நான் இந்த முறை சைக்கிளை பற்றி எழுதலாம் என்று நினைக்கின்றேன். என்ன நான் சைக்கிளின் தயாரிப்பு பற்றி எழுதவில்லை. இப்போது ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் மோட்டார் சைக்கிள் நிற்கின்றது. சைக்கிள் என்றால் கடவுள் மாதிரி இருந்த காலமும் ஒன்று இருந்தது. நான் சின்ன பொடியனாய் இருக்கும்போது மாமா வீட்டுக்குள் ஓடும் சைக்கிள் வாங்கி தந்தார். அதே நேரம் பெரியம்மாவின் மகன் பிரகாஷ் அண்ணாவிடமும் ஒரு சின்ன சைக்கிள் இருந்தது. இரண்டு பேரும் தாத்தாவின் அரிசி ஆலையின் நெல் காய போடும் சீமேந்து மேடையில் இரண்டு சைக்கிள்களிலும் ஓடிய நினைவு. பின்னர் இரண்டு பேரும் கொஞ்சம் வளர்த்த பின் எங்கள் சைக்கிள்கள் தம்பிமாருக்கு மாற்றப்பட்டது. மாற்றப்பட்டது என்றால் மாற்றி உறுதி பத்திரமும் வழங்கப்பட்டது என்று கூட சொல்லாம்.

ஏன் என்றால் தம்பிமார் எங்களை அந்த சைக்கிகளில் தொடக்கூட விடவில்லை. அதன் பின் அவர்கள் கூடிய நாட்கள் அந்த சைக்கிளில் ஓடியதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக அந்த சைக்கிள்களில் கூடிய நாட்கள் திருத்த வேலை தாங்களே செய்யத் தொடங்கினார். சில வேளையில் அதன் தாக்கம் தான் இப்போது ஒரு தம்பி கணிணித் துறையிலும், இன்னொருவன் தொழில் நுட்ப துறையிலும் தேர்ச்சிபெற்றவர்களாக விளங்க காரணம் என நினைக்கின்றேன். ஒரு முறை தம்பிமார் அண்ணா வைத்திருந்த சைக்கிளை எனது சைக்கிளில் கயிற்றினால் கட்டி இழுத்துச் சென்றார்கள்.

என்ன விசயம் எனக் கேட்ட போது சைக்கிளின் இஞ்சின் பழுதாய் போய் விட்டதாக கூறினார்கள். நான் நினைக்கின்றேன் செல்வ மாமாவின் லாரி இஞ்சின் பழுதாய் போய் விட்டால் சுவேந்திர மாமாவின் உழவு இயந்திரத்தால் இழுத்து செல்வது வழக்கம். இதனை பார்த்து தான் அவர்கள் அப்படி செய்து இருக்க வேண்டும். சில வருடங்களுக்கு பின் அந்த சைக்கிளில் இரண்டையும் காணவில்லை. அதன் நினைவாய் ஒரு போட்டோ மட்டும்தான் இருக்கு. சாந்தி அக்காவின் பிறந்த நாளுக்கு நானும் அண்ணாவும் சைக்கிளில் இருந்து போட்டோ எடுத்தோம். அதுதான் இப்ப அதுகளுக்கு ஒரு நினைவுச்சின்னம். அந்த போட்டோவை எங்களின் விருப்பத்திற்க்கு எற்றபடி போட்டோ எடுத்த மனோ அண்ணாவிற்க்கு ஒரு ஓ...போடலாம். நீங்களும் ஓ...போடுங்கோ ஏன் இப்படி சொல்லுகின்றேன் என்றால் அந்த சமயத்தில் எடுத்த போட்டோ பெரிய விசயம். பின்னர் நாங்கள் வளர வளர பல சைக்கிள்கள் வீட்டிற்கு வந்து போன ஞாபகம்.

பின்னர் அப்பா ‘’சாளி’’ மோட்டார் சைக்கில் வைத்து இருந்ததாக நினைவு. விடியவேளையில் நான் எழும்பி முதல் வேளையாக ‘’சாளி’’ மோட்டார் சைக்கிளை துடைத்து, பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி எங்கட வீட்டு கேற்றடி மட்டும் ஓடி போட்டு கொண்டு வந்து கொடுத்தால் தான் அப்பா கந்தோருக்கு போவார். அதற்கு அம்மா பேசத் தொடங்கினால் அதற்கு நான் பல கதைகளை கூறுவேன். ‘’இஞ்சின் கீற் பண்ண வேணும் அது தான் மோட்டார் சைக்கிளை ஓட்டி போட்டு கொண்டு வந்தனான்” என்பது அதில் ஒன்று. அதற்கு ‘’வீட்டிலில் பொறுப்பான பையன்’’ என்ற பட்டமும் பெற்றேன். ஆனால் இப்போது அந்த ‘’பட்டம்’’ எனக்கு இருக்கின்றதா என்று தெரியவில்லை. பின்னர் தம்பி சிவம் அண்ணாவின் மோட்டார் சைக்கிளில் ஒட்டி பழகியது இப்போது யாமஹாவிலும் ஓடுகின்றான்.

அண்ணாவும் யாருக்கும் தெரியாமல் ‘’டிரைவிங்’’ பழகி பின்னர் இடம் பெயர்வு நேரம் வீட்டில் இருந்த பொருட்களையும் வீட்டில் நின்ற லொறியை எடுத்து கொண்டு வந்த பின்னர் எங்கள் மாமான்மார்களாளல் “சிறந்த டிரைவர்” என்ற பெயர் பெற்றார். அதன் பின்னர் எல்லோருக்கும் தெரியக் கூடியதாக வாகனம் ஓட்டினார். அதைவிட மகாலிங்கம் தாத்தா தனது பிள்ளைகளிடம் டக்கரை ஓட கொடுக்காமல் அண்ணாவிடமே கொடுத்தார். இப்படி எல்லா உறவுகளும் மோட்டார் சைக்கிள், கார் என ஓடிக்கொண்டு இருந்தார்கள். நான் ஒருநாள் அண்ணாவிடம் எனக்கும் ‘’டிரைவிங்’ பழக்கி விடு என்றேன். ஓம் பழக்கி விடுகின்றேன் என்று சொல்லி, சொல்லி கடைசியில் இப்ப லண்டனில் இருக்கிறான். ஆனால் மோட்டார் சைக்கிள் மட்டும் ஓடுவதற்கு பழக்கி விட்டான். நான் கேட்டது பெரிய வாகனம் ஓட்டுவதற்கு. அதற்கு அவன் கால் வளர வேண்டும் என சொல்லி சொல்லி எமாத்தி போட்டான். எனது தம்பி தன்னுடைய சட்டைப் பையில் இருந்து அடிக்கடி தன்னுடைய டிரைவிங் லைசன்சை எடுத்துக் காட்டும் போது, எனது மனதுக்கு காட்டமாக இருக்கும். ஏன் என்றால் இந்த காலத்தில் வாகனம் ஓட்ட தெரிய விட்டாலும், கணிணி இயக்கத் தெரியா விட்டாலும் மக்கற் இல்லையாம். இதனால் மாமாவிற்க்கு தெரியாமல் போய் டிரைவிங் ஸ்கூலில் சென்று விண்ணப்பம் செய்தபோது அங்கு இருந்தவரால் எனது விண்ணப்பம் திருப்பி தரப்பட்டது.

காரணமாக “நீங்கள் இந்த மாவட்டமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பொலிஸ் பதிவு தேவை” என்றார். இரண்டு வருடத்திற்கு முன் தம்பி ‘’லைசன்ஸ்’’ எடுக்கும் போது ‘’ டிரைவிங்’’ ஸ்கூல்கள் போட்டி போட்டு விண்ணப்பகளை எற்றுக் கொண்டதும் தம்பி தனது இறுதிப் பயிற்சியை தலைநகரில் இருந்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள மாவட்டம் வரை கனரக வாகனத்தை ஓட்டி சென்று சிறந்த டிரைவர் என பெயர் பெற்றான். நான் சைக்கிளில் கதை கூறுவதாக கூறி இப்போது மோட்டார் சைக்கிள், வாகனம் எண்டு வந்திட்டன் மன்னிக்க வேண்டும் எல்லாம் “சின்ன சின்ன ஆசைதான்”. வீட்டிலில் இரண்டு சைக்கில் மட்டும்தான் இருந்தது. அப்பாக்கு ஒரு சைக்கிள் மற்ற சைக்கிள் தங்கைச்சியினுடையது. தம்பி யாமஹாவிற்கு சொந்தக்காரன். அப்பா கந்தோர் என்டு ஓடிக் கொண்டு இருப்பார். தங்கச்சியும் தம்பிக்கு நிகர் சைக்கிள் தரமாட்டாள்.

ஒரு முறை அவளுக்கு தெரியாமல் சைக்கிளை பள்ளத்துக்குள் விட்டு உடைத்து பின்னர் அம்மாவிடம் பேச்சு வாங்கியதுடன் ஒரு வாரமாய் கதைக்கவும் இல்லை. வெறும் சைக்கிளுக்கு கூட எங்கள் ஊரில் அந்தளவுக்கு மதிப்பு நம்பினால் நம்புங்கோ. பின்னர் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்த கடிதம் கொண்டு வந்த பியோன் அருந்தவலிங்கம் அண்ணாவிற்கும் ஒரு ஓ...போடலாம். ஏன் என்றால் நானும் சைக்கிள் வாங்குவன் என்ற கனவை நிஜமாக்கியது அந்த வேலை என்பதற்காக அப்படி சொன்னேன். அப்ப சம்பளம் எவ்வளவு என்று கேட்டாள் சிரிப்பியள். வெறும் 1,500 ரூபாதான். ஆனால் இப்போது நல்ல சம்பளம் எடுக்கின்றேன். அப்போது அந்த நிறுவனம் எனக்கு பிடித்தபடியினாலும், அதனால் எனக்கு பல நன்மையும் கிடைத்தது. நான் விரும்பி சென்ற துறைக்கு அந்த நிறுவனம் ஒரு வழிகாட்டியாகவும் அமைந்தது. மூன்றாவது ஆள் பாவித்த சைக்கிளை 1000 ரூபாவிற்கு வாங்கினேன். பிரேக் இல்லை. காலால் தான் பிரேக் பிடிக்க வேண்டும்.

சீற்றுக்குள் இருக்கும் கம்பி குண்டியில் குத்த குத்த ஓடி வேலைக்கு போவேன். நான் செய்த பாவம் எனக்கு வெளி வேலைதான் தந்தார்கள். இப்போது நான் செய்த வேலையை செய்யும் இன்னுமொருவருக்கு நிறுவனத்தால் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. அது நிறுவனத்தின் வளர்ச்சியாக இருக்கலாம். அல்லது அவன் அதிஸ்கரனாய் இருக்க வேணும். போன கிழமைதான் அப்பா போனில் கதைக்கும் போது சொன்னார் இப்ப புதுசா ஒரு மோட்டார் சைக்கிள் வந்திருக்காம். பழைய மோட்டார் சைக்கிளை விற்று போட்டு புதுசா எடுக்க போறம். தங்கைச்சியும் புதுசா லேடிஸ் மோட்டார் சைக்கிளும் எடுக்க போறளாம். அப்பாவிடம் எனது அன்பான வேண்டுகோள். அந்த சைக்கிளுக்கு அடிக்கடி ஒயில் போட்டு துடைக்க சொல்லுகின்றேன். ஏன் என்டால் அதுவும் இல்லை என்றால் இந்த ராசனுக்கு நடராசாதான்.

- க.தே. தாசன்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It