நூலின் உள்ளடக்கம்

கேரள மாநிலத்தின் சமய அடையாளங்களில் புறக்கணிக்க இயலாத ஒன்றாக, பரவலாக அறிமுகமான ஒரு வழிபாட்டு மரபு ஐயப்ப வழிபாடு. இதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் அழுத்தமாக உள்ளது. எந்த சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டிலும் தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களிலும் கிராமப் புறங்களிலும், திசம்பர், சனவரி மாதங்களில் ‘சாமியே சரணம் ஐயப்பா’, சாமி சரணம் ஐயப்ப சரணம்’, ‘சாமியே ஐயப்பா, ஐயப்பா சாமியே' என்ற முழக்கங்களைக் கேட்காதிருக்க முடியாது. அந்த அளவுக்கு மிகவும் பரவலாக அறிமுகமாகியுள்ள ஒரு வழிபாட்டு மரபாக ஐயப்ப வழிபாடு விளங்கிவருகிறது. எந்த மரபிற்கும் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் என்ற மூன்று நிலைகள் உண்டு என்ற நிலையில் ஐயப்ப வழிபாடும் இதற்கு விதிவிலக்கல்ல.

Sabarimalaஇங்கு அறிமுகமாகும் நூல் அளவில் சிறியதுதான். டெம்மி அளவில் 155 பக்கங்களைக் கொண்ட இந்நூல், தலபுராணம், மான்மியம் போன்று ஒரு சமய வழிபாட்டுத் தலத்தின் வரலாறு என்று மதிப்பிட்டுவிட முடியாது. இது ஒரு சமூக வரலாற்று நூலாகும். சமூகவரலாறு எனும்போது அது நிகழ்வுகளைக் காலவரிசையில் தொகுத்துரைக்கும் மரபுசார்ந்த வரலாற்று வரைவில் இருந்து விலகி நிற்பது. இதன் அடிப்படையில் வரலாறு, சமூகவியல், மானுடவியல், பெண்ணியம் என்ற அறிவுத்துறைகளைச் சார்ந்து நின்று சில உண்மைகளை வாசிப்போன் அறியும்படிச் செய்துள்ளது.

ஆனால், இதுமட்டும் இந்நூலின் சிறப்புக் கூறல்ல. ‘கேரளக் கோயில் ஒன்றின் சமூக வரலாறு’ என்று தலைப்பில் குறிப்பிட்டதற்கு ஏற்ப இரண்டாவது பகுதியின் தலைப்பை ‘How Sabarimala Became Sabarimala’ என்று பொருத்தமாகவே அமைத்துள்ளார். ஆனால் இந்நூலாசிரியர் இவற்றுடன் நின்றுவிடாமல் 28-09-2018 இல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் சென்று வழிபடுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும், அதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நிகழ்ந்த அரசியல் இயக்கங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தமது நூலின் முதற்பகுதியை இந் நிகழ்வுகளில் இருந்தே தொடங்கியுள்ளார். இது ஒரு வகையில் அரசியல் சார்ந்த ஒன்று. வரலாற்றின் புனிதம் காப்பதாக நினைப்போர் இதை எதிர்க்கலாம். ஆனால், உண்மையான வரலாற்று வரைவு என்பது அரசியலில் இருந்து விலகி நிற்பதல்ல. அது அரசியல் சார்ந்த ஒன்றுதான். இந்நூலாசிரியரின் சிந்தனைப் போக்கை ஒட்டியதாகவே மீரா வேலாயுதன் இந்நூலுக்கு எழுதியுள்ள அறிமுகவுரையும் அமைந்துள்ளது. இனி நூலின் செய்திகளுக்குள் நுழைவோம்.

தடையும் வழக்கும்:

சபரிமலை ஐயப்பசாமி பிரம்மச்சாரி என்பது தொன்மம் சார்ந்த நம்பிக்கையாகும். அவரை நித்திய பிரம்மச்சாரி என்பர். இதன் அடிப்படையில் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு பத்து வயது முதல் ஐம்பது வயது வரையிலான பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்குத் தடைவிதித்து ஆணை பிறப்பித்திருந்தது.

நம் அரசியல் அமைப்புச்சட்டம் தீண்டாமையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெண்களைத் தீண்டாமைக்கு உட்படுத்தும் என்ற உயர் நீதி மன்றத்தின் வாதத்தை ஏற்கவில்லை. இந் நடைமுறை இந்தியச் சமூகத்திலிருந்து நீக்கப்படவேண்டும் என்று கூறியதுடன் தம் தீர்ப்பில் இது தொடர்பாகப் பின்வரும் விமர்சனங்களையும் முன்வைத்தனர்:

தூய்மையில்லாதவர்கள், தூய்மைக்கேட்டை உருவாக்குபவர்கள் என்ற கருத்து மாதப் பூப்பை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு எதிராக உருவாகியுள்ளது. மாதப்பூப்பு என்பது அவர்களை ஒதுக்கிவைப்பதன் குறியீடாக அமைந்துவிட்டது. இச் செயல் ஒரு வகையான தீண்டாமையாகும். அத்துடன் இச் செயலானது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் தகவுகளுக்கு முரணானது. பெண்களின் கண்ணியத்திற்கும் சமத்துவமான குடியுரிமையை அவர்கள் பெறுவதற்கும் தடையானவற்றை நீக்கி அரசியல்அமைப்புச் சட்டத்தின் மேலாண்மையை நிறுவுவதற்கு நீதிமன்றம் அவர்களுக்குத் துணை நிற்க வேண்டும்.

இத் தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஆட்சியில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி ( L.D.F.)இத்தீர்ப்பிற்கு எதிராக எவ்வகையான மறுசீராய்வு மனுவையும் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் போவதில்லை என்றும் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களுக்கேற்ப சபரிமலையில் வழிபடச் செல்லும் பெண்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்றும் அறிவித்தது.

இரண்டு அணிகள்:

இடதுசாரி ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றிருந்த அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன. எதிரான நிலைப்பாட்டை, பி.ஜே.பி. இந்திய தேசியக் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ்,(M), கேரள காங்கிரஸ் (J) பாரத் தர்ம சேனா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் கேரளக் கிளை என்பன உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டன. இதில் வேடிக்கை என்னவென்றால் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றது. ஆனால், அக்கட்சியின் கேரளக்கிளை தீர்ப்பை எதிர்க்கும் சக்திகளுடன் இணைந்து செயல்பட்டது. இது பெரும்பாலும் மதவாத சக்திகளின் கூட்டாக அமைந்தது. சபரிமலை யாத்திரையில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இவை மேற்கொண்டன. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறைத்து விட்டு சபரிமலை யாத்திரை தொடர்பான பாரம்பரிய மரபுகளுக்கு எதிரானவர் என்று பினராயி விஜயன் மீது குற்றம் சாட்டினர்.சுவரொட்டிகள், வன்முறைச் செயல்கள், வசவுச் சொல் பயன்பாடு, சமூக ஊடகங்கள் வழியான தாக்குதல்கள், என்பனவற்றின் வழி மரபைக் காக்கும் பணியில் ஈடுபட்டனர். தீர்ப்புக்கு ஆதரவான நிலைப்பாடை எடுத்த பெண்கள் தாக்குதலுக்கு ஆளாயினர். வலதுசாரி குழுக்களுக்கு சங் பரிவாரங்கள் தலைமையேற்றன. கேரள பி.ஜே.பி. கட்சியின் மாநிலத் தலைவர் இடது சாரிகளுக்கு எதிரான பொன்னான வாய்ப்பு என்றார்.

2018இல், கனமழை, வீடுகள் இடிந்து விழுதல், நிலச்சரிவு என இயற்கைப் பேரிடரை எதிர்கொண்ட சூழலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான இப் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குக் கேரளம் தள்ளப்பட்டது. மக்கள் துயர்துடைக்கும் பணியை விட மதப்பாரம்பரியம் காப்பதற்கு முன்னுரிமை தர விழைந்தனர். இருப்பினும் பெரும்பாலான மக்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்கள். கனேசன் என்ற வரலாற்றியலாளர், கேரளச் சமுதாயம் கடினமான போராட்டங்களால் ஈட்டிய மனிதநேயச் சாதனைகள் சபரிமலைப் பிரச்சினையால் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டார். பி.ஜே.பி.யும் அதன் கூட்டாளிகளும் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியும் அதன் அணியில்இருந்த சில கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முன்வைத்த ஒரே வாதம் மரபு (பாரம்பரியம்) பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான்.

இதற்கு எதிராக கேரளத்தின் மறுமலர்ச்சிப் பாரம்பரியத்தை இடதுசாரி ஜனநாயக முன்னணி முன்வைத்தது. பெண்களின் உரிமையாகவே இதைப்பார்த்தது. இதன் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாக நின்றது. கேரளத்தின் கடந்த கால வரலாற்றில் நிகழ்ந்த சமூகசீர்திருத்தங்கள், வீரம் செறிந்த சாதி எதிர்ப்புப்போராட்டங்கள் என்பனவற்றின் தொடர்ச்சியாகவே இத்தீர்ப்பை அணுகியது. இதை எதிர்க்கும் இயக்கத்தை எதிர்ப் புரட்சி (Counter revolution) இயக்கம் என்று அடையாளம் காட்டியது. பகுத்தறிவுவாதம், மதச்சார்பின்மை, பாலியல் சமத்துவம் என்பனவற்றில் நம்பிக்கை கொண்ட பலதரப்பினரையும் ஒருங்கிணைத்தது.

வரலாறு படைத்த போராட்டங்கள்:

மன்னராட்சியிலும் காலனிய ஆட்சியிலும், நிலப்பிரபுத்துவ ஆதிக்க சாதியினரால் மரபு காத்தல் என்ற பெயரில் பல்வேறு சமூகங்கள் பொருளாதார-பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு ஆளாயின. தங்கள் மீதான பொருளாதார, பண்பாட்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தின.

சமூக சீர்திருத்தம், சாதிய மேலாண்மை எதிர்ப்பு, சமத்துவச் சிந்தனை, பெண்ணுரிமை என்பன இப்போராட்டங்களில் மையம் கொண்டிருந்தன.

* 1813-1859 காலகட்டத்தில் நாடார் சமூகத்தினர் தம் சமூகப் பெண்கள் மேலாடை அணியும் உரிமைப் போராட்டத்தை நடத்தி வெற்றிபெற்றனர். திருவாங்கூர் மன்னராட்சி ஆவணங்கள் இதை சாதி அடையாளத்திற்குள் உட்படுத்தி 'சாணார் லகளை’ (ரகளை’)என்று பதிவு செய்துள்ளன.

* புலையர்கள் வில்லு வண்டியில் பயணம் செய்யக்கூடாது என்ற தடையை மீறி அய்யங்காளி என்ற புலையர் தலைவர் 1893இல் வில்லுவண்டியில் மேற்கொண்ட பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.

* உலோக அணிகலன்களை புலையர் சமூகப் பெண்கள் அணிவது தடை செய்யப்பட்டு கல் அணிகலன்களையே அவர்கள் அணியவேண்டும் என்ற அவலம் நிலவியது. இத் தடையை மீறி 1915 இல் பொதுக்கூட்டம் ஒன்றில் அவற்றைக் கழற்றி எறியச் செய்தவரும் அய்யங்காளிதான். கூட்டம் முடிந்ததும் அவை குவியலாகக் காட்சியளித்தன.

*       1917 இல் பல்வேறு சாதியினரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் சமபந்தி நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

* 1924 இல் வைக்கத்திலும் 1931-32இல் குருவாயூரிலும், தடையை மீறி கோவில் தெரு-கோயில் நுழைவுப் போராட்டங்கள் நிகழ்ந்தன.

இவை யாவும் மரபுமீறிய போராட்டங்கள். இப்போது அவை மீண்டும் நினைவூட்டப்பட்டன.பண்டையக் கேரளத்தின் பழமைவாதச் சிந்தனையால் எரிச்சலுற்ற விவேகானந்தர் மனநலம் குன்றியோரின் விடுதி என்றழைத்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பதன் வழியாக அவரது கூற்று மீண்டும் நினைவு படுத்தப்பட்டது எனலாம். 16 அக்டோபர் 2016இல் கேரள முதலமைச்சர் பினராயி கேரளத்தின் கடந்தகாலப் போராட்டங்களை நினைவு கூர்ந்தார். அவரது உரையில் அவர் வெளிப்படுத்திய சில கருத்துக்கள் வருமாறு :

  • கேரளத்தின் மாபெரும் மரபு ( Legacy) என்பது நமது மறுமலர்ச்சி (Renaissance)ஆகும். நமது சமூகம் மறுமலர்ச்சி மரபை அடிப்படையாகக் கொண்டது.
  • இந்த மறுமலர்ச்சி இயக்கமானது
    ஸ்ரீ நாரயணகுரு, சட்டாம்பி சுவாமிகள், அய்யங்காளி இன்னும் பலரால் உருவானது.விவேகானந்தரால் ஒரு முறை மனநலம் குன்றியோரின் விடுதி என்று குறிப்பிடப்பட்ட கேரளம் இவர்களால் மொத்த இந்தியாவிற்கும் முன்மாதிரியாக மாற்றமடைந்தது. இதற்குக் காரணம் மதச் சார்பின்மை மீதான உறுதிப்பாடும் சாதியத்தைக் களைந்தெறிந்ததும்தான்.
  • இந்தியாவின் சில பகுதிகளில் மனித உயிர்ப்பலி நடைமுறையில் இருந்தது. பின்னர் விலங்கு உயிர்ப்பலியாக மாற்றமடைந்தது.
  • இதுவும் கூட பின்னால் மஞ்சள் சுண்ணாம்பு இவற்றின் கலவையால் இரத்தத்தின் செந்நிறம் உருவாக்கப்பட்டு உயிர்ப்பலியின் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.
  • இவையெல்லாம் நம் மரபில் ஏற்பட்ட மாறுதல்கள். இது போன்ற பல மாறுதல்கள் நம் நாட்டிலும் கேரளத்திலு்ம் நிகழ்ந்துள்ளன மரபு என்பது காலத்திற்குக் காலம் மாற்றமடைந்து வந்துள்ளது.
  • ஒரு குறிப்பிட்ட காலத்தில் வழக்கில் இருந்த மரபு காலந்தோறும் மாற்றத்திற்கு ஆளாகி வந்துள்ளது.

        இது போன்றே எல்லோரும் பள்ளி சென்று கல்வி பயிலும் உரிமை, இவ்வாறு பயின்றவர்கள் வேலை பார்க்கும் உரிமை, பொதுத் தெருக்களைப் பயன்படுத்தும் உரிமை, கோயில்களில் நுழைந்து வழிபடும் உரிமை போன்றவற்றிற்காகப் பலவேறு போராட்டங்களை நடத்தியே இன்றையக் கேரளம் வளர்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறு கடந்த காலக் கேரளத்தின் போராட்ட வரலாறு அவரால் நினைவூட்டப்பட்டதுடன் மட்டுமின்றி, அப்போராட்டங்களில் ஈ்டுபட்ட சமூகங்களும் இச் சமூக அமைப்புகளின் இன்றையத் தலைவர்களும் தீர்ப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும்படிச் செய்வதில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதரவான அணி வெற்றியடைந்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் குரல் கேரளத்திற்கு வெளியே டில்லியிலும் ஒலித்தது. மத்திய அமைச்சரும் பி.ஜே.பி.யின் மேல்மட்டத் தலைவர்களில் ஒருவருமான ஸ்மிருதி ராணியின் கூற்றாக இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ள செய்தியின் சாரம் வருமாறு:

‘கோவிலில் நுழைந்து வழிபாடு செய்வதற்கு எனக்கு உரிமையுண்டு என நம்புகிறேன். அதே நேரத்தில் அதன் புனிதத் தன்மையைக் கெடுக்க எனக்கு உரிமையில்லை. இந்த வேறுபாட்டை அறிந்துகொண்டு நாம் செயல்படவேண்டும். மத்திய அமைச்சராக இருக்கும் நான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்துரைக்க முடியாது. பொதுப் புத்தியின்படி பார்த்தால் பூப்புக்குருதியில் நனைந்த தீட்டுத் துணியுடன் (சானிடிரி நாப்கின்) நண்பர் வீட்டுக்கு உங்களால் செல்ல முடியுமா? நீங்கள் செல்ல மாட்டீர்கள். இதே செயலை கடவுளின் வீட்டிற்கு கோவிலுக்குச் செல்லும்போது செய்வதும் மரியாதைக் குறைவுதான்.’

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழங்கிய உரிமையின் அடிப்படையில் ஐயப்பன் கோவிலுக்குச் சென்ற சிலபெண்கள் வன்முறைத் தாக்குதலுக்கு ஆளாகினர்.

மொத்தத்தில் பெரும்பான்மையினரான கேரளப் பெண்களின் ஆதரவும், கேரள அரசின் உறுதியான நிலைப்பாடும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான எதிர்ப்பியக்கத்தை வலுவிழக்கச் செய்துவிட்டன. இதில் பெண்களின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாகும். பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையாக நின்று பெண்களின் சுவர் என்ற பெயருடன் தம் உரிமைக்கும் கண்ணியத்திற்கும் அவர்கள் நடத்திய போராட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சில சமூக மாறுதல்களை உள்வாங்கிச் செயல்படுவதன் அவசியத்தை பொதுவுடைமை இயக்கத்திற்கு இப்போராட்டம் உணர்த்தவும் செய்தது. சான்றாக இந்தியாவின் சிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரான கே.என்.பணிக்கர் எழுதிய கட்டுரையில் இடம் பெற்ற பின்வரும் கருத்து கேரளக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மட்டுமின்றி மொத்த கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் பொருத்தப்பாடுடையதுதான். மரபைப் பாதுகாப்பது என்ற பெயரால் நடந்த இப்போராட்டத்தில் பெண்களும் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் நிலமானியச் சமூகத்தின் முதுமை எய்திய பெண்கள் அல்லர். புதிதாக உருவான மத்தியதர வரக்கத்தின் இந்துப் பெண்களும், பல்வேறு சாதிப்பிரிவினரும் இதில் இடம் பெற்றனர். உண்மையில் இவர்கள் வர்க்க அடிப்படையில் இதில் கலந்து கொண்டிருக்கக் கூடாது.

கே.என்.பணிக்கரின் கருத்து

இது குறித்து 2016 ஏப்ரல் 7இல் இந்து ஆங்கில நாளேட்டில் வரலாற்றறிஞர் கே.என். பணிக்கர் எழுதிய கட்டுரையில் “கடந்த இரண்டு தசாப்தங்களாக கீழ்நிலை மத்தியதர வர்க்கத்தின் திடீர் வளர்ச்சிக்குக் கேரளம் ஆட்பட்டுள்ளது. அவர்களின் நவீனத்துவத்திற்கான ஏக்கம் ஒரு பண்பாட்டு நெருக்கடியை அவர்களிடம் உருவாக்கியுள்ளது. இதிலிருந்து விடுபடும் வழிமுறையாக மூடநம்பிக்கை சார்ந்த நடைமுறைகள் மற்றும் பகுத்தறிவற்ற சடங்குகளின் துணையுடன் தீர்வுகாண முயன்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பொருள் உற்பத்தி முறை உருவாக்கும் வர்க்கங்கள் அச்சமூகத்தின் பண்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையே பேராசிரியர் பணிக்கரின் இக்கட்டுரைச் செய்தி வெளிப்படுத்துகிறது.

பணிக்கரின் இக்கருத்து சபரிமலைப் பிரச்சினையுடன் முடிந்த ஒன்று அல்ல. கேரளத்திற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல. இது மார்க்சியர்கள் அனைவரும் அவதானிக்கவேண்டிய ஒன்று.

இதுவரை சபரிமலைக் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்குத் தேவஸ்வம் போர்டு விதித்த தடை, அதை உறுதிசெய்த உயர்நீதிமன்றம், அதை ஏற்றுக்கொள்ளாது அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மரபைக் காப்பாற்றுவது என்ற முழக்கத்தை முன்வைத்து அத்தீர்ப்பிறகு எதிராக அணிதிரண்டோர், தீர்ப்பிற்கு ஆதரவாக அணிதிரண்டோர், இறுதியில் எதிர்ப்பாளர்கள் வலுவிழந்தமை எனத் தொடர்நிகழ்வுகளைக் கண்டோம்.

இவை ஒருவகையில் அரசியல் சாரந்தவை. இந்நூலின் முக்கியமான நோக்கம் இக்கோயில் உரிமையிலும் வழிபாட்டு முறையிலும் காலம்தோறும் நிகழ்ந்த மாறுதல்களும் அவற்றின் பின்னால் இருந்த சக்திகளும் எவை? என்பதையும் ஐயப்ப வழிபாட்டின் தனித்துவம் என்ன? என்பதையும் நாம் அறியச் செய்வதுதான்.

இவற்றை அறிந்து கொள்ள நாம் கடந்த காலத்திற்குள் பயணிக்க வேண்டும். அடுத்த இதழில் நம் பயணத்தைத் தொடங்குவோம்.

Jitheesh P.M (2o22) Sabarimala : Social History Of a Temple in Kerala.
left Word Books. New Delhi 110008.

ஆ.சிவசுப்பிரமணியன்