maposi nehruமொழிவழி மாநிலம் பிறந்த நவம்பர் முதல் நாளை இந்தியாவில் பல மாநிலங்கள் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொழிவழி மாநிலம் பிரிந்த நவம்பர் முதல் நாளுக்குப் பதிலாக ஜூலை 18 அன்று ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் நாடு முழுவதும் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றன.

அவ்வாறு பிரிந்தபோது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் மீண்டும் தமிழகத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் பலர் ஈடுபட்டு உயிர்நீத்தும், சிறை சென்றும் தியாகம் செய்துள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் முதல் நாளை எல்லைப் போராட்ட தியாகிகள் நாளாக தமிழக அரசு அனுசரிக்கிறது.

இது அரசியல்வாதிகளிடமும், தமிழ் உணர்வாளர்களிடமும் முரண்பட்ட விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மொழிவழி மாநிலம் அமைந்த நவம்பர் முதல்நாள் தமிழகப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றப்பட்ட ஜூலை 18 ‘தமிழ்நாடு நாளாக’க் கொண்டாடலாம். தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் எத்தனை நாள் கொண்டாடினாலும் தகும். தமிழ் உணர்வையும், எழுச்சியையும் உருவாக்கும்.

தமிழ்நாடு மொழிவழி மாநிலமாகப் பிரிந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2006ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் இதன் ‘பொன்விழா’ கொண்டாடப்பட்டது. இதுவரை சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏனைய மாநிலங்கள் இந்த நாளை ‘உதய தின’மாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. எனவே தமிழ்நாடும் இதில் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியா பல மொழிகள் பேசும் ஒரு துணைக்கண்டம். ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக தங்கள் மொழி, இன வேறுபாடுகளை மறந்து தேசியத் தலைவர்களை நம்பியே போராடினர். மிதவாதிகள் மகாத்மா காந்தியடிகள் தலைமையிலும், தீவிரவாதிகள் திலகர் தலைமையிலும் போராடினர் இரண்டாம் உலகப்போர் வந்ததும், ஆங்கிலேயர் தங்கள் காலனி நாடுகளை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த போது, மாநிலங்களின் பிரிவினைக்கான குரல்களும் எழுந்தன. தேசம் விடுதலை பெற்றதும் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான கிளர்ச்சிகளும் வெடித்துக் கிளம்பின. முதல் பிரதமர் பண்டித நேரு இதனைத் திசை திருப்பவும், அடக்கவும், அமைதிப்படுத்தவும் கருதி, இந்தியா முழுவதையும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார்.

தட்சிணப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்பனவாகும். இதில் ‘தட்சிணப் பிரதேசம்’ என்பது தமிழ்நாடு, கன்னடம், கேரளா, ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கியதாகும்.

இதனை ராஜாஜி மட்டுமே வரவேற்றார்; பெரியார் கடுமையாக எதிர்த்தார்; அண்ணாவும் கண்டனம் தெரிவித்தார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சியின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டணியமைத்துக் கொண்டு போராடின. நேருவும் வேறு வழியில்லாமல் இத்திட்டத்தினைக் கைவிட நேர்ந்தது.

1953ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு சென்னை மாகாணத்தின் ஓர் அங்கமாகவே விளங்கியது. இந்தப் பலமொழிக் கூட்டில் சிக்கிக் கிடந்தவர்கள், தனியாக ‘விசால ஆந்திரம்’ வேண்டுமெனவும், ‘ஐக்கிய கேரளம்’ வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினர். இதற்காக ஆந்திர மகாசபை, கேரள சமாஜம் என அமைப்புகளை உருவாக்கி கட்சி சார்பின்றி ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தனர்.

இதன் பிறகுதான் காங்கிரஸ் கட்சியிலிருந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் முதன் முதலாக ‘தமிழ் அரசு' அடைய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போது ‘வட வேங்கடம் முதல் குமரி வரையுள்ள தமிழகம்’ அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் தை முதல் நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என விரும்பிய ம.பொ.சி., தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்று அறிக்கையும் வெளியிட்டார்.

1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டமன்றத்தில் மொழிவழி மாநிலப் பிரிவினையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொழிவழி மாநிலப் பிரிவினை பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட ‘தார் குழு’ 1948 செப்டம்பர் 13 அன்று சென்னைக்கு வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

‘தமிழக எல்லை மாநாடு’ தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. 1949இல் சென்னையில் நடத்தினார். மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்து, பதவியைத் துறந்த டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் தலைமை. சென்னை மாநில முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜாவும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். ‘வட வேங்கடம் முதல் தென்கமரி வரையுள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும்’ என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1953 ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். இதன் பிறகு நேருவின் மனம் மாறியது. நாடாளுமன்றத்தில் ‘ஆந்திர மாநிலம்’ அமைவதற்கான வாக்குறுதியை வழங்கினார்.

இருப்பினும், ‘சென்னை யாருக்கு?’ என்ற பிரச்சினை எழுந்தது. ‘தமிழகத்துக்கே உரியது’ என்பதை முடிவு செய்ய அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி, காங்கிரஸ் தலைவர் காமராசர், சென்னை மேயர் செங்கல்வராயன், முன்னாள் மேயர் எம்.இராதாகிருஷ்ணபிள்ளை, தமிழலசு கழகத் தலைவர் ம.பொ.சி. முதலியவர்கள் கடுமையாகப் பாடுபட்டனர். அன்று மத்திய உள்துறையமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியையும், பிரதமர் நேருவையும் சம்மதிக்க வைப்பதற்கும் பெரும்பாடு பட்டனர்.

25-3-1953 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப் பூர்வமான பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். இதில் ஆந்திராவின் தலைநகரம் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார். அதன் பிறகே தமிழகத்தின் கவலைக்குரிய கேள்விக்கு விடைகிடைத்தது. இல்லாவிட்டால் என்றென்றும் தீர்வு காண முடியாத பிரச்சினைகளுள் இதுவும் ஒன்றாகியிருக்கும்.

இந்த மொழிவழி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை தென் எல்லை மீட்புப் போராட்டமும், வட எல்லை மீட்புப் போராட்டமும் வரலாற்றில் இடம்பெற்றவை. தென் எல்லைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டது. இந்த வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாகவே தெற்கு எல்லை ‘கன்னியாகுமரி’யாகவே நீடிக்கிறது. இதில் மார்ஷல் நேசமணியின் பங்கு மிகப் பெரியது.

வட எல்லைப் பாதுகாப்புக்குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. கே.விநாயகம் செயலாளர். மக்களை அணிதிரட்ட உதவியர் மங்கலங்கிழார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சர் ஹெச்.வி.படாஸ்கரை விசாரனைக் குழுத்தலைவராக இந்திய அரசு நியமித்தது.

படாஸ்கர் பரிந்துரைப்படி திருத்தணி தாலூகா முழுவதும் (ஒரே ஒரு கிராமம் நீங்கலாக), சித்தூர் தாலூகாவில் 20 கிராமங்கள், புத்தூர் தாலூகாவில் ஒரு கிராமம் ஆக 322 கிராமங்கள் ஆந்திராவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தமிழகத்துடன் சேர்க்கப்பட்டன. இந்தக் கிராமங்களின் மக்கள் தொகை: 2,39,502 பேர். அதேபோல தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர், பொன்னேரி தாலூகாக்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திராவில் சேர்க்கப்பட்டன.

இந்தப் பெரும் போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தியாக மறவர்கள் ஏராளம். இதன் உச்சகட்டமாக ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி போராடி 1953இல் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்ததையும், 1956 அக்டோபர் 13 அன்று ‘தமிழ்நாடு’ பெயர் கோரி சங்கரலிங்கநாடார் உண்ணாவிரதம் இருந்து உயிர்து றந்ததையும் தவிர்த்திருக்க வேண்டும்.

எனினும் மாநில முதல்வர் பொறுப்பிலிருந்த ராஜாஜி மற்றும் அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர் பங்கு குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னை ஆந்திரர்களின் பிடிவாதமான கோரிக்கையாக இருந்தபோது ராஜாஜி பத்திரிகையாளரிடம் கூறினார். “சென்னைப் பட்டினத்தை ஆந்திரரிடம் தருவது என மத்திய அரசு முடிவு எடுக்குமானால் அதை அமல்படுத்தும் சக்தி எனக்கு இல்லை. இந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்ற பிரமரிடம் கூறிவிட்டேன்...”

பிரதமர் மனம்மாற இதுவும் ஒரு காரணம். அத்துடன் நேருவின் திட்டமான ‘தெட்சிணப் பிரதேச’ அறிவிப்பின்போது தமிழகத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பினை எடுத்துக் கூறி கைவிடச் செய்த பெருமை அப்போதைய முதலமைச்சர் காமராசரையே சேரும். இதற்கெல்லாம் மேலாக எந்தப் பொறுப்பிலும் இல்லாத ம.பொ.சியின் பணியை மறக்க முடியாது.

மக்கள் விரும்பிய மாநிலம் அமைத்ததா? மாநிலப் பிரிவினை குறித்து எல்லா மாநிலங்களுக்கும் மனக்குறைகள் இருக்கின்றன. வட எல்லையான வேங்கடத்தை இழந்தது தமிழகத்திற்கு ஓர் ஊனமாகவே கருதப்படுகிறது. கருநாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள மராட்டியப் பகுதியான பெல்காம் மாவட்டத்தைத் திரும்பப் பெற ‘மாராட்டிய சமிதி’ தொடர்ந்து போராடி வருகிறது. இவ்வாறே இன்னும் ஏராளம் உள்ளன.

இந்தச் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியதுதான். ஆனால் சில அரசியல்வாதிகள் சிக்கல்களுக்குத் தீர்வு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொளளுவதிலேயே கவனமாக இருக்கின்றனர். மத்திய அரசு, எப்போதும் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை; மக்களின் மறதிக்கு மட்டுமே மதிப்பளிக்கிறது.

மொழிவழியான இந்தப் பிரிவினை மாநிலங்களுக்கான பிரிவினையே தவிர மக்களுக்கானது அல்ல. மொழி என்பது பிரச்சினைகளுக்கு முடிவாக இருக்க வேண்டுமே தவிர தொடர்கதையாக இருக்கக் கூடாது. ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கம் மத்திய, மாநில அரசுகளின் இணக்கமாக இருக்க வேண்டும்.

தமிழ் இலக்கியங்களில் தமிழ்நாட்டின் எல்லைகள் பற்றிய குறிப்புகள் எங்கும் காணப்படுகின்றன. செம்மொழித் தமிழின் பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடிய பனம்பாரனார்,

“வடவேங்கம் தென்குமரி ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து”

எனத் தமிழ்நாட்டு எல்லையை வரையறை செய்துள்ளார்.

எனினும் மொழிவழி மாநிலம் பிரிந்தபோது தமிழகப் பகுதிகளில் சில அண்டை மாநிலங்களில் அகப்பட்டுக் கொண்டன. பறிபோன அந்தப் பகுதிகளை மீட்டெடுக்கப் போராட வேண்டிய தமிழ்நாட்டுத் தலைவர்கள், தமிழ்நாட்டையே இரண்டாகவும், மூன்றாகவும் பிரிக்க வேண்டும் என்றும், ‘கொங்கு நாடு’, உருவாக்க வேண்டும் என்று பிரச்சினையைத் திசை திருப்புகின்றனர்.

இந்தியா பல மொழி, பல இனமக்கள் கூடிவாழும் கூட்டாட்சி என்பதை மொழிவழி மாநிலப் பிரிவு உறுதிசெய்கிறது. இதனை மத்தியில் ஆளுவோர் அடிக்கடி மறந்து விடுகின்றனர். இந்தியையும், சமஸ்கிருதத்தையும் மாநிலங்களின் மீது தொடர்ந்து திணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மாநில மொழிகளையும் ஆட்சிமொழி ஆக்க வேண்டும். மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறையை எடுத்துக் கொண்டதுபோல, மாநிலத் தன்னாட்சி அதிகாரங்களை எடுத்துக் கொள்ளும் போக்கை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

உதயை மு.வீரையன்

Pin It