்டிருந்தார்.எஸ்டேட் மருத்துவமனை மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக்கண்டும் கூலிகளின் நிலையைக்கண்டும் ஆபிரஹாம் வெகுண்டெழுந்தார். நாலணா கூலிக்காகஇந்தப்பாவப்பட்ட ஜனங்கள் அரை பட்டினியிலும்,நோய்கொடுமையிலும் நித்தம் நித்தம் செத்துகொண்டிருக்கிறார்கள். என்கிறது ஆப்ரஹாம் பாத்திரம்.

ஆனால் பரதேசியிலோ கிறித்துவ மருத்துவர் பாத்திரம் ஒரு காமெடி பாத்திரமாக கூலிகளை கிறித்துவத்திற்கு மாற்றுவதையே முழு நோக்கமாகக் கொண்ட பாத்திரமாக மாற்றிவிட்டார் பாலா

வெறும் பஞ்சம் மட்டும் பிழைக்க அந்த சமுதாயம் டீ எஸ்டேட் நோக்கி போகவில்லை.ஆதிக்க சமுதாயத்தின் தீண்டாமைக் கொடுமையிலிருந்தும் விடுபடவே அவர்கள் சென்றார்கள் என்பதுகங்கானியின் உரையாடலிலேயே தெரியும்.

நாய்க்கருகிட்டயும், தேவமாருகிட்டயும் நெலம் இருக்கு. அவங்க நம்மல என்ன பாடுபடுத்துறானுவோ? அவங்க வீட்டுப்பக்கம் கூட நம்மள விடமாட்டானுவோ. தண்ணீர் தாகத்துல நாக்கு வரண்டு செத்தாலும் அவுக கெணத்துல இருந்து சொட்டு தண்ணி எடுக்கவிட மாட்டானுவோ என்று வேலைக்கு ஆள் பிடிக்கும் கங்கானி கூலிகளைப்பார்த்து சொல்வதாக மூலக்கதையில் உள்ளது.

ஆனால் பரதேசியில் பாலாவோ அவர்களை வெறும் பஞ்சம் பிழைக்கப் போனவர்களாகவே காட்டியுள்ளார்.

படத்தை ரசிக்கவோ பாராட்டவோ முனையும் போதெல்லாம் கிறித்துவ டாக்டர் காட்சியே கண்முன் வருகிறது.

என்னதான் முக்கி முக்கி படம் எடுத்தாலும் 48 மதிப்பெண்ணுக்கு மேல் போடாத ஆனந்த விகடன் மார்க் அள்ளிப்போட்டிருந்ததைப் பார்த்ததுமே இதில் ஏதோ உள்குத்து இருப்பதை உணரமுடிந்தது. அந்த கிறித்துவ கேரக்டரை இயக்குநர் சீரியஸாக காட்டாமல் காமெடியாக படைத்துவிட்டார் என்றும் ஆனந்த விகடன் அங்கலாய்த்திருக்கிறது.

Pin It