தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது விடுதலை நிலை. மேல்நிலைச் சாதியினர் கேட்பது ஆதிக்க நிலை. தாழ்த்தப்பட்ட மக்கள் மீறி விடுவார்கள்; அடக்கி வைக்க வேண்டும்; தேர்தல் கூட்டணியாய் சாதியக் கூட்டணி அமைத்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது, அடிமைச் சமூக காலத்தில் போய்ச் சேர்க்கிறது. மேல்நிலைச் சாதியினர் கோருவது இந்த அடிமை நிலை.

அடிமைச் சமூக காலத்தின் பிரபுவாக, “அனைத்துச் சமுதாயத் தலைவர்கள் கூட்டத்தை” நடத்தியுள்ளார் பா.மக. ராமதாஸ். அவரவர் நலன் பேணும் கூட்டம் இதுவானாலும், தமது மேல்நிலையினைக் கூட்டாகப் பேணிக் கொள்ளும் முன் திட்டமிடல் இது. அவரவர் செல்வாக்கான வட்டாரத்தில் அந்தந்த சாதியினர் தேர்தலில் பங்கேற்கும் கூட்டணி என்ற எதிர்பார்ப்பை இது உண்மையாக்கலாம்.

சாதிகளின் தலைமையாக இன்று கட்சிகள் இயங்குகின்றன. இவர்கள் சாதிய சங்கம் என்ற பெயரில் முதலில் தொடங்கினார்கள். சனநாயகத்தின் நடைமுறையாக தேர்தல் தீர்மானிக்கப்பட்டபோது - சாதிச் சங்கங்கள் அறியப்பட்டிருக்கவில்லை. ஆனால் 1960-களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட அளவிலான (ஜில்லா போர்டு) மெம்பர், தலைவர் தேர்தலில் செல்வாக்கும் வளமும் கொண்ட சாதியினர் பதவிக்கு வந்தனர். சட்டமன்றம், நாடாளுமன்றம் என அடுக்கடுக்காய் தேர்தல்கள் வந்தபோது, வாக்குகள் குவிக்க சாதிய அமைப்புக்களின் துணை நாடின அரசியல் கட்சிகள். பிறகு அந்தந்த வட்டாரத்தில் சாதிச் செல்வாக்குடைய கட்சிகளாய் உருவெடுத்தன. பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவரான உ.முத்துராமலிங்கத்தேவர், உசிலம்பட்டி,முதுகுளத்தூர் தொகுதிகளில் நின்று மாற்றி மாற்றி வெற்றி பெற்றார். நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால், சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்வார். இத்தொகுதிகளில் அவரது இனத்தைச் சேர்ந்தவரை நிறுத்தி வெற்றி பெறச் செய்வார். “உ.மு.தேவர் என்றால் உசிலம்பட்டி, முதுகுளத்தூர் தேவர் என்று பொருள்”  என அக் காலத்தில் தி.மு.க தலைவர் சி. என் அண்ணாதுரை கேலி செய்தது பிரசித்தம். சாதியைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு மாறாக சாதி கட்சியைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டது என்ற எதிர்நிலையை இக் கேலி உணர்த்துகிறது.

சாதியைக் காப்பாற்றி வளர்க்கும் தாயாக இன்று கட்சிகள் ஆகியுள்ளன. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்சி. சாதிப்பெயரை வெளிப்படையாக சூடிக் கொள்ளாமல் தி.மு.க, அ.தி.மு.க. பா.ம.க, தே.தி.மு.க, பார்வர்ட் பிளாக் போன்ற பல புனைபெயர்களில் இயங்குகின்றன. தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் தோன்றிய பாரம்பரியம் சாதியமாக இல்லாதபோதும் வளர்ச்சிப் போக்கில் அந்தந்த வட்டாரங்களில் சாதியக் கட்சிகளாக முடக்கப்பட்டுள்ளன என்பதை சிந்திப்பில் கொள்ள வேண்டும். ம.தி.மு.க, தே.தி.மு.க, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவைகளில் எந்த சாதி உறுப்பினர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதை வைத்துக் கணிக்க வேண்டும். பா.ம.க, வன்னியர் சங்கமாகத் தொடங்கி, பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியாக பெயர் மாற்றிக்கொண்டதை நாம் அறிவோம்.

மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தேவர் பேரவை,கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை, கொங்கு வேளாளர் முன்னேற்றக் கழகம், முத்தரையர் கட்சி என இப்போது வெளிப்படையாக கட்சிகள் சாதிகளாக வந்துள்ளன. இந்த முக்காடு நீக்கம், தம்மினும் கீழானவராய் இவர்கள் எண்ணுகிற சாதியினரை முடக்கி, ஒடுக்கி வைப்பதற்காக, தொடர்பயத்தில் வைத்திருப்பதற்காக எழுந்தது.

அதே நேரத்தில் மற்றொரு கேள்வி எழுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கான கட்சிகளை விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், அம்பேத்கார் பேரவை, இமானுவேல் பேரவை என்றெல்லாம் வடிவமைத்துக் கொள்கிறார்களே என்ற கேள்வி அது. எது ஒன்று அடிமை நிலையிலிருந்து விடுபடத் துடிக்கிறதோ, அதனை விடுதலையுணர்வு என்றே நாம் கருதுகிறோம். எவனொருவன் அடிமை நிலையிலிருந்து விடுபடப் போராடுகிறானோ அவன் விடுதலைப் போராளி. அடிமை நுகத்தடியை உடைத்தெறிய முன்னிற்கும் கட்சிகளையும் ஆதிக்க சாதிக் கட்சிகளையும் சமப்படுத்தல் கூடாது. தாழ்த்தப்பட்ட விடுதலை இயக்கங்கள் தேர்தல் அரசியலில் பிரவேசிக்கிறபோது, அதிகாரத்தைக் கைப்பற்றும் அந்த அரசியலுக்கு முண்டும் வேளையில் முரண்கள் நிகழ்கின்றன. அதன்பொருட்டு விடுதலை இயக்கங்கள் நிராகரிக்கப்பட வேண்டியன அல்ல.

நூற்றுக்கு நூறு விழுக்காடு தேர்தல் அரசியலுக்குள் நுழைந்ததினால், ஒடுக்கப்பட்ட சாதியினர் தமக்கான விடுதலையை இயக்கங்களைக் கட்டியெழுப்புவதில் திணறி வருகின்றனர். எதிர்ப்பு அரசியல் என்பதிலிருந்து நழுவி, மேநிலைஅரசியிலான ஆதிக்க சாதிகளின் அரசியலுக்குள் நுழைகின்றனர். தேர்தல் பாதை எனும் வழுக்குப் பாறையில் காலடிகளை உறுதியாகப் பதிக்க முடியாமல் வழுக்கி விழுந்த இயக்கங்கள் உலகமுழுமையும் இன்று சாட்சியமாகியுள்ளன. தலித் விடுதலை என்பது என்பது, ஆதிக்க சாதிகள், ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான முழுமையான எதிர் அரசியல் தான்.

பதிலாக, மேல்நிலை சாதிகள் தங்களுக்கான கட்சிகளை உருவாக்குவதில் வெற்றியடைந்துள்ளனர். தேர்தல் மூலம் பெறும் அதிகாரம் என்பதால் இன்னொரு சாதியை விட தன் சாதி உயர்ந்தது என்ற உளவியலை உருவாக்கி கட்டியெழுப்புதல் எளிதாகச் சாத்தியப்படுகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைச் சேவகம் ஆற்றுவோராக என்றென்றும் இருத்தி வைக்க அனைவரும் ஒன்றிணைவு என்ற கூட்டு உளவியல் இன்று களம் கண்டுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களை ஏதலி நிலையிலேயே வைத்திருக்க அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேசியம், திராவிடம், தமிழ்த் தேசியம் எனும் பலமுகமூடிகள் உண்டு. அடிமட்டத்திலிருப்பவனும் தமிழன்தான், அவனே உண்மைத் தமிழன் என்பதை இவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. என்னதான் இந்தியன் என்று முழங்கினாலும், தமிழன் என்று பிரகடனப்படுத்தினாலும் சாதித் தமிழன், சாதி இந்தியன் மட்டுமே உண்டு என்பதே உண்மை. சாதியாகவே தமிழனிருக்கிறான், இந்தியனும் இருக்கிறான். சாதி கடந்து இந்தியனும் இல்லை, தமிழனும் இல்லை.

90-களில் ஈழத்தமிழர் விடுதலை போர் தீவிரப்பட்டது. அது தமிழ்க் களத்தில் மங்கலாகி நொசிந்து,நொம்லமாகிப் போன தமிழ்த் தேசிய உணர்வை மேலுக்குக் கொண்டு வந்துது (மங்கலாய், பழங்கஞ்சி போல் நொசிவாய், நொம்பலானதற்கு பல காரணங்கள் உண்டு. இருப்பினும் தி.மு.க, அ.தி.மு.க போன்ற திராவிடப் பாரம்பரியங்கள் அதிகார நிலைக்கு வந்தது முக்கிய காரணம்) ஈழப் போராட்டத்தால் தூண்டப்பெற்ற விடுதலையுணர்வோடு இணைவாக, 1965க்குப் பின் கைகழுவி விட்டிருந்த மொழி, இன, பண்பாட்டுப் பற்றைப் புதுப்பித்துக் கொண்டனர். இயக்கங்களை வளர்த்துக் கொள்ள, அதன் பின் தத்தம் இயக்கத்தினுள்ளே இயங்கும் தமிழுணர்வாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள என இரட்டைக் குழல் துப்பாக்கியாய் தமிழ் முழக்கங்கள் இவர்களுக்கு அவசியமாகின. ஈழவிடுதலைக்குக் குரல் தருவது, தமிழினப் பிரச்சனைகளில் தீவிரம் கொள்வது அல்லது அதுபோல் பாவனை செய்வது இவர்களின் அரசியல் செயல்பாடுகளாகின.

அரசியல் ஆதாயத்துக்காக தமிழ் உணர்வுகளைப் பயன்படுத்திக் கொண்டதின் பச்சையான உதாரணம் பாட்டாளி மக்கள் கட்சி. ஈழ விடுதலைக்கு ஆதரவான கூட்டங்களில் முழங்கியவர் கொங்கு வேளாளர் இளைஞர் முன்னேற்றக் கழகத் தலைவர் தனியரசு. சாதிப் பயத்தைக் காட்டியே தி.மு.க, அதிமுக கட்சிகளுடன் மாற்றி மாற்றிக் கூட்டணி வைத்து சாதியை வளர்த்துக் கொண்டார் ராமதாஸ். 2011ல் நடந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது சாதி வலிமையைக் கொண்டே அ.தி.மு க.-வின் அம்மாவுடன் தனியரசு கூட்டுச் சேர முடிந்தது. ஒரு பக்கம் இவர்களுக்குத் தமிழ் தேசிய முகங்கள், உள்முகம் சாதிய முகம். இதயத்துக்குள் ஒட்டிய சாதியை இவர்களும் இவர்கள் போன்றோரும் எடுத்தெறிந்தது இல்லை .

இதற்கு, இவர்களுக்கு முன்னால்ஒரு வரலாற்றுப் பூதம் நின்றது. இதன் முன்னான தமிழகத்தின் மூன்று பத்து ஆண்டுகள் வரலாற்று சாட்சியங்களாய் நின்றன. சாதி, மத, மூட நம்பிக்கைகள் தாண்டிய பகுத்தறிவு இயக்கமாய் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், மொழியுணர்வைப் பயன்படுத்தி மக்களை ஈர்த்தது. அதிகாரத்திற்குள் ஏறும் ஏணியாய் ஆயிற்று. அதிகாரத்திற்குள் போனதும் அதன் பகுத்தறிவுச் செயல்பாடுகள் மட்டுமன்றி, மொழி, இன உணர்வுகளைச் சன்னம் சன்னமாய் களைந்தெறிந்து அம்மணமாய் காட்சியானது. தமிழர்களுக்காகவே உயிர் தரித்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் நிர்வாணத்தில் இன்றும் துளி வெட்கமுமில்லை. 1960ன் பிற்பகுதிகளின் தொடக்கம் தமிழ் உணர்விலிருந்து தி.மு.க வெளியேறிய இந்த மூன்று பத்து ஆண்டுகள் பிற இயக்கங்களுக்கு ஒரு வாய்ப்பாய் மாறின. தி.மு.க வின் ஈர்ப்பினால் உள்நுழைந்த தமிழுணர்வாளர்களை அதே ஈர்ப்பைக் காட்டி அணைத்துக் கொள்ள பிற இயக்கங்களின் சிறகுகள் விரிந்தன. இதன் வழி தன் குஞ்சுகளைத் தன் செட்டைக்குள் அடைத்துவைத்துக் கொள்கிற மூலோபாய தந்திரமும் செயல்முறையாயிற்று. ஆனாலும் தேர்தலை வென்றெடுக்க தமிழுணர்வு முதன்மைச் சக்தியாய் கை கொடுக்கவில்லை. சாதியே முதன்மைச் சக்தி.

“ஞாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்”

(என் தாயும் உன் தாயும் ஒருவரை ஒருவர் அறியார், எனது தந்தையும் உனது தந்தையும் உறவினர்களும் இல்லை) என்ற முந்தைய மூத்த தமிழ்ப் பண்பாட்டையே, நத்தம் சேரி இளவரசன் என்ற மாணவரும், செல்லங்கொட்டாய் திவ்யாவும் வழுவாமல் கடைப்பிடித்தனர். முன்னைத் தமிழர் பண்பாடு என உணர்ந்தததால் அவர்கள் பின்பற்றினார்களில்லை. வாழ்வைப் பாடும் வானம்பாடிகளின் இயல்பான தருணம் அது. பாடத் தொடங்கினார்கள். கற்பு போன்ற தமிழ் ஒழுக்க மதிப்பீடுகளில் உச்சாணிக்கொப்பு உயரத்துக்கு எகிறிய பண்பாட்டுக் காவலர் ராமதாஸ் போன்றவர்களால், காதல் போன்ற இயல்பூக்க உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை. கற்பு, காதல் போன்ற அனைத்து உணர்வு நிலை மதிப்பீடுகளும் சாதிக்குட்பட்டவை. இதன் பொருள் சாதிக்குள் திருமணம், சாதிக்குள் கற்போடு வாழுதல், சாதிக்குள் காதல் செய்தல் என்பன ஆகும். சாதித் தாண்டி ஒரு துளிரும் துளிர்க்கக்கூடாது. சாதி கடந்து ஒருகாடும் பூக்கக் கூடாது.

உட்சூட்சுமம் கொண்டு பேசுவதை எதுக்கெடுத்தாலும் “க்”கன்னா வைத்தே பேசுகிறான்” என்பார்கள். சாதி வரையறைகளிலும் ஒரு ‘க்’ கன்னா வைத்துக் கொள்வது பழக்கமாகவே வருகிறது. உயர்சாதியினருக்கிடையே ஒரு பார்ப்பன‌ரோ, முதலியாரோ, நாயுடுவோ,தேவமாரோ ஒருவருக்கொருவர் காதலிப்பது அவ்வளவு குற்றமில்லை. மணம் செய்து கொள்வதும் பாவமல்ல. ஆனால் இந்த சாதிகளில் தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண்ணோ ஆணோ காதலித்தாலோ மணம் செய்து கொண்டாலோ கம்பைத் தூக்கு,கத்தியைத் தூக்கு என்று சீறி வருவார்கள்.

இத்தனைக்கும் வரலாற்றுப் பூர்வமாக ஆராய்ந்தால் வன்னியரோ, தேவமாரோ ஒப்பீட்டளவில் பார்ப்பன‌ர், அய்யர், ஐயங்கார், பிள்ளைமார், முதலியார், வெள்ளாள கவுண்டர், ரெட்டியார் போன்ற பல உயர்சாதியினருக்கு கீழே இடைநிலையிலுள்ளவர்தாம். இந்த இடைநிலை சாதியினர். இட ஒதுக்கீடுகள் காரணமாய் தம்மை வளர்த்துக் கொண்டனர். மற்றொன்று இவர்கள் எந்த வட்டாரங்களில் பூர்வீகம் கொண்டார்களோ அந்த வட்டாரங்களில் பெரும்பான்மைக் காரணத்தால் .ஆதிக்க சாதி மனப் போக்குடன் உருவெடுத்தனர்.

இவர்கள் இடைநிலை சாதியனராயினும் ஆதிக்க சாதியினர்தாம். உயர்சாதியினருக்கு இணையாய் தம்மை மேலோராகப் பாவித்துக்கொள்ளும் இந்த உணர்வுதான் சாதிமறுப்பு, வர்க்க மறுப்பு தொடர்பான போராட்டங்களுக்கு எதிரானது. காலம் இப்போது இவர்கள் யார் எனஅறியத் தந்திருக்கிறது

அதிகாரத்துக்குள் நுழைவதற்கு தேர்தல் முதல் நிபந்தனை, தேர்தலுக்குள் நுழைய சாதி முன்நிபந்தனை. ஒவ்வொரு தொகுதியிலும் ஊராட்சிகளின் வார்டுகள் முதல் நகராட்சி, வட்டம் வரை சட்டமன்றம், நாடாளுமன்றம் என பெரும்பான்மை சாதியின் வேட்பாளர் நிறுத்தப்படுவார். அல்லது அடுத்த நிலைப் பெரும்பான்மை சாதியினர் சார்பில் அதுவும் கூட்டணி உறவில் வெற்றி பெருகிறார்கள். இயக்கக் கோட்பாட்டளவில் வீரியமிக்க வட்டாரத் தலைமைகள் உருவாவதற்குப் பதில் வட்டாரத்தின் சாதியத் தலைமைகள் ஒவ்வொரு இயக்கத்தினுள்ளும் பிறந்து வந்தனர். கிராமம் முதல் தலைநகர் வரை சாதித் தலைமைகள் கட்டியமைக்கப்பட்டது இப்படித்தான்.

1956ல் ஈரோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் சார்பில் கே.ரமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தொகுதியின் பெரும்பான்மை சாதியைச் சாராத ஒருவர் வெற்றிபெற சாத்தியமானது. இன்று அவ்வாறான காட்சியை ஒரு இடத்திலேனும் காணமுடியுமா? ஏன் பொதுவுடமைக் கட்சியினர் கூட (இடது,வலது) இன்று சாதியற்ற தேர்தல் பாதையில் இல்லை. இதுபோன்ற சில வெற்றிகளை அலைவீசிய 1967ல் தி.மு.க பெற்றது. 1967ன் நடைமுறையே அதன் பின்னான அடுத்தடுத்த தேர்தல்களில் உரிமை கொள்ள அவர்களாலும் இயலவில்லை.

காமராசர், உ.முத்துராமலிங்கம், சி.என் அண்ணாத்துரை, அனந்தநாயகி (காங்கிரஸ்) ராமசாமி படையாச்சி போன்றோர் அவரவர் சாதிப்பெரும்பான்மையுள்ள தொகுதிகளில் தொடர்ந்து வெற்றி கண்டனர். (எம்.ஜி.ஆர் போல் ‘எந்தத் தொகுதியில் நின்றாலும் வெற்றி’ என்ற ஆனந்தக் களிப்பு ஒன்றிரண்டு விதி விலக்காக இருக்க முடிந்தது. இதற்கும் திரையுலகக் கவர்ச்சி போன்ற பல காரணங்கள்).

தமிழ்ச் சமூகம் சாதிகளால் ஆனது. புனைவுகளும் பாரம்பரியக் கனவுகளும் நமக்கு வேண்டாம். சாதியம் தமிழ் ரத்த ஓட்டத்தின் இயல்பாய் ஆகி எத்தனை நூற்றாண்டுகள் கடந்து விட்டன. ஊட்டச்சத்து கொடுக்கப்பட்டு கொளுத்துப் போய் இன்று குதியாட்டம் போடுகிற சாதியை வேரிலிருந்து தெண்ணி எறிய என்ன செய்யலாம்.?

“தலித் இல்லாமல் விடுதலை இல்லை
தலித் விடுதலை தனியே இல்லை “
என்ற வாசகத்தை பிரகடனமாக்குவதுதான்.

மேற்கத்திய முதலாளிய சமுதாயத்தில் வர்க்க வேறுபாடு அடிப்படை. தமிழ்ச் சமுதாயத்தில் சாதிய வேற்றுமை அடிப்படை . தொழிலாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்து கொள்கிறபோது தனக்குரிய இழிவை மட்டும் நீக்கி விடவில்லை. முதலாளி வர்க்கம் என்ற இழிவையும் நீக்கி விடுகிறது. முதலாளி வர்க்கம் என்ற சொல்லே இல்லாமல் செய்து, மானுடம் என்ற ஒற்றைச் சொல்லால் வர்க்கமற்ற சமுதாயம் என அடையாளப்படுத்திக் கொள்கிறது. இந்த மார்க்சிய அறிவியலை மனு தர்ம சமுதாயத்துக் பொருத்திப் பார்த்து புரட்டிப் போடுவது சாத்தியம்.

இங்கு தலித் இல்லாமல் விடுதலை இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெறுகிறபோது மேல்நிலையிலிருக்கும் சாதிகள் இழிவும் இல்லாமல் போகிறது. தாழ்த்தப்பட்ட சாதி எனும் தனக்குரிய சொல்லை அழிக்கிறபோது மேல்நிலைச் சாதிகள் ஆதிக்க சாதிகள் என்ற சொல்லும் நீக்கப்பட்டுப் போகும் . சமுதாய இழிவின் அடிப்படைச் சக்திகளை விடுதலை செய்யும் போராட்டத்தை அவர்களை முன்னிறுத்தி தொடங்க வேண்டும். அவர்கள் மூலமாக நடத்த வேண்டும், அவர்களுக்காக நடத்த வேண்டும். பிற சாதிகளிலுள்ள அடித்தட்டு மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியை போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

இழிவுபடுத்தப்பட்ட மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து விடக்கூடாது என்பதில் குறியாய் இருக்கிறவர்கள் கூட்டம் சேர்ந்துள்ளார்கள். எந்த அதிகாரத்தைக் கைக்கொண்டால் அடிமை நிலையைத் தொடர முடியுமோ அந்த அதிகாரத்தில் .அமர்வது நோக்கி கூட்டணி அமைத்துவிட்டார்கள். தம் இதயத்துக்குள் வீற்றிருக்கும் சாதியுணர்வை நீக்குவதற்குபதில் தலித் மக்களை அப்புறப்படுத்திவதில் ஒன்றாய் இணைகிறார்கள். இந்த முற்றுகையை முறியடிக்க என்ன செய்யப் போகிறோம்? இப்படியொரு பேராபத்து நம்மைச் சூழ்கிறது என்பதை இப்போதாவது நாம் உணரவேண்டும். ஒற்றுமைப்பட்ட சமரசமற்ற தொடர்போர் ஒன்றைப் மேற்கொண்டாலொழிய, மனிதர்களை மனிதர்களாக காத்தோம் என்ற பெருமிதம் நமக்கு ஏற்படாது போகும்.

இந்திய தேசியக்காரர், திராவிட தேசியத்தார், தமிழ்த் தேசியர் அனைவரும் தமக்குள் குடியமர்த்தியுள்ள சாதியுணர்வைத் தொட்டுப் பார்த்துக் கொள்வது நல்லது. தொட்டுப் பார்க்கையில் இவர்கள் இந்தியர்களா, தமிழர்களா என்ற கேள்விக்கு தெளிவான விடை கிடைத்தவிடுகிறது எனலாம். இந்தியர்களா, தமிழர்களா என்பதின் முன் கீழ வெண்மணி, விழுப்புரம், ஊஞ்சனை, மேலவளவு, திண்ணியம்,பரமக்குடி, தருமபுரி போன்ற நிகழ்வுகளை முன்னிறுத்தி எழுகிறது ஒரு கேள்வி -- இவர்கள் மனிதர்களா என்னும் முக்கியமான கேள்வி.

(நன்றி: உயிர்மை)

- பா.செயப்பிரகாசம்

Pin It