வளர்ச்சி முகமூடி தரித்து
வலம் வரும் இப்பேய்
சொற்பமாய் விண்ணுயர்த்தி
லட்சமாய் காவு கொள்கிறது
பூர்வ குடிகளின் நில ரத்தம் உறிந்து
வளம் சுரண்டி
மண்ணுயிர் வற்றச் செய்கிறது
நிலம் புசித்து
உழவனின் உயிர்குடித்து
நரதாகம் தணிகிறது
அரசுத் துறைகளை நசித்து
இடஒதுக்கீட்டிற்குக் குழிபறித்து
விஷம் வைத்து
விளிம்பு நிலை மக்களை
வீதிக்குத் துரத்துகிறது
ஆங்கிலமே ஆளுமைமொழி
அறிவுமொழியெனப் பசப்பி
தாய்மொழி பேசுபவரைத்
தாழ்வு கொள்ள வைக்கிறது.
மதர்த்த பணத்தை மண்ணில் கொட்டி
வீடற்றவர்களாக்குகிறது
மேல்நாட்டு டாலருடன் மண்ணில் பண்பாட்டை
வன்புணர்ச்சி செய்கிறது
இத்தனைக்குப் பிறகும்
சிவப்புக் கம்பளம் விரித்து
வரவேற்றபடியிருக்கின்றனர்
மக்களின் காவலர்கள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
விழி - டிசம்பர் 2007
உலகம(ப)யம்
- விவரங்கள்
- யாழினி முனுசாமி
- பிரிவு: விழி - டிசம்பர் 2007