“மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்று ஒன்று இருக்கிறதா?
இது ஜனசக்தி (மக்கள் இணையம்) இணையத்தளத்தில் ச. செல்வகுமார் எழுதி 2022 ஜூலை 27ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை. ஆக, ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்ற சொல்லாட்சியையே கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்குவோர் உளர். அதே போது அண்மைய சில ஆண்டுகளில் இந்தக் கருத்தாக்கம் மீண்டும் மீண்டும் பல தருணங்களில் முன்வைக்கப்பட்டு வருவதை அவர்களாலும் மறுக்க முடியாது.
உலக அளவில் மார்க்சியம் வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருப்பதாகப் பரவலாய்க் கருதப்பட்டுக் கொண்டிருந்த வரை ’மண்ணுக்கேற்ற மார்க்சியம்’ பெரிய அளவில் கவனம் பெறவில்லை. ஆனால் எண்பதுகள்-தொண்ணூறுகளில் (1980-90)சரிவு தொடங்கிய பின் அதற்கு விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதாகக் கருதியவர்களில் சிலர் ’மண்ணுக்கேற்ற மார்க்சியம்’ என்ற கருத்தாக்கத்தின் பால் கவனம் ஈர்த்தார்கள். இந்தக் கருத்தாக்கம் மார்க்சியத்தின் பொருத்தப்பாட்டைத் தொடர்ந்து நிறுவப் பயன்படும் என்று அவர்கள் நம்பினார்கள்.
மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தவர்கள் அனைவருமே அதற்கு ஒரேவிதமான விளக்கம் அளித்ததாகச் சொல்வதற்கில்லை. ஒரு சிலர் தங்களுக்கிருந்த குழப்பத்தை மறைக்க மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற சொல்லாட்சியின் பின்னால் ஒளிந்து கொண்டனர் என்பதும் மெய்தான். மார்க்சியத்துக்குத் தொடர்பற்றவையும் மார்க்சியத்துக்கே மாறானவையுமான சில கருத்துகள் கூட ’மண்ணுக்கேற்ற மார்க்சியமாக’ உலா வரத் தொடங்கின. தேசியத்தின் பெயரால் சர்வதேசியத்தையும் மாந்தநேயத்தையும் மறுதலிக்கும் குறுகிய வெறித்தனங்களும் முன்னுக்கு வந்தன.
யூகோஸ்லாவியாவில் செர்பியப் பேரினப் போர்வெறிக்கு தேசிய சாயம் பூசப்பட்டது. சிங்கள தேசியத்தின் பெயரால் வெளிப்பட்ட பேரினவாதப் போக்குகளுக்கு மார்க்சிய முலாம் பூசப்பட்டத்தைப் பார்த்தோம், பார்த்தும் வருகிறோம். இந்தியத் தேசியத்தின் பெயரால் காசுமீர மக்களின் இயல்பான வாழ்வுரிமைகளை மறுப்பதற்கு ஒருசிலரின் மார்க்சியப் பெயரட்டை தடையாக வருவதில்லை. இதையும் கூட அவர்கள் மண்ணுக்கேற்ற மார்க்சியமாக விளக்கிக் கொள்ளக்கூடும்.
மார்க்சியத்தின் பெயரால் நடப்பவை வெற்றி பெறும் போது மார்க்சியத்துக்கு அந்த வெற்றியின் பெருமையைத் தருவது, தொடர்ந்து தோல்வியடையும் போது அந்தத் தோல்வியின் காரணங்களை மார்க்சியத்தில் தேட மறுப்பது, மார்க்சியமல்லாத கருத்தியல் போக்குகள் என்ன அடைந்திருப்பினும் அவற்றை அறிந்தேற்று அவற்றிலிருந்து கற்க மறுப்பது, மார்க்சியத்தைப் புனித வேதமாக மதித்து அதன் மீதான திறனாய்களை எதிர்கொள்ள மறுப்பது… இவையெல்லாம் மார்க்சியத்தின் பெயரால் உலவி வரும் வறட்டுப் போக்குகள். பார்க்கப் போனால் இவை மார்க்சியத்துக்கு மாறானவை. இந்த வறட்டுப் போக்குகளின் வாடிக்கையாளர்கள் ‘மண்ணுக்கேற்ற மார்க்சியம்’ என்ற பேச்சைக் கேட்டாலே இடியுண்ட நாகம் போல் துடித்துப் போகின்றனர்.
இது என்ன வேளாண்மையா, மண்ணுக்கேற்பப் பயிர் செய்வதற்கு? என்று கேட்கின்றனர். தட்பவெப்ப நிலைக்கேற்ப விளையும் பயிர்களில் ஒன்றாக மார்க்சியத்தைப் பார்க்கக் கூடாது என்கின்றனர். மார்க்சியத்தை மின்சாரக் கண்டுபிடிப்புடன் ஒப்பிட்டுக் காட்டி ஊருக்கொரு மின்சாரம் இருக்க முடியாது என்றால் மண்ணுக்கேற்ற மார்க்சியமும் இருக்க முடியாது என்று எடுத்துக்காட்டுகின்றனர்.
மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கைகள் மாந்தக் குலத்துக்கே பொதுவானவை, அவற்றை மண்ணுக்கேற்ப மாற்ற முடியாது என்று அறுதியிட்டுரைக்கின்றனர். மார்க்சியத்தின் மூன்று உள்ளடக்கக் கூறுகளான பொருண்மிய இயங்கியல் (Materialist Dialectics), அறிவியல் குமுகியம் (Scientific Socialism), மார்க்சியப் பொருளியல் (Marxian Economics) ஆகியவற்றில் எது மண்ணுக்கேற்ப மாறக் கூடியது? என்று அறச் சீற்றத்துடன் கேட்கின்றனர்.
அறியப்பட்ட மார்க்சியத்துக்கும் அறிவார்ந்த மார்க்சியத்துக்குமான வேறுபாடு குறித்து உரிய எச்சரிக்கைகளை மறவாமலே ’மண்ணுக்கேற்ற மார்க்சியம்’ என்ற ஆய்வுக் கருத்தாக்கத்துக்குள்ள வரலாற்று அடிப்படைகளை விளக்குவதே என் நோக்கம்.
”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்பதில் ’மண்’ என்பதை செம்மண், களிமண், கரிசல் மண் என்று புரிந்து கொண்டு பேசுவது மூடத்தனம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. மண் என்பது நாட்டை அல்லது தேசத்தை அழகுறக் குறிப்பிடுவதாகும் என்பதால்தான் ”தாய்மண்” ”மண்ணின் மைந்தர்”, ”மண் மணம்” போன்ற சொல்லாட்சிகள் எல்லா மொழிகளையும் அழகு செய்கின்றன. நாடுகள் அல்லது தேசங்களாகப் புவியுலகம் பிரிந்திருப்பது அல்லது பிரிக்கப்பட்டிருப்பது வரலாற்று வழிப்பட்ட உண்மை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது புறஞ்சார் உண்மை.
மார்க்சியம் உள்ளிட்ட எந்தச் சமூக அறிவியலும் உலகம் நாடுகளாகவும் தேசங்களாகவும் பிரிந்திருப்பதைக் கணக்கில் கொண்டாக வேண்டும். எனவே மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதில் மண் என்ற சொல் நாடு அல்லது தேசத்தைக் குறிக்கும். நாடுகள், தேசங்கள், அரசுகள், குமுகாயங்கள், இனங்கள், அவற்றின் நிலத்தியல் மற்றும் உளத்தியல் எல்லைகள், பண்பாடுகள் பிறந்து வளர்ந்து நிலைபெற்றதற்கு ஒரு வரலாறு உண்டு. இந்த வளர்ச்சிப் போக்கில் மொழிகளுக்குரிய முகன்மைப் பங்கு குறிப்பிடத்தக்கது. மண் என்பது ஈண்டு பூதியல் அல்லது வேதியல் கருத்தாக்கம் அன்று, இந்தச் சமூக-அரசியல் கருத்தாக்கம் இடஞ்சார்ந்தது மட்டுமன்று, காலஞ்சார்ந்ததும் ஆகும்.
இயங்கியல் பொருண்மியத்தின் (Dialectical Materialism) பார்வையில் நேரமும் இடமும் (காலமும் வெளியும்) பருப்பொருளின் இருத்தல் வடிவங்களே. ஒன்று இருக்கிறது என்னும் போதே எங்கே இருக்கிறது? எப்போது இருக்கிறது? என்ற வினாக்களுக்கும் விடை தேடுகிறோம். ஒன்று இருக்கிறது என்றால் ஓரிடத்தில் இருக்கிறது, ஒரு நேரத்தில் இருக்கிறது. ஆக, மண் என்பது நாடு அல்லது தேசத்தை மாறா நிலையில் அல்லாமல், இயங்குநிலையில் குறிப்பதாகும்.
மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பது நாடு அல்லது தேசத்துக்கு ஏற்ற மார்க்சியம் மட்டுமன்று, அந்த நாடு அல்லது தேசத்தின் வளர்ச்சிக் கட்டத்துக்கேற்ற மார்க்சியமும் ஆகும். இதன் பொருள் மார்க்சியத்தின் அடிப்படைக் கூறுகள் நாட்டுக்கேற்பவும் அதன் வளர்ச்சி நிலைக்கேற்பவும் மாறும் என்பதில்லை. அடிப்படைக் கூறுகளோடு மார்க்சியம் முடிந்து போவதில்லை.
ஒவ்வோர் அறிவியல் துறையும் பயன்முறை அறிவியல் என்ற கூறினைக் கொண்டுள்ளன. Theoretical science and applied science – அறிவியலும் பயன்முறை அறிவியலும் போல், theoretical mathematics and applied mathematics – கணிதமும் பயன்முறைக் கணிதமும் போல், கோட்பாட்டு மார்க்சியமும் பயன்முறை மார்க்சியமும் (theoretical Marxism and applied Marxism) உள்ளன. உயிர்த் துடிப்பான சமூக அறிவியல் என்ற முறையில் கோட்பாட்டு மார்க்சியத்தை விடவும் பயன்முறை மார்க்சியமே வளர்ச்சிக்கு அடிப்படை ஆகும். பயன்முறை மார்க்சியமே சமூக மாற்றங்களுக்கும் விடுதலைப் புரட்சிகளுக்கும் வழிகாட்டுவதால் மண்ணுக்கேற்ற மார்க்சியத்துக்குப் பொருள் தரக் கூடியதாகிறது.
பின்னோக்கிச் சென்று பார்ப்பதானால், மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பது மார்க்சியத்தின் தோற்றுவாய்களிலேயே வேர் கொண்ட உண்மையாகும்.
”மார்க்சியம் என்பது மார்க்சின் எண்ணங்களும் அவர் கற்றுத் தந்த பாடங்களும் ஆகிய கருத்தமைப்பு ஆகும்” என்றார் மா இலெனின். ”மாந்தக் குலத்தில் ஆகப் பெரும் முன்னேற்றம் கண்ட மூன்று நாடுகளின் பெயர் விளங்கச் செய்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதன்மையான மூன்று கருத்தியல் ஓட்டங்களாகிய செவ்வியல் ஜெர்மன் மெய்யியல், செவ்வியல் ஆங்கிலேய அரசியற்பொருளியல், பொதுவான பிரெஞ்சு புரட்சிக் கொள்கைகளோடு இணைந்த பிரெஞ்சுக் குமுகியம் (சோசலிசம்) ஆகியவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்து நிறைவாக்கிய பேரறிவாளர் ஆவார் மார்க்ஸ்.”
முன்னேறிய மூன்று நாடுகளான ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு ஆகியவை மூன்று கருத்தியல் ஓட்டங்களைக் குறித்து நின்றன. மெய்யியலுக்கு ஜெர்மனி, பொருளியலுக்கு இங்கிலாந்து, அரசியலுக்கு பிரான்சு! மார்க்சியம் மார்க்ஸ் எங்கெல்ஸ் மனத்தில் வேர்கொள்ளுமுன் அதன் மூன்று உட்கூறுகள் ஐரோப்பிய மண்ணில் மூவேறு தேசங்களில் வேர்கொண்டிருந்தன. கருத்துகளும் இறுதிநோக்கில் சமூகத்தின் விளைபொருளே என்பதால் ஐரோப்பாவில் தேச அரசுககளின் உருவாக்கப் பகைப்புலத்தில்தான் மார்க்சியக் கூறுகளின் மலர்ச்சியை காண வேண்டும். இப்படிக் காணாமல் இரு சுடர்மிகு மூளைகளின் சுரப்பாகவே மார்க்சியத்தைக் காண்பது இயங்கியல் பொருண்மிய (dialectical materialist) நோக்கு ஆகாது. மண்ணுகேற்ற மார்க்சியத்தை மறுப்பவர்கள் இப்படித்தான் அறிந்தோ அறியாமலோ கருத்திய (கருத்துமுதல்வாத) நோக்கில் கால் பாவி நிற்கின்றனர்.
இலெனின் சொல்கிறார்: ”மார்க்சின் கருத்துகள் குறிப்பிடத்தக்க முன்பின்முரணின்மையும் ஓர்மைக்கட்டும் வாய்ந்தவை என்பதை மாற்றாரும் மறுக்க மாட்டார். இந்தக் கருத்துகளின் முழுமொத்தம் உலகின் நாகரிக நாடுகள் அனைத்திலும் தொழிலாளர் வகுப்பு இயக்கத்தின் கோட்பாடும் வேலைத்திட்டமும் என்ற முறையில் புதுமக் காலப் பொருண்மியமும் (modern materialism) புதுமக் கால அறிவியல் குமுகியமும் (modern scientific socialism) ஆகிறது.”
மார்க்சின் கருத்துகளது முழுமை, அதாவது மார்க்சியம் என்பது புதுமக் காலப் பொருண்மியமும் புதுமக் கால அறிவியல் குமுகியமும் ஆகும். அதாவது மார்க்சியத்தின் மெய்யியலும் அரசியலும் ஆகும். இந்த மெய்யியலும் (பொருண்மிய இயங்கியல்) அரசியலும் (அறிவியல் குமுகியம்) உலகில் நாகரிக நாடுகள் அனைத்திலும் தொழிலாளர் வகுப்பு இயக்கத்தின் கோட்பாடும் வேலைத் திட்டமும் ஆகும். (அனைத்து நாடுகளிலும் அன்று, அனைத்து நாகரிக நாடுகளிலும் என்பதைக் குறித்துக் கொள்க). எனவே அவரது பொதுவான உலகக் கண்ணோட்டத்தின் சுருக்கமான உருவரையைத் தந்தாக வேண்டும் என்கிறார் இலெனின். அடுத்து, மார்க்சியத்தின் முதன்மை உள்ளடக்கமாகிய மார்க்சின் பொருளியல் கொள்கையை விளக்கி முன்வைக்க வேண்டும் என்கிறார். இந்தப் பொருளியல் கொள்கை பிரித்தானிய அரசியற்பொருளியலின் இயங்கியல் தொடர்ச்சி என்பதைக் கூறத் தேவையில்லை.
மார்க்சின் கருத்துகள் மற்றவர்களின் கருத்துகளைப் போலவே இடமும் காலமும் சார்ந்து பிறந்தவைதாம். காலம் என்பது அவர் வாழ்ந்த ஊழி (முதலாண்மை அல்லது முதலிய ஊழி); இடம் என்பது அவர் வாழ்ந்த ஐரோப்பா. அடிப்படையில் மார்க்சியத்தின் மூன்று கூறுகள் ஒவ்வொன்றுமே ஐரோப்பாவில், குறிப்பாக முன்னேறிய நாடுகளில், பிறந்தவை. அவை வானிலிருந்து குதித்தவை அல்ல என்பதால் மண்ணிலிருந்து விளைந்தவை. அதாவது அந்தந்த நாட்டின் வரலாற்றிலும் வேர்கொண்டு தழைத்த கருத்தியல் கூறுகளின் இயங்கியல் தொடர்ச்சியாக விளைந்தவை.
காலச் சூழல், களச் சூழல் ஆகியவற்றை இயங்கியலாக இணைத்து ’மண்’ என்ற சொல்லால் குறிக்கின்றோம். மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பது அதன் மூன்று தோற்றுவாய்களிலும் மூன்று உள்ளடக்கக் கூறுகளிலுமே காணக் கிடைக்கிறது.
இந்த மூன்று கூறுகளையும் ஒரே கருத்தமைப்பாக கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் இயங்கியல் முறையில் இணைத்தனர். பொருண்மிய இயங்கியலாகிய ஆய்வு முறைமையைக் கொண்டு இயற்கையிலும் மாந்தக் குமுகத்திலுமான அனைத்து புலப்பாடுகளையும் விளக்க முயன்றனர். இந்த முயற்சிகளில் அவர்கள் முதலிய ஊழியின் எல்லைகளைக் கடந்து பின்னோக்கியும் முன்னோக்கியும் (வரலாற்றைக் கண்டறியவும் போகலாற்றை உய்த்தறியவும்) முயன்றனர். பிரெடெரிக் எங்கெல்சின் ’குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ கார்ல் மார்க்சின் ‘பிரான்சில் உள்நாட்டுப் போர்கள்’ ஆகிய எழுத்துகளை சான்றாகக் குறிப்பிடலாம்.
கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் எல்லாக் காலத்துக்கும் எல்லா நாட்டுக்கும் பொருந்தும் படியான கோட்பாடுகளை வகுத்தளித்து விட்டனர் என்று சில தோழர்கள் மார்க்சியத்தின் மீது காதல் கொண்டு நம்புகின்றனர். ஆகவே மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற கருத்தையே இவர்கள் மறுதலிக்கின்றனர். அது திரிபுவாதம், புரட்டல்வாதம் என்றெல்லாம் சாடுகின்றனர்.
இவர்கள் மார்க்சியத்தை மார்க்சின் சிலை போல் வடித்து வைத்துள்ளனர். உயிரோட்டமான மார்க்சின் சிந்தனைகளைக் காட்டிலும் எழிலான ஹைகேட் கல்லறையே இவர்கள் மனத்துக்கு இதமாக உள்ளது.
மார்க்சின் மாறாக் கோட்பாடுகளுக்கு மேல்… நாட்டுக்கும் நடப்புக்கும் ஏற்ப மாற்றங்கள் தேவையில்லை என்பது உண்மையானால், உருசியாவில் இலெனினும், சீனத்தில் மாவோவும், வியத்நாமில் ஹோ சி மின்னும் என்ன செய்தார்கள்? பாசிசப் பேய் தலைதூக்கிய காலத்தில் டிமிட்ரோவும் கிராம்சியும் என்ன செய்தார்கள்? ஒவ்வொரு தேசத்தின் நிலையையும் காலச் சூழலையும் இனங்கண்டு அறிந்தேற்று அததற்கே உரிய தனித்த நிலமைகளுக்கு ஏற்ப மார்க்சியத்தைப் பொருத்தப்படுத்துதல் என்பதை வறட்டுக் கருத்தினர் எந்திரத்தனமாகப் புரிந்து கொள்கின்றனர்.
மார்க்சின் மூலமுதலைக் கற்று அதன் வழி முதலியத்தின் (முதலாளித்துவத்தின்) இயக்க நெறிகளைப் பயின்று, அவற்றை உருசிய வரலாற்றுக்கும் குமுகப் பொருளியல் அமைப்புக்கும் பொருத்தி மா இலெனின் எழுதிய நூல்: ’உருசியாவில் முதலியத்தின் வளர்ச்சி’. குமுகியத்துக்கு முன்னாலான குடியாட்சியப் புரட்சியின் தன்மையை மார்க்சிய நோக்கில் விளக்கப்படுத்த மாவோ எழுதிய நூல்: ’புதிய குடியாட்சியம்’ (புதிய ஜனநாயகம்). இந்த மார்க்சியப் பேரறிவாளர்கள் இவ்வழியில் கோட்பாட்டு மார்க்சியத்தை பயன்முறை மார்சியமாகப் பயன்படுத்தியதன் மூலம் உண்மையான மண்ணுக்கேற்ற மார்சியத்துக்கு வழிகாட்டியுள்ளனர்.
”அறிவியல் என்பது நாட்டுக்கு நாடு, காலத்துக்குக் காலம் மாறுபடாது; அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக முழுமைக்கும் பயன்படும் படியானவை; மார்க்சியமும் அப்படித்தான்” என்று வறட்டுவாதிகள் வாதிடுகின்றனர். இயற்கை அறிவியலுக்கும் சமூக அறிவியலுக்குமான அடிப்படை வேறுபாட்டை இவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. இயற்கை என்பது முழுக்க முழுக்கவே புறஞ்சார்ந்தது. அதாவது மாந்த முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது. ஏனென்றால் இயற்கை தொடக்கமும் முடிவும் அற்றது. இயற்கை அறிவியலுக்கு அகவை உண்டே தவிர அதன் ஆய்பொருளான இயற்கைக்கு அகவை இல்லை. ஆனால் படிமலர்ச்சிப் போக்கில் இயற்கை உயிராகத் தோன்றிய ஆதிமாந்தர் சற்றொப்ப இருபது இலட்சம் ஆண்டுக் காலம் கல்லைக் கருவியாக்கி அரை விலங்கு நிலையில் வாழ்ந்த பிறகுதான் ஒரு கட்டத்தில் பயிர்த்தொழில் கண்டுபிடிக்கப்பட்ட பின் சமூக உயிராக மாறுகிறார்; சமூக வாழ்க்கை இதிலிருந்துதான் தொடங்குகின்றது. புறஞ்சார் இயற்கை நெறிகளைக் கண்டுபிடித்து ஓரளவுக்கு இயற்கையின் கொடைகளை மாந்தர் தம் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ள இயலும். சமூக அறிவியலில் மாந்த முயற்சியின் பங்கு இதனிலும் மாலப் பெரிது. மாந்த முயற்சியால் இயற்கையில் பாரிய மாற்றங்களைச் செய்ய இயலாது. சமூகத்தில் ஒப்பளவில் குறுகிய காலத்தில் மிகவும் அடிப்படையான மாற்றங்களைச் செய்ய முடியும். அண்மைக் காலத்திய புவி வெப்பமாதலுக்கு முன் உருசியா, சீனம், அமெரிக்கா, இந்தியா… எந்த நாட்டை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நாடுகளின் இயற்கை (மலைகள், காடுகள், ஆறுகள், கடல்கள் போன்றவை) பெரிய அளவுக்கு மாறவில்லை. ஆனால் சமூக நோக்கில் இந்த நாடுகள் வாழ்கையையே புரட்டிப் போடும் முகன்மையான பெருமாற்றங்களைக் கடந்து வந்துள்ளன. கரிம உமிழ்வு, புவி வெப்பமாதல் போன்றவற்றுக்கும் முக்கியமாக சமூக அறிவியல் சார்ந்த தீர்வுகளே தேவைப்படுகின்றன. முதலிய வளர்ச்சிக்கும் தொற்றுநோய்ப் பரவலுக்குமான தொடர்பு உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. முதலியம் பரப்பிய தொற்றுநோய்க்கு குமுகிய மருந்து தேவைப்படுகிறது.
அறியப்பட்ட மார்க்சியம் மண்ணுக்கேற்ற மாற்றங்களை ஏற்க மறுத்துத் தேக்கமுறும் போதே அறிவார்ந்த மார்க்சியம் மண்ணுக்கேற்ற தன்மையில் பன்முகப்பட்டு வளர்ந்து வருகிறது.
எனவே மண்ணுக்கேற்ற தன்மை இயற்கை அறிவியலுக்கு இல்லை என்பதால் சமூக அறிவியலுக்கு இல்லை என்றாகி விடாது. ஒப்பளவில் வெகுநீண்ட காலத்துக்கு இயற்கை அறிவியல் நிலையானது. சமூக அறிவியல் அப்படியில்லை. அது தொடர்ந்து காலத்தையும் இடத்தையும் பொறுத்து மாறிக் கொண்டே இருப்பது. அதாவது மண்ணுக்கேற்ற தன்மை கொண்டது. மார்க்சியமும் சமூக அறிவியலில் ஒரு சிந்தனை மரபு என்ற முறையில் புதியவற்றை உள்வாங்கிச் செழுமைப்படுகிறது. மாற்றத்தை மாறா நெறியாகக் கொண்டிருப்பதால் மாற்றங்களுக்கு இடமளிக்கும் இயங்கியல் நெகிழ்திறன் கொண்டு திகழ்கிறது.
’மார்க்சியத்தின் சர்வதேசிய அடிப்படையை’ச் சொல்லி அதன் பேரில் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை மறுதலிப்பவர்கள் உளர். மார்க்சியத்தின் சர்வதேசிய அடிப்படை என்று இவர்கள் எதைச் சொல்கின்றனர்? மார்க்ஸ் உயிரோடிருந்த காலத்தில் உலகுதழுவிய அளவில்தான் மக்கள் புரட்சி ஏற்படும் என்று நினைத்தாராம்! உலகப் பாட்டாளி வர்க்கம் ஒட்டுமொத்தமாக அணிதிரண்டு முதலாளித்துவ சமூகத்தை வீழ்த்தும் என்று நம்பினாராம்! இதற்கெல்லாம் மார்க்ஸ் அல்லது எங்கெல்சிடமிருந்து இவர்கள் எந்த சான்றும் காட்டுவதில்லை. மேற்கு ஐரோப்பிய அளவில் முதலாளித்துவத்தை வீழ்த்தும் குமுகியப் புரட்சி நடைபெறக் கூடும் என்று மார்க்ஸ் நம்பியது உண்மை. முதலியம் புதுமக் கால வல்லரசியமாக வளர்வதற்கு முந்தைய காலத்தில், அதாவது நிதிமுதல் வல்லாண்மை வளராதிருந்த கட்டத்தில் மேற்கு ஐரோப்பாவில் சமூகப் புரட்சி தனியொரு நாட்டில் நடைபெறும் வாய்ப்பைக் காட்டிலும் ஒரே நேரத்தில் ஒருங்கே பல நாடுகளில் நடந்தேறும் வாய்ப்பு இருப்பதாக மார்க்ஸ் கணித்தார். ஆனால் நூற்றாண்டுத் திருப்பத்தில் நிதிமுதல் ஆளுமையும் வல்லரசியப் போட்டியும் முற்றிய பின் சமச் சீரற்ற வளர்ச்சியின் காரணத்தால் தனியொரு நாட்டில் குமுகியம் வெற்றி பெறும் வாய்ப்பு மலர்ந்திருப்பதாக இலெனின் கணித்தார். நவம்பர் புரட்சி இந்தக் கணிப்பை மெய்யாக்கிற்று.
இரண்டாவதாக வல்லரசுகள் உலக முழுவதையும் பங்கீடும் மறுபங்கீடும் செய்து கொண்டு விட்ட காலத்தில் தேசிய விடுதலை ஆற்றல்கள் பன்னாட்டுப் பாட்டாளிகளின் நேசக் கூட்டாளிகளாக வளர்ந்தன. அயர்லாந்து பிரித்தானியாவிலிருந்து பிரிந்து தனிநாடாவது பற்றி மார்க்ஸ் கொண்டிருந்த நிலைப்பாட்டில் எற்பட்ட மாற்றம் இவ்வகையில் மண்ணுக்கேற்ற மார்க்சிய வளர்ச்சியின் முதல் வித்தாக அமைந்தது எனலாம்.
அடிமைப்பட்ட நாடுகளில் தேசிய இயக்கங்களின் குடியாட்சிய (ஜனநாயக) உள்ளடக்கத்தைப் போற்றுவது குறித்து இலெனின் வழிகாட்டுதலில் மூன்றாம் பொதுமைப் பன்னாட்டுலக அமைப்பு (கம்யூனிஸ்டு அகிலம்) தன் அறிக்கையில் பேசியதன் மூலம் புதிய நிலைமைகளுக்கு மார்க்சியம் தகவமைந்தது. பன்னாட்டளவில் புரட்சிய-குடியாட்சிய (புரட்சிகர ஜனநாயக) ஆற்றல்களின் வளர்ச்சியை அறிந்தேற்றுப் பாட்டாளி வகுப்பு வலுப் பெற மண்ணுக்கேற்ற மார்க்சியம் வழிகாட்டிற்று.
பாட்டாளி வகுப்பின் சர்வதேசியம் என்பது தேசங்களையோ தேசியத்தையோ மறுப்பதன்று. அது தேசியங்களை அறிந்தேற்று (1) அனைத்து தேசங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களின் ஒற்றுமை, (2) அனைத்துத் தேசங்களிடையே நிகர்மை, (3) ஒவ்வொரு தேசத்தின் தன்தீர்வுரிமை (சுய நிர்ணய உரிமை) ஆகிய குறிக்க்கோள்களை வலியுறுத்துகிறது.
சர்வதேசியத்தின் பேரால் தேசங்களையே காணாமலடித்து விடும் வறட்டுவாதிகளின் உலகப் புரட்சிக் கனவுக்கு மார்க்சியத்தில் – சரியாகச் சொன்னால் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தில் – இடமில்லை.
மார்க்சிய மெய்யியலான பொருண்மிய இயங்கியலின் அடிப்படைக் கொள்கைகள் தேச எல்லைகளுக்கு அப்பால் பொருந்தக் கூடியவை என்பதால் மார்க்சியத்தின் அறிவியல் குமுகிய அரசியலை உலக முழுமைக்கும் பொதுவாக்க முயல்வது மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை மறுப்பவர்களின் வறட்டு முயற்சியாகும். மார்க்சியத்தின் அடிப்படை ஆவணங்களில் முதலாவதாகிய பொதுமைக் கட்சி அறிக்கை (Manifesto of the Communist Party) இப்படிச் சொல்கிறது:
“சாறத்தில் இல்லை என்றாலும் வடிவ அளவில் முதலாளர் வகுப்புடன் பாட்டாளி வகுப்பின் போராட்டம் முதலில் ஒரு தேசியப் போராட்டமாகும். ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வகுப்பும் அனைத்துக்கும் முதலாவதாக தன் சொந்த நாட்டு முதலாளர் வகுப்புடன் கணக்குத் தீர்க்கிறது.”
”மேலும் பொதுமையர் (கம்யூனிஸ்டுகள்) நாடுகளையும் தேசிய இனத்தையும் ஒழித்து விட விரும்புவதாகக் கண்டிக்கப்படுகிறது. தொழிலாளர்களிடம் எந்த நாடும் இல்லை. அவர்களிடம் இல்லாததை அவர்களிடமிருந்து நாம் எடுத்துக் கொள்ள முடியாது. பாட்டாளி வகுப்பு அனைத்துக்கும் முதலாவதாக அரசியல் முதன்மை பெற்றாக வேண்டும், தேசத்தின் தலைமை வகுப்பாக உயர வேண்டும், தானே தேசமாக அமைய வேண்டும். அந்த வரைக்கும் அதுவே தேசியத் தன்மை உடையதாகிறது – அந்தச் சொல்லுக்குரிய முதலிய (முதலாளித்துவ) பொருளில் அல்ல என்றாலும்.”
பொதுமைக் கட்சி அறிக்கையின் (கம்யூனிஸ்டு அறிக்கை) அந்தப் புகழ்பெற்ற இறுதி முழக்கம் ”உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்று வறட்டுவாதிகள் நம்பி இதையே மண்ணுக்கேற்ற மார்க்சியத்துக்கு எதிராக நிறுத்துகிறார்கள். பொதுமையறிக்கையின் முத்தாய்ப்பாக மார்க்சும் எங்கெல்சும் எழுப்பிய முழக்கம் சரியாகச் சொன்னால் இதுவன்று என்பதை இவர்கள் அறியவில்லை. பொதுமையறிக்கையின் இறுதியில் அதன் மூல மொழியான ஜெர்மன் மொழியில் இந்த முழக்கம் இப்படி எழுதப்பட்டது: ”Proletarier aller Länder, vereinigt euch!”
ஆங்கிலத்தில்: ”Working Men of All Countries, Unite!”
இது தமிழில் இப்படித்தான் இருக்க வேண்டும்: “அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்!”
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்! என்பது சொற்குற்றம் மட்டுமன்று, பொருட்குற்றமும் ஆகும். தொழிலாளர்கள் அல்லது பாட்டாளிகள் பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருப்பதை அறிந்தேற்று அவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் புரட்சி முழக்கம், நாடுகளை மறைத்து விட்டு உலகத் தொழிலாளர்களாக ஒன்றுபடச் சொல்லும் புரட்டு முழக்கமாக மாற்றப்பட்டது. பிரெடெரிக் எங்கெல்ஸ் ஏற்று ஒப்புதலளித்த முதல் ஆங்கில மொழிபெயர்ப்பில் ”Workers of all countries, unite!” என்றுதான் இருந்தது. தமிழிலும் மலையாளத்திலும் இது “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்” என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டது அதனை வெளியிட்டவர்களின் தேசிய இனப் பார்வையில் இருந்த பழுதினாலா?
ஆம். இந்தியாவில் பொதுமைக் கட்சிகள் இந்தியாவிற்குரிய தனித் தன்மைகளான பல்தேசிய இனத் தன்மையையும் வர்ண சாதிக் கட்டமைப்பையும் பெரும்பாலும் கருத்தில் கொள்வதில்லை. தேசிய இன விடுதலைக்கும் சாதி ஒழிப்புக்குமான போராட்டத்துக்கு மண்ணுக்கேற்ற மார்க்சியம் வழிகாட்டுகிறது என்பதை இவர்கள் காண மறுக்கிறார்கள்.
நம் காலத்தில் அறியப்பட்ட மார்க்சியத்துக்கும் அறிவார்ந்த மார்க்சியத்துக்குமான இடைவெளி வாய்பிளந்து கிடக்கும் முகன்மையான ஒரு துறை சூழலியல் ஆகும். சூழலியல் காப்பின் கோணத்திலிருந்து மார்க்சியத்தின் உயிர்த்துடிப்பைப் பேணிக் காத்து வளர்த்தெடுப்பது மண்ணுக்கேற்ற மார்க்சியமே.
எல்லாத் துறைகளிலும் மண்ணுக்கேற்ற மார்க்சியம் உயிர்த் துடிப்புடனும் பசுமையுடனும் திகழ்கிறது. அதன் கூறுகளை இன்னும் கூடத் தெளிவாக வளர்த்தெடுத்து ஆழ் விரிவாக்கம் செய்ய வேண்டிய கடமை காத்துள்ளது.
- தியாகு