உலக மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டி வளர்ந்து வருகிறது. இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியைக் கடந்து நொடிக்கு நொடி வளர்ந்து வருகிறது. இந்தியர் உலக மக்கள் தொகையில் 17.3 விழுக்காட்டினர் ஆவர். உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 விழுக்காடு அளவில்தான் இந்திய நாட்டில் உள்ளது. உலகின் மக்கள் தொகை யில் 19.3 விழுக்காடு மக்கள் சீனத்தில் இருந்தாலும், அதன் நிலப்பரப்பு 7 விழுக்காடு அளவில் உள்ளது. அமெரிக்க நாட்டின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 4.5 விழுக்காட்டு அளவில் இருந்தாலும், உலக நிலப்பரப்பில் 6 விழுக்காடு அளவில் அமெரிக்காவிடம் உள்ளது.

மேற்கூறிய புள்ளிவிவரங்கள் வழியாக மக்கள் தொகை வளர்ச்சியையும் நிலப்பரப்பின் அளவினை யும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாகவும், மக்களுக்குத் தேவையான வளங்கள் சுருங்கி வருவதையும் அறிய முடிகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தைப் பற்றிய விளக்கங்கள், வரையறைகள் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி பல பொருளாதார அறிஞர்களாலும், சமூக இயலாளர்களாலும் முன்மொழியப்பட்டு வருகின்றன.

இந்தியா முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக, கல்லூரி பாடப்புத்தகங்களில் கிறித்தவப் பாதிரியார் மால்தஸ் முன்மொழிந்த மக்கள்தொகைக் கோட்பாட்டு விதியும்(Malthusian Theory of Population) உன்னத மக்கள்தொகை ஆய்வு (Optimum Theory of Population) விதியும் முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தொன்மை அரசியல் பொருளாதார அறிஞர்கள் ” (Classical Political Economists) வரிசைப் பட்டியலில் ஆதம் சுமித், ரிக்கார்டோ ஆகியோருக்கு அடுத்த நிலையில் மால்தஸ் இடம் பெறுகிறார். “மண் பானை யில் எலி இன விருத்தி செய்வது போன்று மனிதன் தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டேயிருக்கிறான் (Man multiplies like a mice in a bond), என்றார் மால்தஸ். உணவு உற்பத்தி உலகில் 1, 2, 3, 4 … எனக் கூட்டல் விகிதத்திலும் (Arithmetic ratio) மக்கள் தொகை பெருக்கமோ 2, 4, 8, 16, 32… எனப் பெருக்கல் எண் விகிதத்திலும் (Geometric ratio) பெருகுகிறது. எனவே, மக்கள் தொகைப் பெருக்கத்திற்கும், உணவு உற்பத்திக்கும் எதிர்மறையான தொடர்பு இருப்பதால், பசி, பட்டினி, பஞ்சம், காலரா போன்ற காரணிகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்று கணித்தார்.

கிருத்துவப் பாதிரியார் என்ற முறையில் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது சிறந்த வழி என்று குறிப்பிட்டார். மால்தஸ் கூறிய கூற்று 19ஆம் நூற் றாண்டிலேயே அய்ரோப்பிய நாடுகளில் பொய்யானது. மற்றொரு கோட்பாடான உன்னத மக்கள் தொகைக் கோட்பாடு (Optimum Theory of Population) நாட்டில் உள்ள பொருளாதாரக் காரணிகள் அடிப்படையில் மக்கள் தொகை பெருகலாம் அல்லது குறையலாம். எனவே மக்கள் தொகைக்கு ஏற்பப் பொருளாதார நிலை வளரும் போக்கு உன்னத அல்லது உத்தம வளர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.

அறிஞர் காரல் மார்க்சு, மக்கள் தொகை வளர்ச்சி யினை அறிவியல் கண்ணோட்டத்தோடு அணுகினார். முதலாளித்துவம்தான் ஏழ்மைக்கும், ஏற்றத் தாழ்விற் கும் காரணம். மக்கள் தொகை அல்ல என்று தரவு களுடன் மெய்ப்பித்துக் காட்டினார். முதலாளித்துவம் தான் மானுடத்திற்குக் கொடுமையைச் செய்கிறது என்றார். இங்கிலாந்தில் மக்கள் தொகை குறைந்து வருவதையும் செல்வக் குவிப்புப் பெருகி வருவதை யும் சுட்டினார்.

“இங்கிலாந்து மக்கள் தொகை சென்ற நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் முழு மொத்தமாக அதிகரித்திருப்பினும் அதனை முந்தைய ஆண்டு களுடன் ஒப்பிடுகையில் இடைவிடாத வீழ்ச்சியுற்று வந்துள்ளது” என்று புள்ளிவிவரங்களுடன் மார்க்சு ஆணித்தரமாகச் சுட்டினார் (மார்க்சு மூலதனம் - தமிழில், பக் 956). 1853-1864 ஆண்டுகளில் வேளாண் துறையில் நிலவுடைமையாளர்களின் கையில் சொத்துக் குவிப்பும், தொழிற் துறையில் மூலதனக் குவிப்பும் (Centralisation சில முதலாளிகள் வசம் ஏராளமான மூலதனம் ஒருமுகக் குவிப்பும் (accumulation) , சிலரிடமே மூலதனம் ஒரு மையத்தில் குவிப்பும் (Concentration) ஏற்பட்டுள்ளன (மூலதனம், பக்.957) என்பதை நுண்மான் நுழைபுலத்துடன் மார்க்சு சுட்டியுள்ளார்.

தொழிலாளர்கள் ஒரு அறையில் குடும்பமாகவும், செல்வந்தர்கள் பல அறைகள் உடைய ஆடம்பரமான இல்லங்களிலும் வாழ்கின்றனர் என்று விளக்கிய மார்க்சு “மனித உயிர்களால் வாழ முற்றிலும் தகுதியற்ற மக்கள் நெருக்கமான குடியிருப்புகள் உடைமையில் இலண்டன் மாநகரம் முதலிடத்திலுள்ளது (மூலதனம்-முதல் தொகுதி-பக்.968). ‘இலண்டன் மாநகரம் குடியிருப்பு நரகம்’ (மூலதனம், முதல் தொகுதி, பக்.975). மால்தஸ் எழுதிய நூல் ஒரு திருட்டுப் புரட்டு என்பதை மார்க்சு வெளிப்படுத்தினார்.

மால்தஸ் எழுதிய நூலான ‘மக்கள் தொகை பற்றிய கட்டுரை’ 1878இல் வெளி வந்தது. மால்தஸ் நூலின் முதல் வடிவம் சிறு பள்ளிப் பிள்ளைத்தன்மை கொண்டது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். டிஃபோ, சர். ஜேம்சு ஸ்டுவர்ட், டென்ஸ் சென்ட், பிராங்கிளின் வாலசு முதலானோரிடமிருந்து இலக்கியத் திருடாக (Plagiarism) உருவாக்கியதே அவரது மக்கள் தொகை பற்றியக் கட்டுரை என்று தரவுகளுடன் மால்தசின் அறிவுத் திருட்டினைப் பேரறிஞர் மார்க்சு வெளிக் கொணர்ந்தார் (மூலதனம் - முதல் தொகுதி - பக்.1034 - குறிப்பு - 5).

இன்றைய பல்கலைக்கழகங்களில் பல ஆய்வாளர்கள் (எம்.எஸ்.சுவாமிநாதன், பாரதரத்னா சி.எஸ்.ஆர்.ராவ் போன்றோர் மீதும் இக்குற்றச்சாட்டு உள்ளது) நமக்கு மால்தஸ் முன்னோடி என்பதை அறிந்து ஆறுதல் அடையலாம். மக்கள் தொகை வளர்ச்சி பற்றி அவர் வெளியிட்டுள்ள கருத்துகளை, இன்றைய இந்திய மக்கள் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை (2011) ஒப்பிட்டு ஆய்ந்தால், அறிஞர் மார்க்சின் கருத்துகள் காலத்தை வென்று நிற்பவை என்பது புலனாகும். குறிப்பாகக் குழந்தை இறப்பு, கருவுற்றத் தாய்மார் களின் இறப்பு, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, கல்வி கற்றலில் பின்தங்கிய நிலைமை, ஊர்ப்புறத்தில், நகர்புறத்தில் வாழும் மக்களின் வறுமை நிலை, பெரு நகரங்களில் வீடு, வருமானம் ஆகிய நிலைகளில் காணப்படும் கொடுமையான ஏற்றத்தாழ்வுகள் ஆகியன இந்தியாவில் காணப்படும் முதலாளித்துவச் சுரண்டலின் உச்சநிலையை எடுத்துக் காட்டுகின்றன.

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அமைப்பு முறை பற்றியும், அதன் புள்ளிவிவரங்கள் பற்றியும் நடுவண் அரசின் கீழ் இயங்கும் பல புள்ளிவிவர அமைப்புகளின் தரவு களையும் மேற்கூறிய கருத்துகளின் அடிப்படையில் ஆய்வது அவசியமாகிறது.

இந்தியத் துணைக்கண்டம் வெள்ளையர் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு கிடந்தபோது, முதன்முதலாக 1871ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கியது. இன்றைக்குத் தனித்தனி நாடாக உள்ள இந்தியா, பர்மா, பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளிலும் இத்தகைய புள்ளிவிவரங்கள் மக்கள் தொகை கணக் கெடுப்பு நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டன.

1871ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் இந்தியத் துணைக் கண்டத் தின் சில பகுதிகளில்தான் தொகுக்கப்பட்டன. 1881ஆம் ஆண்டில் இந்தியத் துணைக்கண்டததில் முழு அளவி லான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப் பட்டது. 1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்புதான் பிரித்தானிய ஆட்சியின் இறுதிக் கணக்கெடுப்புப் பணியாகும்.

1951ஆம் ஆண்டிலிருந்து விடுதலைப் பெற்ற இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 15ஆவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2010ஆம் ஆண்டு தொடங்கப் பட்டு 2011 ஆண்டு முடிவுற்றது. இதற்கான செலவுத் தொகை ரூ.2200 கோடியாகும். 22 இலட்சத்து 77 ஆயிரம் பேர்கள் இந்தப் பணியை மேற்கொண்டனர்.

இந்தி மொழியில்தான் கேள்விப் பட்டியலும், அட்ட வணையும் உருவாக்கப்பட்டு 16 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. 8000 மெட்ரிக் டன் காகிதம் பயன் படுத்தப்பட்டது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை உரிய முறையில் பின்பற்றுவதற்கு முன்பே நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது சாதி வாரியான புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டிருந்தால் மற்றொரு வீண் செலவு தவிர்க்கப்பட்டிருக்கும்.

நடுவண் அரசின் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் போன்றோர் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்களிடம் நேரடியாகச் சென்று திரட்டப்படும் புள்ளிவிவரம் என்பதால், இருக்கின்ற மற்ற புள்ளிவிவரங்களோடு ஒப்பிடுகையில் இந்தப் புள்ளிவிவரம் நம்பகத் தன்மை யானதாகும். பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள், குழந்தை பிறப்பு, இறப்பு, கல்வி, வீடுகளில் உள்ள வாழ்நிலை வசதிகள், நகர்புறம் தொடர்பான விவரங்கள் பட்டியல் இனத்தினர், பழங்குடியினர் எண்ணிக்கை, பல மதங்கள், பல மொழிகள் பற்றிய விவரங்கள், குடிப்பெயர்தல் போன்ற புள்ளிவிவரங்கள் இந்தக் கணக்கெடுப்பில் திரட்டப்பட்டு வருகின்றன. கடந்து வந்த பாதையில் பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட சறுக்கல்கள், தவறுகள் ஆகியவற்றைச் சீர்செய்து எதிர்காலத்திற்கான திட்டங்களைத் தீட்டுவதற்கு இந்தப் புள்ளிவிவரங்கள் பெருமளவில் பயன்படும்.

2011 மக்கள் தொகை 121 கோடியாகும். ஆண்கள் 62 கோடி 37 இலட்சமாகும். பெண்கள் 58 கோடி 64 இலட்சமாகும். மக்கள் தொகையின் ஆண்டு வளர்ச்சி விழுக்காடு 1981-1991ஆம் ஆண்டு களில் 2.3 விழுக்காடாகவும், 1991-2001 ஆண்டுகளில் 2.1 விழுக்காடாகவும், 2001-2011ஆம் ஆண்டுகளில் 1.7 விழுக்காடாகவும் குறைந்து வருவது வரவேற்கக் கூடிய நிகழ்வாகும். சீனாவின் ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி 1.9 விழுக்காடாக உள்ளது.

இந்திய மக்கள் தொகையில் 0-6 வயது வரை குழந்தைகளின் எண்ணிக்கை 15 கோடி 80 லட்சமாகும். உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2 கோடி 90 லட்சம், பீகாரில் ஒரு கோடியே 80 லட்சமும், மராட்டிய மாநிலத்தில் 1 கோடி 20 லட்சமும், மத்தியப்பிரதேசத்தில் 1 கோடி 50 லட்சமும், ராஜஸ்தானில் 1 கோடி 50 ஆயிரம் என 0-6 வயது குழந்தைத் தொகுப்பில் முன்னிலையில் உள்ளன. இந்த வயதுத் தொகுப்பில் உள்ள மொத்த இந்திய குழந்தைகளில் 52 விழுக்காடு குழந்தைகள் மேற்குறிப்பிட்ட 5 மாநிலங்களில் உள்ளனர்.

ஊட்டச்சத்துக் குறைபாடும் வளர்ச்சி பாதிக்கப் பட்ட குழந்தைகளும் அதிக எண்ணிக்கையில் இந்த 5 மாநிலங்களில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒட்டுமொத்த இந்தியக் குழந்தைகளில் 42 விழுக்காடு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் துன்புறுகின்றனர். அய்க்கிய நாடுகள் மன்றத்தின் குழந்தை கள் நிதியம் (UNICEF) தனது அறிக்கையில் ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகள் சகாரா ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் அதிகமாக உள்ளனர். இந்தியாவில் இறக்கும் குழந்தைகளில் 50 விழுக்காட்டினர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் இறக்கின்றனர். 46 விழுக்காட்டினர் போதிய வளர்ச்சி யைப் பெறுவதில்லை.

47 விழுக்காடு குழந்தைகள் குறைந்த எடையுடன் வளர்கின்றனர். 16 விழுக்காடு குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றிப் பயனற்ற குப்பை போல் இருக்கின்றனர். இந்தக் கொடுமை உலகில் எங்கும் காணாத கொடுமையாகும். இந்தப் புள்ளிவிவரங்களைக் கண்ட பிரதமர் மன்மோகன் சிங் இப்படிப்பட்ட நிலைக்காக வெட்கப்படுகிறேன் என்று குறிப்பிட்டார். எதிர்கால மானுட வளர்ச்சியையும், திறமையையும், பொருளாதார வளர்ச்சியையும் சிதைக்கின்ற இந்தப் போக்கினைக் கண்டு எந்தக் கட்சியின் அரசியல் தலைமையும் கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை.

இந்தியாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையும் (121 கோடி) அமெரிக்க, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம், ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டு மக்கள் தொகையம் சமமாக உள்ளன. 1961 ஆம் ஆண்டில் 43 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை இன்று 121 கோடியாக உயர்ந்ததே இதற்குக் காரணமாகும். உத்திரபிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை 20 கோடியாகும். பிரேசில் நாட்டின் மக்கள் தொகையைவிட இது அதிகமாகும்.

உத்திரபிரதேச, மராட்டிய மாநிலங்களின் கூட்டு மக்கள் தொகை 31 கோடியாகும். இது அமெரிக்க நாட்டின் மக்கள் தொகையைவிட அதிகமாகும். அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலப் பட்டியலில் உத்தரப் பிரதேசம் - 20 கோடி, மராட்டியம் - 11 கோடி, பீகார் - 10 கோடி, மேற்கு வங்கம் - 9 கோடி, ஆந்திரம் - 8 கோடி என இடம் பெறுகின்றன. குறைந்த மக்கள் தொகை கொண்ட 5 மாநிலங்கள் நடுவண் அரசின் பகுதிகள் முறையே லட்சத்தீவு - 64 ஆயிரம், டாமன், டையு - 2 லட்சத்து 42 ஆயிரம், டி.என்.வாலி - 3 லட்சத்து 42 ஆயிரம், அந்தமான் நிக்கோபார் தீவுகள் - 3 லட்சத்து 79 ஆயிரம், சிக்கிம் - 6 லட்சம் என அமைந்துள்ளன.

இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் தொகை எண்ணிக்கையில் 74 விழுக்காடாகவும், ஆண்கள் 82 விழுக்காடாகவும், பெண்கள் 65 விழுக்காடாகவும் உள்ளனர். தமிழ்நாட்டின் மக்கள் தொகை (2011) 7 கோடியே 21 லட்சமாகும். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சம், பெண்கள் 3 கோடியே 59 லட்சம். இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு 7ஆவது இடத்தில் உள்ளது. சென்னை 47 லட்சம், காஞ்சிபுரம் 40 லட்சம், வேலூர் 39 லட்சம், திருவள்ளுர் 37 லட்சம் என மக்கள் தொகை அடிப்படையில் முதல் நான்கு மாவட்டங்களாக உள்ளன. எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 80.3 விழுக்காடு உள்ளது. இதில் ஆண்கள் - 86.77 விழுக்காடு, பெண்கள் 73.14 விழுக்காடாக உள்ளனர்.

அதிக கல்வியறிவு பெற்றவர்கள் கொண்ட மாவட்டங்கள் கன்னியாகுமரி - 92.1 விழுக்காடு, சென்னை - 90.3, தூத்துக்குடி 86.5, நீலகிரி - 85.7. குறைந்த அளவு கல்வியறிவு பெற்றவர்கள் உள்ள மாவட்டங்கள் கிருஷ்ணகிரி - 72.4, விழுப்புரம் - 72.1, அரியலூர் - 72.0, தர்மபுரி - 64.0 ஆகும்.

மேற்கூறிய முதன்மையான புள்ளிவிவரங்கள் கல்வி பற்றியதிலிருந்து வாழ்நிலை உட்பட மாநிலங் களுக்கு இடையில், மாவட்டங்களுக்கு இடையில் வேறுபாடுகள் இருப்பதைச் சுட்டுகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், குழந்தை வளர்ச்சி உட்பட எல்லா குறியீடுகளிலும் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது. இதற்குத் தந்தை பெரியாரும், திராவிட இயக்கங்களின் ஆட்சியும், பெருந்தலைவர் காமராசர் கடைப்பிடித்த சமூக, பொருளாதாரக் கொள்கைகளும் தான் காரணம் என்று பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தந்தை பெரியாருக்கும், மக்கள் தொகைக் கணக் கெடுப்பிற்கும் என்ன தொடர்பு என்று மூளை சுளுக்கு நோயால் அவதியுறும் பாஜகவின் எச்.ராஜா போன்ற பிறவி அமாவாசைகள் வினவலாம். 1911-1921 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் சுட்டப்பட்ட பல ஆயிரக்கணக்கான குழந்தை விதவைகள், இளம் விதவைகள் பற்றிய புள்ளிவிவரங்களைக் கண்ணுற்று “என் குரல் கருகுகிறதே” என்று நெஞ்சம் பதைபதைத்த ஒரே தலைவர் பெரியார் ஆவார்.

பெண்கள் விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு, குடும்பக் கட்டுபாடு திட்டம் ஆகியவற்றை இணைத்து தனது பரப்புரையை ஊர் தோறும், நகரந்தோறும் எடுத்துச் சென்றார் பெரியார். மேலும், பெண்களின் திருமண வயதை உயர்த்த வேண்டும், பெண்களைப் பிள்ளைகள் பெற்றும் தரும் இயந்திரமாக மாற்றக் கூடாது. பெண்கள் தங்கள் உடல்நலத்தைப் பேணுவதற்காகக் குழந்தைகள் பெறுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற உயரிய சிந்தனைகளை 1940 களிலேயே வலியுறுத்தினார்.

மக்கள் தொகைக் கோட்பாடு வல்லுநரும், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.சந்திரசேகர், தந்தை பெரியாரைச் சந்தித்துக் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்கு ஆதரவைக் கோரினார். பெண்களிடம் குடும்பக் கட்டுபாட்டுத் திட்டத்தை முதலில் வலி யுறுத்த வேண்டும் எனப் பெரியார் குறிப்பிட்டார்.

அமைச்சர் சந்திரசேகர் அது எப்படி முடியும் என்று கேட்ட போது, “அரசு வேலை வாய்ப்புகளில் 50 விழுக்காடு அளவிற்கு பெண்களுக்கு இடம் அளித்து விட்டால் பிரச்சினைகள் சுலபமாக தீர்ந்துவிடும்” என்றார் பெரியார். இந்த அரிய யோசனையைக் கேட்டு வியந்த சந்திரசேகர், பெரியார் ஒருவர்தான் குடும்பக் கட்டுபாட்டுத் திட்டத்திற்கு ஆக்கப்பூர்வமான அறிவுரையை வழங்கினார் எனப் பாராட்டினார். இந்த உரையாடல் ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டு அகில இந்திய வானொலியில் அவ்வப்போது ஒலி பரப்பப்படுகிறது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, 2001ஆம் ஆண்டில் நடுவண் அரசின் திட்டக்குழுவால் வெளி யிடப்பட்ட முதல் மானுட மேம்பாட்டு அறிக்கையில் பெரியாரின் பணி பாராட்டப்பட்டுள்ளது. ‘அரசியல் செயல்பாடுகள் விரும்பிய திசையில் செல்வதற்கு உந்துதலாகச் சமுதாயச் சீர்த்திருத்த இயக்கம் அமைந்ததும் ஒரு காரணமாகும். சமுதாய விழிப் புணர்வை ஏற்படுத்திய பெரியார் போன்ற தலைவர் கள் மக்களின் செல்வாக்கைப் பெற்று, இருக்கின்ற வளங்களை, வளருகின்ற தேவைக்கேற்ப பயன்படுத்து கிற அளவிற்கு குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு உரிய பொறுப்பு வாய்ந்த பெற்றோர்களை உருவாக்கியுள்ளனர். தமிழ் நாட்டில் மாணவர்கள் வருகைப்பதிவு அதிகரிப்பு, குழந்தை களின் ஊட்டச்சத்து உயர்வு போன்ற காரணங்களால் மாணவர்களிடையே சாதிய ஏற்றத்தாழ்வு குறைந்தது’ என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொழிகள், மதங்கள் வாரியாக எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது திட்டமிட்டே மறைக்கப்படும் செயலாகும். மேலும் மாநில அரசுகளுக்கு நடுவண் அரசு செய்யும் பல அநீதிகளில் மக்கள் தொகையைப் பயன்படுத்தித் தமிழ்நாடு போன்ற வளருகின்ற மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் சதி செயலை பின்வரும் புள்ளிவிவரங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

நிதிக்குழு இந்தியாவில் மாநிலங்களுக்கு மத்திய நிதித்தொகுப்பிலிருந்து நிதியைப் பகிர்ந்து அளிக்கும் போதும், திட்டக்குழு காட்கில் வரையறைப்படி நிதியை மாநிலங்களுக்கு அளிக்கும்போதும், நாடாளுமன்றத் திற்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையை உறுதி செய்யும்போதும் மக்கள் தொகைதான் அடிப்படைக் காரணியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே, மக்கள் தொகையை அதிகமாக பெற்றிருக்கும் வட மாநிலங்கள்தான் நிதிப்பகிர்வில் அதிக தொகையைப் பெற்று வருகின்றன. இந்தநிலை தொடர்ந்தால் இந்திய ஒருமைப்பாட்டிற்கே கேடு ஏற்படும் என்ற காரணத் தினால், நிதிப்பகிர்வுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை கணக்கிடும்போது, 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைப் புள்ளி விவரங்களையே அடிப்படையாக மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், 14வது நிதிக்குழுவின் ஆய்வு வரையறை நான்கில் (Terms of Reference) 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டாலும், 1971ஆண்டிற்குப்பிறகு ஏற்பட்ட மக்கள் தொகை மாறுதல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு நிதிப்பகிர்வை மேற்கொள்வோம் எனக் குறிப் பிட்டிருப்பது, அரசமைப்புச் சட்டத்தையும், கூட்டாட்சி இயலையும் அவமதித்துச் சிறுமைப்படுத்தும் செயலாகும்.

தமிழ்நாட்டைச் சார்ந்த வேட்டிக் கட்டிய தமிழன் நிதி அமைச்சராக இருக்கும்போது இச்செயலை நிதி அமைச்சகம் மேற்கொள்வது குடும்பக் கட்டுப் பாட்டு முறையைக் கடைபிடிக்கும் தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் செயலாகும். நடுவண் அரசின் தேசியச் திருவிளையாடல்களில் இந்தக் கமுக்கமான சதிச் செயலும் ஒன்றோ என்றே தோன்றுகிறது.

மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டினை அடிப் படையாகக் கொண்டு நகர்ப்புற, ஊர்ப்புற நுகர்வு, மக்கள் செய்யும் செலவினை (Consumption Expenditure) எடுத்துக் கொண்டும், வாழ்நிலை காரணிகள் அடிப்படையிலும் இந்தப் புள்ளிவிவரங்கள் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தால் திரட்டப்படுகின்றன. இந்தப் புள்ளிவிவரங்களை ஆய்ந்து பல அறிஞர்கள் வறுமை அளவு குறைந்து இருப்பினும், தற்காலிக வேலைவாய்ப்பு ஏற்றத்தாழ்வுகளோடு பெருகியும், குறைந்தும் வருகின்றன என்று குறிப்பிடுகின்றனர்.

ஊர்ப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்குக் குடிப் பெயர்வோர் எண்ணிக்கை குறித்து பல மக்கள் தொகை ஆய்வாளர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர். வறுமைக் கோட்டிற்கான புள்ளி விவரங்களை நுகர்வோர் செலவின் அடிப்படையில் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (National Sample Survey) 2010ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. நிரந்தர வேலைவாய்ப்பு, ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் குறைந்து வருவதைத்தான் தேசிய மாதிரி ஆய்வு நிறுவன புள்ளி விவரங்கள் பறைசாற்றுகின்றன.

நடுவண் அரசின் தான்தோன்றிப் போக்கினால் புள்ளி விவரங்கள் தொகுப்பது, மேம்படுத்துவது, ஆய்வு செய்வது போன்ற பல நிலைகளில் முரண்பாடுகளும், குறைபாடுகளும், தொய்வுகளும் ஏற்படுகின்றன. இதுவும் நடுவண் அரசின் அதிகாரக் குவிப்பிற்கு ஒரு எடுத்துக் காட்டாகும். நடுவண் அரசின் கீழ் இயங்கி வருகின்ற பல அமைப்புகள், தகுதி வாய்ந்த பயிற்சிபெற்ற புள்ளி விவரம் திரட்டுபவர்களைப் பயன்படுத்துவதில்லை. பல நிறுவனங்களில் பல ஆயிரக்கணக்கான பதவி கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி நடவடிக்கைகள், பண நடவடிக்கைகள், பொது நிதி தொடர்பான புள்ளிவிவரங்களைத் திரட்டித் தொகுத்து வெளியிடுகின்றது. தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் நடுவண் அரசின் பொருளாதாரப் புள்ளியியல் திட்டங்கள் அமுலாக்கத் துறையின் கீழ்ச் செயல்படுகின்றன.

மத்திய அரசின் புள்ளி விவரத் துறையும் (Central Statistical Organization (CSO)) இதே அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றது. இந்தியப் புள்ளிவிவர ஆய்வு மையம் (Indian Statistical Institute) இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை வடி வமைத்த முன்னோடிகளில் ஒருவருமான மகலா நோபிசால் 1931இல் கல்கத்தாவில் உருவாக்கப் பட்டது. நடுவண் அரசு இந்த நிறுவனத்திற்கு முழு நிதி உதவியையும் செய்கிறது. தில்லி, பெங்களுர், சென்னை, தேஜ்பூர் ஆகிய நான்கு இடங்களில் புள்ளி விவரத் துறையில் பட்டப்படிப்பு உட்பட ஆய்வு ஆய்வு பட்டங்களுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

இராணுவத்திற்காகப் பல இலட்சம் கோடிகளில் செலவை மேற்கொள்ளும் நடுவண் அரசு பொருளா தார வளர்ச்சிக்கும் மக்களின் சமூக - பொருளாதார நிலைகளை அறிந்து திட்டங்களை நிறைவேற்று வதற்கும் அடிப்படையாக அமைந்துள்ள புள்ளிவிவரத் துறைகளைப் புறக்கணித்து வருகிறது. இந்தியாவில் உள்ள மாநில அரசுகளின் கீழ் இயங்கும் புள்ளி விவரத் துறைகளை ஒருங்கிணைப்பதற்கும், புள்ளிவிவரத் தர மேம்பாட்டிற்கும் வழிவகுக்கவும் தேசிய புள்ளிவிவர ஆணையத்தை 2005ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சட்டத்தின் வழியாக நடுவண் அரசு உருவாக்கியது.

மாநிலங்கள் அளவில் புள்ளி விவர ஆணையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆணையத்திற்கு இக் கட்டுரை ஆசிரியர் 2007ஆம் ஆண்டு தலைவராக நியமிக்கப்பட்டார். இடஒதுக்கீடு, சமூகநீதிக் கொள்கைகளை நெறிப்படுத்தவும், மாநில அரசு அதிக அளவில் செலவு மேற்கொள்ளும் துறைகளில் உரிய, தரமான புள்ளி விவரங்களைத் திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது. பல நிர்வாகத் தடை களால் இந்த ஆணையத்தின் செயல்பாடு முடக்கப் பட்டது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதல் வேளாண், தொழில், பணித் துறைகளில் இயங்கும் பல்வேறு புள்ளிவிவர அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படாவிட்டால் புள்ளிவிவரங்களே நகைப்புக் குரியதாகிவிடும். நடுவண் அரசின் அதிகாரக் குவிப் பால் நாட்டிற்குத் தேவையான புள்ளி விவரங்கள் திரட்டும் துறையும் செயல்படாமலே முடங்கிக் கிடக்கிறது என்று பல ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.

புள்ளி விவரங்களின் நம்பகத்தன்மையும் கேள்விக் குறியாகி விடுகிறது. அறிஞர் பென்ஜமின் டிஸ்ரலி (Benjamin Disraeli) குறிப்பிட்டது போன்று, “வெறுக்கத் தக்க பொய்கள், பொய்கள், புள்ளிவிவரங்கள்” (There are lies, damned lies and statistics) என்ற நிலைக்குப் புள்ளி விவரங்கள் தொகுக்கும் நடுவண் - மாநில அரசுகளின் அமைப்புகள் தள்ளப்பட்டு விடவும் கூடாது, தாழ்ந்துவிடவும் கூடாது.

Pin It