“வாடிப் போகாத பூவும் இல்லை

மோடி போகாத நாடும் இல்லை”

என்று அண்மையில் கட்செவி ஊடகத்தில் (வாட்ஸ் அப்) ஒரு பதிவைப் பார்த்தேன். உண்மைதான். மோடி அரசில் இரண்டு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒன்று, பிரதமரின் வெளிநாட்டுப் பயணம். இன்னொன்று, இந்துத்துவத் திணிப்பு!

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலில் தொடர்ந்து நடைபோடும் இன்றைய பா,ஜ,க. அரசு,  கங்கை ஆற்றின் தண்ணீரை விற்பனை செய்யும் பணியை .இப்போது  அஞ்சலகத்திற்குக் கொடுத்துள்ளது. இந்திய அஞ்சல் துறை ஏறத்தாழத் தன் இறுதி மூச்சை விட்டுக் கொண்டுள்ளது. அஞ்சல் துறை மிகப் பெரிதும் தனியார் வயம் சென்றுவிட்டது. உடனடியாகக் கடிதம் செல்ல வேண்டுமானால், தூதஞ்சல் (கூரியர்), எப்போது வேண்டுமானாலும் சென்றால் குற்றமில்லை என்றால் அரசின் அஞ்சல் துறை என்ற நிலையே இன்று உள்ளது.

அஞ்சல் துறையில் கடிதங்களைப்  பிரிக்கும் பகுதி (sorting section) இப்போது இல்லை. அதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழந்துவிட்டனர்.  அதன் விளைவாகக் கடிதங்கள் காலம் தாழ்ந்து போய்ச் சேருவதால் பொது  மக்களுக்கும் ஒரு சலிப்பு. இவைகளையெல்லாம் சரி செய்யாமல், கங்கை நீர் விற்பனையை இன்று அவர்களின் பணியாக ஆக்கியிருப்பது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து!

கங்கை ஆறு புனிதமானதென்றால், இந்தியாவில் ஓடும் மற்ற ஆறுகள் எல்லாம் புனிதம் இல்லாதவைகளா? ஆறு என்றால் எல்லாம் ஆறுதான். இதில் ஒன்றைப் புனிதம் என்று கூறுவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையை மக்கள் மனங்களில் விதைப்பதுதானே அரசின் நோக்கம்?

சரி, கங்கை ஆற்றில்தான் என்ன புனிதம் உள்ளது? 2525 கிலோமீட்டர் ஓடுகின்ற ஒரு மிக  நீளமான ஆறு அது. உத்தரகாண்ட் மாநிலத்த்தில் தொடங்கி, ஓரிரு மாநிலங்களைக் கடந்து பங்களா தேசத்திற்குப் போய், வங்காளக் குடாக்  கடலில் கலக்கின்ற ஆறுதான் கங்கை. இமாலய மலையிலிருந்து தோன்றி, ஓடி வருகிற ஆறு. நம்மில்  பலர் ரிஷிகேஷ் சென்றிருப்போம். அந்த ஆறு அங்கே ஓடி வருகிற அழகைப் பேரழகு என்றுதான் சொல்ல வேண்டும். அதில் ஒன்றும் மதம்  எல்லாம் இல்லை. 

ஆற்றுக்கு ஏது மதம்? ஆற்றுக்கு ஏது கடவுள்? ரிஷிகேஷில் கங்கை ஓடி வருகிறபோது அந்தப் பாலத்திற்குத்தான் ராமர் பாலம், லக்ஷ்மன் பாலம் என்று இவர்கள் கடவுள் பெயர் வைத்திருக்கிறார்கள். ஹரித்துவாருக்கு வருகிற வரையில் ஆறு ஆறாகவே இருக்கிறது. ஹரித்துவாருக்கு வருகிறபோது கொஞ்சம் களங்கப்படுகிறது. வாரணாசிக்குப் (காசி) போனால் முடிந்து போயிற்று. பிணங்கள் எரிப்பதற்கான ஒரு ஆறாக அது மாறிப் போய் விடுகிறது.

கங்கையைப் பற்றி இன்னொரு செய்தி! இந்து  மதச் சார்புடையோர் அதனைப் புனிதம் என்கின்றனர். ஆனால் அறிவியல் அந்த ஆற்றைப் பற்றி என்ன சொல்கிறது? ஆங்கிலத்தில் அந்த வரியை அப்படியே பார்க்கலாம் -” the most fifth polluted water in the world” என்று சொல்கிறது. உலகத்திலேயே மிகவும் மாசு படுத்தப்பட்டுப் போயிருக்கிற ஐந்தாவது ஆறு கங்கை. நம்மை மிஞ்சி நான்கு ஆறுகள் இருக்கின்றன.

வாரணாசிப் பகுதியிலிருந்து கடலில் கலக்கின்ற வரைக்கும் 40 கோடி மக்களைத் தாண்டி அந்த ஆறு ஓடுகிறது. நாற்பது கோடி மக்களுக்கும் முடிந்தவரையில் எல்லா நோய்களையும் எடுத்துச் செல்கிறது. குறிப்பாக, 10 லட்சம் மக்கள் வாரணாசியில் அன்றாடப் பயன்பாடுகளுக்கு அந்த கங்கை ஆற்றை நம்பியுள்ளனர். வாரணாசியில் இரண்டு கரைகளிலும் வீடுகள். இந்தப் பக்கமெல்லாம் பிணத்தை எரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பக்கம் மக்கள் வாழ்கிறார்கள்.

காசிக்குப் போனவர்கள் எல்லோரும் ஒரு போத்தலில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவார்கள். தெரியாமல் கூடக் குடித்து விடக் கூடாது. பொதுவாக அதனை யாருக்குக் கொடுப்பார்கள் என்றால், இறந்துபோகிற நிலையில் இருப்பவனுக்கு கொடுப்பார்கள். கடைசியாக வழியனுப்புகிற விழா அது. அதைக் கொடுத்த உடனே முடிந்தது. அப்புறம் பிழைக்கவே மாட்டான்.

மனிதனின் கழிவிலிருந்து உற்பத்தியாகிற நோய்க் கிருமிகள் கங்கையில் உள்ளன. அது பொதுவாக ஆறுகளில் இருக்கும். ஆனால் அந்த அளவைக் காட்டிலும் 120 மடங்கு கங்கை ஆற்றில் கூடுதலாக இருக்கிறதாம். என்ன ஆவது?

ஹைதராபாத்திலிருக்கிற அணுசக்தி தேசிய மையம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கங்கை ஆற்றைச் சுத்தப் படுத்தாமல் வைத்திருந்தால் இங்கே விரைவில் நாடு முழுவதும் புற்று நோய் பரவுமென்று கூறியுள்ளது. அதற்குப் பிறகுதான், உமாபாரதி அதற்கான அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ‘புனிதமான ஆற்றைப் புனிதப்படுத்துவதற்கு’ ஓர் அமைச்சகம்.  புனித ஆறு யாரையும் காப்பாற்றவில்லை. புனித ஆற்றை அரசு காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

1985ஆவது ஆண்டு மட்டும் உலக வங்கி 2.2 கோடி டாலர் பணத்தை அதற்காகக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து உலக வங்கியும், உலக நிதி மையமும் பணத்தை அள்ளி வீசிக் கொண்டே இருக்கிறார்கள். பணம் கரைந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் கங்கை சுத்தப்படவில்லை. பிணத்தை எரிப்பதை நிறுத்தினால்தானே அது சுத்தமாகும்? இன்றைக்கும் பிணத்தை எரித்து எரித்து ஆற்றுக்குள் தள்ளிவிடும் ஒரு போக்கு நடைமுறையில் இருக்கிறது. இந்தப் புனித ஆற்றினுடைய நிலை இது.

இந்த ஆற்று நீரைத்தான் புனிதம் என்று சொல்லி இன்று அஞ்சல் நிலையங்களில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது மத்திய அரசு. இந்துக்கள் என்று தங்களை நினைத்துக் கொண்டிருப்போரின் நம்பிக்கை இப்போது போத்தல்களில் அடைக்கப்பட்டு எல்லோருக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அரசின் இந்தப் போக்கை மதச் சார்பற்றவர்கள் அனைவரும் ஒன்று கூடிக் கண்டிக்க வேண்டும்!

Pin It