இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்வார்கள். இந்தியாவில் அதிபர் முறை ஆட்சியில்லை, நாடாளுமன்ற ஜனநாயகமே கோலோச்சுகிறது.
இருந்தாலும் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கொண்டே நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து விடலாம் என்பதைச் சங்கிக் கூட்டம் எவ்வளவு நரித்தனத்தோடு சிந்தித்துச் செயல்படுத்துகிறது என்பதற்குக் கண்முன் நிற்கும் தொகுதிவரையறையே சான்றாக இருக்கிறது. அதுவும் தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கும்போது மறுவரையறையைச் செய்யத் துடிக்கிறது ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல்.
இந்தப் பாசிச பாஜகவை இச்சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு அணியினர் முனைந்து களம் இறங்கியுள்ளனர்.
அதே பணியில் திமுகழகத்திற்குத் துணைநின்று 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை'த் தோழர்களும் தேர்தல் களப்பணியாற்றி வருகிறார்கள்.
திமுக வழிகாட்டலின்படி பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் நாடு முழுவதும் பரப்புரையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
பொதுச்செயலாளர் சிற்பி செல்வராசு, திராவிட நட்புக் கழகத் தலைவர் ஆ.சிங்கராயர், பேரவைத் துணைப் பொதுச்செயலாளர்கள் காசு.நாகராசன், உமா, வழக்கறிஞர் இராம.வைரமுத்து, திண்டுக்கல் புலேந்திரன், ரவி, இளைஞரணி தீபன், நெல்லை சந்தானம், செங்கை மாவட்டச் செயலாளர் அன்பு, தாம்பரம் இளங்கோ, முத்துக்குமார், எட்வின், கார்த்தி, திராவிடமணி, அம்பத்தூர் மோகன்ராம் உள்படப் பேரவையின் அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும் தேர்தல் பணியில் தொய்வின்றி பணியாற்றுகிறார்கள் பாஜகவை வீழ்த்தவும், திராவிடத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவும்.
இதுவும் திராவிட இயக்க வரலாற்றில் ஒரு பதிவு.
ஆரியத்தால் வீழ்ந்தோம்!
திராவிடத்தால் எழுந்தோம்!
- கருஞ்சட்டைத் தமிழர்