ஊறவைத்த புண்ணாக்கை
கழனித் தொட்டியில் கரைத்தபடியே
கருவைமுள் ஒடித்துக் கட்டுபவளிடம்
கல்யாணப்பரிசு கதை சொன்னதும்
பத்துரூபாய் தீபாவளி வரிசை
வைக்கவே முறைக்கும் அண்ணனிடமும்
பாசத்தை ஊறவைத்த
பாசமலர் அனுபவங்களும்
பேன்பார்த்தபடியே பேசிக்கொண்ட
வேட்டைக்காரன் கதையும்
வண்ணப்படங்களின் வரலாறு தொடங்கியதும்
நிறங்களின் பெயர் சொல்லக் கற்றதும்
வெல்வெட் ரவிக்கையும்
எம்ப்ராய்டரி சேலையும்
ஆசைக்கனவுகளின் அஸ்திவாரமானதும்
கதாபாத்திரங்களின் பேர்கொண்ட
பிள்ளைகளும்
நாயக நாயகியர் பித்துக்கு
வடிவான பிள்ளைகளும்
அருள்வந்து ஆடியதும்
ஆடு காண ஓடியதும்
எல்லாம் சேர்ந்ததே எம் மங்கையர் வாழ்க்கை
நடவு வயலில் விழும் வசவுக்கு மத்தியில்
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
சரோஜாதேவி துணையிருக்க
உதைக்கும் கணவனை
அடித்துத் திருத்த
என்றாவது எம்சியாரு வருவார்
என்பதே அஞ்சலாட்சியின் நம்பிக்கை
கன்னத்தில் போட்டுக்கொண்டபடி
கந்தன் கருணை பார்க்கும்
பரமு வேலை காரணமாக
முதல் ஆட்டம் போக முடியாவிட்டால்
இரண்டாம் காட்சிக்கு இடையூறு
வரக்கூடாதே என்று
சேர்த்தே வேண்டுவாள்
ரத்தக்கண்ணீர் போலக் கலங்கி
காலில் விழப்போகிற
என்ற வயிறார்ந்த சாபம் முடித்து
சிறுவாட்டில் கொஞ்சம் வீசிக்
கணவனைத் துரத்திய கையோடு
வேடிக்கை பார்த்த தெருவே வியக்கும்படி
மதியக்காட்சிக்கு "மனசு சரியில்லே"
என்றபடி விரையும் மதினிமார் உண்டு
கண்ணாம்பாவை, பானுமதியை
சாவித்திரியை, தேவிகாவை
விஜயாவை விரும்பிய வீதம் குறையாது
நாயகர்களை ரசிக்கவும் பேசவும்
கொண்டிருந்த வழக்கத்தை
எந்த இயம் என்று அறியவுமில்லை
வீடு கேட்கவுமில்லை
- உமா மோகன்