உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியுள்ள விந்தை ஒன்று அண்மையில் அரங்கேறி உள்ளது! இனிமேல் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கினால், அதை மறு விசாரணை செய்து, ஒரு கீழமை நீதிமன்றம் மறு ஆணை வெளியிடலாம் போலத் தெரிகிறது!
"தீபங்கள் எல்லாம் தலைகீழாய்த் தொங்கும் நம் காலத்தில் ....." என்று ஒரு கவிதையைத் தொடங்குவார் , கவிக்கோ அப்துல் ரகுமான்! நீதிமன்றங்களும் இப்போது தலைகீழாய்த் தொங்குகின்றன!
துணைவேந்தர் நியமன அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய பிறகு, அதற்குச் சென்னை உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது!
இதுகுறித்து முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பலரும் தங்களின் விமர்சனங்களை எடுத்து வைத்துள்ளனர். நீதியரசர் அரி. பரந்தாமன் அவர்கள் அடிப்படையாக இரண்டு வினாக்களை முன் வைத்துள்ளார்.
விடுமுறைக் கால நீதிமன்றம், இதனை அவசர வழக்காக எடுத்துக் கொண்டது எந்த அடிப்படையில் என்பதும், திருநெல்வேலியில் உள்ள ஒருவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையை நாடாமல், சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்றது எதற்காக என்பதும் அவர் எழுப்பியுள்ள இரண்டு வினாக்கள் !
பொதுவாக, மதுரை உயர்நீதிமன்றக், கிளை உட்பட, சென்னை உயர்நீதிமன்றத்தில் 45 நீதிபதிகள் இருக்கிறார்கள் என்றால், தென்னிந்திய நீதிமன்றங்களுக்கு விடுமுறைக் காலமான மே மாதத்தில், மூன்று நீதிபதிகள்தான் அமர்வார்கள். அவர்களும் கூட வாரத்திற்கு ஒரு முறைதான் வழக்குகளை விசாரிப்பார்கள். எஞ்சிய வழக்குகளை மறுநாள் விசாரிக்கக் கூடும். அவ்வளவுதான்! எனவே இந்தக் காலகட்டத்தில், வீடு இடிப்பு - ஊதிய நிறுத்தம் - போன்ற அவசரமான வழக்குகள் மட்டும்தான் விசாரிக்கப்படும்! மே மாதத்திற்குள் முடிவெடுக்கவில்லை என்றால், நீதி தவறிக் கெடும் என்று கருதப்படும் நிலையில்தான் வழக்குகள் விசாரிக்கப்படும். இல்லையானால், வழக்கமான நீதிமன்றத்தில் ஜூன் மாதம் அவற்றை எடுத்துக் கொள்ளலாம்!
இப்போது பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் தொடர்பான இவ்வழக்கு, மே மாதமே விசாரிக்கப்பட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை! துணைவேந்தர்களுக்கான தேர்வுக் குழுவே இன்னமும் நியமிக்கப்படவில்லை. இந்த வழக்கில் எந்த அவசரமும் இல்லை. ஆனால் இதனை விடுமுறைக் காலத்தில் அவசர வழக்காக எடுத்துக் கொண்டு, விடை தருவதற்குத் தமிழ்நாடு அரசுக்கு உரிய கால அவகாசம் கொடுக்கவும் நீதிமன்றம் மறுத்திருக்கிறது!
இரண்டாவதாக, திருநெல்வேலியைச் சேர்ந்த பாஜகவின் நிர்வாகி ஒருவர், இந்த வழக்கை தொடுத்திருக்கிறார். அவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையைப் புறக்கணித்துவிட்டு, சென்னை உயர்நீதிமன்றம் நோக்கி சென்றதற்கான காரணம், நீதியை நீதிமன்றம் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, நீதிபதியை மனுதாரர் தேர்ந்தெடுத்து இருக்கிறாரோ என்ற எண்ணம் வருகிறது!
இந்த நிலை நீதிக்கும் நல்லதில்லை, நாட்டுக்கும் நல்லதில்லை!
- சுப. வீரபாண்டியன்