கேரளத்தின் வடக்கில் கடலோர மாவட்டம் கண்ணூர். இம்மாவட்டத்தில் தலைச்சேரி வட்டத்தில் கண்டங்குந்து ஊரின் பகுதியான ஆயித்தரையில் நடுத்தர உழவர் குடும்பத்தில் பிறந்து, 5 அகவையில் வீட்டிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் வயல்வெளியில் நடக்கும் சாகாவுக்கு தன் அம்மாவால் தூக்கிக் கொண்டு போய்விடப்பட்டவர் சுதீஷ் மின்னி.

5 அகவையில் தொடங்கி, கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஆர்.எஸ்.எஸ்.இன் சுதேசி அறிவியல் இயக்கத்தினால் நடத்தப் பெறும் வேத கணிதத்தை 2ஙூ ஆண்டுகள் கற்று, ‘சாணக்கியா’ என்ற தத்துவப் பிரிவில் 7 ஆண்டுகள் ஊழியராகப் பணியாற்றியவர் சுதீஷ் மின்னி. தலைமையிடமான நாக்பூரில் சிறப்புப் பயிற்சிப் பெற்று, ‘பால கோகுலம்’ அமைப்பின் கண்ணூர் மாவட்டத் தலைவராக ஓராண்டும் வடஇந்தியாவில் 2 ஆண்டுகளும் செயல்பட்டவர் சுதீஷ்.

naraga maligaiஆர்.எஸ்.எஸ்.இல் சுதீஷ் மின்னி கண்ட கொடுங் காட்சிகளையும் அடைந்த பட்டறிவையும் எடுத்துரைக்கும் “நரக மாளிகையின் இரகசிய அறைகள்” (நரகத் தின் உள்ளுறுப்புகள்) நூல் மலையாளத்தில் 2015இல் வெளியானது. கே. சதாசிவன் தமிழாக்கிய இந்நூல் “நரக மாளிகை” எனும் தலைப்பில் 2021-இல் வெளியிடப்பட்டது. மலையாளத்தில் வெளியிட்ட 4 மாத காலத்திற்குள் 15000 படிகள் விற்பனையான நூல், ஓர் இலட்சம் படிகளைக் கடந்து விற்பனையாகிக் கொண்டுள்ள நூல்.

தென்மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்.அய்ப் பரப்புவ தற்காக 1965-இல் குமரியில் ‘விவேகானந்தர் மய்யம்’ (கேந்திரம்) என்ற அறக்கட்டளை நிறுவப்பட்டது. மராத்தியப் பார்ப்பனரான ஏக்நாத் ராணடே இதற்கென அனுப்பப்பட்டு திருவனந்தபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டார். அந்த அறக்கட்டளை யால் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதுதான் குமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து அனுப்பப்படும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு அந்த மய்யம் யோகா பயிற்றுவித்துக் கொண்டுள்ளது.

1925இல் நாக்பூரில் கே.பி. எட்கேவர் என்ற பார்ப்பனரால் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டது. இதன் குருவாகக் கருதுப்படுபவர் மராத்தியப் பார்ப்பனரான மாதவ சதாசிவ (எம்.எஸ்.) கோல்வால்கர். செருமனியின் இட்லர், இத்தாலியின் முசோலினி ஆகியோர் சிந்த னைகள்-செயல்களை அடியொற்றி, பண்பாட்டு தேசியம், இந்து நாடு, அகண்ட பாரதம் என்பதை முன்வைத்து கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ்.அய் கட்டமைத்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இராணுவம் போன்ற பயிற்சி களைத் தம் தொண்டர்களுக்கு அளித்து வருகிறது. இராணுவத்தில் எப்படி உயர்நிலை அலுவலர்களைக் கீழ்நிலைகளில் உள்ளவர்கள் கேள்வி கேட்க முடியாதோ அதேபோல் ஆர்.எஸ்.எஸ்.இலும் உயர்நிலைப் பொறுப் பாளர்களைக் கீழ்நிலையில் உள்ளவர்கள் கேள்வி கேட்க முடியாது. மேலே இருந்து வரும் கட்டளை களைக் கீழ்நிலை அமைப்புகள் கேள்வி கேட்காமல் நிறைவேற்றிட வேண்டும்.

இராணுவ அணிவகுப்பைப் பார்வையிட உயர் அதிகாரிகள் வரும்போது மரியாதை வணக்கம் செலுத்து வதைப் போல ஆர்.எஸ்.எஸ். பயிற்சியை மேற்பார் வையிட உயர்நிலைப் பொறுப்பாளர்கள் வரும் போது ‘பிரணாம்’ என்ற சடங்குமுறை மரியாதை வணக்கம் செய்தல் வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்.இல் கிளை, ஊர், வட்டம், மாவட்டம், மாநிலம், மண்டலம், தேசம் என சமற்கிருதப் பெயர் களில் அமைப்புகள் உள்ளன. கருநாடகம், கேரளம், தமிழ்நாடு மூன்றும் ஒரு மண்டலம் (கேந்திரம்). இதுபோல் இந்தியா 10 மண்டலங்களைக் கொண்டது. ஏராளமான சார்பு அமைப்புகளும், துணை அமைப்பு களும் வெவ்வேறு பெயர்களில் இயங்குவதோடு அல்லாமல் அங்கங்கே அறக்கட்டளைகள் பலவும் இயங்குகின்றன.

1956இல் தொடங்கப்பட்ட ‘வித்யாபாரதி’ பள்ளிகள் இந்தியா முழுவதும் நடத்தப்படுகின்றன. கேரளத்தில் இதன் பெயர் ‘வித்யா நிகேதன்’. கேரளத்தில் 5000 இடங்களில் சாகா பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். கேரளத்தில் நடத்தும் 150 வித்யா நிகேதன் பள்ளிகளிலும் சாகா பயிற்சிகள் உண்டு. கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் 7 நாள்கள் சிறப்பு முகாம் ஆங்காங்கே பள்ளி வளாகங்களில் நடத்தப் படுகின்றன. கோடை விடுமுறையில் 25 நாள் முகாம் பல கல்லூரி வளாகங்களில் நடத்தப்படுகின்றன. இவையன்றி சங்க ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்நூலாசிரியர் சுதீஷ் ஆர்.எஸ்.எஸ்.இல் பல நிலைகளில் செயல்பட்டு, மும்பை மய்யத்திலிருந்து போபால், அசாம் முதலான இடங்களுக்குச் சென்று, அங்கு கண்ட காட்சிகளாலும், பார்ப்பன-பனியா உயர்சாதியினரின் ஆதிக்கம் நிறைந்த, சனநாயகமற்ற செயல்பாடுகளாலும் வெறுப்புற்று வெளியேறி, இப்போது சி.பி.எம். கட்சியில் இணைந்து செயல்படுகின்றார். ஆர்.எஸ்.எஸ். பற்றி வெளி உலகம் அறிந்திராத பல காட்சிகளை இந்நூலில் பகிர்ந்துள்ளார்.

இசுலாமியர், கிறித்துவர், பொதுவுடைமையர் ஆகிய 3 பிரிவினரும் இந்துக்களின் எதிரிகள்; அழித் தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். -இந்துக்களுக்கு இடைவிடாது கற்பித்துக் கொண்டுள்ளது. கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். குறிப்பிடும் 3 பிரிவினரும் எண்ணிக்கையில் அதிகம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கேரளத்தில்,

இந்துக்கள் -54.73% (182.82 இலட்சம்)

இசுலாமியர் -26.56% (88.73 இலட்சம்)

கிறித்துவர் -18.38% (61.41 இலட்சம்)

தமிழ்நாட்டில் இந்துக்கள் : 87.58%, இசுலாமியர் : 5.86%, கிறித்துவர் : 6.12%, இந்தியாவில் இந்துக்கள் : 80%, இசுலாமியர் : 14.27%, கிறித்துவர் : 2.3%.

மக்கள் தொகையில் 80 விழுக்காடாக உள்ள இந்துக்களிடம் இந்துக்களுக்கு ஆபத்து; இந்துத்துவத் திற்கு ஆபத்து என்ற பொய்யை இடைவிடாமல் பரப்புவது சங் பரிவார் பரப்புரையின் ஆணிவேர்.

பாதை அல்ல, இலட்சியமே முக்கியம்

திருட்டு, களவு, கொள்ளை, விபச்சாரம், கலவரம் ஏற்படுத்துதல், குண்டுவீச்சு, சொத்துக்களைச் சேதப் படுத்துதல், கொலை செய்தல், எதிரிகளிடம் பேரம் பேசி பணப்பெட்டி பெறல் என எல்லாத் தீயச் செயல்களிலும் ஈடுபடுவது சங்கிகளுக்கு மிக இயல்பானவை என்று பல சான்றுகளுடன் சுதீஷ் கூறியுள்ளார்.

சங்கத்திற்காகச் சாவது பலிதானம்; இறப்பவர் பலிதானி. அப்படி இறந்தவர் மனைவிக்கு சங்கம் மாதந்தோறும் உதவித் தொகை அளிக்கின்றது. உதவித் தொகை அளிக்க அந்த வீட்டிற்குச் செல்லும் ஊழியர் பலிதானியின் மனைவியுடன் தன் காம வேட்கையைத் தீர்த்துக் கொள்வார். பலிதானிகளின் மனைவியரையும் மற்ற பெண்களையும் பணத்திற் காக விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது என பலவற்றை சுதீஷ் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

விசுவ இந்து பரிசத் தலைவர் கொலையுண்ட போது, எதிரிகளுடன் பேரம் பேசி பெட்டி நிறையப் பணம் பெற்று, சங்கத்திற்காகப் பத்தினம் திட்டையில் ‘சபரி’ என்ற பெயரில் பல ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. சசி என்ற காரியவாக் கையில் வெடிகுண்டு கொண்டு வந்தபோது இடறி விழுந்ததில் குண்டு வெடித்து உடல் சிதறி இறந்துவிட்டார். அதை சி.பி.எம்.காரர்கள் கொலை செய்து விட்டதாகத் திறமையாகப் பரப்புரை செய்தது போன்ற சங்கிகளின் செயல்களை அறிய இந்நூலைப் படித்திட வேண்டும்.

வித்யா பூசை, இலட்சுமி பூசை என நடத்தி பக்தி உணர்வூட்டி உருக்கமாகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி மக்களை சங்க ஆதரவாளர்களாக்குவர். குருதட்சிணை என்ற பெயரில் கண்ணூர் ஒரு மாவட்டத்தில் மட்டும் 17 கோடி உருவா திரட்டுவர். அதில் உள்ளூர் செலவுகள் போக மீதியை நாக்பூர் தலைமைக்கு அனுப்பிட வேண்டும். குசராத்தில் குரு தட்சிணையாக மட்டும் உருபா 1000 கோடி வசூலாகும். இந்து விசுவ விபாக் என்ற பெயரில் அயல்நாடுகளில் இயங்கும் சங்க அமைப்புகள் மின்னணு பொருள்களாகவும் பணமாகவும் திரட்டி நாக்பூருக்கு அனுப்புகின்றன. கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் உடைய உலகிலேயே மிகப் பெரிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். ஆகும்.

சங்கத்தில் பலவகைப் பொறுப்புகளில் பல ஆண்டுகள் பணியாற்றுவதற்கோ, சங்கத்தின் மேல் அமைப்புகளிடம் இருந்து வரும் கட்டளைகளுக்கோ, மற்ற நடவடிக்கைகளுக்கோ எந்தப் பதிவும் கிடையாது என்பதே நடைமுறை. கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

பக்கங்கள் : 150 • விலை ரூ.150/­

பரிசல் புத்தக நிலையம்

அரும்பாக்கம், சென்னை - 600 106. தொடர்புக்கு : 9382853646, 8825767500

- சா.குப்பன்

Pin It