எளிதான ஆய்வுப்பொருள் என்ற தவறான கண்ணோட்டத்தில் நவீன இலக்கிய வகைமை களான நாவல், சிறுகதை, கவிதை, இதழியல் ஆகியனவும் நாட்டார் வழக்காறுகளும் இன்று தமிழியல் ஆய்வில் செல்வாக்கு பெற்று விட்டன.

இப்போக்கிலிருந்து விலகி நின்று, செவ்விலக்கியங்களை மையமாகக் கொண்டு, அவ்வப்போது தரமான ஆய்வுகளும் வெளிவருகின்றன. இவ் வரிசையில் பாண்டுரங்கனின் இந்நூல் இடம் பெறுகிறது.

paandurangan_450பல்வேறு ஆய்விதழ்களில் வெளியான எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பாக, இந்நூல் அமைந்துள்ளது. அவற்றுள் முதல் இரண்டு கட்டுரைகளைத் தவிர, ஏனைய கட்டுரைகள் எட்டுத்தொகை நூல்களை மையமாகக் கொண்ட ஆய்வாக அமைந்துள்ளன.

எட்டுத்தொகை என்ற பெயருக்கு ஏற்ப எட்டு நூல்களின் தொகுப்பாக, சங்க இலக்கியம் அமைந் துள்ளமை அனைவரும் அறிந்த செய்திதான். எட்டுத் தொகை நூல்களைக் கற்போரும், ஆய்வு செய்வோரும் அறிந்துகொள்ள வேண்டிய ஓர் அடிப்படையான செய்தியை இந்நூலாசிரியர் ஆங்காங்கே நினை வூட்டிச் செல்கிறார் (பக்: 36,49,70). அவற்றுள் பின்வரும் பகுதியை மேற்கோளாகக் காட்டுவது பயனுடையதாக இருக்கும்.

இன்று நமக்குக் கிடைத்துள்ள சங்கப் பாடல்கள் அனைத்தும் ஒரு காலத்தில் பாடப்பட்டவை அல்ல; அப்பாடல்கள் ஓர் ஊரினர் அல்லது ஒரு நாட்டினரால் பாடப் பட்டவை அல்ல. தமிழ்நாட்டின் பல இடங் களில் வாழ்ந்த புலவர்கள், பல்வேறு தொழில் களில் ஈடுபட்டிருந்த புலவர்கள் சங்கப் பாடல் களைப் பாடியுள்ளனர். இவர்களுள் சிலர் அரசர்களாக ஆட்சி செலுத்தியுள்ளனர். இப் பாடல்கள் எல்லாம் பாடப்பட்ட காலத்தி லேயே தொகுக்கப்படவில்லை; பாடப்பட்ட காலத்திற்கும் அவை தொகைநூல்களாகத் தொகுக்கப்பட்ட காலத்திற்கும் இடையில் பெரிய கால இடைவெளி இருந்திருத்தல் வேண்டும் (பக்:36).

தமிழில் தொகை நூல்கள் குறித்த நான்கு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் இடம்பெற்றுள்ள செய்திகளை, ‘பாடப் பட்ட காலம்’, ‘தொகுக்கப்பட்ட காலம்’, ‘தொகுப்பு நெறி’ என்ற தலைப்புகளில் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

பாடப்பட்ட காலம்

கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முடிய உள்ள காலமே சங்ககாலம். சங்ககாலத்திற்கு முற்பட்டவரே தொல்காப்பியர். கி.மு.ஆறாம் நூற்றாண்டிலிருந்தே தமிழிலக்கியம் வளரத் தொடங்கியுள்ளது. பழங்குடிச் சமூக அமைப்பி லிருந்து விலகி வந்து அரசுகள் உருவாகிக் கொண் டிருந்த மாறுதல் நிகழும் காலமாக (Transitional Period) சங்ககாலம் இருந்தது.

சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, சில பாடல்கள் அரசுகள் உருவாகாத காலத்தில் பாடப்பட்டவை என்பது புலனாகிறது. பெருங் கற்படைப் பண்பாடு (Megalithic Culture), முதுமக்கள் தாழி, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்வு, பிராமிக் கல்வெட்டுகள் ஆகிய தொல்லியல் சான்றுகள்

சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றுடன் ஒத்துப் போகின்றன. பதுக்கை, முதுமக்கள் தாழி குறித்த சங்கப் பாடல்கள் அரசுகள் உருவாகாத காலத்தில் பாடப்பட்டவை.

களவு வாழ்க்கை, தழை ஆடையைக் கையுறை யாகத் தலைவியிடம் தலைவன் கொடுத்தல், வெறி யாடல் என்பன சங்க இலக்கியச் செய்திகளை மானுட வியல் அணுகுமுறையில் ஆராய்ந்தால் இனக்குழு வாழ்க்கையின் எச்சங்களையே இப்பாடல்கள் பதிவு செய்துள்ளதை உணர முடியும்.

இனக்குழுக்களை வென்று குறுநில மன்னர்கள் ஆளத் தொடங்கினர். இவர்களையடுத்து, சேர, சோழ, பாண்டிய மரபினர் உருவாகினர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே மூவேந்தர்களின் ஆட்சி தமிழ்நாட்டில் நிலைபெற்று விட்டதை அசோகனின் பாறைக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. இச் செய்திகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இனக் குழு வாழ்வின் எச்சங்களும், அரசு உருவாக்கமும் கொண்ட ஒரு சமூக அமைப்பில்தான் எட்டுத்தொகை நூல்கள் உருவாயின என்று கூற முடியும். சந்தை வேண்டி இனக்குழுக்கள் தமக்குள் போரிட்டதாக விவாதத்துக்குரிய ஒரு கருத்தையும் ஆசிரியர் எழுதி யுள்ளார் (பக். 182).

தொகுக்கப்பட்ட காலம் 

மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்தமை குறித்த செய்தி கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட ‘இறையனார் களவியல் உரை’யில் இடம்பெற்றுள்ளது. எட்டுத்தொகை நூல்களைக் கடைச் சங்க நூல்கள் என்று இந்நூல் குறிப்பிடுகிறது. ஆனால் பத்துப்பாட்டை சங்க நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை. சங்க நூல் என்று எட்டுத்தொகை நூல்களைக் குறிப்பிடும் போக்கு ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகிவிட்டதை இதனால் அறிய முடிகிறது.

எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடும் இறையனார் களவியல் உரை இந்நூல்கள் தொகுக்கப் பட்ட காலத்தைக் குறிப்பிடவில்லை. கே.என். சிவராசப் பிள்ளையின் கருத்துப்படி ஐந்து தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனாரே தொகுப்புப் பணியைச் செய்திருக்க வேண்டும்.

‘முதல் பாண்டியப் பேரரசை நிறுவிய கடுங் கோன் மரபினர் உருவாக்கிய மதுரைத் தமிழ்ச் சங்கமே தொகுப்புப் பணியில் ஈடுபட்டது’ (பக்: 117). இவர்களைத் தொடர்ந்து சேர மரபினர் இப் பணியில் ஈடுபட்டு, ‘பதிற்றுப் பத்து’, ‘ஐங்குறு நூறு’ என்ற இரு நூல்களைத் தொகுத்தனர்.

இறையனார் களவியல் உரை எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் அனைத்தையும் குறிப்பிடு வதன் அடிப்படையில் பார்த்தால், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கு முன்பே தொகுக்கும் பணி முற்றுப் பெற்றிருக்க வேண்டும்.

தொகுப்பு நெறி

தனித்தனியாகச் சிதறிக் கிடந்த பாடல்களைத் தொகுக்கும்போது அகம், புறம் என்று திணையடிப் படையில் மட்டுமின்றி, எண்ணிக்கை அடிப்படை யிலும் தொகுத்துள்ளனர். இது குறித்து இறை யனார் களவியல் உரை,

அவர்களால் (449 புலவர்கள்) பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், என்று இத் தொடக்கத்தன.

என்று குறிப்பிடுகிறது (பக்.50). நானூறு என்ற எண்ணிக்கையில் நெடுந்தொகை (அகநானூறு), குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய நான்கு நூல்களும், ஐந்நூறு எண்ணிக்கையில் ஐங்குறுநூறும், நூறு எண்ணிக்கையில் பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது எண்ணிக்கையில் கலித்தொகையும், எழுபது எண்ணிக் கையில் பரிபாடலும் தொகுக்கப்பட்டுள்ளன.

குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியன அடியளவில் தொகுக்கப்பட்டுள்ளன. குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகளையும், நற்றிணை ஒன்பது முதல் பன்னிரண்டு அடிகளையும், அகநானூறு பதின்மூன்று முதல் முப்பத்தொன்று அடிகளையும் கொண்டுள்ளன. இம்மூன்று நூல்களும் உள்ளடக் கத்தில் தம்முள் வேறுபாடு கொண்டவையல்ல.

இவை ஒருவரால் அல்லது ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட ஒரு குழுவால் எழுதப்பட்டிருக்க வேண்டும் (பக். 50). இத்தொகுப்புகள் தொகுக்கப் பட்ட பின்னரே திணை, துறையைப் பற்றிய பதிவுகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் (பக்:50, 52). அக நானூற்றுத் தொகுப்பில் திணைப் பகுப்பு தெளிவாக உள்ளது. இது குறித்து,

ஒற்றைப் படை எண்களாக வரும் பாடல்கள் பாலை; 2,8..... என முடியும் பாடல்கள் குறிஞ்சி; 4, 14..... என முடியும் பாடல்கள் முல்லை; 6, 16..... என முடியும் பாடல்கள் மருதம்; 10,20..... எனப் பூச்சியங்களில் முடியும் பாடல்கள் நெய்தல். இப்பகுப்புப் பற்றி மூலச்சுவடிகளில் மூன்று வெண்பாக்கள் உள்ளன. மேலும், இந்நூல் களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. மூலச்சுவடிகளில் உள்ள இப்பகுப்புகளை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய உரையில் ஆளுகின்றார். எனவே இம்முத்திறப் பகுப்பு நச்சினார்க் கினியருக்கும் முற்பட்டது என்பதில் ஐய மில்லை (பக்: 53).

என்று குறிப்பிட்டு விட்டு ‘மூலம்’ (பனுவல்), ‘திணைப் பகுப்பு’, ‘நூல் உட்பிரிவு’ என மூன்று படிநிலை வளர்ச்சிகளை அகநானூற்றுத் தொகுப்புக் காட்டு கிறது.

இதன் அடுத்த கட்டமாகத் திட்டமிட்ட வகையில் திணை வகுக்கப்பட்டு, தொகுக்கப்பட்ட நூல்களாக ஐங்குறுநூறும், கலித்தொகையும் அமைகின்றன.

ஐந்திணைகள் ஒவ்வொன்றுக்கும் குறைந்த அடி வரையறையுடன் கூடிய, நூறு, நூறு பாடல்கள் தனித்தனியாகத் தொகுக்கப்பட்ட நூலாக ஐங்குறுநூறு அமைந்துள்ளது. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை எனத் திணை வரிசை மாறியமைந்துள்ளது.

ஐங்குறுநூற்றைப் போன்றே திணையடிப் படையில் திட்டமிட்டுத் தொகுக்கப்பட்ட நூலாகக் கலித்தொகை அமைகிறது. ஆனால், ஐங்குறுநூறில் ஒவ்வொரு திணைக்கும் நூறு பாக்கள் இடம் பெற்றுள்ளது போன்று ஒரே சீரான எண்ணிக்கை அளவில் பாடல்கள் தொகுக்கப்படவில்லை. இது வரை நாம் பார்த்த தொகைநூல்கள் அகவற்பாவால் ஆனவை. ஆனால் கலித்தொகை கலிப்பாவால் ஆனது. வைதீகச் சமயத்தின் தாக்கம் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றுவிட்டதைக் கலித்தொகைப் பாடல்கள் சில உணர்த்துகின்றன.

பதிற்றுப்பத்து, திட்டமிட்ட தொகுப்பாக அமைகிறது. சேர மன்னர்களைப் பற்றிய நூறு பாடல்களின் தொகுப்பாக இது தொகுக்கப்பட்டு உள்ளது. இந்நூல் குறித்து,

ஒன்றோடொன்று தொடர்பில்லாத- பொருள் இயைபில்லாத - தனிநிலைச் செய்யுட்களைத் தொகுத்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று, ஒரே மரபைச் சேர்ந்த பத்து அரசர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பான பதிற்றுப் பத்து பழைய உரையுடன் கிடைத்துள்ளது. இன்றுள்ள நிலையில் அது முழுமையாகக் கிடைக் காமல், குறைநூலாக உள்ளது. அதன் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்க வில்லை என்பர் இந்நூலை முதன்முதலில் பதிப்பித்த உ.வே. சாமிநாதையர் (பதிற்றுப் பத்து, 1957: ஏஐ). ஆனால், ஜான் மார் இந் நூலின் பத்துகளின் இறுதியில் இடம் பெற்றுள்ள பதிகங்களை ஆராய்ந்து, இவ்வாறு காணாமல் போன பத்துகள் முதல் பத்தும் இப்போது ஏழாம் பத்து எனக் குறிக்கப்பெறும் பத்திற்கு முந்திய பத்தும் ஆகும் என்பர். அதாவது, இன்று 9-ஆம் பத்தாகக் கொள்வதை நூலின் இறுதியான 10-ஆம் பத்தாகக் கொள்ள வேண்டும் என்பது அவர் கொள்கை. அவருடைய கொள்கையின்படி இன்றுள்ள பதிற்றுப் பத்து, 2,3,4,5,6,8,9,10, பத்துகளைக் கொண்டதாகும். அதாவது, முதல் பத்தும், ஏழாம் பத்தும் கிடைக்கவில்லை (The Eight Anthologies, 1985:273-274). காணாமல்போன முதல் பத்து உதியன் சேரலாதனுக்குரியது. பத்தாம் பத்து சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்குரியது என்பர் ச. வையாபுரி பிள்ளை (இலக்கியச் சிந்தனைகள், தொகுதி, ஐ -1989:190). ஆனால், ஜான்மார் அவர்களின் கருத்தின்படி, காணாமல்போன ஏழாம் பத்து அந்துவன் சேரல் பற்றியதாகும். பத்தாம் பத்து இளஞ் சேரல் இரும்பொறை பற்றியதாகும்.

என்கிறார் ஆசிரியர் (பக்: 58-59). புறத்திணையில் அமைந்த தனிநிலைப் பாடல்களின் தொகுப்பான புறநானூறு அடி வரையறையோ, திணை வரை யறையோ இன்றித் தொகுக்கப்பட்டுள்ளது. ஜான் மார் என்பவரது கருத்துப்படி, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில்தான் புறநானூற்றின் தொகுப்புப் பணி நிறைவு பெற்றிருக்க வேண்டும். (ஆனால் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையனார் களவியல் உரையில் ‘புறநானூறு’ குறிப்பிடப்பட்டுள்ளது.)

ஓரளவுக்குத் திட்டவட்டமான தொகுப்புமுறை பின்பற்றப்பட்டுள்ளதாகக் கருதும் ஜான்மார் சேர, சோழ, பாண்டியர் என்று மூவேந்தர் வைப்புமுறை மாறி சேர, பாண்டிய, சோழர் என்று பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.

எட்டுத்தொகை நூல்களில் இசைத் தமிழ் நூலாகப் பரிபாடல் அமைந்துள்ளது. எழுபது பரிபாடல் என்று இறையனார் களவியல் உரை குறிப்பிட, இருபத்துநான்கு முழுப்பாடல்களும், ஒன்பது பாடல் உறுப்புகளுமே இன்று கிட்டி யுள்ளன. சேர மரபினர் அல்லது பல்லவ மன்னரின் ஆதரவோடு இத்தொகுப்பு தொகுக்கப்பட்டிருக்கலாம்.

சங்க இலக்கியப் புலவர்கள், அரசர்கள், வள்ளல்கள் பட்டியல்களில் சோழ நாட்டினர் மிகுதியாக இருந்தும், சோழர்கள் தொகுப்புப் பணியை மேற்கொள்ளாமை நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. அதற்குரிய காரணங்கள் இனிமேல் ஆராயப்படுதல் வேண்டும்.

என்று எதிர்கால ஆய்விற்கான ஒரு கருத்தை முன் வைக்கிறார் (பக்:66).

* * *

திணைக்கோட்பாடு என்ற தலைப்பில் திணைப் பகுப்பு தொடர்பான சில அடிப்படைச் செய்தி களைக் கூறும் ஆசிரியர் திணைமயக்கம் குறித்து,

“பாடல்கள் திணைமயக்கமாக அமையும் போது, உரையாசிரியர்கள் பெரும்பாலும் அப்பாடல்களுக்கு முதற்பொருள் அடிப் படைகளில்தான் திணை வகுத்துச் சென்றுள்ளனர்.” (பக்:80)

என்று கூறுகிறார். இதனையடுத்து முடிவுரையாக,

குறிஞ்சித்திணை எனப் பதிப்பிக்கப்பட்ட பாடல்களில் திணை மயக்கம் மிகுதியாக உள்ளது. 39 குறிஞ்சித்திணைப் பாக்களில் (குறுந்தொகை 17, நற்றிணை 17, அகநானூறு 5) நெய்தல் பின்புலத்தில் குறிஞ்சியின் உரிப் பொருள் மயங்கியுள்ளது; முல்லையும் குறிஞ்சியும் மயங்கிக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் திணைக்கோட்பாடு எவ்வளவு சிக்கலானது என்பதனை எமக்குத் தெளிவுபடுத்துகின்றன. குறிஞ்சித் திணைப் பாக்கள் முழுவதையும் ஒன்றாகத் தொகுத்து நுண்ணாய்வு செய்யும்போது, மேலும் பல விளக்கங்கள் கிடைக்கலாம்.

என்று குறிப்பிடுகிறார் (பக்: 81,82). இவ்வியலின் தொடர்ச்சி போன்று ‘நெய்தல் திணை’ என்ற கட்டுரை அமைந்துள்ளது.

தொல்காப்பிய அகத்திணை இயலின் எட்டாவது நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையின் அடிப்படையில், “தலைவியின் பிரிவுத்துன்பம் கட்டுக்குள் அடங்காமல் வெளிப்படுவது நெய்தல் திணையின் உரிப்பொருள் என்பது தெளிவு” (பக்:87) என்று கூறிவிட்டு, முல்லைத் திணையில் இடம்பெறும் பிரிவுக்கும் நெய்தல் திணை இடம் பெறும் பிரிவுக்கும் இடையிலான வேறுபாட்டை,

ஆற்றியிருக்கும் நிலைமாறித் தலைவியின் ஆற்றாமை வரம்புகளைக் கடந்து வெளிப் படுமாயின், அது நெய்தல்திணை ஆகி விடுகின்றது. கண்ணீரைத் தாங்கி நிறுத்துதல் முல்லைத்திணை என்றால், கண்ணீர் விடுதல் நெய்தல் திணை ஆகும். தலைவியின் இரு வேறு நிலைகளை அவ்வத்திணைகளின் பின்புலம் விளக்கி விடுகின்றது. முல்லைத் திணையின் பின்புலம் தலைவிக்கு நம்பிக் கையைத் தோற்றுவிக்கின்றது. ஆனால், நெய்தல்திணையின் பின்புலம் தலைவிக்கு நம்பிக்கையின்மையைத் தோற்றுவிக்கின்றது.

என்கிறார் (பக்:88). குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்று நூல்களிலும் 213 பாடல்கள் நெய்தல் திணைக்கு உரியனவாகப் பதிப்பிக்கப் பட்டுள்ளன என்றும், இது விழுக்காற்று அடிப் படையில் 17.75 ஆகுமென்றும் கூறிவிட்டு, சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பிரிவு குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

  • முல்லைத்திணையும் ஒரு வகையில் பிரிவு தான்; ஆனால், அத்திணையில், நம்பிக்கை இழையோடுகின்றது.
  • தலைவன், தலைவி ஆகிய இருவர் கூற்று களும் முல்லைத் திணையில் இடம்பெறு கின்றன.
  • பாலைத்திணையிலும் தலைவன், தலைவி ஆகிய இருவர் கூற்றுகளும் இடம்பெறு கின்றன.
  • தலைவனைப் பிரிவதால் தலைவிக்கு ஏற்படும் மனத் துயரம், பிரிந்து செல்லும் தலைவனின் மனநிலை போன்றவை பாலைத் திணைப் பாடல்களில் இடம் பெறுகின்றன. நெய்தல் திணை ஒன்றில்தான் தலைவியின் துயரம் மட்டுமே புனைந்துரைக்கப்படு கின்றது. (பக்: 89,90)

அடுத்து, திணைப்பகுப்பில், உரிப்பொருளை விட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். இறுதியாகப் பின்வரும் மூன்று கருத்துகளை முடிவுரையாக முன்வைக்கிறார்.

  • பெரும்பான்மையான பாடல்கள் நெய்தல் நில வருணனை காரணமாகவே நெய்தல் திணையில் வைக்கப்பட்டுள்ளன (பக்: 101).
  • நெய்தல் திணையில் நெய்தல் நிலத்திற்குரிய இரங்கல் உரிப்பொருளைக் கொண்டுள்ள பாடல்கள் மிகச் சிலவாகவே உள்ளன. இரங்கு வதாகப் பாடும்போதும், தலைவியின் இரங்கலே சிறப்பிக்கப்படுகின்றது (மேலது).
  • நெய்தல் நிலம் கடலோடு தொடர்புடைய தாயினும், மீன் வேட்டம் பற்றிப் பேசப்படு கிறதே ஒழிய, அயல்நாட்டுக் கடல் பயணம் பற்றி நெய்தல் திணைப்பாக்களில் பேசப்பட வில்லை என்பது எண்ணத்தக்கது (மேலது).

பல்வேறு ஆய்விதழ்களில் எழுதப்பட்ட கட்டுரை களின் தொகுப்பு என்பதால் கூறியது கூறல் ஆங் காங்கே இடம்பெறுகிறது. கட்டுரைகளின் தொகுப் பாக ஒரு நூல் அமையும்போது, இது தவிர்க்க முடி யாத ஒன்றுதான். கட்டுரைகளின் அடிக்குறிப்புகள் ஆசிரியரின் கடும் உழைப்பையும், அறிவுத் தேட்டத் தையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. விவாதத்துக் குரிய கருத்துகள் இந்நூலில் இடம்பெற்று மேலும் ஆய்வுக்கான களங்களை உருவாக்கியுள்ளன. இந் நூலின் முன்னுரையில் (பக்: ஓஓ) இடம்பெற்றுள்ள,

1920-40 களுக்குப் பின்னர் அதாவது ரா. இராகவைய்யங்கார், மு.இராகவைய்யங் கார் போன்றவர்களின் காலத்தின் பின்னர் சங்க இலக்கியங்கள் பற்றிய இத்தகைய ஆய்வுகள் மிகக் குறைவாகவே இருந்தன. இதற்குப் பிரதான காரணம் திராவிடக் கருத்துநிலை வளர்ச்சியின் பின்னர் சங்க காலம் ஆரியக் கலப்பற்ற தமிழ்ப் பண் பாட்டின் பொற்காலமாகக் கருதப்பட்ட மையாகும்.

ஆனால், சங்க காலம் பற்றிய காய்தல், உவத்தலற்ற, ஆழமான, அகலமான, புலமைக் கட்டுப்பாடுடைய ஆராய்ச்சிகள் இப் பொழுது மீள வரத்தொடங்கிவிட்டன என்பதனை எடுத்துணர்த்தும் ஒரு சிறு குறியீடாகவே இத்தொகுதியினைப் பார்க் கின்றேன். நண்பர் பாண்டுரங்கன் கூறுவன எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியா தெனினும் அவற்றை அவர் எடுத்துக்கூறும் புலமை நேர்மை, ஆய்வுக் கடப்பாட்டுணர்வு, ஆழமான தேடல் ஆகியவற்றுக்காக அவரை வாழ்த்துதல் நமது கடன்.

நண்பர் பாண்டுரங்கன், என் போன்றவர்கள் இளைப்பாறும் நிலைக்கு வந்துவிட்டோம். இவற்றுக்கான விடைகளை நமது மாண வர்கள் தரவேண்டும்; தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

என்ற கா. சிவத்தம்பியின் கூற்று இந்நூலின் சிறப்பையும், எதிர்கால ஆய்வின் தேவையையும் சுட்டிக் காட்டுகிறது.

தொகை இயல் (அ.பாண்டுரங்கன்) (வெளியீடு : தமிழரங்கம், புதுச்சேரி)

Pin It