கீற்றில் தேட...

 

கடந்து வந்த காலத்துல

கண்டு வச்ச கனவுகள

உனக்கெனத்தான் தொகுத்து வைச்சேன்

ஒரு உலகத்தையே படைச்சி வைச்சேன்!!!

*

மரங்கள் சூழ நீளுமடி

ஒரு ஒத்தை அடிப் பாதையடி…

அதில் நீயும் நானும் நடக்கையிலே

சிரித்தே வழி ஒதுங்குமடி கான மயில் கூட்டமடி!!!

*

மாலை நேரம் வந்துப்புட்டா

வயலோரம் தென்றலுந்தேன் வீசுமடி….

உன் பேர மெல்ல சொல்லிப்புட்டா

நாணலுந்தேன் கொஞ்சம் நாணுமடி!!!

*

ஊரெங்கும் நல்ல சனம் நெறஞ்சிருக்கும்

வாயார நம்மையுந்தேன் வாழ்த்தி இருக்கும்…

அங்கே உறவுக்கும் கணக்கு இருந்ததில்ல

மன நிறைவுக்கும் பஞ்சம் என்றுமில்ல…!!!

*

வண்ண வண்ண பூக்களுந்தேன்

ஊரெங்கும் பூத்திருக்கும்..

பேர் ஒண்ணும் சூடாமலே

சூடாமணி நீ பேர் வைக்கக் காத்திருக்கும்…!!!

*

ஊருப் பொடுசுகளெல்லாம் ஆட்டம் போட

நதி ஒண்ணும் அங்கிருக்கும்…

ஆத்தோரமா ஆலமரம்

நமக்கெனத்தான் காத்திருக்கும்…!!!

*

இன்னும் கனவாயிரம் இருக்குதடி

அதுல எத நான் சொல்வதடி…

மறந்து ஒண்ண விட்டாலும்…

மற்றதெல்லாம் திட்டுமடி!!!

*

அப்படி ஒரு உலகந்தேன்

உனக்காக எண்ணி வச்சேன்…

இராப்பகலா கண்ட கனவத்தேன்

அங்கங்கே விதைச்சி வச்சேன்…!!!

*

என்ன பண்ணி என்னவடி…

கண்ட கனவின்றுக் கலையுதடி…

ஊர விக்கும் ஒருக் கூட்டம்

என் கனவத்தேன் திருடுதடி…!!!

*

விழுது விட்ட ஆலமரம்

விறகாகச் சாய்ந்ததடி…

பேர மட்டும் விட்டுப்புட்டு

ஆறுந்தேன் வறண்டதடி…

*

ஆட்டம் போட்ட பொடுசெல்லாம்

பட்டணந்தேன் போயாச்சி…

பொடுசுகளை எண்ணியே

பெருசுகளும் திண்ணையிலே தல சாச்சாச்சி

*

வயலெல்லாம் காயுதடி

தென்றலையும் காணோமடி…

பேரில்லா பூக்களுந்தேன்

அனாதையா வாடுதடி…

*

கான மயில் கூட்டமெல்லாம்

மரிச்சி போயி நாளாச்சி…

மரம் ஒன்றும் இல்லாம

குயிலைக் கண்டும் நாளாச்சி…!!!

*

முதல போட்ட மொதலாளி

காசத்தான் தேடுறான்…

கனவைத் தொலைச்ச சராசரியோ

வாழ்வைத் தான் தேடுறேன்…

நீ வாழ

நல்ல உலகம் படைக்கத் தான் ஏங்குறேன்!!!

*

மீண்டும் ஆறெல்லாம் ஓடணும்…

தென்றலுந்தேன் வீசணும்…

வாடிப் போன வயலிளெல்லாம்

முப்போகம் விளையணும்..

விழுது விட்ட ஆலமரம்

பல தலைமுற காணணும்…

நீ சூடிக் கொள்ளவே

பல பூக்களும் பூக்கணும்…!!!

*

இம்பூட்டையும் செய்யாம

உன்ன மட்டும் காதலிச்சா…

அவளுக்கேத்த உலகத்துல

அவள வாழ வைக்கலையேன்னு

எம் மனசுந்தேன் என்னக் குத்தும்…

அதுவே தான் தெய்வக் குத்தம்!!!

*

எனவே உனக்காகத்தான் வாழுறேன்…

உசுர கொடுத்து வாடுறேன்…

கனவக் கொல்லும் உலகுக்குள்ள

வேற என்ன செய்ய நானும் புள்ள…!!!