thiruvalluvarபண்பாடு என்பது சமுதாயம் வாழும் முறையாகும். இது தனிமனிதனின் அல்லது ஒரு குழுவினரின் எண்ணங்களாலும் செயல்களாலும் அமைவது. மனிதனின் இத்தகைய வாழ்வியல் முறைகள், சமூக கட்டமைப்பு நாளடைவில் வளர்ந்து செழித்து நின்றது.

இதனைக் கண்டு களித்து மக்களின் மனமும் பெருமிதம் கொண்டது. நல்ல வளர்ச்சி இன்பம் நல்கும் பொருளாகும். இதனையே வள்ளுவரும், 

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மண்ணுயிரக் கெல்லாம் இனிது”

என்பார்.

தன் அறிவை விட தன் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியைக் கண்டு பெற்றோர்கள் இன்பம் கொள்வது இயல்பு. அது போலவே பண்பாட்டிற்கும் பொருந்தும். 

ஆதிகால மனிதர்கள் கற்களைக் கருவியாகப் பயன்படுத்தியும், பண்படாத மனதுடனும், வேட்டையாடித் திரிந்தவையும் நாம் அறிந்தவையே. அதற்கு பின்பே சிறிது சிறிதாக பண்பாட்டு வளர்ச்சி ஏற்பட்டது. 

மனிதன் பண்பாட்டோடு பிறப்பதில்லை. சூழலோடு வாழ அவனைப் பொருத்திக் கொள்ள உதவும் கற்றல் முறையே பண்பாடு என்பார்கள் ஆய்வாளர்கள். நல்ல எண்ணங்களும், பழக்கங்களுமே பண்பாடாக வளர்ச்சி பெற்றன.

அவற்றும் புகழ், ஈகை, வீரம், விருந்தோம்பல், தன்மானம், நட்பு, பொதுநலம் போன்ற பண்புகள் நிறைந்த சில மனித உள்ளங்களால் இவை பண்பாடாக வளர்ச்சிப் பெற்றன.

இத்தகைய நல்ல குணங்களுடனும், பண்புகளுடனும் வாழும் பொழுது எந்த பழியும், இழிவும் இல்லாமல் இன்பமுடனும் மனநிறைவுடனும் வாழ இயலுகிறது இலக்கியம். இதனை,

“எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட்பெறின்"

என்று குறள் விளக்குகிறது. 

பண்பாடுகளில் முதன்மையானதும், மரபு வழியாகத் தொடர்வதும் விருந்தோம்பல் ஆகும். போக்குவரத்து வசதி இல்லாத காலந்தொட்டே பண்டமாற்று முறை நடைபெற்று வருகிறது. போக்குவரத்து வசதி இல்லாத காலங்களில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கால்நடையாகவே செல்ல வேண்டியிருந்தது.

உணவகங்கள் வசதி இல்லாத காலங்களில் உணவிற்கு தாம் செல்லும் ஊர்களையே நம்பி பயணம் செய்தனர். ஆகவே, புதிதாக வருவோர்க்கு பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்ததமையால் விருந்தோம்பும் பண்பு தமிழக இல்லங்களில் உருவாயிற்று.

அறம் கூறும் இலக்கியங்கள் விருந்தோம்பலை ஆற்ற வேண்டியது முதன்மையான இல்லற அறம் என்று உரைக்கின்றன. இதனைப் பின்பற்றியே சங்க காலம் மற்றும் அதற்கு அடுத்த தலைமுறையினரும் வாழ்ந்து வந்துள்ளனர். 

“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு” – குறள்.81

வீட்டில் பொருட்களை சேமிப்பது விருந்தோம்பலுக்காகவே என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அத்தகைய விருந்தோம்பலை அக, முக மகிழ்வுடன் அளிக்க வேண்டும் என்கிறது குறள். 

பண்பாட்டு வளர்ச்சியில் நட்புக்கு சிறப்பிடம் இருந்தது. நட்பு என்பது வாழ்வின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் பற்றுடையப் பாலம் ஆகும். மனித மனத்துக்குள் அன்பும், அமைதியும், ஆறுதலும் தருவது நட்பைக் காட்டிலும் வேறு எதுவுமில்லை. நட்பு மனித பண்பாட்டுடன் கலந்து விட்ட ஒரு வாழ்வியல் நெறியாகும். 

“உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்"

என்கிறது நறுந்தொகை.

உறவுமுறை சொல்பவர்கள் எல்லாம் உறவினர்கள் அல்லர். இன்பத் துன்பங்காலங்களில் நம்மை விட்டு நீங்காதவரே உறவினர். அத்தகைய உறவு நட்பு ஒன்றே.

அன்பு என்பது உறவுப் பெயர் சொல்லும் உறவினரிடமே இருக்கும். மனிதநேயம் என்பது தொடர்பு இல்லாதவரிடமும் ஏற்படுவதாகும். அத்தகைய மனிதநேயம் வளர்வதற்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு ஆகும்.

தனிமனிதனை சமுதாயத்துடன் புகுத்தி பிணைப்பது நட்பு ஆகும். நட்பை போற்றும் போது ஒற்றுமை பெருகும். உறவுகளுக்குள் உண்மையானதும் உன்னதமானதும் நட்பு ஆகும்.

தாய், தந்தை, உடன்பிறப்பு, உடன்பிறக்காத ஒத்த வயதினர், ஆசிரியர் உள்ளிட்ட சமுதாயத்தின் அத்தனை பிரிவினருடனும் நட்பு என்ற தொடர்பு தொடர்கிறது. உலகில் வாழும் உயிரினங்களுள் முதன்மையான உயிர் மனிதன். மனித இனத்தின் பெருமையை,

“மக்கள் தாமே ஆறறிவு உயிர்"

என்கிறது தொல்காப்பியம்.

பிற உயிர்களைக் காட்டிலும் ஆறாவது அறிவை பகுத்தறிவைப் பெற்றவன் மனிதன். அவ்வறிவு மனத்தோடு தொடர்பு கொண்டது என்பதையும் தொல்காப்பியம் மொழிகிறது. 

மனத்தின் வழி இயங்குபவன் மனிதன். மனிதனை மனிதனாக நிலைநிறுத்துவ மனம். மனித நேயம் என்பது நாடு, இனம், மொழி என்ற எல்லைகளை கடந்து நிற்பது.

மனித இனத்தின் பண்பாட்டு வளர்ச்சியோடு பிணைந்து நிற்பது. சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்த மனிதனால் மட்டுமே மனித நேயத்தை போற்ற முடியும். இதனால், ஏற்றத்தாழ்வு நீங்கி ஒற்றுமை பெருகும். ஆற்றல் வளர்ந்து நிற்கும் மனித நேயமே மனிதனின் முதன்மையான பண்பாடு ஆகும். 

பண்பாட்டு வளர்ச்சியில் ஓங்கி நின்ற ஈகை, நட்பு, விருந்தோம்பல், மனிதநேயம், அன்பு ஆகியவற்றை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைப்பது குடும்பம், சமுதாயம் மற்றும் கல்விச் சாலைகள் போன்றவற்றின் கையில் உள்ளது. எடுத்துரைப்பதோடு நிற்காமல் போற்றிப் பாதுகாத்துப் பின்பற்றுவதும் நமது பொறுப்பாகும். 

- இரா.வெங்கட்ராகவன்

Pin It