யாவிலும் மதிப்பற்றதாகிக் கொண்டிருக்கிறது மனித உயிர். மழையும் வதந்தியும் மக்களைக் கொல்லும் கொடிய ஆயுதமாகிவிட்டன. தொலைக்காட்சிகளின் வண்ணத்திரையில் நொதித்து மிதக்கின்றன எம் மக்களின் பிணங்கள்.
பாப்பாப்பட்டி உள்ளிட்ட நான்கு கிராமங்களில் கடந்த ஒன்பதாண்டுகளாய் நடந்துவரும் கேலிக்கூத்தின் அடுத்தக் காட்சி விரைவில். ‘தன்னெழுச்சியாய்ப் போராடும்’ தமிழ்மானக் காவலர்கள் அதே தீவிரத்தோடு இந்த கிராமங்களுக்கும் விரைந்தால் நலம். ஆனால் வண்டிகள் வேறுபக்கம் திரும்பி விட்டன. மக்களை நோக்கி வருவதற்கு சாத்தியங்கள் குறைவு.
முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை பெருகும்போது அவர்களுக்குள்ளேயே ஒரு கோஷ்டி கிளம்பி அதிரடியாய் எதையாவது செய்து முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் குறைபாடுகளை நீக்கவும் அதற்குள்ளேயே வழிவகை இருப்பதாய் நிலைநாட்டுவது வாடிக்கை. பதினோரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பறிப்பும் அப்படியானதே. இனி படம் பிடிக்காத வகையில் இந்த கொள்ளை தொடரப் போகிறது. அவ்வளவே.
சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத் திருத்தம் சாத்தியமாகியுள்ளது. ஆனாலும் இன்றளவும் நுழைய முடியாத கர்ப்பகிருகங்களாக மத்திய அரசின் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் ஆதிக்க சாதியினரின் தனிக்கூடாரமாக நீடிப்பது குறித்த அவமான உணர்வு நம்மில் எத்தனைப் பேருக்கு?
எழுத்தாளர் சுந்தர ராமசாமி காலமாகி விட்டார். நல்லவிதமாய் நாலு போட்டோகூட எடுத்து வைக்காமல் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியும் காலமாகி விட்டார். இருவருக்கும் நமது அஞ்சலி.
- ஆசிரியர் குழு
ஆசிரியர் குழு ச. தமிழ்ச்செல்வன் நாறும்பூநாதன் ஜா. மாதவராஜ் ஜே. ஷாஜகான் உதயசங்கர் கமலாலயன் நிர்வாகக்குழு ந. பெரியசாமி ப. சிவகுமார் சி. சிறி சண்முகசுந்தரம் இரா. ரமேஷ் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா படைப்புகள் / நன்கொடை அனுப்ப: PUTHU VISAI B2, BSNL QUARTERS HOSUR - 635109 TAMIL NADU INDIA |