முனைவர் அ. பகத்சிங, தோழி ர. நிரஞ்சனா ஆகிய இருவரால் கடலோர மக்களிடையே நேர்காணல் செய்யப்பட்டு, மீன் உணவுகள் குறித்த தரவுகளைச் சேகரித்து, தொகுத்து 2025 சனவரி மாதத்தில் உயிர் பதிப்பகத்தின் வெளியீடாகத் தமிழ் ஆய்வுலகத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ள நூல் “நெய்தல் கைமணம்” என்னும் நூல்.
முனைவர் பகத்சிங் அவர்கள் தற்போது வளர்ந்துவரும் மானிடவியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இவற்றோடு இனக்குழுவரைவியல், நாட்டார் வழக்காற்றியல் துறைசார்ந்த ஆழ்ந்த அறிவு கொண்டவர். பழங்குடி மக்கள் குறித்து நுட்பான ஆய்வுகளை மேற்கொண்டு, இவர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்திக் கொண்டிருப்பவர்.
உயிர் பதிப்பகத்தின் மூலம் 2019 நவம்பர் மாதத்தில் பகத்சிங் அவர்கள் வெளியிட்ட “வாழும் மூதாதையர்கள் – தமிழகப் பழங்குடி மக்கள்” என்ற நூல் பழங்குடி மக்கள் குறித்து இதுவரை வெளிவந்துள்ள நூல்களிலிருந்து மிகுந்த வேறுபாடுடையது. பழங்குடிகள் குறித்து தகவல்களைச் சேகரித்து, அந்தத் தகவல்களின் அடிப்படையில் நூலாசிரியர் உரையாடுவதாக மட்டுமே அமைவது ஒரு வகையான ஆராய்ச்சி நூல்வகை. ஆனால், முனைவர் பகத்சிங் அவர்களின் நூல் பழங்குடிகள் குறித்து தான் உரையாடுவதோடு, தங்களின் எளிய வாழ்வியலையும், பாரம்பரிய அறிவையும், நுட்பமான காட்டுயிர் பார்வையையும் தாங்கள் வாழும் இயற்கைவியல் சூழலோடு இணைத்து மக்கள் தங்களின் வாய்மொழியிலேயே உரையாடவும் செய்தவர். அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களை நுட்பமாக தம் நூலில் ஆவணப்படுத்தியவர். பழங்குடி மக்களின் வாழ்வியலை நேரடியாக உரைக்கும் நிலையில் அரிய புகைப்படங்களை இணைத்திருப்பார். இந்தப் புகைப்படங்கள் பழங்குடிகளின் வாழ்வியல்சார் பன்முகக் கருத்துகளைக் கொண்டு வாசகர்களோடு உரையாடும். மேலும், ஒரு நூல் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமான செயல்பாடாக இந்நூல் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நூலை இரண்டு நிலைகளில் நோக்கிப் புரிந்து கொள்ள வேண்டும்.
“நெய்தல் கைமணம்” என்னும் இந்நூலை இரண்டு நிலைகளில் நோக்கிப் புரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாமையாகும். ஒன்று, இந்நூலின் புறநிலை. அதாவது நூல் உருவாக்க முறையியல். இரண்டு, நூலின் உள்ளடக்கம் சார்ந்து பின்பற்றப்பட்டுள்ள ஆவணப்படுத்தியலின் முறையியல். இந்நூலின் புறநிலையை நோக்கும்போது, 1. இந்நூல் என்பது ஒரு சமூகத்தின் ஆவணப்பதிவு என்பதால் நூல் நீண்டகாலம் பழுதடையாமல் இருக்கும் அளவில் கெட்டியான அட்டயைக் கொடுத்திருத்தல். 2. நூலின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளும் நிலையில் சிறந்ததொரு ஓவியத்தை நூலின் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளது. 3. வழுவழுப்பான தரமான தாள்களைக் கொண்டு கருத்துகளை அச்சாக்கம் செய்திருப்பது. 4. நூல் கொண்டிருக்கும் உள்ளடக்கக் கருத்துகளுக்கு ஏற்ப அந்தந்த கட்டுகரைகளிலேயே தெளிவான புகைப்படங்களை சேர்த்திருப்பது. 5. அனைத்து கட்டுரைகளும் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இடம்பெற்றிருப்பது ஆகும். இவ்வாறான பல செயல்பாடுகள் நூலுக்குச் சிறப்பை சேர்க்கின்றன.
“நெய்தல் கைமணம்” நூல் குறித்தப் புரிதலின் இரண்டாம் நிலையான உள்ளடக்கம் குறித்த சிறப்பை நோக்கும்போது, இந்த நூலில் முனைவர் அ.பகத்சிங் அவர்களும், தோழி ர. நிரஞ்சனா ஆகிய இருவரும் மிகத் தெளிவான வரையறையோடு மீன் உணவுகள் குறித்த தரவுகளைச் சேகரித்துள்ளனர். மின முக்கியமான கடலோரப் பகுதிகளான எண்ணூர், பழவேற்காடு, காசிமேடு, அடையாறு, புதுச்சேரி மாநிலம் ஆகிய பகுதிகளை தங்களின் ஆய்வுக்கான எல்லைகளாகத் தேர்வு செய்து, அங்கு வாழும் மீனவக் குடும்பங்களை அணுகி அவர்களிடையே புழங்கும் மீன் உணவுகள் குறித்த குறிப்புகளை நுட்பமாக பதிவு செய்துள்ளனர். இத்தகையப் பதிவு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பன்முகங்களை வெளிப்படுத்தும் நிலையில் செரிவான திட்டமிடலோடு செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் தொ.ப. அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணவுப் பண்பாடு குறித்து விளக்கும்போது, “ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர அவர்தம் உணவுப் பழக்க வழக்கங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். உணவுப் பழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளைபொருள்கள், சமூகப் படிநிலை, உற்பத்திமுறை, பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்து அமையும் ” என்று குறிப்பிடுவார். இந்த அனைத்துத் தன்மைகளையும் உள்வாங்கி கள ஆய்வுகளில் இந்நூலாசிரியர்கள் தரவுகளைத் திரட்டியிருப்பது, இந்நூலாசிரியரகள் பெற்றிருக்கும் பன்முகத் துறைசார் அறிவின் அடையாளம் என்றே குறிப்பிடலாம். பழவேற்காடு, எண்ணூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மீனவர்களின் உணவு குறித்தப் பதிவில் அப்பகுதி சார்ந்த வரலாறுகளையும் சூழலியல் சார்ந்த தகவல்களையும் இணைத்து வெளிப்படுத்தியிருப்பது, ஒரு சமூகம் சார்ந்த ஆவணமாக்கலில் மானிடவியலாளர்களும், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களும், இனக்குழுவரைவியல் ஆய்வாளர்களும் கவனம் செலுத்த வேண்டிய இன்றியமையாமைகளை அடையாளப்படுத்தலாக இந்நூலின் உள்ளடக்கக் கருத்துகள் அமைந்துள்ளன.
மீனவ மக்களின் பாடுகளை உணர்த்தும் ஓர் ஆவணம்
“சோழ நாடு சோறுடைத்து” என்று பெருமை பாராட்டிக் கொண்டிருக்கும் நாம் தமிழரின் உணவுப் பண்பாடு குறித்தப் புரிதலும் ஆவணப்படுத்தலும் போதாமையாகத்தன் உள்ளது. இந்நூல் சோழ நாட்டின் கடற்கரையில் வாழும் மீனவ மக்களின் உணவுப் பண்பாடு குறித்தப் புரிதலை தமிழ்ச் சமூகத்தினரிடையே விரிவு செய்துள்ளது என்றால் மிகையில்லை. ஞாயிற்றுக் கிழமையென்றால் அனைவருக்கும் அசைவ உணவுநாள் என்று கருதுகிறோம். அந்த அசைவ நாளில் பெரும்பாலும் நம் உணவாக இருப்பது மீன் உணவுதான். இந்த மீன் உணவை விற்பவர்களிடம் நாம் பேசும் பேரம் என்பது நகைக்கக்கூடியதாக அமையும். ஏதோ நாம் கொடுக்கக்கூடிய பணத்தில் மீனவ மக்கள் ஏகபோக வாழ்வை வாழ்ந்துவிடுவதாக எண்ணுகிறோம். விலையை அடித்துப் பேசி பத்து ரூபாய் குறைத்து வாங்கிவிட்டால் மகிழ்ச்சியில் பொங்குகிறோம். ஆனால் அந்த மீன்கள் நம் தட்டுகளில் வருவதற்கு ஆண், பெண், குழந்தைகள் என் மீனவ மக்களின் குடும்பங்கள் படுகின்ற பாடுகளை நாம் உணருவதில்லை. இந்த நூல் மீனவ மக்களின் பாடுகளை உணருவதற்கான ஒரு ஆவணம்.
மீன்களின் வகையும் மீனவ மக்களின் மொழியும்
இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாறை, வஞ்சிரம், மாவிலாசி,தேளப்பாறை, தூக்குசாசி பாறை, கானாங்கெளுத்தி, கவலை, மடவை, கலவா, கானாங்கெளுத்தி சிபியன், நெத்திலி, பன்னா, எறா, இறால் உள்றிட்ட பல வகையான மீன்களின் வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொட் நண்டு, சேற்று நண்டு, கடல் நண்டு, நத்தை முதலான கடற்கரை உணவுகள் குறித்த விரிவான பதிவை நூலாசிரியர்கள் செய்துள்ளனர். மீன் உணவுகளின் பல வகைகள் குறித்த பதிவுகளில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்னவெனில், மீன்களின் வகைகளோடு மீன் உணவுகள் குறித்தும், மீனவர்கள் பயன்படுத்தும் மொழி குறித்தும் பல்வேறு கலைச் சொற்களைக் குறித்தும் ஆய்வுலகத்திற்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளதாகும். இந்த மீனவ மக்களின் எளிமையைப் போலவே அவர்களின் உணவும், இலகுவான உணவின் சுவையும், எளிமையான சமையல் குறிப்புகளும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டி என்னும் உணவு குறித்து விளக்கும்போது, மட்டி என்னும் உணவுக்கும் மக்களின் வாழ்வியலுக்கும் உள்ள தொடர்வை விளக்குகிறார்கள். குறிப்பாகத் தலித், ஏழை சமூகத்திற்கான உணவாகவும் வணிகப் பொருளாகவும் எவ்வாறு ஒரு உணவு இருக்கிறது என்பதை இப்பதிவு உணர்த்துகிறது.
மீனவ மக்களின் நம்பிக்கையும் நேர்மையும் எதிர்கொள்ளும் சிக்கல்களும்
தாழங்குப்பத்தைச் சேர்ந்த சுகுனா என்னும் பெண்ணின் மீன் விற்பனைத் தொழிலைக் குறித்து பதிவு செய்யும்போது “சுகுணா, எளிய மீன் விற்பனையாளர். தன் தொழில் மீது பற்றும், நம்பிக்கையும் நேர்மையும் கொண்டவர். விற்பனை மட்டுமல்லாது மீன் ஆய்ந்து தருவது அவருடைய முதன்மைத் தொழிலாக உள்ளது. நாம் கேட்கும் அளவில் மிக அழகாக மீன்களை வெட்டித் தருவார். மீன் வெட்டுவதை ஒரு கலையாகவே கையாள்பவர். சென்னையின் உள்ளூர் மீன் சந்தைகளில் பலரும் இந்த வேலையைச் செய்கின்றனர். பெரிய கொடுக்குகளைக் கொண்ட நண்டுகளை உடைத்து பிரிக்கவும், பெரிய தோள்பாறை மீனின் தோலை கிழிக்கவும், சிறிய எறாவின் மேற்தோலை பொறுமையாக உரிக்கவும், கடினமான எலும்புகளைக் கொண்ட மீன்களை கத்தியால் வெட்டுவதும் எனப் பன்முகத்திறன் இக்கலைக்குத் தேவைப்படுகிறது.” என பதிவு செய்துள்ளார். மேலும் மீனவப் பெண்களின் உடல் வலியையும் பதிவு செய்யத் தவறவில்லை. இவற்றை “இந்த அனைத்து வகை வேலைகளையும் சமாளிக்கக் கூர்மையான அரிவால்மனை ஒன்றே இப்பெண்களுக்கு போதுமான கருவியாக உள்ளது. அரிவால்மனை அவர்களுக்கு பழக்கமான ஒன்றுதான் என்றாலும் அது தொழில்சார் உடல் உடல் பாதிப்புகளையும் தரத்தான் செய்கிறது. நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையில் கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்து வேலை செய்வதால் தோள்பட்டை, கழுத்துப் பகுதி மிகவும் தேய்மானம் அடைகிறது. மீனின் அளவைப் பொருத்து அவர்கள் உடலில் இருந்து அதிக அழுத்தத்தை கொடுத்து, மீன்களை வெட்ட வேண்டும். இப்பெண்கள் வயதாக ஆக உடல்சார் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்” என்ற பதிவு நேரிடையாகவும் மறைமுகமாகவும் மீன் வியபாரம் செய்யும் பெண்களின் உழைப்பு சார்ந்த பன்முகப் பிரச்சனைகளை நம்மோடு உரையாடுகிறது.மேலும், பல வினாக்களை மீன் நுகர்வோர்களாக மட்டுமே உள்ள நம்மோடு கேட்பதாகவும் உள்ளது.
உணவுப் பண்பாடு ஒரு போராட்ட ஆயுதமாதல்
பழவேற்காடு மக்கள் தங்களின் உணவுப் பண்பாட்டை அதிகார வர்க்கங்களால் தாங்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சனைகளுக்கான பேராட்ட ஆயுதமாக எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை, “கட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுக விரிவாக்கத் திட்டம் ஒட்டுமொத்த பழவேற்காட்டையும் கடலில் முழ்கடித்துவிடுமோ என்ற அச்சம் அம்மக்களிடையே உள்ளது. தங்கள் வாழ்விடத்தைக் காக்க பல்வேறு போராட்டங்களை அம்மக்கள் நடத்தி வருகின்றனர். பழவேற்காட்டின் இயற்கை வளத்தையும் அச்சூழலுக்கு உகந்து வாழும் மக்களின் பண்பாட்டு விழுமியங்களையும் பொது மக்களுக்கும், அரசுக்கும் எடுத்துரைத்து வருகின்றனர். பழவேற்காட்டின் நெய்தல் நிலப் பண்பாட்டுத் தனித்தன்மையை விளக்கி உணவுத் திருவிழா ஒன்றினை 2002இல் நடத்தினர். தமிழ்நாட்டு முதல்வருக்கும், பிற முக்கிய அதிகாரிகளுக்கும் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். பழவேற்காட்டின் நீர் – நிலத்தோடு நெருங்கிய தொடர்புடையது எங்கள் பண்பாடு என்பதை நெய்தல் உணவின் மூலம் அதிகார வர்க்கத்திற்கு எடுத்துரைத்துள்ளனர். உணவு எனும் பண்பாட்டு அடையாளத்தைப் போரட்டத்திற்கான ஆயுதமாக அம்மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.” என்ற பதிவு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணவுக்கும் பண்பாட்டுக் கட்டமைப்புக்கும் உள்ள தொடர்வை உறுதி செய்வதைக் காணலாம்.
ஒரு குறிப்பிட்டப் பகுதிகளிலிருந்து திருமணமாகி வரும் பெண்கள் வேறொரு பகுதிக்கு வரும்போது அவர்கள் மூலமாக வரும் உணவுப் பழக்கங்களையும், திருமணமாகி வந்த இடத்தில் கற்றுக்கொள்ளும் உணவுப் பழக்கத்தையும் நுடபமாகப் பதிவு செய்துள்ளதன் மூலம் மக்களின் இடம்பெயர்வால் உருவாகும் உணவுப் பண்பாட்டின் இடப்பெயர்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீன் குழம்பு, வறுவல், தொக்கு, ஊறுகாய், வடை முதலான உணவு சமைத்தலின் பல வகைகளைக் குறிப்பிட்டுள்ளதோடு, ஒவ்வொரு மீன் உணவுகள் குறித்த குறிப்புகளும், ஒவ்வொரு மீனையும் எவ்வாறு பதப்படுத்த வேண்டும்?, ஒவ்வொரு மீனும் எவ்வளவு நேரம் கொதிக்க வைக்க வேண்டும், எந்நெந்த சூழ்நிலையில் எந்தெந்த மீன்களை உண்ண வேண்டும்?, எவ்வாறு உண்ண வேண்டும்?, மீன்களில் உள்ள சத்துகள் என்னென்ன?, மீன்களில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன? மீன் உணவுகளை மீனவ மக்கள் எவ்வாறு தங்களின் வாழ்வதாரத்துக்கான வணிகமாக மேற்கொள்கின்றனர்? என்ற பல்நிலையிலான கள ஆய்வாளர்களின் பதிவுகள் மீனவச் சமூகங்கள் குறித்த எவ்வித புரிதலற்று கடந்தபோகும் நம்மை நிறுத்தி இச்சமூகங்கள் குறித்த ஆளுமைகளை உணர்த்துகின்றன.
துறைசார் அறிவின் வெளிப்பாடு
இந்நூல் இடம்சார் வராற்றுப் பதிவாகவும் வெளிப்படுகிறது. பழவேற்காடு குறித்தப் பதிவு என்பது ஒரு ஆய்வாளர் கொள்ள வேண்டிய சூழலியல்சார் அறிவையும் உறுதி செய்கிறது. இந்நிலையில் பழவேற்காடு பகுதியைக் குறித்து பதிவில் இப்பகுதியில் கிடைக்கும் இறால், மீன், நண்டு,வகைகளுக்குச் சந்தையில் கிடைக்கும் மதிப்பு, மனிதர்களின் உணவு, பொருளாதாரத் தேவைகளுக்கு மட்டுமல்லாது பலவகை வலசைப் பறவைகளுக்கும் புகலிடம் அளிக்கும் இடமாகவும் பழவேற்காடு உள்ளதை இந்நூலாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். இவை ஒரு மானிடவியல், இனக்குழுவரைவியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான அறிவையும் உணர்வையும் வெளிப்படுத்துகிறது.
பழவேற்காடு மீனவ மக்களையும் அவர்களின் மீன் உணவுகளையும் பதிவு செய்துள்ளதோடு, பழவேற்காடு குறித்த வராற்றையும் காலந்தோறும் அப்பகுதி எதிர்கொள்ளும் அரசியல் நிலைகளையும், மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகளையும தங்களுடைய மைய நோக்கத்தோடு இணைவு பெற்ற பதிவுகளாகச் செய்துள்ளமை ஒரு குறிப்பிட்ட சமூக வெளியில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தும்போது கவனம் கொள்ள வேண்டிய இன்றியமையாமை ஒரு ஆய்வாளருடைய நேர்மைத் தன்மைக்கும் கடமைக்கும் எடுத்துக்காட்டாகும்.
கூட்டு உழைப்பு - கூட்டு இயக்கம்
மீன் பிடிக்கும் தொழில் என்பது எவ்வாறு கூட்டுழைப்பாக மனிதர்களின் கூட்டு இயக்கமாகச செயல்படுகிறது என்பதை மீனவர்களின் மீன்பிடி தொழில்முறையை வெளிப்படுத்தும் இடங்களில் தவறாமல் ஆவணப்படுத்தியுள்ளனர் இந்நூலாசிரியர்கள். மீன்பிடித் தொழில் என்பது தனிநபர் செயல்பாடு அல்ல. அவை ஒரு கூட்டுச் செயல்பாடு. பெரும்பாலான மீன் பிடித்தல் இரவுக் காலங்களில் நெடுந்தூரம் கடல் பரப்பில் இயங்க வேண்டும். இத்தகையை மனிதர்களின் உழைப்பையும் கூட்டு இயக்கதையும் புரிந்துகொள்வதற்கு எளிமையான மொழியை நூலாசிரியர்கள் பயன்படுத்தியிருப்பவை மிகக் குறிப்பிடத்தக்க செயல்பாடாகும்.
ஆய்வாளர்களின் நேர்மை
மானிடவியல், இனக்குழுவரைவியல், நாட்டார் வழக்காற்றியல் துறைசார்ந் ஆய்வுகளிலும், பழங்குடியினர் குறித்த ஆய்வுகளிலும் தகவலாளிகளிடமிருந்து பெறப்படும் தரவுகள் இன்றியமையாகும். இந்நிலையில் ஒரு ஆய்வாளர் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களிடம் கள ஆய்வு மேற்கொண்டு தரவுகளைச் சேகரித்தவுடனோ, அல்லது ஆய்வாளரின் ஆய்வுத் திட்டம் முடிவடைந்தவுடனேயோ ஆய்வாளருக்கும் தகவலாளர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற நிலைதான் பெரும்பாலும் ஆய்வியல் சூழலில் உள்ளது. இதேப்போன்று ஆய்வாளர்கள் தகவலாளர்களை தகவல்களை கொடுக்கும் கருவிகளாக மட்டுமே பார்க்கும் நிலை ஆய்வுச் சூழலில் உள்ளது. தாங்கள் ஆய்வுக்குட்படுத்தும் சமூகத்தின் வாழிடம், வரலாறு, பண்பாடு முதலானவை சிக்கலுக்கு உட்படும்போது எவ்வித கலக்கமும் இல்லாமல் ஆய்வாளர் கடந்துபோதலும் நாம் காணும் ஆய்வாளர்களின் நேர்மையாக உள்ளது. ஆனால், இந்நூலாசிரியர் முனைவர் அ.பகத்சிங் அவர்களின் பதிவு ஒரு ஆய்வாளர் கொள்ள வேண்டிய ஆய்வு நேர்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
“கடலோரப் பகுதி என்பது நகரமயத்தின், தொழிற்வளர்ச்சியின் பலிகடாவாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இங்குள்ள அனல் மின் நிலையங்களும் துறைமுகங்களும் பிற ரசாயண தொழிற்சாலைகளும் எவ்விதச் சுற்றுச்சூழல் விதிகளையும் வட்ட வரையறைகளையும் பின்பற்றுவதில்லை. இங்கு வாழும் மனிதர்களையும் உயிர் சூழலையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இதனைச் சூழலியல் இனவாதமாகவே பார்க்க வேண்டும். இந்த சூழலியல் பாதிப்புகளை, வாழ்வியல் இழப்புகள் பற்றிப் பொதுச் சமூகத்திற்கு எவ்வளவு புரிதல் உள்ளது என்ற கேள்வியும் எனக்குள் உள்ளது. கடலோரச் சூழல், வாழ்வு, உழைப்புப் பற்றிப் போதிய புரிதல் இன்றி நெய்தல் நிலத்தின் வாழ்வு மீது மதிப்பு எப்படி ஏற்படும்?. கடலோர மக்களுக்கும் பொதுச் சமூகத்திற்கும் இடையே உள்ள இந்த இடைவெளியே, ஆளும் வர்க்கத்தின் திட்டமிட்ட அழித்தொழிப்பு முயற்சிக்கு ஒத்திசைவாக அமைந்துவிட்டது” என்ற பதிவு வாசகர்கள் மிக கவனமாகவும் உணர்ந்தும் நோக்க வேண்டும். கடலோர பகுதியின் மீது மட்டுமல்ல அனைத்து நிலைகளின் மீதான புரிதலும் பொதுமக்களுக்கு இன்றியமையாததாகும். இப்புரிதலற்ற, அனைத்தையும் எளிதாக நமக்கென்ன என்று கடந்துபோகும் மக்களின் பொதுபுத்திதான் மக்களைச் சுரண்டும் அதிகார வர்க்கத்தினருக்கான முதலீடாக மாறுகிறது என்பதையும் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு இந்நூலாசிரியரின் வினாக்கள் நமக்குப் பயன்படுவதாக உள்ளது.
இந்நூலாசிரியர்கள் தங்களுடைய இந்நூல் முயற்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது, “நாம் சாப்பிடும் தட்டில் உள்ள மீன் எங்கிருந்து வந்தது. அவை நம் சமையல் அறைக்குள் வந்து சேர்ந்ததில் அடங்கியுள்ள உழைப்பைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது மிக அவசியம். சோழமண்டலக் கடற்கரையின் பிரதான உணவுப் பண்பாட்டினை ஆவணப்படுத்தும் முயற்சியின் தொடக்கமாக இந்நூல் அமைகிறது” என்ற பதிவு மிக முக்கியமானதாகும். மீனவ மக்களின் மீன் உணவு குறித்த பண்பாட்டு ஆவணப்படுத்துதல் என்பதை அனைத்து சமூக மக்களின் உணவுப் பண்பாடு குறித்த ஆவணப்படுத்துதலாக தொடர வேண்டும். இத்தொடர்ச்சி தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் மீட்டெடுப்பதற்கான ஆயுதமாக அமையும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய மாற்றத்திற்கு இந்நூல் ஒரு மிக முக்கிய ஆவணமாக அமையும். இந்நூலை வாசித்தும் விமர்சித்தும் தமிழ்ச் சமூகத்தினரிடையே பரவலாக்கம் செய்வேம். உணவுப் பண்பாட்டின் மூலம் ஒவ்வொரு சமூகத்தின் பண்பாட்டை மீட்டெடுப்பாம், பாதுகாப்போம்.
- முனைவர் மு.ஏழுமலை, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், உதவிப் பேராசிரியர், து.கோ. வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை.