சென்ற வாரம் “சுயராஜ்யா” பத்திரிகையின் விஷமப்பிரசாரத்தைக் குறித்து எழுதியிருந்தோம். இவ்வாரம் “சுதேசமித்திரன்” பத்திரிகையினுடையவும், ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரினுடையவும் விஷமப் பிரசாரங்களுக்குப் பதில் எழுதும்படி வந்து விட்டது. சுதேசமித்திரன் பத்திரிகையில் சென்னையில் சுயராஜ்யக்கட்சியாரின் வெற்றியைக் கொண்டாட “ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரின் முயற்சி பலிக்கவில்லை” என்றும் “ வேலியே பயிரை மேய்கிறது” என்கிற தலைப்பின் கீழ் குறிப்பிட்டிருக்கும் பல பொய்களுக்கு பதில் எழுதாவிட்டாலும் ஈரோட்டில் தனது தம்பி முனிசிபல் சபையில் ஸ்தானம் பெறும்படி செய்வதற்காக காங்கிரஸ் பெயரையும் மகாத்மாவின் பெயரையும் ஸ்ரீ நாயக்கர் உபயோகப்படுத்திக்கொண்டது ஞாபகமில்லையா என்று பெரிய பொய்யை எழுதியிருக்கிறது.

முதலாவது ஸ்ரீமான் ராமசாமி நாயக்கருக்கு தம்பியே கிடையாது. சென்ற வருஷத்தில் நடந்த ஈரோடு முனிசிபல் தேர்தலில் அவர் தமையனார் முனிசிபல் அபேட்சகராய் நிற்கிற காலத்தில் ஸ்ரீமான் நாயக்கர் திருவனந்தபுரத்தில் இருந்திருக்கிறார். அவர் திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையாகி ஈரோட்டிற்கு வந்த பொழுது முனிசிபல் தேர்தலுக்கு மூன்று நாட்கள்தானிருந்தன. ஈரோட்டிற்கு வந்த உடனே வேறு கேஸின் பேரில் சென்னைக்கு நாயக்கரைப் பிடித்துக்கொண்டு போய்விட்டனர். சென்னையிலிருந்து எலக்ஷனுக்கு முன்தினம் பகல்தான் ஈரோட்டிற்கு வந்து சேர்ந்தார்.

 ஒருசமயம் ஒன்று இரண்டு ஓட்டர்களோடு பேசக்கூடிய சமயம் இருந்திருந்தாலும் மகாத்மாவின் பெயரையும் காங்கிரஸின் பெயரையும் ஸ்ரீமான் நாயக்கர் பயன்படுத்திக்கொண்டார் எனச்.... வேண்டுமென்றே காங்கிரஸின் பெயரால் நிற்பதற்கு வேண்டி வேறு சில அபேட்சகர்கள் வேறு ஒரு எலக்ஷனுக்காக அச்சுப்போட்டு வைத்திருந்த காங்கிரஸ் நிபந்தனைப் பிரசுரங்களையும் கிழித்து எறிந்திருக்கிறார்.ஈரோட்டில் காங்கிரஸின் பெயரை முனிசிபல் நிர்வாகத்திற்குள் கொண்டு வந்து விடக்கூடாது என்று எவ்வளவோ பிரயத்தனப்பட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அடுத்தபடியாக “ஸ்ரீமான் நாயக்கரின் முயற்சி பலிக்கவில்லை” எனத் தலையங்கம் போட்டு வெற்றி கொண்டாடி இருக்கிறார்கள். ஸ்ரீமான் நாயக்கரின் முயற்சி பலிக்கவில்லையென்பதை ஒரு சமயம் ஒப்புக்கொள்வதானாலும் அதன் வெற்றியை இவர்கள் பாராட்டிக்கொள்ளமுடியாது. ஏனென்றால் ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரவர்களும், ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களும் செய்த பிரசங்கங்களினாலும் பொதுஜனங்களுக்குத் தெரிவித்துக் கொண்டு வந்த ஸ்ரீ முகங்களினாலும் முறையே பொது ஜனங்கள் இந்தக் கூட்டத்தாரை நம்பும்படியாகி நம்பிக்கைத் துரோகத்தின் மூலமாய் வெற்றி ஏற்பட்டுவிட்டது. நம்பிக்கை துரோகத்தின் மூலமாய் ஏற்பட்ட வெற்றியைக் கொண்டாடுவது கீழ் மக்களின் பிறப்புரிமையே அன்றி மேல் மக்களின் தன்மை அல்ல.

பொது மக்கள் ஏமார்ந்தவர்களாய் இருக்கிறவரையிலும் இவ்விதமான காரியங்களைத் திடீரெனத் தடுப்பது சுலபமான காரியமல்ல. ஆயினும் தேசத்தின் பொருட்டு உண் மையை உரைத்து அதனால் ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளவும் சித்தமாயிருக்கிறோம் என்று ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரவர்கள் சீனிவாசய்யங்கார் வசை பொறுக்காமல் தமது நவசக்தியில் எழுதியிருப்பது போல் நமது கடமையைச் செய்யாமலிருக்கப் போவதில்லை.

ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள் நன்னிலத்தில் ஒரு கூட்டத்தில் பேச சந்தர்ப்பம் கிடைத்தபொழுது கூறியிருப்பதானது ஒரு புத்தி சுவாதீனமில்லாதவரிடம் கூட எதிர்பார்க்க முடியாததாயிருக்கிறது.

க. அதாவது:- தென்னாட்டுத் திலகர் கூட மாறி இருக்கிறார். (இது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவைத்தான் மனதில் வைத்துப் பேசியதாகும்,

உ. “சீர்திருத்த விஷயத்தில் பண்டித நேருவுடைய தீர்மானம் தீவிர மானதாக இருக்கவில்லையெனச் சிலர் நினைக்கலாம். அப்படி இல்லையானால் சர். பி. சிவசாமி அய்யரும், ஸ்ரீமான் ரெங்காச்சாரியாரும் எவ்விதம் நம்முடன் வருவார்கள்? சீர்திருத்தம் கிடைக்காவிட்டால் அடுத்தபடியில் இறங்குவதாய்ச் சொல்லியிருக்கிறார். ஆகையால் சுயராஜ்யக் கட்சியினரிடம் சந்தேகம் ஏற்பட நியாயமில்லை.

ங. ஸ்ரீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கரும், ஆரியாவும், ஜஸ்டிஸ் கட்சியினர் ஆதரிக்கும் ஒரு சுயேச்சைக் கட்சியாரை சென்னை முனிசிபல் தேர்தலில் ஆதரித்துப் பேசியிருக்கிறார்கள்.

ச. ஸ்ரீமான்கள் ஈ.வி.ராமசாமி நாயக்கர், திரு.வி.கலியாணசுந்தர முதலியார் முதலியவர்களின் உட்கருத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஸ்ரீமான் முதலியாரும் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். அவருடைய செய்கை மாரீசன் செய்கையாகும். இவர்கள் தீவிர ஒத்துழையாமையை அநுஷ்டிக்க விரும்பினால் பெல்காம் காங்கிரஸில் ஏன் வற்புறுத்தியிருக்கக்கூடாது?

ரு. ஸ்ரீமான் ஈ.வி. ராமசாமி நாயக்கர் தீவிர ஒத்துழையாமையை விரும்பின் நான் திருவண்ணாமலையில் கொண்டுவந்த சுயேச்சை தீர்மானத்தை ஏன் எதிர்க்கவேண்டும்?

சா. கனம் பனகால் ராஜா கூப்பிட்டுவிட்டார் என்பதற்காக சென்னையில் ஸ்ரீமான் நாயக்கர் பிரசங்கம் புரிய வந்துவிட்டார்.

எ. ஆகையால் காங்கிரஸைப் பரிசுத்தப்படுத்த வேண்டியது அவசியமாயிற்று. நான் அந்த வேலையைத்தான் முதலில் பார்க்கப் போகிறேன்.

அ. தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவரைப் பற்றித் தகரார் இல்லை.

க்ஷ. குருகுலத்தார் கொள்கையில் எனக்கு அநுதாபம் இருந்த போதிலும் அநுபவத்தில் அது இப்பொழுது சாத்தியப்படாது என்பதனாலேயே நான் ஒதுங்கி நிற்க நேர்ந்தது.

ய. எங்கள் கட்சியில் குறைகள் இல்லை என்று சொல்லவில்லை. எங்கள் கட்சியின் க்ஷமத்தில் உண்மையாக அபிமானம் உள்ளவர்கள் உள்ளே புகுந்துதான் திருத்தவேண்டும் என்று இன்னும் பலவாறாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

பதில்

க. தென்னாட்டுத்திலகரென்னும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு ஜஸ்டிஸ் கட்சியாரை ஊர் ஊராய்த் தூற்றி வெற்றிமாலை சூடி வந்தகாலத்தில் ஸ்ரீமான் அய்யங்கார் கூட்டத்தினர்தான் ஸ்ரீமான் நாயுடுவுக்கு தென்னாட்டுத்திலகர் என்று பட்டம் கொடுத்ததும் வண்டியில் உட்கார வைத்துக் குதிரையை அவிழ்த்து விட்டுக் கையால் இழுத்ததும் அவர் பின்னால் அய்யர் அய்யங்கார் கூட்டங்கள் போய் அவரைக் கொண்டு தங்கள் பேரில் பொது ஜனங்கள் முன்னால் கவி பாடச் செய்து ஜஸ்டிஸ் கட்சியை ஆழ்த்தி தாங்கள் தலைவர்களாகி விட்டதும் மறந்து விட்டு இப்பொழுது மாறிவிட்டார் என்கிறார்கள். ஆனாலும், நாம் அதற்காகச் சிறிதும் கவலைப்படவில்லை. ஏனென்றால், இந்த அய்யர் அய்யங்கார் கூட்டங்களும் அவர்களது பத்திரிகைகளும் மறுபடியும் முன்போலவே ஸ்ரீமான் நாயுடுவின் படத்தை தங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்யும் படியும் வண்டியில் வைத்து இழுக்கும்படியும் செய்து கொள்ள அவருக்குத் தெரியும்.

உ. சீர்திருத்த விஷயமாய் இவர் பெருமை பாராட்டிக்கொள்வதற்குக் காரணம் சர்.பி.சிவசாமி அய்யரும், ஸ்ரீமான் ரெங்காச்சாரியாரும் இவர்களுடன் வரும்படி செய்துவிட்டார்களாம். இப்பேர்ப்பட்ட பிரபுக்களுடன் சேர்ந்து செய்து கொள்ளும் சீர்திருத்தத்தை விட ஜஸ்டிஸ் கட்சியாருடன் சேர்ந்து செய்து கொள்ளும் சீர்திருத்தம் ஒருவிதத்திலும் கேவலமாக இருக்காது. ஏனென்றால் சிவசாமி அய்யருடை கோரிக்கைகளுக்கும், அபிப்பிராயங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியாருடையவோ இன்னும் ஆங்கிலோ இந்தியர்களுடையவோ இன்னும் மற்றும் எவருடையவோ ராஜிய அபிப்பிராயம் மோசமாயிருக்குமென்று கடுகளவு புத்தி உள்ளவனும் நினைக்க மாட் டான். இதனாலேயே சுயராஜ்யக் கட்சியின் ராஜீயத்திட்டம் எத்தகைய யோக்கியதை உடையதென்பதை பொது ஜனங்களுக்கு நாம் சொல்ல வேண்டுவதில்லை.

ங. ஸ்ரீமான் ஆரியாவும், ராமசாமி நாயக்கரும் ஒரு சுயேச்சைக் கட்சியாரை ஆதரித்ததாக சொல்லுவது உண்மையான காரியமல்ல. ஸ்ரீமான் ஆரியாவைப்பற்றி ஸ்ரீமான் ஆரியாவே பதில் சொல்லுவார். ஸ்ரீமான் ராமசாமி நாய்க்கர் சென்னைக்குப் போனது ஓட்டர்களின் கடமையை எடுத்துச்சொல்வதற்காகவே தான். ஒரு அபேட்சகரையும் ஆதரிக்கவில்லை. சுயராஜ்யக் கட்சியார் சென்னைத் தேர்தலில் செய்யும் கொடுமைகளையும் சூழ்ச்சிகளையும் ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களால் கேள்விப்பட்டு அதையும் அறிந்து வரவேண்டுமென்கிற கவலையாலுமேதான். அங்குபோய் பார்த்தவரையிலும் சுயராஜ்யக் கட்சியாரின் நடவடிக்கை ஸ்ரீமான் முதலியாரவர்கள் சொல்லியதைவிட எவ்வளவோ மடங்கு அதிக மாயிருந்தது. இவர்களை சுயராஜ்யக் கட்சியென்று கூப்பிடுவதே வியபசாரிகளை தேவதாசிகளென்று சொல்வது போலும், கொடுமைக்காரரை பிராமணர்கள் என்று சொல்வதுபோலும் தற்காலக் கோர்ட்டுகளையும், வக்கீல்களையும் நியாயஸ்தலம் என்றும், நியாயவாதி என்றும் சொல்வதுபோலும் சர்க்கார் உத்தியோகஸ்தர்களை பொதுஜன ஊழியர்கள் என்று சொல்வது போலும் தேசத்தின் பொருளை கொள்ளை அடித்துக் கொண்டுபோகவந்திருக்கும் ஒரு வியாபாரக் கூட்டத்தாரை அரசாங்கத்தார் என்று சொல்வது போலும் அந்நிய ராஜ்யம் நிலைபெறுவதற்குப் பாடுபடப் பிறந்திருக்கும் ஒரு கூட்டத்தாரை சுயராஜ்யக் கட்சியாரென்று கூப்பிடுவது குற்றமல்லவென்று நினைக்கும்படி ஆகிவிட்டது.

ச. ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியை வைது தனது தேசபக்தன் பத்திரிகையில் கலம் கலமாய் எழுதி அதற்கு செல்வாக்கில்லாமல் அடித்துக்கொண்டு வந்த காலத்தில் அவருடைய மனப்பான்மையானது இந்த ஐயங்கார்களுக்கு வெகுசுலபமாய்த் தெரியக்கூடியதாகவிருந்தது. இப்பொழுது சுயராஜ்யக் கட்சியின் பெயரால் இந்த ஐயர் ஐயங்கார்கள் செய்யும் அக்கிரமங்களை எவ்வளவோ தற்காப்புடன் கொஞ்சம் வெளியிடுவதினாலேயே அவர் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று சொல்லுவதற்கே தைரியம் வந்துவிட்டது. கூட்டத்திலிருந்த ஒருவர் ஸ்ரீமான் முதலியார் கூடவா ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று கேட்க, ஆம், ஏழுகிணற்று வீதியில் வந்து விசாரித்துப்பாருங்களென ஐயங்கார் சொல்லி விட்டார். இதைப் பார்த்த ஸ்ரீமான் முதலியார் அவர்களும் மனம் நொந்து ஏழு கிணற்று மீட்டிங்கில் சுயராஜ்யக் கட்சி சார்பில் தாமே அக்ராசனம் வகித்து சுயராஜ்யக் கட்சியார்க்கே ஓட்டுக்கொடுக்க வேண்டுமென்று சொன்னதாகவும் கீழ்ப்பாக்கத்து மீட்டிங்கிலும் ஸ்ரீமான் இ.எல். ஐயருக்கு ஒட்டுக்கொடுக்கும்படிச் சொல்லியதையும் சுட்டிக்காட்டி ஐயங்கார் கூற்றை முழுவதும் பொய்யென்று மறுத்து பத்திரிகை செய்திக்கும் ஒரு மறுப்பும் எழுதியிருக்கிறார்.

மற்றோரிடத்தில் ஸ்ரீமான் அய்யங்கார் எம்மை (ஸ்ரீமுதலியாரை) சுயராஜ்யக்கட்சிக்கு எமன் எனக்கருதி மனம் போனவாறு பேசுகிறார். செல்வச்செருக்கும், செல்வாக்குப் பெருக்கும் நிலையில்லாதது என்பதை ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரருக்கு நினைவூட்டுகிறோம் என்று ஒரு பெரிய சாபமும் கொடுத்துவிட்டு மற்றோரிடத்தில் ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தமக்கு தேசமே பெரியதென்றும் தேசத்தின் பொருட்டு உண்மை உரைத்து அதனால் ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளச் சித்தமாய் இருக்கிறோம் என்றும் வீரப்போர் முழக்கியிருக்கிறார். இதிலிருந்தே ஸ்ரீமான் ஐயங்காரவர்களையும், முதலியார் அவர்களையும் நன்றாய் அறிந்தவர்களுக்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் யோக்கியதை எத்தகையது என்பது நன்கு விளங்கும்.

ஸ்ரீமான் நாயக்கரைப்பற்றி சொல்லியிருப்பவைகளுக்கு அதிகமாக பதில் சொல்லவேண்டியதில்லையென்றே நினைக்கிறோம். ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கப் பாடுபட்டு அதை ஒழித்து பிராமணர்களுக்கு ஆக்கம் தேடிக்கொடுத்த ஸ்ரீமான்கள் நாயுடு, முதலியார் போன்றவர்கள் கதிகளே இப்படி இருக்குமானால் ஜஸ்டிஸ் கட்சியைவிட தமிழ்நாடு சுயராஜ்யக் கட்சியார் அரசியல் கொள்கையில் தாழ்ந்தவர்களென்றும் அது பிராமணக்கட்சி என்றும் சொல்லி வருபவரும் எழுதிவருபவரும் சுயராஜ்யக் கட்சி ஜஸ்டிஸ் கட்சியைவிட மோசமான ராஜீயக்கொள்கை உடைய சுயநலக்காரர்கள் கட்சி என்றும் காங்கிரஸிலிருந்து கொண்டு உத்தியோகமும் பணமும் பெருமையும் அடைந்து வருகிறார்களென்றும் எல்லாக் கட்சியிலும் அயோக்கியர்களும், யோக்கியர்களும் இருக்கிறார்களென்றும் சொல்லிவந்த நாயக்கரைப்பற்றி இவர்கள் என்னதான் சொல்ல அஞ்சுவார்கள்?

தாங்கள் மனிதர்கள் ஆவதற்காகவும் பாமர ஜனங்களிடம் செல்வாக்குப் பெறுவதற்காகவும் நாயக்கர் பின்னால் இவர்கள் ஊர் ஊராய்த் திரிந்து கொண்டிருந்தகாலத்தில் நாயக்கரை பிரம்மரிஷியென்றும் ராஜரிஷியென்றும் துறவியென்றும், சந்நியாசியென்றும், தமிழ்நாடு காந்தி என்றும் ஸ்ரீமான் நாயக்கர் போன்றவர்களெல்லாம் காங்கிரஸில் இருக்கும்பொழுது ஏன் பொதுஜனங்கள் காங்கிர சைப்பற்றிச் சந்தேகப்படவேண்டும் என்றும் சொல்லியும் விளம்பரப்படுத்தியும் வந்தவொரு கூட்டத்தார் தங்களுடைய சுயநலத்திற்குக் கொஞ்சம் விரோதமாக இருப்பதைப் பார்த்தவுடன் ஆரியாவும், முதலியாரும், நாயக்கரும் காங்கிரஸிலிருப்பதனால் இவர்களைக் காங்கிரசைவிட்டு வெளியாக்கி காங்கிரசைப் பரிசுத்தமாக்கவேண்டியது அவசியமாகிவிட்டதெனச் சொல்லுவது ஓர் அதிசயமா?

 நாயக்கர் பேசுவதையும் எழுதுவதையும் தாங்கள் சொல்லி எழுதி பதில் சொன்னால் இவர்கள் வீரர்கள்தான். அஃதின்றி கோழைத்தனமாய் உளருவதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? பெல்காம் காங்கிரசில் நாயக்கர் பூரா ஒத்துழையாமையையும் வலியுறுத்தியதை அய்யங்கார் மறந்து விட்டாரோ?

ரு. திருவண்ணாமலையில் ஸ்ரீமான் நாயக்கர் சுயேச்சை தீர்மானத்தை ஏன் எதிர்த்தார் என்று கேட்கிறார்? ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு சுயேச்சை தீர்மானம் கொண்டுவர யோக்கியதை உண்டா? விடிந்து எழுந்தால் அதிகாரவர்க்கத்தினிடம் சென்று கடவுளே பிரபுவே எனக் கெஞ்சுகிறார், அதன் மூலமாகவே பணம் சம்பாதித்து வாழ்கிறார். ஜனங்கள் கூட்டம் கூட்டமாய் ஜெயிலுக்குப்போகத் தயார் செய்துகொண்டிருந்த காலத்தில் ஒத்துழையாமை சட்ட விரோதமானது, அதை அடியுடன் ஒழித்துவிடவேண்டுமென சர்க்காருக்கு யோசனை கூறினார். சர்க்காரும் இவர் யோசனையை துண்டுபிரசுர மூலம் வெளியிட்டார்கள். காந்தி அடிகள் வக்கீல் தொழிலை நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்ட காலத்தில் மகாத்மாவிற்குப் புத்தியில்லை என்று சொல்லிக் கொண்டு லட்சக்கணக்காய் சம்பாதித்துக் கொண்டிருந்தார். இப்பேர்ப்பட்டவர்களை வைத்துக்கொண்டிருக்கும் தேசத்திற்கு முழு சுதந்திரமும் வேண்டுமென்று இவர் கேட்டபொழுது பெரும்பான்மையோர் அதை எதிர்த்தது நாயக்கர்பேரில் ஒரு தப்பிதமாகப் போய்விட்டதாம்.

 மகாத்மா கோரும் ஏழைகளின் சுயராஜ்யமே இவர்களுக்குப் பிடிக்காமல் ஒத்துழையாமையை பாழாக்கிவிட்ட இவர்கள் பூரா விடுதலைக்கு இவர்கள் பாடுபடுவார்கள் என்பதை எந்த மனிதன் நம்புவான்? அப்படித்தான் வேறு யாராவது பாடுபட்டு வாங்கிக் கொடுத்து விட்டால் சுயராஜ்யம் இல்லாத காலத்திலேயே தாங்கள் உயர்ந்த ஜாதியார்கள், மற்றவர்கள் வேசிமக்களென்றும் மனிதருக்கு மனிதர் பார்த்தால், பேசினால், கிட்டவந்தால், தெருவில் நடந்தால் பாபம் என்று நினைத்து அதன்படி நடந்து கொண்டிருக்கிறவர்கள் யோக்கிய மாய் சமத்துவமாய் நடந்துகொள்வார்கள் என்று எப்படி நம்பமுடியும்? அல்லாமல் காங்கிரசாவது தீவிர ஒத்துழையாத் திட்டமாவது ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் கொண்டு வந்த சுயேச்சை தீர்மானத்தை ஒரு திட்டமாய் கொண்டிருக்கிறதா? அல்லது ஆதரிக்கிறதா? இவற்றை கொஞ்சமும் யோசிக்காமல் ‘தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி தண்டப் பிரசண்டன்’ என்று சொல்லுவதுபோல் பாமர ஜனங்களிடம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று வக்கீல் புத்தியைக் காட்டி விட்டார் போலும்!

சா. கனம் பனகால் ராஜா கூப்பிட்டதற்கு ஆக சென்னைக்கு வந்து பேசியது என்பது :- ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து கொண்டனர். பனகால் ராஜா கூப்பிட்டார்; அவரிடம் பேசினார் என்கின்ற இந்த மூன்று. ஆக தங்களாலேயே பிராமணரல்லாத காங்கிரஸ்காரர்களை கொன்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டு ஒவ்வொரு சமயத்திலும் இதை உபயோகிக்கிறார்கள். இந்த குணம் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் மாத்திரம் அல்ல. இந்த ஜாதி பத்திரிகைகளிடமும் காங்கிரஸ்காரரிடமும் இருக்கிறது. இதைப்பற்றி முன்னம் ஒரு தடவையும் இப்படியே சொல்லியும் எழுதியுமிருக்கிறார்கள். அதுகளுக்கு கொடுத்த பதில், மானம் வெட்கம் உள்ளவர்களாயிருந்தால் மூன்று தலை முறைக்கு இப்பேர்ப்பட்ட நீச்சக் காரியத்தில் மறுபடியும் இறங்கத் துணியவே மாட்டார்கள். சென்னைக்கு வந்து ஸ்ரீமான் நாயக்கரைப் பிரசங்கம் செய்யும் படி பனகால் ராஜா கூப்பிட்டதாக இவர் சொல்லுவதை ருஜு செய்தால் யோக்கியமானவர்தான். இல்லையேல்............................................................................

(குடி அரசு - தலையங்கம் - 20.09.1925)

Pin It