“தரமான மருத்துவர்களை உருவாக்கப் போகிறோம், அரசியல் அதிகாரக் குறுக்கீடற்ற நேர்மையான தகுதித் தேர்வை நடத்தப் போகிறோம்” எனத் தம்பட்டம் அடித்து ஒன்றிய பாஜக கொண்டு வந்த NEET தேர்வில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் முறைகேடுகளும், அது குறித்து வரும் அடுக்கடுக்கான புகார்களும் “NEET ஒரு தகுதியற்றத் தேர்வு” என்ற உண்மையை உணர்த்தி இருக்கின்றன.

நீட்டுக்கெதிராக இந்தியாவிலேயே முதல் குரலை எழுப்பியது தமிழ்நாடும், திராவிட முன்னேற்றக் கழகமும் தான். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றும், பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டுமென்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.stethoscope 469வேறு எந்த மாநிலத்திலும் பெரிதாக எதிர்ப்புக் குரல் வராத போதும், தமிழ்நாடு முழுவதும் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பொதுக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள் என மக்கள் மன்றத்திலும், இரண்டுமுறை நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானங்கள் என  நீட் எதிர்ப்பில் உறுதியாக நிற்கிறது திமுகவும், திராவிட இயக்கங்களே.

2021 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆர்கே எஜுகேஷன் கேரியர் கைடன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமும் ரூபாய் 50 லட்சம் வாங்கிக் கொண்டு ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது அப்போது அம்பலமானது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு விசாரணையை நடத்தி வருகிறது.

பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகவும், ஒரு மாணவருக்கு ரூ.30 லட்சம் வரை பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.

இதைப் போல குஜராத்தின் பன்ச்மகால் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடப்பதாக மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின் அடிப்படையில் மாவட்டக் கல்வி அதிகாரியுடன் அங்கு முழுமையாக விசாரணை நடத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர். அப்போது தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியரான துஷார்பத், நீட் தேர்வு மைய துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். இவர் மாணவர்களுக்கு உதவுவதாகக் கூறி, பேரம் பேசியிருக்கிறார். இவருக்கு உதவியதாக மேலும் இரண்டு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இவரது காரிலிருந்து மாணவர்களின் பெற்றோர் அளித்த ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்துள்ளனர் காவல் துறையினர். அதன்படி, பதில் தெரியாத விடைகளை மாணவர்கள் வெறுமனே விட்டுவிட்டுச் செல்லும்படியும், விடைத்தாள்கள் பெற்ற பிறகு மோசடியாளர்கள் அதனைப் பூர்த்தி செய்வதாகவும் பேரம் பேசப்பட்டுள்ளது. துஷார்பத்தின் அலைபேசியில் தேர்வு எழுதும் 16 மாணவர்கள் பெயர்கள்,  அவர்களது தேர்வு எண்கள் ஆகியவை இருந்துள்ளன. மாணவர்கள் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற, ஒரு மாணவருக்கு 10 லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டு, முன்பணமாகத் தரப்பட்ட 7 லட்ச ரூபாய் பணமும் துஷாரின் வாகனத்திலிருந்து கைப்பற்றப்பட்டு அவர் கைது செய்யப் பட்டுள்ளார். மேலும் இந்த ஆண்டு, 12 ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வில் 1 மதிப்பெண் பெற்ற மாணவி நீட் தேர்வில் முழு மதிப்பெண்களையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த நூற்றாண்டில் சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடித்தவர்கள் இப்போது நீட்டைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். ஆக, ஆர்எஸ்எஸ், பாஜக, சங் பரிவாரங்கள் தூக்கிப் பிடிக்கிற எந்த ஒன்றும் மனித குலத்திற்கு எதிரானது, ஜனநாயத்திற்கு ஆபத்தானது என்பதற்கு நீட் தேர்வே சான்று!

நெல்லை பாபு

Pin It