தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், நேற்று (11.04.2016) ஞாயிறு - காலை முதல் மாலை வரை தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ.பால்ராசு, தோழர் பழ. இராசேந்திரன், தோழர் நா. வைகறை, தோழர் கோ. மாரிமுத்து, தோழர் கா. விடுதலைச்சுடர்,தோழர் ரெ. இராசு, தோழர் க. முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

முன்னதாக, அண்மையில் மறைந்த தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் சாதிக்குல் ஜன்னா (எ) புதுமொழி, பொறியாளர் ஆர்.வி.எஸ். விசயகுமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஒரு நிமிட அமைதி வணக்கம்செலுத்தப்பட்டது.

தமிழ்நாட்டு உழவர் சிக்கல்களுக்கானத் தீர்வுகளை விளக்கியும், உழவர்கள் சிக்கல் குறித்த விழிப்புணர்வைஏற்படுத்தவும், வரும் சூன் 17, 18, 19 ஆகிய நாட்களில், தமிழக உழவர் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப்பேரியக்கம் சார்பில், “உழவர் சிக்கல்களுக்கான பரப்புரைப் பயணம்” நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில், தமிழ்நாடு – புதுச்சேரி சட்டப்பேரவைக்கானப் பொதுத் தேர்தல் குறித்து பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்போம்! 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், 2016 மே 16 அன்று நடைபெறவுள்ள சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல், தேர்தல் அரசியலில் சீரழிவை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவில், இந்தத் தேர்தலில் வெளிப்படையான பண பேரங்கள் நடைபெறுவதை அரசியல் கட்சிகள் ஒன்றின் மீது ஒன்று வைக்கும் குற்றச்சாட்டுகளே வெளிப்படுத்துகின்றன. கொள்கைகள் – கோட்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வாக்குவங்கி அடிப்படையிலான கூட்டணி பேரங்களும், அதற்கான குதிரை பேரங்களும்தான் பெருமளவில் நடைபெறுகின்றன.

தேர்தல் அல்லாத காலங்களில் மக்கள் சிக்கலில் போராடும் கட்சிகள் கூட, வெற்றி வாய்ப்பை மட்டுமே கணக்கில் கொண்டு கொள்கையற்ற கூட்டணிகளில் இறங்குகின்றன.

கடந்த 05.04.2016 அன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய சேம வங்கி ஆளுநர் இரகுராம் ராஜன், சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ரூபாய் 60,000 கோடி கூடுதல் பணப்புழக்கம் உள்ளது ஏற்பட்டுள்ளது என்றும், இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருப்பது, தேர்தலின் வழியே புழங்கும் சட்டவிரோதப் பணம் குறித்து எச்சரிக்கிறது.

இவ்வளவு பெரும் பணத்தை “முதலீடாக“ மேற்கொள்கின்ற கட்சிகளும், அதன் வேட்பாளர்களும், ஆட்சிக்கு வந்தபின் அதனை வட்டியுடன் திரும்ப எடுப்பதற்கான ஊழல் – கமிசன் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவையெல்லாம், மக்கள் அனைவருக்கும் தெரிந்தே நடைபெறுவது, தேர்தல் அரசியலின் சீரழிந்த தன்மையை உணர்த்துகிறது.

இன்னொரு புறத்தில், இக்கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லுவது போலவே இந்தத் தேர்தலிலும் வானளாவிய வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கை என்ற பெயரால் அள்ளி வீசுகின்றன. எடுத்துக்காட்டாக, வேளாண்மையைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டே, கண்மண் தெரியாத தொழில் வீக்கத்தையும், நூறு நாள் வேலைத் திட்டத்தை – நூற்றைம்பது நாள் வேலைத் திட்டமாக மாற்றுவதாகவும் அறிவிப்பது வேளாண்மையை அழிக்கும் செயல் என்பதை தெரிந்தே முன் வைக்கிறார்கள். அதேநேரம், வேளாண்மையை வளர்ப்பதற்கு என்று சொல்லி வானளாவிய திட்டங்களையும் அறிவிக்கிறார்கள்.

 தமிழ்நாட்டின் உரிமைச் சிக்கல்களான காவிரிச் சிக்கல், கச்சத்தீவு சிக்கல், முல்லைப் பெரியாறு அணை உரிமை, அணுஉலைகள் திணிப்பு, ஏழு தமிழர் விடுதலை, ஏறுதழுவல் உரிமை உள்ளிட்ட சிக்கல்களோ, வேளாண் தொழில் நசிவு, தொழில்துறை முடக்கம், விலைவாசி உயர்வு, கனிம வளக் கொள்ளை, தமிழீழ விடுதலை உள்ளிட்ட சிக்கல்களோ, கட்சிகளின் உண்மையான நிகழ்ச்சி நிரலில் இல்லை. ஊடகங்கள் கூட, அவற்றை முக்கிய சிக்கல்களாக முன்வைப்பதில்லை. மாறாக, நட்சத்திர வேட்பாளர்கள் குறித்தும், வாக்கு வங்கி வரலாறு குறித்துமே அவை பேசுகின்றன.

இவை அனைத்திற்கும் மேலாக, அரசமைப்புச் சட்டப்படி மக்களுக்கான அடிப்படை சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அதிகாரமற்ற தீர்மான மன்றமே (மசோதா மன்றமே) சட்டமன்றம் என்ற உண்மையை மறைத்து, இந்திய வல்லாட்சியின் கைகளை வலுப்படுத்தும் செயலில் இறங்குகின்றன.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்தமிழர் குறித்தோ, ஏழு தமிழர் விடுதலை குறித்தோ, காவிரி உரிமை குறித்தோ, முல்லைப் பெரியாறு உரிமை குறித்தோ இயற்றியத் தீர்மானங்கள் வெறும் தீர்மானங்களாக – சட்ட வலுவற்றவைகளாக இருந்து வருகின்றன. இதுவே, தமிழ்நாடு சட்டமன்றம் சட்டம் இயற்ற - தமிழர் உரிமைகளை நிலைநாட்ட வலுவற்றது என்பது தெளிவாக்குகிறது.

ஆயினும், தமிழ்நாட்டு மக்களின் தலைவிதியையே மாற்றி அமைப்பதற்கு வல்லமை உள்ளதுபோல் படம்காட்டி வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சர்கள், இந்திய அரசின் செயல்திட்டங்களை நிறைவேற்றும் கங்காணிகளாகவே செயல்படுகின்றனர். இந்திய அரசமைப்பு இதனை உறுதி செய்கிறது.

எனவே, தமிழினத்தின் உரிமைச் சிக்கல்களில் அக்கறை செலுத்துவோர், தூய்மையான அரசியலை விரும்புவோர், இந்நோக்கங்களுக்கு உதவாத சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்காமல், இப்பொதுத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமெனவும், மாறாக தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் மக்கள் திரள் போராட்டப் பாதைக்கு அணிதிரளுமாறும்  தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Pin It