கொஞ்சும்மொழி பேசிபேசிக் குவிந்தஇதழ் முத்தமிட்டு
நெஞ்சாரத் தழுவியந்தத் தளிர்மேனி தனையணைத்து
மிஞ்சிவிடும் தேன்சுவையை மழலையெனக் கொடுத்தவனைக்
கொஞ்சமுமே இரக்கமின்றி கூலிவேலைக்(கு) அனுப்புவதோ?

சோம்பேறி உருக்கொண்டு சுயமானம் இழந்தவனும்
சோமபானம் அருந்திக்கொண்டு சுகவாழ்வு வாழ்பவனும்
ஆறறிவு அற்றோனாய் அடுத்தடுத்துப் பெற்றோனும்
பேருண்டி நிரப்புதற்குப் பிள்ளைகளை வதைக்கின்றான்

எள்ளளவும் முடியாது இனியென்னால் எனக்கூறி
பள்ளிக்குச் செல்பவனைப் பாதியிலே நிறுத்திவிட்டு
வப்பாட்டி வீட்டிற்கு வருமானம் கொடுக்கின்றான்
பட்டாசு செய்வதற்குப் பிள்ளைகளை அனுப்புகின்றான்.

தன்னிகர்த்த தமிழ்தன்னைப் பயிலுகின்ற வேளையிலே
அன்னையவள் மடிதவறி ஆழ்கிணற்றில் வீழ்ந்ததுபோல்
தன்னலமே கொண்டசில தரமற்ற தந்தையரால்
சின்னஇளஞ் சிறுவர்கள் சுமைதூக்கிச் சாகின்றார்.

வேளாண்மை செய்தவனோ வீட்டினிலே முடங்கிவிட்டு
தோளாண்மை அற்றவனாய்த் துரத்துகின்றான் சிறுமகனை
ஆளாகா பருவத்திலே அரைவயிற்றுக் கஞ்சிற்காய்த்
தாளாத துயரத்துடன் தொழிற்சாலை அடைகின்றான்

ஆர்ப்பாட்டம் போராட்டம் அடிதடிகள் செய்யாமல்
யார்குறித்தும் ஒருகேள்வி ஏனென்றும் கேட்காமல்
அடிமைகள் போலிருந்து அயராது உழைக்கின்றார்
விடியாத இருளுக்கு விறகாகிப் போகின்றார்.

சிறுகூலி கொடுத்தாலே சிறுவர்களே முடித்திடுவார்
சீறாமல் சிணுங்காமல் சொல்வதெலாம் செய்திடுவார்
அதனாலே கவலையின்றி சிறுவர்களை ஏய்த்துச்சில
முதலாளி வர்கங்கள் முறையற்றுப் பெருக்கின்றார்

உளமற்ற அரசியலார் ஊர்முழுதும் உலவுவதால்
வளம்மிக்க நாட்டினிலே வறுமைவீதம் உயர்கிறது
இளம்பிஞ்சுக் கரமெல்லாம் இரும்படித்துக் காய்க்கிறது
களப்பலியாய்ச் சிறுவர்களைக் கண்முண்னே சாய்க்கிறது

ஏங்கியழும் பிள்ளைக்கு ஏடுவாங்கப் பணமில்லை
ஆங்குஒரு நடிகனுக்கு ஆறுகோடி தருகின்றான்.
ஓங்குபுகழ் நாட்டினிலே ஓர்பிஞ்சைத் தாங்குதற்கு
ஈங்குஒரு நாதிஇல்லை ஈனர்கட்கோ குறைவில்லை

பிழைப்பதற்கு வழிகோடி பூமியிலே இருந்தாலும்
உழைப்பதற்கு மனமின்றி வெட்டிக்கதை பேசிவரும்
ஊதாரி வாழ்க்கைக்கு உன்பிள்ளை துணைகேட்கும்
நாதியற்ற தந்தையரே நாலுபிள்ளை உனக்கெதற்கு?

குடிகாக்கும் தரமற்றோன் மனைவியான பெண்ணினமே
குடும்பசுமை ஏற்பதற்கு குழந்தையல்ல பலியாடு
படிப்பென்ற செல்வத்தைப் பிள்ளைக்குத் தருவதற்கு
முடியவில்லை யென்றால்நீ மலடியாக இருந்துவிடு!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.