தமிழின் முதல் சிற்றிதழ் 'தமிழ் மெகசின்'. வெளியான ஆண்டு 1831. இன்று வரை எண்ணற்ற சிற்றிதழ்கள் வந்துள்ளன. ஒவ்வொரு சிற்றிதழுக்கும் ஒரு பின்னணி இருக்கும். தனி மனித பின்னணியும் இருக்கும். குழுவும் இருக்கும். இயக்கமும் இருக்கும். இலக்கியம் வளர்ப்பதில் சிற்றிதழுக்கு முக்கியப் பங்குண்டு. சமூக அக்கறையும் மிகுந்தவை சிற்றிதழ்களே. சிற்றிதழ்களில் ஏராள பதிவுகள் உண்டு. சிற்றிதழ்கள் குறித்த பதிவுகளும் அவசியம் ஆகிறது.தமிழில் சிற்றிதழ்கள் என்னும் ஆய்வை நிகழ்த்தி ஒரு தொகுப்பாக்கித் தந்துள்ளார் கீரைத் தமிழன். சிற்றிதழ் சேகரிப்பாளர் தி.மா. தமிழழகனும் சில தொகுப்புகளை அளித்துள்ளார். பொள்ளாச்சி நசன் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். விசும்பு என்னும் சிற்றிதழில் அறுபதுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்களை அறிமுகம் செய்தார் பொன்.குமார். அவ் வகையில் சிற்றிதழ் சேகரிப்பாளரன நவீன் குமார் 'தமிழில் சில முதலிதழ்கள்' குறித்து எழுதி யுகமாயினி இதழில் வெளி வந்த கட்டுரைகளைத் தொகுத்து தொகுப்பாக்கித் தந்துள்ளது சிற்றிதழ் உலகில் முக்கிய பதிவு.

நவீன் குமார் சிற்றிதழ்களில் மிகுந்த அக்கறைக் கொண்டவர், நல்ல வாசிப்பாளர். சிற்றிதழ்களில் எழுதி வருபவர். கண்ணதாசன் முதல் கல்வெட்டு ('க' வில் தொடங்கி 'க'வில் முடிந்துள்ளது குறிப்பிடத் தக்கது) வரை முப்பத்தொரு இதழ்களை  அறிமுகத்தியுள்ளார். "ஒரு சமுதாயத்தின் குறிப்பிட்ட காலத்தின் கலை, சமுதாய அமைப்பு, மொழி, கலாச்சாரம், தொழில், பொருளாதாரம் இவைகளையும், இதன் பரிமாணங்களையும் கட்டிக் காக்கும் ஆவணங்களே சிற்றிதழ்கள் " என்று 'குதிரை வீரன் பயணம்' கட்டுரையில் சிற்றிதழுக்கு விளக்கமளித்துள்ளார்.

தமிழில் சில முதலிதழ்கள் என்னும் இத் தொகுப்பில் முதலில் இடம் பெற்ற இதழ் 'கண்ணதாசன்'. இதழியல் துறையில் தனித்துவத்தையும் நடையியல் இதழ் வரிசையில் வைத்துப் போற்றப் பெற வேண்டிய இதழ் கண்ணதாசன் என்கிறார்."சமூக உணர்வோடு பின்னப் பட்ட எந்தப் படைப்புக்கும் வரலாறு உண்டு. அப்படி சிற்றிதழ்களின் வரலாற்றில் 'படித்துறை' இதழுக்கு ஓரு இடம் உண்டு" என்பது ஆசிரியர் கருத்து."வணிக உலகிற்கு அப்பாற்பட்ட ஆரோக்கியமான கலாச்சாரத்தை தமிழ் வாழ்வில் உருவாக்க முயன்ற சிற்றிதழ் 'இனி' " என்கிறார். இவ்வாறு ஒவ்வொரு சிற்றிதழ் மீதும் தன் கருத்துக்களை பதிவித்துள்ளார். சிற்றிதழ்கள் குறித்த இலக்கிய வாதிகளின் கருத்துக்களையும் மேற்கோள் காட்டி தன் கட்டுரைக்கு பலம் சேர்த்துள்ளார். "அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், தத்துவம், கல்வி, மருத்துவம் முதலிய பல களங்களிலும் செயல் படும் இந்தச் சக்திகள் மனித வாழ்வுக்கு ஆதாரமான சூழலை அழிக்கின்றன. இந்த உண்மையை சுட்டிக் காட்டுவதும், அழிவுச் சக்திகளுக்கே எதிராக மக்களை, குறிப்பாக இளைஞர்களின் அறிவையும், உணர்வையும் தூண்டுவதும் சிற்றிதழ்களின் நோக்கம்" என்பது எழுத்தாளர் “ஞானியின் விளக்கம். 'வசந்தம் வருகிறது' இதழ் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வோர் இதழுக்கும் ஒரு நோக்கம் இருக்கும். இதழின் நோக்கத்தை முழுமையாக ஒவ்வொரு கட்டுரையிலும் எடுத்துக் காட்டி இதழின் நோக்கத்தை அறியச் செய்துள்ளார். ஆசிரியரின் நோக்கத்தையும் வெளிப் படுத்தியுள்ளார்.

இதழ்களில் வெளியாகியுள்ள படைப்புகள் என்ன சொல்கின்றன, எதை மையப் படுத்தியுள்ளன என விளக்கியுள்ளார். படைப்புகள் குறித்தும் விமரிசித்துள்ளார். 'சொல் புதிது' இதழில் "சூத்ரதாரியின் சிறுகதை 'வலியின் நிறம்' படித்ததும். மனம் வலித்தது. சூத்ரதாரியின் எளிய நடையில் விறுவிறுப்பான, நேர்த்தியோடு கதை பின்னப்பட்டிருந்தது" என்பது ஒரு சான்று. 'முங்காரி' இதழில் வாசித்ததில் நேசிக்க வைத்த கவிதையாக கவிஞர் ராசீ.தங்க துரையின் 'வாழ்க்கையும் வசந்தமும்' கவிதையைக் கூறியுள்ளார்.

மூடியிருந்த போது
முட்டிக் கொண்டு வந்த காற்று
அதற்காக திறந்த போது
உள்ளே வர மறுத்தது
எனக்கான வாழ்க்கையும்
வசந்தமும் கூட

"கவிநடை எளிய இனிய நடை. நாம் அன்றாடம் புழங்கும் பேச்சு நடை. இங்கு இவரின் கைவண்ணத்தில் பொருள் பொதிந்த, நயமிக்க வரிகளாக மாறியருப்பது படைப்பாளனின் திறமையை பறை சாற்றுகிறது" என கவிதையின் மீது கருத்துரைத்துள்ளார்.

இதழ்களில் இடம் பெற்ற படைப்பாளர்களையும் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.படைப்பாளர்கள் பற்றியும் எழுதியுள்ளார். "தமிழ் எழுத்துலகம் தேச விடுதலைப் போரில் பங்கெடுத்து களைப்படைந்த நேரத்தில் படைப்புத் துறையில் பல முன்னணி எழுத்தாளர்கள் தமது சோர்ந்து போன எழுத்துக்களால் காலத்தை வீணாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் எந்தப் பரபரப்புமில்லாமல் எழுத்துத் துறையில் கால் பதித்தவர் ஜெயகாந்தன் " என கல்பனா இதழ் பற்றியதில் எழுதியுள்ளார். 'தஞ்சை மஞ்சரி' யிலோ "தஞ்சாவூர் சத்திரத்தில் சில நாட்கள் ஒதுங்கி இருந்து, அங்கு சீட்டாடவும், குடி, விபசாரத்திற்கு வரும் பெரிய மனிதர்களுக்கு 'எடுபிடி' வேலை செய்தாராம் எழுத்தாளர் ஜெயகாந்தன் " என்பது தேவையற்றது.

சிற்றிதழ்கள் நடத்துவது சிரமமான பணி. பொருளாதாரம் முக்கியக் காரணம்.  ஏராளமான சிற்றிதழ்கள் நின்று போனதற்குக் காரணியாக இருந்துள்ளன. "என் சொந்தப் பொறுப்பில் 'திரட்டு' என்ற காலாண்டு இதழை ஆரம்பித்திருக்கிறேன்.பொருளாதார பலமில்லாமல், வாசகர்கள் ஆதரவை மட்டுமே நம்பி இந்த சிற்றிதழை ஆரம்பித்திருக்கிறேன்" என்று அதன் ஆசிரியர் நா.தர்ம ராஜன் கூறியுள்ளதை சிற்றிதழாளர்களின் குரலாக பதிவித்துள்ளார். நின்று போன சிற்றிதழ்களையும் நினைவுக் கூர்ந்துள்ளார்.

ஒவ்வொரு கட்டுரை இறுதியிலும் இதழ் எங்கிருந்து வந்தன, வருகின்றன, எவர் பொறுப்பில் வருகின்றன என்னும் தகவல்களையும் தந்துள்ளார். ஒரு சில இதழ்கள் ஒன்றோடு நின்று போயுள்ளன. சில இரண்டு அல்லது மூன்று வந்தும் நின்று போயுள்ளன. நின்று போனது குறித்து நெஞ்சார வருந்தியுள்ளார்.'திரட்டு' ஒரு இதழோடு நிறுத்தப் பட்டது ஏன் என்ற வினா என்னுள்ளத்தில் வலம் வருகிறது" என்று எழுப்பிய வினா சிற்றிதழாளர்களின் உள்ளத்திலும் வலம் வரவேச் செய்கிறது. 'சங்கம்' ஒரே இதழோடு நின்று போனது தீவிர வாசகனுக்கு பெரும் இழப்பு என்கிறார்.

சிற்றிதழ்கள் பற்றியதாயினும் சிற்றிதழ்கள் தாண்டியும் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். 'களம்' பற்றியதில் " புதிய சமுதாயத்தை உருவாக்கும் 'ஆக்க' கரமான கதைகளோடு எழுதும் எழுத்தாளர்கள் பலர் இன்று வறுமையோடுதானே மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் " என்பது கவனத்திற்குரியது. இலக்கியம் சோறு போடாது என்பதை உறுதிப் படுத்துகிறது. இலக்கியவாதிகளின் மீதான கவலையை வெளிப் படுத்தியுள்ளதன் மூலம் எழுத்தாளர்கள் நிலை மாற்றம் பெற வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

'வேர்கள்' இதழில் "களைகளும், உரிய கவனமும் இல்லாத 'ஹைக்கூ'க்களே நிறைந்து காணப் படுகிறது" என்றவர் 'முங்காரி' இதழில்

அரசு விழா
நேரமாகியும் தொடங்கவில்லை
புகைப்படக் காரர்களை எதிர் பார்த்து

என்று கவிஞர் பழனி இளங்கம்பன் எழுதிய ஹைக்கூவை "இன்றைய அரசு விழா நிகழ்வுகளை அழகாக படம் பிடிக்கும் கவிதை" என்று பாராட்டியுள்ளார். கவிக்கோ அப்துல் ரகுமானின் 'கவிக்கோ' இதழை அறிமுகப்படுத்தியவர் முடிவில் "மீண்டும் வானம்பாடி" என்கிறார். கவிக்கோ 'வானம் பாடி' அல்ல. அவர் 'வாணியம் பாடி'யார்.

கண்ணதாசன் முதல் கல்வெட்டு வரையிலான முப்பத்தொன்று சிற்றிதழ்களில் நவீனமும் உண்டு. பின்னவீனமும் உண்டு,.கலை கலைக்காக என்பதும் உண்டு. கலை மக்களுக்காக என்பதும் உண்டு. பாகு பாடின்றி சிற்றிதழ் என்னும் அளவு கோளை வைத்துக் கொண்டு அனைத்துச் சிற்றிதழ்களையும் 'ஒரு பார்வை' பார்த்துள்ளார். சிற்றிதழ்கள் ஒன்றே ஆசிரியரின் குறிக் கோளாக இருந்துள்ளதை அறிய முடிகிறது.

சிற்றிதழ்கள் என்பது பரவலாகவும் வாசகர்களைச் சென்றடையாது. தொடர்ந்தும் வராது. முப்பத்தொன்று சிற்றிதழ்களில் சிலவே தொடர்ந்து வருகின்றன. தொடர்வதில் 'கல்வெட்டுப் பேசுகிறது' தனித்துப் பயணிக்கிறது. தமிழில் சில முதலிதழ்கள் தொடராக வந்த 'யுகமாயினி'யும் நின்று விட்டது. சிற்றிதழ்களுக்குரிய இலக்கணங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது. சிற்றிதழ்களின் வழியாக அக் காலத்தை அறிய முடியும். நவீன் குமார் சிற்றிதழ்களின் காலத்தை அறியச் செய்துள்ளார். கால வரிசைப் படி சிற்றிதழ்கள் குறித்து எழுதி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். சில விரிவாக உள்ளன. சில சுருக்கமாக உள்ளன.சில அறிந்ததாக இருக்கின்றன. சில அறியாததாக இருக்கின்றன. அறியாததையும் அறியச் செய்துள்ளார். சிற்றிதழ்களை ஊக்குவிக்கும் முயற்சியாகவும் உள்ளது.  முதலிதழ்களை முன் வைத்து எழுதப் பட்டாலும் முடிவிதழ்கள் வரையிலும் பேசியுள்ளார். இதழ்கள் சேகரிப்பு பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதுடன் இதழ்கள் பற்றிய பதிவு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நவீன் குமார் பாராட்டுக்குரியவர். அவரின் முயற்சித் தொடர வேண்டும். அதற்காக சிற்றிதழ்கள் உதவ வேண்டும்.

Pin It