ஒரு இராசீவ் காந்தி உயிர் போனதற்காக ஓர் இனத்தையே ஈழத்தில் அழித்திட இலங்கைப் போரில் இந்தியா பங்கு கொண்டது. இந்திய அரசும் வடநாட்டு ஊடகங்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களையும் குற்றப்பரம் பரையினர் போல் இன்று வரை சித்தரித்து வருகின்றன.

இராசீவ் காந்தி கொலைக்குப்பின் செயலலிதாவும் கருணாநிதியும் அவரவர் ஆட்சிக் காலத்தில் அந்தக் கொலையை சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு தமிழின உணர்வு அமைப்புகளுக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுத்தனர். கூட்டங்களுக்குத் தடை, கூட்டங்களில் பேசியோர்க்குச் சிறை என்று சனநாயக உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பொடாச் சட்டத்தை ஏவினார் செயலலிதா! பொடாச் சட்டம் நீக்கப்பட்டுவிட்டதால் பின்னர் முதல்வரான கருணாநிதி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையும், குண்டர் தடுப்புச் சட்டத்தையும் ஏவினார்.

இத்தனை உரிமைப் பறிப்புகளும் சனநாயக மறுப்புகளும், இராசீவ்காந்தி கொலையுண்ட பின்னணியில் உருவாக்கப்பட்ட பொதுமக்கள் அனுதாபத்தைப் பயன்படுத்தியே ஆட்சியாளர்களால் அரங்கேற்றப்பட்டன.

ஆனால் இப்போது அந்த இராசீவ்காந்தி கொலை வழக்கில் அப்பாவிகளே தண்டிக்கப்பட்டுள்ளனர்; தூக்குக் கொட்டடியிலும் கொடுஞ்சிறையிலும் இருபத்திரண்டு ஆண்டுகளாக அப்பாவிகளே வதைபடுகின்றனர் என்ற உண்மைகள் வெளிவந்துள்ளன.

ஒப்புதல் வாக்கு மூலம் - கொலைச் சதி என்ற இரண்டு கற்கள் மீது இவ்வழக்கு கட்டப்பட்டது. இவ்விரண்டும் பொய்யாகப் புனையப் பட்டவை என்பதை அவ்வழக்கை விசாரித்த அதிகாரி தியாகராசனின் ஒப்புதல் வாக்கு மூலமும், நீதிபதி கே.டி.தாமஸ் கூற்றும் மெய்ப்பிக்கின்றன.

ஒப்புதல் வாக்கு மூலம் சாதாரணமாகப் பேசி வாங்கப்படுவதில்லை. பிடித்து வைத்துள்ள நபரை அம்மணமாகத் தலை கீழாகக் கட்டித் தொங்கவிட்டு, கீழே நெருப்பு மூட்டி அனல் தாவச் செய்தல், மின்சாரம் பாய்ச்சப்பட்ட வயர்களை ஆண் அல்லது பெண் உறுப்பில் சொருகுதல், உடம்பெங்கும் மின்அதிர்வுகளைப் பாய்ச்சுதல், அம்மணமாகக் கீழே படுக்க வைத்து, அந்த நபர் மீது இரு காவலர்கள் ஏறி நின்று கொள்வது ஒரு காவலர் அந்த நபரின் குதிகாலில் அடித்துக் கொண்டே இருப்பது (லாடம் கட்டுதல்), அடித்துக்காயப்படுத்தி, தண்ணீர் ஊற்றப்பட்ட அறைக்குள் அம்மணமாக இருக்கச் செய்தல் போன்ற பலவகையான கொடுஞ்சித்திரவதைகள் செய்த பின்னர், காவல் அதிகாரிகள் சொல்லும் குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ளும் கட்டாயத்தை அந்நபருக்கு உண்டாக்குவார்கள். இப்படிப் பெறப்படும் ஒப்புதல் வாக்கு மூலம் குற்றஞ்சாட்டப்பட்டவர் மனம் திருந்தி, குற்றத்தை ஒப்புக் கொண்டதால் கொடுக்கப்பட்டது என்று சட்டம் கூறுகிறது.

சென்னை அடையாற்றில் உள்ள அழகான மல்லிகை மாளிகைதான் - மேலே சொல்லப்பட்ட சித்திரவதை முகாமாக, சிறப்புப் புலனாய்வுக் குழுத்தலைவர் கார்த்திகேயனால் மாற்றப்பட்டது. அங்கு வைத்துதான் பேரறிவாளன் உள்ளிட்ட பதினாறு பேரிடம் தியாகராசன் ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கினார்.

பணி ஓய்வு பெற்ற தியாகராசனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது; பேரறிவாளன் சொல்லாத ஒன்றை சொன்னதாக எழுதி நாம் அவரிடம் கையெழுத்து வாங்கி, ஒப்புதல் வாக்கு மூலம் தயாரித்துவிட்டோம்; அதனால் அவர் தூக்கிலிடப் படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தாம் செய்தது அறம் தவறிய செயல் என்று வருந்தி, இப்போது ஊடகங்களில், “உயிர்வலி’’ என்ற ஆவணப்படத்தில் பேசிவிட்டார். இலண்டன் பி.பி.சி. தமிழ் ஒலிபரப்பு உலகெங்கும் தியாகராசனின் நேர்காணலைக் காற்றலையில் பரப்பிவிட்டது.

“சிவராசனுக்குப் பேட்டரி வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அது என்ன காரியத்திற்காகத் தேவைப்பட்டது என்று அவர் என்னிடம் சொல்லவில்லை; அவர் இராசீவ் காந்தியைக் கொல்வதற்கான வெடிகுண்டை இயக்குவதற்காக இந்த பேட்டரியைப் பயன்படுத்தப் போகிறார் என்ற செய்தி எனக்குத் தெரியாது.” என்று பேரறிவாளன் சொன்னதைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன் என்று இப்போது தியாகராசன் கூறுகிறார்.  “ஏன் அந்தத்தவற்றை செய்தீர்கள்” என்று கேட்டதற்கு “அவ்வாறு நான் செய்யாமல், அறிவு சொன்னதை அப்படியே எழுதியிருந்தால் அவர் குற்றம் செய்ததாக ஆகாது. குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டு சொல்வதுதான் ஒப்புதல் வாக்கு மூலம்; எனக்கு மேலதிகாரிகள் இட்டபணி ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கவேண்டும் என்பதுதான்; காவல்துறை எப்போதுமே தனது வழக்குத் தயாரிப்புக்கு இசைவாகவே ஒப்புதல் வாக்கு மூலம் தயாரிக்கும். அதைத்தான் அறிவு விசயத்திலும் நான் செய்தேன். ஆனால் அது ஓர் உயிரை வாங்கப் போகிறது என்று தெரிந்ததும் உறுத்தல் ஏற்பட்டது; தூக்கம் போனது; அறம் தவறக்கூடாது என்பதற்காக உண்மையைச் சொல்கிறேன்” என்கிறார் தியாகராசன்.

இராசீவ் கொலை வழக்கில் உருப்படியான சாட்சியமும் கிடைக்கவில்லை; தடயமும் கிடைக்கவில்லை. மிக முகாமையான தடயம் இராசீவ்காந்தியை கொன்ற இடைவார்க் குண்டு (பெல்ட் பாம்). அந்த வெடிகுண்டு எங்கே தயாரிக்கப்பட்டது. யார் யாரால் தயாரிக்கப்பட்டது. என்ற விவரமே கிடைக்கவில்லை என்று இன்னொரு விசாரணை அதிகாரியான இரகோத்தமன் கூறுகிறார். இக்கருத்து உச்சநீதிமன்றத் தீர்ப்புரையிலும் இடம் பெற்றுள்ளது.

இன்னொரு முகாமையான விவரம், இராசீவ் காந்தியைக் கொலை செய்ய உள்ள செய்தியைத் தமிழ்நாட்டில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று 7.5.1991 அன்று தமிழ் ஈழத்திற்கு சிவராசன் கமுக்கக் குறியீட்டு மொழியில் கம்பியில் லாத தொலைபேசி மூலம் பேசிய செய்தியாகும். இந்த செய்திப் பதிவு பின்னர் எடுக்கப்பட்டு இந்திய உளவுத்துறையால் படிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், காத்ரி, கே.டி.தாமஸ், வாத்வா ஆகிய மூன்று நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்தனர். இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் கே.டி. தாமஸ். அவர் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் கடந்த சில ஆண்டுகளாக, ராஜீவ்கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களைத் தூக்கிலடக் கூடாது, வாழ்நாள் தண்டனையாக அதை மாற்றவேண்டும் என்று கோரிவருகிறார். அது பொதுவான மரண தண்டனை ஒழிப்புக்குரல் மட்டுமன்று. குற்ற உணர்வின் வெளிப்பாடாகவும் உள்ளது. அவர் இப்போது சொல்கிறார்:“7.5.1991 அன்று சிவராசன் விடுதலைப் புலிகள் தலைமையகத்துடன் தொடர்புகொண்டு பேசியபோது குறிப்பிட்ட செயல் பற்றி தமிழ்நாட்டில் யாருக்கும் தெரிவிக்க வில்லை என்று கூறியுள்ளார். இது காவல்துறையின் குற்ற அறிக்கையில் இருந்தது. ஆனால் அதை நாங்கள் பொருட் படுத்தாமல் விட்டுவிட்டோம்” என்கிறார்.

நீதிபதிகள் அதைப் பொருட்படுத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இராசீவ்காந்தியைக் கொள்வதற்கான சதி ஆலோசனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளவில்லை என்றாகும். அதாவது சி.பி.ஐ. போட்ட 120B என்ற குற்றச் சதி மெய்ப்பிக்கப்படாமல் போயிருக்கும். 120B செல்லாததாகி, ஒப்புதல் வாக்கு மூலங்கள், காவல்துறை அதிகாரியின் விருப்பப்படி தயாரிக்கப்பட்டவை என்று ஆகிவிட்டால் பின்னர் இந்த வழக்கில் யார் மீதான குற்றச்சாட்டும் நிற்காது. புனையப்பட்ட இந்த பொய் வழக்குக் கட்டடம் தானாகவே பொலபொலவெனச் சரிந்து விழுந்து மண்மேடாகி விடும்!

தமிழ்நாட்டுத் தடியன் கார்த்திகேயனுக்கு மட்டும் மனச்சான்று உறுத்தவே இல்லை. ஏதோ மனிதஉரிமை மாமேதை போல பொதுவாக மரணத்தண்டனை வேண்டாம் என்பதே தனது விருப்பம் என்று பசப்பி வருகிறார். கார்த்திகேயன் ஓர் அரம்ப (ரவுடி) அதிகாரியாகச் செயல்பட்டவர் என்பது அண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி மூலம் அம்பல மானது. நேர்படப் பேசு விவாதத்தில் கலந்து கொண்டு, “என்ன விளையாடுறீங்களா, எதுக்காக இந்த நிகழ்ச்சி! சட்டம் கோர்ட்டு, எல்லாம் சும்மாவா? நீங்க நெனச்சா மறுவிசாரணை வேண்டுமா? அதெல்லாம் நடக்காது” என்று கார்த்திகேயன் போட்ட கூச்சல் காற்றலையில் உலகத்துக்கே கேட்டது!

திரும்பெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் இராசீவ் காந்தி நிகழ்ச்சிகள்- கொலை நிகழ்வு உட்பட அனைத்தும் காணொலிப் படமாக்கப்பட்டுள்ளது (வீடியோ). அந்தக் காணொலிப் படப்பதிவை அன்றைய சி.பி.ஐ. இயக்குநர் எம்.கே. நாரயணன் எடுத்துக் கொண்டு போனார். அதைப் புலன் விசாரணைக்கு அவர் தரவே இல்லை; நீதி மன்றத்திலும் அதைத் தாக்கல் செய்யவில்லை ஏன்? எதை மறைப்பதற்காக - யாரைப் பாதுகாப்பதற்காக அந்த காணொலி அப்புறப்படுத்தப்பட்டது?

மல்லிகையில் நடந்த ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கும் நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டன. அது அப்படியே நீதிமன்றத்தில் தரப்படவில்லை. புலனாய்வுப் பிரிவினர் அதை வெட்டி ஒட்டி “எடிட்” செய்துதான் கொடுத்தார்கள் என்கிறார் இன்னொரு விசாரணை அதிகாரியான மோகன் ராஜ். என்னென்ன உண்மைகளை மறைக்க இத்தனை திருட்டுத்தனங்களை சி.பி.ஐ.யும் இந்திய ஆட்சியாளர்களும் செய்தார்கள்?

இராசீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் அதிகாரிகளும், தீர்ப்பளிப்பதில் நீதிபதிகளும் சட்டத்தைக் கடைபிடிக்க வில்லை. கொல்லப்பட்டவர் இராசீவ்காந்தி, நேருவின் பேரன். இந்திராவின் மகன் - முன்னாள் பிரதமர் என்ற அடிப்படையில் “அரண்மனை விசுவாசத்தை” மட்டுமே அளவுகோலாக வைத்துள்ளனர்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்; பத்து குற்றவாளிகள் தப்பினாலும் ஓர் அப்பாவி தண்டிக்கப்படக் கூடாது என்று ஆட்சியாளர்களும் நீதித்துறையினரும் பேசுவ தெல்லாம் வெறும் பசப்புச் சொற்கள் என்பது ஐயம் திரிபற மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகளும் தங்கள் தீர்ப்புரையில், “இராசீவ் கொலைகாரர்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்பது தேசத்தின் கூட்டுமனச் சான்றின் விருப்பம் ஆகும்” என்று கூறியுள்ளார்கள். ஒருகொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் குற்றவாளிகள் என்பது ஐயம் திரிபற மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்பது தான் சட்டத்தின் தேவை. பொதுமக்கள் விரும்புகிறார்கள். எனவே சில பேரையாவது தூக்கில் போடவேண்டும்; சில பேர்க்காவது வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்பது சட்டத்தின் வற்புறுத்தல் அன்று. இந்திய நீதித்துறையின் மிக உச்சத்தில் உட்கார்ந்திருக்கும் கற்றறிந்த நீதிபதிகளே, இராசீவ் காந்தி கொலை வழக்கில் சில பேரையாவது தூக்கில் போடவேண்டும் என்பது பொதுமக்கள் விருப்பம் என்று கூறினால் இந்நாட்டில் நீதி என்ன யோக்கியதையில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் இந்திராகாந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் “பொது மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக “நாலைந்து பேரைத் தூக்கிலிடவில்லை; நாலைந்து பேர்க்கு வாழ்நாள் தண்டனை வழங்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். தமிழ் இனத்திற்கு எதிராக வரும்போது இந்தியா எல்லா நிலையிலும் இனக் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்கிறது. இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ஆரியத்தின் சூழ்ச்சியா?

1980 ஆம் ஆண்டு பச்சன் சிங் வழக்கில் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, மரண தண்டனை வழங்குவது பற்றித் திருப்புமுனைத் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. கொலைக்குற்றம் மெய்ப்பிக்கப்பட்டாலும் சகட்டுமேனிக்கு எல்லாருக்கும் தூக்குத் தண்டனை வழங்கக்கூடாது. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று அத்தீர்ப்பு வரம்பு கட்டியது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மரணதண்டனை முற்றாக நீக்கப்பட்ட நிலையில், அத்திசையைநோக்கி இந்தியாவும் நகர்வதற்காக அடியெடுத்து வைக்கப்பட்டதே அத்தீர்ப்பு.

கொலை நடந்த போது, அக்குற்றத்தில் ஈடுபட்டோர் மனநிலை - சிறைத் தண்டனை பெற்று விடுதலையானால் அவர்கள் திருந்தி வாழ்வார்கள் என்ற நம்பிக்கை ஆகியவை குறித்து சாதகமான நிலைமைகள் இருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது; சிறைத் தண்டனைதான் வழங்க வேண்டும் என்று அத்தீர்ப்புக் கூறியது. ஐந்து நீதிபதிகளின் இத்தீர்ப்பைப் புறக்கணித்துவிட்டு அரண்மனை விசுவாசத்தைக் காட்டுவதற்காக மூன்று நீதிபதிகள், பொதுமக்கள் விரும்புகிறார்கள் என்று காரணம் கூறி நளினி, சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகிய நான்கு பேர்க்கும் மரண தண்டனை வழங்கினார்கள். நளினிக்கு மட்டும் மரண தண்டனை வாழ்நாள் தண்டனையாக பின்னர் தமிழக அரசால் மாற்றப்பட்டது.

புலன் விசாரணை - நீதித் துறையின் தீர்ப்பு ஆகிவற்றில் ஏற்பட்டுவிட்ட இத்தனை அநீதிகளையும் ஓரளவாவது சரி செய்வதற்கான வாய்ப்பு அரசமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவர்க்கு வழங்கப்பட்டிருகிறது. குடியரசுத் தலைவர் என்பது நடைமுறையில் நடுவண் அரசு என்று பொருள்படும்! ஆனால் நடுவண் அரசு குடியரசுத் தலைவர் மூலம், பேரறிவாளன், சாந்தன், முருகன் கருணை மனுக்களை ஏற்க மறுத்தது; தூக்கிலிட நாள் குறித்தது.

தூக்கை நிறைவேற்றாமல் தடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கப்பட்டது. ஆனால் அவ்வழக்கைத் தானே விசாரித்து முடிவு செய்வதாக உச்சநீதிமன்றம் தன் விருப்பத்தின் பேரில் எடுத்துக் கொண்டுள்ளது.

நீதிபதி கே.டி.தாமஸ், விசாரணை அதிகாரிகள் வி.தியாகராசன், மோகன்ராஜ், இரகோத்தமன் ஆகியோர் நடந்துள்ள தவறுகளை ஒப்புக்கொண்ட பிறகு, இனி உச்ச நீதிமன்றம் கருணை மனு மீதான தீர்ப்பு வழங்கட்டும் என்று நாம் காத்திருக்கக் கூடாது.

இராசீவ் காந்தி கொலை வழக்கு நூற்றுக்கு நூறு பொய்வழக்காகப் புனையப்பட்டு அப்பாவிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இனி நமது கோரிக்கை, கருணை மனுவை ஏற்றுக் கொள்க என்பதல்ல.

1. இராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரும் அப்பாவிகள் என்று அறிவித்து அவர்கள் அனை வரையும் அவ்வழக்கிலிருந்து விடுதலை செய்ததாக குடியரசுத் தலைவர் அறிவிக்க வேண்டும். அரசமைப்புச் சட்ட விதி 72 அதற்கான முழு அதிகாரத்தை குடியரசுத் தலைவர்க்கு வழங்கியுள்ளது.

2. தவறாகத் தண்டிக்கப்பட்டு 22 ஆண்டுகள் மரணதண்டனைக் கொட்டடியில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதுடன் அவர்களுக்குத் தலா பத்து கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை இந்திய அரசு வழங்க வேண்டும்.

வாழ்நாள் தண்டனை பெற்று 22 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் நளினி, அருப்புக் கோட்டை இரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ், செயக்குமார் ஆகியோரையும் உடனடியாக விடுதலை செய்து இழப்பீட்டுத் தொகையாக தலா ரூபாய் பத்து கோடி இந்திய அரசு வழங்க வேண்டும்.

3. ஏற்கெனவே சிறையில் தண்டனை அனுபவித்துவிட்டதாக விடுதலை செய்ப்பட்டுள்ள 19 பேர்க்கும் தலா ஐந்து கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை இந்திய அரசு வழங்க வேண்டும்.

4. இந்திய அரசு உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் தமிழகத்தைச் சேர்ந்த மனித உரிமை இயக்க வல்லுநர்களையும் கொண்ட விசாரணை ஆணையம் அமைத்து இராசீவ் கொலை வழக்கு விசாரணையில் பொய்வழக்குப் புனைய காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு இந்தக் கோரிக்கைகளைத் தீர்மானமாக சட்டப் பேரவையில் நிறை வேற்றி பிரதமருக்கும் குடியரசுத் தலைவர்க்கும் அனுப்ப வேண்டும்.

தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் இன உணர்வு அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் இக்கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றவில்லையெனில் இராசீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அப்பாவிகள் வைக்கப்பட்டுள்ள சிறைச் சாலைகளை பல்லாயிரக் கணக்கில் - இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டு முற்றுகையிட வேண்டும்!

Pin It

இராசீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் குறித்தும், மரண தண்டனை ஒழிப்பு குறித்தும் பேசுகின்ற ‘உயிர்வலி’ ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு மற்றும், நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களின் 99ஆவது பிறந்தநாள் விழாவும் விருதுகள் வழங்கும் விழாவும் 24.11.2013 அன்று சென்னையில் நடைபெற்றது.

சென்னை பிட்டி. தியாகராயர் அரங்கில், மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சித் தலைவர் இயக்குநர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி.வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் - சட்டமன்ற உறுப்பினர் திரு.உ.தனியரசு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, சி.பி.எம்.கட்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. பீமாராவ், இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமியர் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் உமர்கயான், இயக்குநர்கள் வ.கவுதமன், புகழேந்தி தங்கராஜ், வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பேரறி வாளனின் தந்தை கவிஞர் குயில்தாசன், தாய் திருமதி.அற்புதம் அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் கலந்து கொண்டு ஆவணப்படம் குறித்து பேசினார்.

அவர் பேசும் போது, “வழக்கமான ஆவணப் படங்களில் தென்படுகின்ற வறட்சியான தகவல் குவிப்பு இல்லாமல், விறுவிறுப்பான படமாக உருவாக்கப் பட்டுள்ள ‘உயிர்வலி’ ஆவணப்படக் கலைஞர்களுக்கு முதலில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் தலைப்பு ‘உயிர்வலி’யாக இருந்தாலும், இங்கு பேசப்படுவது நீதியின் வலி, ஞாயத்தின் வலி.

கடந்த மாதம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது தலைமையில், கர்நாடகாவின் பெல்காம் சிறையில், சந்தன வீரப்பனுடன் தொடர்புபடுத்தப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்களையும், கர்நாடக தூக்குத் தண்டனை சிறைவாசிகளையும் ஒரு குழுவாக சந்தித்துவிட்டு வந்தோம். அற்புதம் அம்மையார் அவர்களும் எங்களுடன் வந்திருந்தார்கள்.

நாம் இங்கு பேரறிவாளன் பற்றி பேசிக் கொண்டுள்ளோமே, அவரைப் போல அங்கு ஞானப்பிரகாசம் என்பவர் தூக்குத் தண்டனைப் பெற்றுள்ளார். நமது பேரறிவாளனாவது ஓரளவு அரசியல் புரிதல் உள்ளவர், ஆனால், ஞானப் பிரகாசம் எந்தவித அரசியலும் தெரியாத அப்பாவி மனிதர்.

கர்நாடகச் சிறையில் வாடும் இந்த நான்கு தமிழர்களுக்கும் முதலில் வாழ்நாள் தண்டனை தான் தரப்பட்டது. ஆனால், உலகில் எங்குமே நடக்காத கொடுமை இவர்களுக்கு நிகழ்த்தப்பட்டது. வாழ்நாள் சிறைத் தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்திருந்த இவர்களது வழக்கில், இந்திய உச்சநீதிமன்றம் மரண தண்டனையாக்கியது.

மேல்முறையீட்டுக்காக ஒரு வழக்கு வந்தால், அதிலுள்ள தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது அத் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்பது தான் உலகெங்கும் உள்ள நடைமுறை. ஆனால், இந்திய அரசின் உச்சநீதி மன்றம் இதற்கு நேர் மாறாக, தண்டனை அதிகரித்து, அவர்களைத் தூக்கிலிட தீர்ப்பளித்தது. இந்தியாவில் தமிழ் இனத்தைத் தவிர வேறு எந்த இனத்திற்கும் இப்படிப்பட்ட அநீதி இழைக்கப் பட வில்லை.

இத்தனைக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானப்பிரகாசம் ஒருமுறை கூட வீரப்பனை பார்த்ததில்லை. சிறைக்குள் வந்த பிறகு தான் அவர் வீரப்பன் புகைப் படத்தையே பார்த்திருக்கிறார். உண்மையில் வீரப்பனுடன் இருந்த ஒரு ஞானப்பிரகாசத்தைப் பிடித்து, காவல்துறையினர், போலி மோதலில் கொன்று விட்டனர். ஆனால், அதைச் சொன்னால் தங்கள் மீது குற்றம் வந்துவிடுமே என அஞ்சி, அப்பாவியான இந்த ஞானப்பிரகா சத்தின் மீது வழக்கு நடத்தி, அவருக்கு தூக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர் காவல்துறையினர்.

காவல்துறை இப்படி செய்தது இருக்கட்டும், பொய்யாக ஒருவருக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்படும் வரை நீதித்துறை என்ன செய்து கொண்டிருந்தது?

இராஜீவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த இரகோத்தமன், தியாகராஜன், நீதிபதி கே.டி.தாமஸ் போன்றோர், இப்போது பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனை தேவையில்லை என கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இப்பொழுதாவது இவர்கள் பேசுகிறார்களே என்பதும், இவர்களது கூற்றுகள் நம் ஞாயத்திற்கு வலுசேர்ப்பதாக இருக்கும் என்பதும் நமக்கு ஆறுதல் அளித்தாலும் கூட, பதவியில் இருக்கும் போது முதுகெலும்பே இல்லா தவர்களாய் செயல்பட்ட இவர்கள், இப்பொழுது இதனைக் கூறி என்ன பயன்? 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறையில் வாடுகிறார்களே? தூக்குக் கயிற்றின் முன் நிற்கிறார்களே?

இராஜீவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான தியாகராஜன், இந்த ஆவணப்படத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப் படும்போது, நாங்கள் அதை அப்படியே பதிவு செய்வதில்லை எனச் சொல்கிறார்.

இப்படிப்பட்ட அதிகாரிகளின் பொய்யான வாக்கமூலங்களால் தானே, ஞானப்பிரகாசம் என்ற அப்பாவி, தூக்குக்கயிற்றின் முன்நிற்கிறார். இரகோத்தமன்கள், தியாகராஜன்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்பதைத் தான் இது காட்டுகிறது.

இன்னொருபுறம், ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருந்தன? வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போதே, ஊடகங்கள் தீர்ப்பை வழங்கி விடுகின்ற அவலம் இங்கு நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஆங்கில ஊடகங்களின் செய்திகளைப் பார்த்தால்தான், தாங்கள் அறிவாளிகள் என்பது போல பலர் காட்டிக் கொள்கிறார்கள். நீதிபதிகள் பலரும் ஆங்கில ஊடகங்களால் வழி நடத்தப் படுகிறார்கள்.

உச்சநீதிமன்றம், 13 வழக்குகளில் சட்ட அறியாமை காரணமாக தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன என சொல்லியிருக்கிறது. மனசாட்சியைக் கொன்று வழங்கப்பட்ட பலத்தீர்ப்புகளை, இப்பொழுது திருத்தி எழுதிவிட முடியுமா? பறிக்கப்பட்ட உயிர்களைத் திருப்பித் தரமுடியுமா?

இந்த ஒரு கொலையை வைத்து ஒட்டுமொத்தத் தமிழினத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விட்டார்களே!

இந்திய அரசின் இனப்பகையின் காரணமாக தமிழர்கள் எப்படியெல்லாம் வதைபடுகிறார்கள் என்பதை சாட்சியமாகப் பேசுகின்ற இந்த ஆவணப்படத்தை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரம் நகரமாக, கிராமம் கிராமமாக போட்டுக் காட்டும். தமிழ் நாட்டு மக்கள் சக்தியை நம் ஞாயத்திற்காகத் திரட்ட இது பயன்படும்.

1998இல், இராசீவ் கொலை வழக்கில் 26 பேருக்குத் தூக்கு வழங்கியவுடன், அப்பொழுதிருந்த மவுனத்தை உடைத்து, அய்யா பழ.நெடுமாறன் அவர்களது தலைமையில் பல்வேறு அமைப்புகள் இணைந்து நிதி திரட்டி, இயக்கம் நடத்தி ஞாயத்தைச் சொன்னோமே, அதைப்போல மக்கள் மன்றத்தில் நம் ஞாயத்தை எடுத்துச் செல்வோம்.

ஒரு முக்கிய சாட்சியமாக வந்துள்ள இந்த ஆவணப்படத்தை முன்வைத்தாவது, தமிழக அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டவிதி -161இன்படி தமிழக ஆளுநருக்கு அறிவுறுத்தி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்து, அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்!’’ எனத் தெரிவித்தார்.

திரளான தமிழின உணர்வாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்வின் முன்னதாக ஆவணப்படம் திரையிடப்பட்டு, படத்தை உருவாக்கிய கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

Pin It

பொழுதெலாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ! நாங்கள் சாகவோ! என்று வேதனையோடு பாடினான் பாரதி. பிரித்தானிய அரசு இந்தியாவிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றதைக் கண்டு அன்று வெந்து துடித்தான்.

வெள்ளையர்கள் வெளியேறிய பின்பும் கூட புது டெல்லியிலுள்ள ஏகாதிபத்தியவாதிகள் தமிழகத்தின் இயற்கைச் செல்வங்களையெல்லாம் கொள்ளை கொண்டு போவது மட்டும் நிற்கவில்லை. கொள்ளை தொடர்கிறது. கனியும் கிழங்கும் நித்தம் நித்தம் கணக் கின்றித் தரும் நாடு, யானை கட்டி போராடித்த நாடு ஏழ்மையில் ஏன் கிடக்க வேண்டும்?

போதுமான நிலம் நம்மிடம் உள்ளது. ஆனால் 53% மக்கள் அன்றாட தேவைகளை நிறைவு செய்ய முடியாத தினக்கூலியாக உள்ளனர். எதிர்காலச் செலவுகளை எண்ணி அஞ்சி பெண் குழந்தைகளுக்குகள்ளிப் பால் கொடுத்து பெற்றோர்கள் குழந்தைகளைக் கொல்லும் கொடுமை தமிழகத்தில் நடக்கத்தான் செய்கிறது!

தேவைக்குப் போதுமான நீர் இருந்தும் குறைந்த நிலப்பகுதியில் மட்டும் சாகுபடி செய்யப்படுகிறது. ஏனென்றால் வேளாண்மை இலாபம் தரும் தொழிலாக இல்லை. 2011 இல் வேளாண்மை ஆணையம் நடத்திய கணக்கெடுப்பின்படி நாள் தோறும் 2000 பேர் விவசாயம் செய்வதை விட்டு விட்டு நகர்ப்புறக் கூலிகளாக மாறி வருகிறார்கள்.

கொள்ளை போகும் வளங்கள்:

நெய்வேலியில் ஆண்டுக்கு 3730 மெகாவாட் அனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் அனைத்தையும் தமிழகம் பயன்படுத்த முடியாது. இந்திய வல்லாதிக்க அரசின் கைகளில் நெய்வேலி மின்சாரம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கிறது. காவிரி உரிமையை மறுக்கும் கர்நாடகாவிற்குத் தமிழ்நாட்டிலிருந்து நாள் தோறும் மின்சாரம் செல்கிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடையாது. இது “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இருக்கிறது’’. ஆரிய இந்திய அரசின் செயல் தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் நமக்கு உரிமையில்லை. நெய்வேலி மின்சாரத்தை எடுக்காதே! என்கிற முழக்கம் பெரியளவில் உருவாக வேண்டும்.

சேலத்தில் உலகத்தரம் வாய்ந்த தேனிரும்பு கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 42,800 டன் இரும்பு எடுக்கப்படுகிறது. சேலத்தில், மண்ணுக்கு அடியில் 61 கோடிடன் இரும்பு இருக்கிறது சேலம் மண்ணில் எடுக்கப்படுகிற இரும்பின் மீதும் தமிழனுக்கு உரிமையில்லை. ஆரியபார்ப்பனிய பனியா அரசுக்குத் தான் அந்த அதிகாரம் உள்ளது.

தமிழகத்தில் எண்ணெய்வயல்கள் கடலோரப் பகுதிகளில் 2500 ச.கி.மீ உள்ளது. கடலுக்குள் 4800 ச.கி.மீ வரை உள்ளது. நரிமணத்தில் கிடைக்கும் பெட்ரோலில் கந்தகம் (சல்பர்) இல்லாததால் உலகில் முதல் தர பெட்ரோலைவிட சிறந்ததாக உள்ளது. இதுவும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குகிறது. பெட்ரோலுடன் சேர்ந்து கணிசமான அளவு எரிவாயும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிடைக்கிறது. இவற்றின் மீதும் தமிழகத்திற்கு உரிமை கிடையாது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் 3850 கி.மீட்டர் குழாய் மூலம் எரிவாயும் எடுத்துச் செல்கிறது. நரி மணத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 720 டன் உற்பத்தி செய்யும் நான்கு எண்ணெய் கிணறுகளிலும் 7,5000 க. செ.மீட்டர் எரிவாயுவும் கிடைக்கிறது.

இதுவல்லாமல் புவனகிரியில் 5200 க.செ.மீ எரிவாயுவும் 206 பீப்பாய் பெட்ரோலும் கிடைக்கிறது. பரங்கிப்பேட்டையில் 4330 பீப்பாய் பெட்ரோல் கிடைக்கிறது. கமலாபுரத்தில் 3640 மீட்டர் ஆழத்தில் ஒரு நாளைக்கு 150 பீப்பாய் பெட்ரோல் கிடைக்கிறது. இங்கு 2933. க.செமீ எரிவாயுவும் கிடைக்கிறது.

தமிழகத்திலிருந்து பெட்ரோல் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் அதை நம்மிடமே சர்வதேச சந்தை விலைக்கு விற்கப்படுகிறது! இது பகல் கொள்ளையா இல்லையா? தமிழன் ஏமாந்த சோணகிரி அவன் தலையில் எவ்வளவு வேண்டுமானலும் மிளகாய் அரைக்கலாம் என எண்ணுகிறது இந்திய அரசு!

சேலம் மாவட்டத்தில் மாக்னசைட் பெருமளவில் கிடைக்கிறது. கஞ்சமலை, கொல்லிமலை பகுதியிலும் திருவண்ணாமலையிலுள்ள கௌத்திமலை, வேதியப்பன் மலை குன்றுகளிலும் தர்மபுரி மாவட்டம் தீர்த்த மலையிலும் மாக்னசைட் கிடைக்கிறது. இவற்றை எடுத்து பயன்படுத்தும் அதிகாரம் தமிழக அரசிடம் இல்லை. இந்திய அரசிடம்தான் அதிகாரம் உள்ளது.

சுண்ணாம்புச் சுரங்கங்களில் சுண்ணாம்புக்கல் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 350 மில்லியன்டன்கள் இருக்கிறது. சுண்ணாம்புக்கல் சிமிண்டு தயாரிக்கப் பயன்படுகிறது.

இந்தியாவில் கிடைக்கும் மொத்த சிப்சத்தில் 55% தமிழ் நாட்டில் கிடைக்கிறது. 1,80,00 டன் பல்வேறு மாவட்டங்களில் இருப்பில் உள்ளது. இதுவும் சிமிண்டு தயாரிக்கப் பயன்படுகிறது. அரியலூர், செந்துரை, செயங்கொண்டம் பெரம்பலூர் ஆகிய இடங்களில் ஏராளமான தனியார் மற்றும் அரசு சிமிண்டு தொழிற்சாலைகள் உள்ளன. ஆசியாவிலே இரண்டாவது பெரிய சிமிண்டு தொழிற்சாலை அரியலூரில் உள்ளது.

கிராபைட் சிவகங்கை பகுதியில் 5 கி.மீட்டர் சுற்றளவில் இலட்சம்டன்கள் இருக்கிறது. இவையெல்லாம் இந்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ளது.

மாமண்டூர் பகுதியில் செம்புகிடைக்கிறது. மதுரை ஆலங்குளம் பகுதியிலும் கிடைக்கிறது. இவற்றின் மொத்த இருப்பு 1.27 மில்லியன்டன்கள் என மதிப்பிடப் பட்டுள்ளது.

மாணிக்கக் கற்கள் உலகப் புகழ் வாய்ந்த பச்சைக் கற்கள் காங்கேயம் பகுதியில் கிடைக்கின்றன. திருச்சி மாவட்டத்தில் 0.46 மில்லியன்டன்களும் சேலம் மாவட்டத்தில் 0.15 மில்லியன் டன்களும் இருப்பில் உள்ளது. இவற்றின் மீது இந்திய அரசுதான் ஆதிக்கம் செலுத்துகிறது.

தோல் பொருட்கள் உற்பத்தியில் நம் தமிழகம்தான் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. தீக்குச்சிகள் 90% இங்குதான் தயாராகிறது. தாது மணல்வளம் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெருமளவில் கொள்ளையடிக்கப் பட்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. பல இலட்சம் கோடி ரூபாய் தாது மணல் கொள்ளை நடந்துள்ளது.

இயற்கை வளங்கள் அது கிடைக்கும் பகுதியைச் சார்ந்து வாழும் மக்களின் கட்டுப் பாட்டுக்குள் இல்லை. மாறாக அனைத்து முடிவுகளும், அதிகாரங்களும் இந்திய அரசின்கையில் இருப்பதால் இந்தத் தாழ்வு நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இதுவல்லாமல் கம்பெனிவரி, வருமானவரி, கலால்வரி, ஏற்றுமதிவரி, இறக்குமதிவரி, என்று நாள் தோறும் தமிழகத்திலிருந்து கோடி கோடியாகக் கொண்டு செல்கிறது இந்திய அரசு. அதில் ஒரு சிறு பகுதியைத் தான் தமிழகத்திற்கு பிச்சையாகப் போடுகிறது.

இவ்வளவு வளங்களையும் கொள்ளை அடித்துச் செல்லும் இந்திய அரசு தமிழகத்திற்கு இழைத்து வரும் துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமுல்படுத்த இந்திய அரசு மறுக்கிறது. உச்சநீதி மன்ற உத்தரவின்படி முல்லைப் பெரியாறு உரிமையை அமுல்படுத்த மறுக்கிறது இந்திய அரசு தன்னுடைய அரசியல் சட்டக் கடமைகளை நிறைவேற்றிட மறுக்கிறது.

இந்தக் கொள்ளைக் கொள்கையில் காங்கிரசுக்கும், பா.ச.க.வுக்கும் பிற வட இந்தியக் கட்சிகளுக்கும் வேறுபாடு ஏதுமில்லை. ஆரிய பார்ப்பன - பனியா இந்தியக் கட்டமைப்பை உறுதிப்படுத்துவதில் இக்கட்சிகள் ஒரே நிலையில் இருப்பவை தாம். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் “அரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதவன் வாயில் மண்ணு’’ என்பார்கள். இக்கட்சிகளுக்கும் இது பொருந்தும்.

பின் குறிப்பு : (இக்கட்டுரையில் உள்ள பெரும்பாலான புள்ளி விவரங்களுக்கு ஆதாரமான நூல் - வளமிகு தமிழ்நாடும், வறுமைமிகு தமிழக மக்களும்- பீட்டர், ரோஜ் - ரியல் தொண்டு நிறுவன வெளியீடு, திண்டுக்கல், 1986)

Pin It

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் பற்றி சில திறனாய்வுகள் வந்து கொண்டுள்ளன. அவை பற்றி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நிலைபாட் டைத் தெரிவிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழினத்தின் பொதுச் செல்வம். – கல்லில் செதுக்கப்பட்ட தமிழினத்தின் தழும்புகள். – கால காலத்திற்கும் காக்கப்படவேண்டிய இனக் கருவூலம். இக்கலைப் படைப்பை நிறுவித் தந்த உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு பழ. நெடுமாறன் அவர்களுக்குத் தமிழினம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.

அதே வேளை முற்றம் குறித்தும் முற்றத் திறப்புவிழா குறித்தும் செய்யப்படும் சில திறனாய்வுகள் குறித்தும் பேசவேண்டும்.

முற்றத்தின் திறப்பு விழாவிற்கு பாரதிய சனதாக் கட்சி மற்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர்களைச் சிறப்புரையாற்ற அழைத்தது தவறென்று நண்பர்கள் சிலர் கூறுகிறார்கள். தமிழீழம் – விடுதலைப் புலிகள் ஆகியவை குறித்த நிலைபாட்டில் காங்கிரசிற்கும், பா.ச.கவிற்கும் இடையே கருதத்தக்க வேறுபாடு எதுவு மில்லை. இனப்படுகொலைக் குற்றவாளியான இராசபட்சேயை இந்தியாவுக்கு அழைத்துச் சிறப்புச் செய்ததிலும் – இலங்கைக்குச் சென்று அக்கொலைகாரனைப் பாராட்டியதிலும் காங்கிரசுத் தலைமைக்கும் பா.ச.க. தலைமைக்கும் இடையே வேறுபாடில்லை. அத்துடன் பா.ச.க., இந்து மக்கள் கட்சி போன்றவை பார்ப்பனியப் பாசறையான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குடும்ப உறுப்புகள்! எனவே பா.ச.க., இந்து மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்களை முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவில் சிறப்புரை ஆற்ற அழைத்திருக்க வேண்டியதில்லை என்பது த.தே.பொ.க. நிலைபாடு.

ஆனால் அந்த ஒரு காரணத்திற்காக விழாவைப் புறக்கணிப்பதோ, அதை மிகைப்படுத்திக் குற்றஞ்சொல்லி நினைவுச் சின்னத்தின் முகாமைத் தன்மையைக் கொச்சைப்படுத்துவதோ, இனப்படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் ஈகத்தைப் புறந்தள்ளிவிட்டு, உள்ளூர் மனக்கசப்புகளை உலவ விடுவதாக அமையும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல் திருமாவளவன் அவர்களை விழாவில் சிறப்புரை ஆற்ற அழைக்காதது பற்றி பேசப்படுகிறது. முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவில் உரையாற்ற தோழர் திருமாவை அழைத்திருக்க வேண்டும் என்பது த.தே.பொ.க.வின் கருத்து!

2008 – 2009 ஆம் ஆண்டுகளில் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க – போர் நிறுத்தம் கோரி இந்திய அரசை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்திய அமைப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. கடும் போராட்டங்களையும் நடத்தியது. அதற்காக அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சற்றொப்ப 25 தோழர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் போட்டார். மற்றுஞ் சிலரைத் தேசியப்பாது காப்புச் சட்டத்தில் போட்டார். இன்றும் ஈழத்தமிழர்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பல போராட்டங்களை நடத்தி வருகிறது.

காங்கிரசு – தி.மு.க. கூட்டணியில் திருமா இருக்கிறார், இராசபட்சேயுடன் கைகுலுக்கினார் என்பதற்காக அவரைப் புறக்கணித்திருக்க வேண்டியதில்லை.

கலைஞர் கருணாநிதியை விழாவில் சிறப்புரை ஆற்ற ஏன் அழைக்க வில்லை என்று சிலர் கேட்கிறார்கள். அவர்கள் அடுத்து, சோனியா காந்தியை ஏன் அழைக்கவில்லை என்றும் கேட்கக்கூடும். எனவே இதற்கெல்லாம் விடை சொல்லத் தேவை இல்லை. அழைக்கப்படாததற்கான காரணங்கள் ஊரறிந்த உண்மைகள்!

அடுத்து, முள்ளிவாய்க்கால் முற்ற மண்டபத்தில் பெரியார் படம் வைக்கப்படாதது பற்றிய குற்றச்சாட்டு!

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நக்கீரன் இதழில் (2013 நவம்பர் 13-15) பின்வருமாறு எழுதியுள்ளார்.

“உண்மைதான்’’. முள்ளிவாய்க் கால் முற்றத்தில் இடம் பெற்றுள்ள தமிழகத் தலைவர்கள் படவரிசையில் பெரியாருக்கு இடமில்லாமல் போய்விட்டது. கலைஞர் படத்தை வைக்கும் அளவுக்கு அவர்களிடம் நேர்மை உணர்வு இருக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால் திட்டமிட்டே பெரியாரின் படத்தையும் மறைப்பது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி!’’

படங்கள் வைக்கப்பட்டுள்ளது தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளாமலே சுபவீ சீற்றம் கொள்கிறார். அங்கு வைக்கப் பட்டிருப்பவை சுபவீ சொல்வது போல் “தமிழகத் தலைவர்களின்’’ படங்கள் அல்ல. மறைந்த தமிழறிஞர்களின் படங்கள்! பெரியார் தமிழகத் தலைவர்களில் முகாமையானவர் என்பதில் மாற்றுக் கருத்து நமக்கில்லை. ஆனால் அவர் தமிழறிஞர் அல்லர். அரசியல் தலைவர்களாகவும் தமிழறிஞர்களாகவும் இருந்த தலைவர்கள் சிலரின் படங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அறிஞர் அண்ணா, பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் ஜீவா ஆகியோர் படங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அறிஞர் அண்ணா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், திரைக்கதைகள் தீட்டியவர். இலக்கியச் சொற் பொழிவுகள் ஆற்றியவர். தோழர் ஜீவா கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள், இலக்கியச் சொற்பொழிவுகள் வழங்கியவர். இவ்வாறான இலக்கியப் படைப்புகள் செய்தவர் அல்லர் பெரியார். எனவேதான் அங்கு பெரியார் படம் வைக்கப் படவில்லை.

திரு பழ.நெடுமாறன் அவர்கள், இன்றும் தம் தலைவராகக் காமராசரை மதிக்கிறார்; போற்றுகிறார். ஆனால் காமராசர் படம் அங்கு வைக்கப்படவில்லை. காரணம் படம் வைக்கும் அளவுக்குக் காமராசர் தகுதியுடைய தலைவர் அல்லர் என்பதன்று. அவர் இலக்கியப் படைப்பு எதுவும் வழங்கியவர் இல்லை என்பதுதான்!

இயல், இசை, நாடகம் (திரைத் துறை உட்பட) என்ற முத்தமிழ்த் துறையில் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் படங்கள் அங்கு வைக்கப் பட்டுள்ளன. அந்த வகையில்தான் நடிகவேள் எம்.ஆர்.இராதா படம் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

“சாதிப்பட்டங்கள் தாங்கிய பெரியவர்களின் படங்களெல்லாம் அங்கு இடம் பெற்றிருக்க சாதியை ஒழிக்கப் போராடிய பெரியாரின் படத்திற்கு இடமில்லாமல் போய் விட்டது. ஒரு வேளை அதுதான் காரணமோ என்னவோ’’என்று சுபவீ மேற்படி இதழில் எழுதியுள்ளார்.

அக்காலத் தமிழறிஞர்கள் சிலர் பெயருடன் இயற்பெயர் போல் சாதிப்பெயர் ஒட்டிக் கொண்டுள்ளது. அந்த ஒட்டுப் பெயரை நீக்கி விட்டால் அவர்கள் யாரென்று தெரியாத நிலை உள்ளது. எடுத்துக் காட்டாக ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களை சேது என்று மட்டும் குறித்தால் இக்கால இளையோர் அவரை அடையாளம் காண முடியுமா? அ.சிதம்பரநாதன் செட்டியாரை, சிதம்பரநாதன் என்று குறிப்பிட்டால் அவரை அடையாளம் கண்டு கொள்வதில் குழப்பம் வருமல்லவா? அவரை, கற்றோர் உலகம் ஏ.சி. செட்டியார் என்றே அறிந்திருக்கிறது. சாதிப்பெயர்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் சாதிவாதத்தை ஏற்பதற்காககத்தான் சாதிப் பெயர்கள் போடப் பட்டுள்ளன என்ற தமது குற்றச்சாட்டை, சுபவீ ஓர் ஐயம் போல் கிளப்பிவிடுவதில் வாதத்திறமை வெளிப்படவில்லை. வன்னெஞ்சம்தான் வெளிவந்திருக்கிறது. “சாதிப் பெயர் தாங்கிய பெரியவர்கள்’’ என்று சுபவீயே அவர்களை மதிப்போடு குறிப்பிடுகிறார். சாதிப் பெயர் தாங்கிய சிறியர் அல்லரே அன்னார்!

நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டி.மாதவன் நாயரை டி.எம். நாயர் என்று வீரமணி, சுபவீ உள்ளிட்ட திராவிடத் தலைவர்கள் அழைப்பார்கள். தமிழறிஞர்கள் சேதுப்பிள்ளை, சிதம்பரநாதன் செட்டியர் என்றால் இவர்களுக்கு எரிச்சல் வந்துவிடுகிறது. நாயர் என்பது திராவிட மலையாள சாதி அல்லவா! அது “பகுத்தறிவானது’’; “முற்போக்கானது’’!

சாதிவாதத்தைத் தீவிரப்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராக உயர்சாதிக் கூட்டணி அமைத்துச் செயல்படும் மருத்துவர் இராமதாசு அவர்களைத் தம்முடன் கூட்டணி சேர வருந்தி வருந்தி அழைக்கிறார் கலைஞர் கருணாநிதி. மாநிலங்களவைத் தேர்தலில் தம் மகள் கனிமொழிக்கு வாக்களிக்குமாறு வேண்டி பா.ம.க. தலைவர்களுக்குத் தூதுவிட்டார் கலைஞர் கருணாநிதி. ஏதோ ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் தி.மு.க.வும் அதன் பரப்புரையாளர் சுபவீயும் நிற்பதுபோல் பேசுவது அறமா? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதுபோல் “பெரியார் படம் வைக்கப்படாததற்கு அவர் சாதிகளை எதிர்த்ததுதான் காரணமோ’’ என்று ஊகம் கிளப்பிவிடுவதும் ஞாயமா?

“கலைஞர் படத்தை வைக்கும் அளவுக்கு அவர்களிடம் நேர்மை உணர்வு இருக்க முடியாது என்பதை நாம் அறிவோம்’’ என்கிறார் சுபவீ (மேற்படி நக்கீரன்)

சுபவீ கூறும் “நேர்மை’’ அவர் உட்பட யாருக்கும் வேண்டாம். ஏனெனில் அங்கு “மறைந்த தமிழறிஞர்கள்’’ படங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழறிஞர்கள் படம் எதுவும் வைக்கப்படவில்லை. “கலைஞர் விசுவாசிகள் சங்கப்’’ பொதுச் செயலாளர் போல் தமது பயணத்தை அமைத்துக் கொண்ட பிறகு சுபவீ அவர்களுக்குப் பல தடுமாற்றங்கள் வந்து விட்டன! அச்சங்கத்தின் தலைவர் போல் ஆசிரியர் வீரமணி இருக்கிறார்.

திருச்சியில் 9.11.2013 அன்று திராவிடர் கழகம் “திராவிடர் எழுச்சி மாநாடு’’ நடத்தியது. தமிழர் என்றாலே ஆசிரியர் கி. வீரமணி, சுபவீரபாண்டியன் ஆகியோர்க்கு ஒவ்வாமை வந்து விடும். தமிழ் இனத்தின் மீது ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டதோ! தமிழர் திருநாளாக இது வரை கொண்டாடப்பட்டு வந்த பொங்கல் விழாவைக் கடந்த இரண்டாண்டுகளாக “திராவிடர் திருநாள் விழா’’ என்று கொண்டாடுகிறார் வீரமணி.

திராவிடர் திருநாள், திராவிடர் எழுச்சி மாநாடு என ‘திராவிட’த்தைக் கொண்டாடும் ஆசிரியர் கி.வீரமணி, தமக்கு மட்டும் ‘தமிழர்’ தலைவர் என பட்டமளித்துக் கொள்வது எந்த வகையில் ஞாயம்? மற்றவர்கள் தமிழர் என்றால் பாய்வதும், தாம் மட்டும் தமிழர் பட்டம் சூட்டிக் கொள்வதும் பகுத்தறிவுதானா?

திருச்சியில் நடந்த “திராவிடர் எழுச்சி மாநாட்டில்’’ பேசிய சுபவீ இது திராவிடர் எழுச்சி மாநாடு, தமிழர் எழுச்சி மாநாடாக இருந்திருந் தால் அதில் பொன்.இராதா கிருஷ்ணனும், அர்ச்சுன் சம்பத்தும் இடம் பெற்றிருப்பார்கள். இங்கே செகத்கஸ்பரும், பேராசிரியர் காதர்மொய்தீனும் இடம் பெற்றிருக்க மாட்டார்கள்”என்று பேசியுள்ளார். (“உண்மை’’ 2013 நவம்பர் 16-30 இதழ்) முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்புவிழா பற்றி பேசிவிட்டு இவ்வாறு கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவில் பேராசிரியர் ஜவஹிருல்லா, ஹென்றிடிபேன், இன்குலாப் போன்றவர்கள் இடம் பெற்றிருந்தார்கள் என்பது சுபவீக்குத் தெரியுமா தெரியாதா? பேரா. ஜவஹிருல்லா வரவில்லை. மற்ற இருவரும் வந்து அவரவர் அரங்கத்தில் கலந்து கொண்டனர். தமிழினத்தின் மீது உங்களுக்குக் காழ்ப்புணர்ச்சி இருந்தால் அதற்கான காரணத்தைச் சொல்லுங்கள். கிறித்துவர்கள் – இசுலாமியர்கள் தமிழ்த் தேசிய மேடையில் இடம் பெற முடியாது என்றும் அதனால்தான் முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவில் அவர்கள் இடம் பெற வில்லை என்றும் விவரப் பிழையாகக் கூறி கோயபல்சின் கொள்ளுப் பேரர் ஆகாதீர்கள்.! அதே போல் புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கிருட்டிணசாமியை முள்ளிவாய்க் கால் முற்றத் திறப்புவிழாவிற்கு அழைக்கவில்லை என்று நக்கீரனில் எழுதினார். மருத்துவர் கிருட்டிணசாமி அழைக்கப்பட்டார். அவர் பெயர் அழைப்பிதழில் உள்ளது. அவர் வராததற்குக் காரணம் மொரீசியசில் 8.11.2013 அன்று நடந்த ஈழத் தமிழர் ஒன்று கூடலுக்கு அவர் போனதுதான்! தமிழர் என்றால்- அதில் கிறித்துவர் இசுலாமியர் வர மாட்டார்கள் என்று தமிழ்த் தேசியம் ஒரு போதும் சொல்ல வில்லை.

தமிழ்நாட்டில் திராவிடர் என்று இயக்கம் வைத்துக் கொண்டு தெலுங்கர், கன்னடர்,மலையாளிகளுக்காகப் பரிந்து பேசுவதும், தமிழர்களை இழிவுபடுத்துவதும் என்ன ஞாயம்? பழைய காலம் போல் திராவிடப் பல்லவியைத் தமிழ் இளைஞர்கள் ஒப்பவில்லை என்பதைக் கண்டு கொண்ட சுபவீ, “திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை’’ என்று ஒட்டுப் போட்டுத் தமிழரைச் சேர்த்துள்ளார். தமிழர் மண்ணில் வாழ்ந்து கொண்டு தமிழர்களுக்கு ஒட்டுத் திண்ணையில் இடம் ஒதுக்குகிறார். ஏன் திராவிடர் பேரவை என்று வைத்துக் கொள்ள வேண்டியது தானே! வீரமணி – சுபவீ அகராதியில் மாற்றுக் குறையாத தங்கம் “திராவிடர்’’ என்ற சொல்; மானக்குறைவான சொல் “தமிழர்’’!

மேற்படி திருச்சி மாநாட்டில் பேசிய செகத்கஸ்பர் “மதவாத சக்திகள் தமிழ்த் தேசியத்தில் அடைக்கலம் கொண்டுள்ளன’’ என்று பேசியுள்ளார்.

ஒரே நேரத்தில் கிறித்துவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இரண்டகம் செய்தவர் செகத்கஸ்பர். யூதாஸ் கூட கடைசி நேரத்தில் தனது துரோகத்திற்காக வெட்கப் பட்டு எதிரி கொடுத்த வெள்ளிக் காசுகளை வீதியில் எறிந்து காரித் துப்பினான். யூதாஸ் பெயரை உச்சரிக்கும் தகுதி கூட செகத்கஸ்பருக்குக் கிடையாது! அவர் திராவிடர் எழுச்சி மாநாட்டில் பங்கு பெற்றது பொருத்தமே!

பா.ச.க.வின் திசைப் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்காத செம்மாந்த கொள்கைப் பட்டாளத்தின் அணி வகுப்பில்தாம் இருப்பது போல் இப்பொழுது கித்தாப்பு பேசுகிறார் சுபவீ!

அந்தக் காலத்தில் அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் பற்றப், பரதன் வெண்குடை கவிக்க பாக்கியுள்ள இருவரும் கவரி வீச இராமனுக்கு முடி சூட்டுவிழா நடந்ததாகக் கம்பர் கூறுகிறார். இந்தக் காலத்தில் அட்டல்பிகாரி வாஜ்பாயி அரியணையை நவீன அனுமனாக மாறி கருணாநிதி அல்லவா தாங்கினார். அந்தக் கால அனுமன் கைமாறு கருதாமல் இராமனுக்கு அரியணை தாங்கினான். இந்தக் கால அனுமன் கருணாநிதியோ கண்மணி மாறனுக்கு அரண்மனையில் சேவகம் வாங்குவதற்காக ஆரியத்துக்கு அரியணை தாங்கினார். ஆர்.எஸ். எஸ்.சின் அரசியல் பிரிவான பா.ச.க.வின் அமைச்சரவைக்கு ஆறு ஆண்டுகள் ஆதரவளித்து, ஈழத்துக் கருணாவைப் போல், டக்ளஸ் தேவானந்தாவைப் போல் ஆண்டையின் அதிகாரத்தில் பங்கு வாங்கிக் கொண்டது தி.மு.க.

தி.மு.க.வின் இந்தத் துரோகங்கள் பற்றித் துளி உறுத்தல் கூட வீரமணிக்கும் சுபவீக்கும் இல்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல், தி.மு.க.வின் பா.ச.க.பிணைப்புப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் “கவலைப்படாத கலைஞர் விசுவாசிகள் சங்கம்’’ நடத்துகிறார்கள் வீரமணியும் சுபவீயும்! பார்ப்பன அம்மையாருக்கு “சமூக நீதி காத்த வீராங்கனை’’ பட்டம் கொடுத்த சுயமரியாதைச் சுடரொளி அல்லவா வீரமணி!

“எப்பொழுதோ நடந்தகதை அது. அப்போது நான் வேறொரு முகாமில் இருந்தேன்’’ என்று சுபவீ கூறக்கூடும்! இப்பொழுது ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு கேட்டு கலைஞர் கருணாநிதி பா.ச.க.வுக்குக் கடிதம் எழுதினாரே அது பற்றி அவர் என்ன சொல்கிறார்? “தன்னெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்’’ என்றான் நம் ஆசான் வள்ளுவப் பெருந்தகை! இதெல்லாம் மனச்சான்றைக் கொல்லாதவர்களுக்குத்தான் பொருந்தும்! இப்பொழுதும் சொல்கிறோம். முள்ளிவாய்க்கால் திறப்பு விழாவிற்குப் பா.ச.க. தலைவர்களை அழைத்ததை த.தே.பொ.க. ஏற்கவில்லை. அதற்காக அந்த விழாவைப் புறக்கணிக்கவும் புறங்கூறவும் த.தே. பொ.க.விரும்பவில்லை.

பா.ச.கவை த.தே.பொ.க. எதிர்ப் பதற்குக் காரணம் அது மதநம்பிக்கையுள்ள கட்சி என்பதற்காக அன்று. அது ஆரியப் பார்ப்பனிய இந்துத்துவா வெறி அமைப்பு என்பதற்காக! சமய நம்பிக்கையுள்ள சைவர்கள், வைணவர்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மற்றும் கடவுள்மத நம்பிக்கையற்றவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொண்டதுதான் தமிழ்த் தேசியம்!

திராவிடத்தை த.தே.பொ.க. எதிர்ப்பதற்கு சமூக அறிவியல் காரணம் இருக்கிறது. அது தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோருடன் தமிழர்களையும் இணைத்து இன்றும் பேசிக் கொண்டிருப்பது சமூக அறிவியலுக்கு எதிரானது என்று கருதுகிறது. அது தமிழர்களுக்கு இனத்துரோகம் செய்யும் கோட்பாடாகும். தமிழ்நாட்டை முந்நூறு நானூறு ஆண்டுகளாகத் தாயகமாக ஏற்று இன்றும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களை எதிர்ப்பதற்காகத் திராவிடத்தை எதிர்க்க வில்லை. ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றில் தமிழினப் பகையோடு அரசியல் நடத்தும் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோர்க்குத் தமிழினத்தை அடங்கிப் போகச் செய்யும், இணங்கிப் போகச் செய்யும் இனத்துரோகக் கோட்பாடு என்பதற்காகவே திராவிடத்தை எதிர்க்கிறோம்.

மொழிவழி மாநிலமாகத் தமிழகம் அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1க்கு முன் தமிழ்நாட்டில் குடியேறி வாழ்ந்துவரும் தெலுங்கு, கன்னடம், உருது முதலிய பிறமொழி பேசும் மக்களைத் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களாகத்தான் த.தே.பொ.க.கருதுகிறது. மரபு வழிப்பட்ட தமிழர்களுக்குள்ள அத்தனை உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு என்கிறது. அவர்களும் சேர்ந்ததுதான் தமிழ்த்தேசியம் என்கிறது.

திராவிடம் என்ற பெயரில் ஓர் இனமும் இருந்ததில்லை, ஒரு மொழியும் இருந்ததில்லை, திராவிடம் என்ற நாமகரணம் ஆரியத்தின் கைச்சரக்கு! ஐரோப்பியரான கால்டுவெல் ஆரியத்திடமிருந்து கடன்வாங்கிய பொய்ச்சரக்கு! அன்று சென்னை மாகாணத்தில் ஆந்திரத் தெலுங்கரின் ஆதிக்கத்திலிருந்த நீதிக்கட்சியின் தலைமையை ஏற்க பெரியார் தேர்ந்தெடுத்த போலிச் சொற்கட்டு திராவிடம்!

சுபவீ நடத்தும் “கருஞ்சட்டைத் தமிழர் ஏட்டில் (கவனிக்கவும் கருஞ்சட்டைத் திராவிடர் என்று பெயர் வைக்கவில்லை) தோழர் இரா.உமா முள்ளிவாய்க்கால் முற்றத்திறப்புவிழா பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் பெரியாரைத் தவிர்த்துவிட்டுத் தமிழக வரலாற்றை யாரும் எழுத முடியாது என்று கொதித்துள்ளார்.

பெரியாரைத் தவிர்த்துவிட்டுத் தமிழர் வரலாற்றை எழுத வேண்டு மென்று தமிழ்த் தேசியவாதிகள் யாரும் கூறவில்லை. ஆனால் பெரியாரிலிருந்து தான் தமிழினத்தின் வரலாறு தொடங்குகிறது என்று கூறி மூடநம்பிக்கைகளை விதைக்காதீர்கள் என்கிறோம்! பெரியார் பிறப்பதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் தமிழினத்தில் தொடங்கிய ஆரிய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பெரியார் பிறந்த 19 ஆம் நூற்றாண்டில் அவர் பிறப்பதற்கு முன் தமிழ் நாட்டில் தோன்றிய வர்ண-சாதி எதிர்ப்பு சங்கங்கள், அமைப்புகள், இலக்கியங்கள் அனைத்தையும் மறுக்கும் பகுத்தறிவுப் பக்தி மார்க்கத்தில் மூழ்கிவிடாதீர்கள் என்பதே எங்கள் வேண்டுகோள்!

திராவிட இயக்கங்களில் இளைஞர்களே இல்லாமல் போனது போல் தமிழ்த் தேசிய இளைஞர்களைப் பார்த்து “ஏன் சோவை எதிர்த்துப் போராடவில்லை? ஏன் செயமோகனை எதிர்த்துப் போராட வில்லை என்று இரா. உமா கேள்வி கேட்கிறார்.

“ஒரு தலைமுறைக்குள் தமிழ்வரி வடிவத்தை விட்டுவிட்டு ஆங்கில வரிவடிவத்திலேயே தமிழர்களின் பிள்ளைகள் படிக்க வேண்டு மென்று ஆர்.எஸ்.எஸ். எழுத்தாளர் செயமோகன் தி இந்து தமிழ் இதழில் எழுதினாரே எத்தனை இளைஞர்கள் அதைக்கண்டு பொங்கி எழுந்தனர்’’ என்று கேட்கிறார் இரா. உமா!

தமிழ் வரிவடிவத்தைக் கை விட்டு விட்டு ஆங்கில (ரோமன்) வரிவடிவத்தில் நெடுங்கணக்கில் தமிழை எழுத வேண்டும் என்ற கோரிக்கையின் பிதாமகர் பெரியார் தாம்!

1939 ஆம் ஆண்டில் கோவைக் கல்லூரியில் பேசிய போது ஆங்கில வரிவடிவத்தில் தமிழை எழுத வேண்டுமென்று கூறியதாக பெரியார் 1962ல் நினைவு கூர்கிறார்.

“நான் 1939 இல் கோவைக் கல்லூரியில் அதன் பிரின்சிபாலின் தலைமையின் கீழ் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பேசும் போது எடுத்துச் சொல்லியிருக்கிறேன்… மொழி என்னும் தலைப்பில் பேசிய பேச்சில் குறிப்பிட்டிருக்கிறேன். அப்பேச்சில் ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துகளுக்கு நெடுங்கணக்காக – அகரவரிசையாக எடுத்தக்கொள்ளலாம் என்றும் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால் அதற்கேற்ற தமிழ் எழுத்தையே எடுத்துக் கொள்ளலாமென்றும் சொன்னதோடு மற்றும் ஆங்கிலமே தமிழனின் பேச்சுமொழியாக ஆகும் படியான காலம் ஏற்பட்டால் நான் மிக மிக மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன் என்றும் பேசியிருக்கிறேன். சமீபத்தில் (1957) நுங்கம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் என்பதாக ஒரு கூட்டம் கூட்டப்பட்ட காலத்தில் எல்லாக் கட்சிக்காரர்களும் வந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய திருவாளர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று பேசினார். பிறகு நான் பேசும்போதும் அது போலவே பேசிவிட்டு ஆங்கிலம் பேச்சுமொழியாக இருந்தாலும் மிகவும் பயன்படும் என்றும் சொன்னேன்’’ – 1957, 1962 பெரியார் ஈவெரா சிந்தனைகள் -2 தொகுப்பு வே. ஆனைமுத்து பதிப்பு 1.7.1974 பக்கம் 988

ஆங்கில வரிவடிவத்தில் தமிழை எழுத வேண்டும் என்று கட்டுரை எழுதிய செயமோகனைக் கண்டித்தும் அதை வெளியிட்ட தி இந்து தமிழ் நாளிதழைக் கண்டித்தும் சுபவீ தலைமையில் அந்த இதழின் ஆசிரியரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்த குழுவில் த.தே.பொ.க. தோழர்களும் இதரத் தமிழ்த் தேசிய அமைப்புகளின் தோழர்களும் இருந்தார்கள். முதலில் சுபவீ, ஆசிரியர் கி.வீரமணி போன்றோர் பெரியாரின் மேற்படிக் கருத்து பிழையானது. அதை நாங்கள் ஏற்க வில்லை என்று கூறிவிட்டு செயமோகனை எதிர்த்துக் கருஞ்சட்டைத் தமிழரில் எழுதியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். சுபவீ பாணியில் சொல்வதென்றால் அது “நேர்மையாக’’ இருந்திருக்கும்.

மறைந்த தமிழறிஞர் படங்களின் வரிசையில் பெரியார் படம் வைப்பது சரிதானா என்பதைக் கீழ்வரும் அவரது தமிழ் வெறுப்புக் கருத்துகளைப் படித்துவிட்டு படிப்பாளர்கள் முடிவு செய்யட்டும். 1967 -இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில் அமைச்சர் கருணாநிதி ஏதோ ஒரு கூட்டத்தில் “தமிழுக்குக் கேடு வந்தால் அமைச்சர் பதவியை விட்டுவிடுவேன் என்று பேசினாராம். அதற்காகக் கருணாநிதியைக் கடிந்து கொண்டார் பெரியார்.

“அட பாவமே! மந்திரி கலைஞர் கருணாநிதி தமிழுக்குக் கேடு வந்தால் மந்திரி பதவியை விட்டு விடுவேன் என்று எதற்காகச் சொல்ல வேண்டும்? ஏன் அனாவசியமாய் முட்டாள்கள் வைத்த கண்ணியில் மாட்டிக்கொள்ள வேண்டும். அப்துல் காதருக்கும் ஆடி அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?

நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து நிர்வாகம் மக்களிடம் பேச்சு இவைகளைத் தமிழில் நடத்துகிறோம். சமயத்தை சமயநூல்களை இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோமே! இதற்குமேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும்.?

-              மேற்படி நூல் பக்கம் 985

பகுத்தறிவாளரான பெரியார் தமிழின் மீது கொண்டுள்ள அடங்கா வெறுப்பின் காரணமாக மூடநம்பிக்கை மொழியில் தமிழை “சனியன்’’ என்று சாடுகிறார். (“தமிழைப் பழித்தவரைத் தாய் தடுத்தாலும் விடேன்’’- என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலை அருள் கூர்ந்து இந்த இடத்தில் மறந்து விடுங்கள்.)

பெரியாரின் தமிழ் அழிப்புத் திட்டங்கள் பற்பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் வேறொரு வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம். இறுதியாக ஒன்றே ஒன்றைப் பார்ப்போம்.

“எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதைத் தோழர்கள் உணர வேண்டும். மற்றெதற்கு என்றால் ஆங்கிலமே பொது மொழியாக அரசாங்க மொழியாக தமிழ்நாட்டுமொழியாக தமிழன் வீட்டு மொழியாக ஆகவேண்டும் என்பதற்காகத்தான்.

“நாம் இவ்வாறு கூறுவது தமிழன் உலக மனிதனாக விஞ்ஞான உருவாக ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் மக்களை விஞ்ஞானத்தில் தோற்கடிக்கத்தக்கவனாக ஆகவேண்டும் என்பதற்காகவேயாகும். நாம் இன்று கிணற்றுத் தவளைகளாக இருக்கிறோம். நமக்குக் கம்பனுக்கு மேல் புலவன் இல்லை. வள்ளுவனுக்கு மேல் தீர்க்கதரிசி இல்லை. இக்கருத்தில் நாம் உலக மனிதனாக ஆக முடியாது என்பது எனது பலமான கருத்து. ஆகையால் தமிழர் தோழர்களே உங்கள் வீட்டில் மனைவியுடன் குழந்தைகளுடன் வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். பேசப்பழகுங்கள். பேச முயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள். என்னை வையாதீர்கள் மனிதனாக வாழ முயலுங்கள்.

-விடுதலை அறிக்கை 27.1.1969 மேற்படி பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் 2 பக்கம் 989

பார்ப்பனியத்தின் பாதுகாவலர் என்று பெரியாரால் வர்ணிக்கப் பட்ட இராஜாஜி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று இரா. உமாவால் அடையாளம் காட்டப்பட்ட செயமோகன், பார்ப்பனிய நஞ்சையே குருதி ஓட்டமாகக் கொண்டுள்ள சோ ஆகியோரின் தமிழ் எதிர்ப்பு ஆங்கில ஆதரவுக் கருத்துகளும் பெரியாரின் தமிழ் எதிர்ப்பு ஆங்கிலத் திணிப்புக் கருத்துகளும் ஒரு நேர் கோட்டில் சந்திக்கின்றனவே அது எப்படி? பெரியார் புறப்பட்ட இடம் வேறு. இரு தரப்பாரின் உள் நோக்கங்களும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் இரு தரப்பாரும் தமிழ் மக்களை கால வளர்ச்சிக்கேற்ப மேம்படுத்துவதற் காகவே ஆங்கிலத் திணிப்பைச் சொல்வதாகக் கூறிக் கொள்கிறார்கள்.

நஞ்சை நஞ்சென்று தெரிந்து நமக்குக் குடிக்கக் கொடுத்தாலும் நஞ்சைப் பால் என்று நம்பி நமக்குக் குடிக்கக் கொடுத்தாலும் -அதை நாம் குடித்தால் விளைவு ஒன்று தானே! பெரியாரின் நோக்கம் வேறு, பார்ப்பனர்கள் நோக்கம் வேறு என்று கூறித் தப்பித்துக் கொள்ள முடியாது. நோக்கம் வேறாக இருக் கட்டும், விளைவு ஒன்றுதானே!

தமிழ் மொழி அழிப்புதான் விளைவு; தமிழ் ஒழிந்தால் தமிழர்கள் பார்ப்பனர்களுக்கும் ஆரியத்திற்கும் அடிமை ஆவார்கள். இந்த விளைவு ஒன்றுதானே!

மற்றபடி மேற்படி மேற்கோளில் உள்ள பெரியாரின் கருத்துகள் பலவும் வரலாற்றுப் பிழையானவை; சமூக அறிவியலுக்குப் பொருந்தாதவை. திருவள்ளுவருக்குப் பிறகு புதுக் காலத்துக்கேற்ற புலவர் தமிழில் இல்லை என்கிறார்; அதுவும் 1969 -இல்! ஏன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இல்லையா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆங்கில மொழியில் திருவள்ளுவர் போல் ஒரு புலவர் தோன்றியதுண்டா? திருவள்ளுவர் காலத்தில் ஆங்கில மொழியே தோன்றவில்லையே! ஆங்கில மொழி பேசும் மக்களுக்குத் திருக்குறளின் அரிய கருத்துகள் தேவை என்று கருதித்தான் அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார் ஆங்கிலேயரான ஜி.யு.போப்! இதர பல ஐரோப்பியர்களும் ஐரோப்பிய மொழிகளில் திருக்குறளைப் பெயர்த்தெழுதினார். கம்பர் காலத்தில் அவருடைய இலக்கியச் செழுமைக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு வேறு எந்த மொழியில் இலக்கியம் இருந்தது? கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும் என்ற முகாமைச் சேர்ந்த கருணாநிதி கூட இப்பொழுது கம்பர் விழாவில் கலந்து கொள்வதற்குக் காரணம் கம்பனின் கவிய முதுதானே!

பெரியார் குறிப்பிடுவது போல் ரசியாக்காரனும், சப்பான்காரனும் விஞ்ஞான மனிதர்கள் ஆனதற்குக் காரணம் என்ன? அவரவர் தாய் மொழியில் கற்றதுதான்! தமிழைவிட ரசிய மொழியும் சப்பானிய மொழியும் வளமானவை அல்லவே! தமிழை விஞ்ஞான மொழியாக்குவது எளிதாயிற்றே! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழர்களும் தமிழும் அயல் இனத்தார்க்கு அடிமைப் படுத்தப்பட்டு, அயல் மொழிகளின் ஆதிக்கத்தின் கீழ் ஒடுக்கப்பட்டுக் கிடப்பதால் உலகின் முதற்செம்மொழியான தமிழை நாம் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லாமற் போய்விட்டது.

தமிழ் மொழி அழிப்பிற்கு 1969 இல் கூட வேலைத்திட்டம் வகுத்த பெரியாரின் படத்தை, தமிழ் வளர்க்கப் பாடுபட்ட மறைந்த தமிழறிஞர்கள் வரிசையில் எப்படி வைக்க முடியும்?

வர்ண சாதி ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சமத்துவக் கருத்துகள், மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற வற்றில் பெரியாரின் பங்களிப்பைத் தமிழர்கள் ஏற்றுப் போற்ற வேண்டும். அதே வேளை மொழி, தேசிய இனம், இனம் ஆகியவை குறித்த அவரது தவறான கருத்துகளை தமிழர்கள் ஏற்கக் கூடாது என்பதே தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சியின் நிலைபாடு!

இறுதியாக ஒரு வினா?

பெரியார் அவ்வப்போது தமிழ்நாடு விடுதலை முழக்கத்தை முன் வைத்துள்ளார். 1973 செப்டம்பர் 17 விடுதலை மலருக்கு அவர் கடைசியாக எழுதிய பிறந்த நாள் செய்திக் கட்டுரையில் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை மட்டும் முதன்மைப்படுத்தி – போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தார். ஆனால் அவர் 1973 டிசம்பர் 24இல் காலமாகி விட்டார். ஆசிரியர் கி.வீரமணி அவர்களோ, சுபவீ அவர்களோ, உமா போன்றவர்களோ தமிழ்நாடு விடுதலையை வலியுறுத்தி மேடையில் பேசுவதில்லை. அதற்காகக் கட்டுரைகள் எழுதுவதில்லை. ஏன்? பிறகென்ன பெரியாரியவாதிகள் அவர்கள்? முன்னாள் பொடாச் சிறையாளியான சுபவீ இந்நாளில் பொழுது போக்கு அரசியல்வாதி ஆகிவிட்டார்! பகுத்தறிவு ஆதீன கர்த்தரான ஆசிரியர் வீரமணி அவர்களின் “புரட்சி’’ பற்றியும் தற்சார்பு செயல் பாடுகள் பற்றியும் கேட்கவே வேண்டாம்!

தமிழினத்தை வீழ்த்த – தமிழ்த் தேசிய வளர்ச்சியைத் தடுக்க பெரியாரை ஒரு கருவியாகப் பயன் படுத்துகிறார்கள் அவர்கள்!

பெரியாரியவாதிகளாக அவர்கள் இருக்கட்டும்! அதற்காகத் தமிழின வெறுப்பாளர்களாக இருக்க வேண்டாம்!

Pin It

ஐ.நா.வின் முன் முயற்சியில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த இன்னுமொரு மாநாடும் தோல்வியில் முடிந்துள்ளது. 2013 நவம்பர் 11 தொடங்கி 22 வரை போலந்து தலைநகர் வார்சாவில் நடைபெற்ற ஒப்பந்த உறுப்பு நாடுகளின் 19 ஆவது மாநாடு (conference of parties- COP 19) உருப்படியான முடிவேதும் எட்டாமல் பெயருக்கு ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுக் கலைந்தது.

புவி வெப்பமாதல் குறித்தும் அதன் விளைவாக ஏற்பட்டு வரும் தாறுமாறான பருவநிலை மாற்றங்கள் குறித்தும் ஜப்பான் நாட்டின் கியோட்டோ நகரில் 1997 டிசம்பரில் கூடிய உலக நாட்டுதலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை கியோட்டோ அறிக்கை எனப்படும். இதில் கையொப்பமிட்டுள்ள நாடுகளே ஒப்பந்த உறுப்பு நாடுகள் எனப்படுகின்றன. 193 நாடுகள் இவ்வாறு ஒப்பந்த உறுப்பு நாடுகளாக உள்ளன.

இந்த உறுப்பு நாடுகளின் மாநாடு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று கியோட்டோ அறிக்கையில் ஏற்றுக் கொண்ட முடிவுகளை செயல் படுத்துவது குறித்தும், 2015 இல் பாரிசில் இன்னொரு உச்சி மாநாடு நடத்தி இறுதி செய்யவுள்ள அடுத்த பருவநிலை ஒப்பந்தம் குறித்தும் பேசி வருகின்றன. (கியோட்டோ அறிக்கை குறித்த விரிவிற்கு காண்க: தமிழர்கண்ணோட்டம் இதழ்கள் மே 2007 டிசம்பர் 2009, சனவரி 2010)

அவ்வகையில் வார்சா மாநாடு 19 ஆவது மாநாடாகும்.

பெருந்தொழில் முனைவோரின் மிகை இலாபா நோக்கு, அதற்கேற்ப வளர்க்கப்பட்டுள்ள கண்மண் தெரியாத நுகர்வுவெறி ஆகியவை இணைந்து இப்புவி மண்டலத்தின் இயற்கை வளங்களை மிகையாக உறுஞ்சி கழிவுகளை மிகையாக வெளியிட்டதன் விளைவாக புவி வெப்பமயமாதல் என்ற சிக்கல் விளைந்து பருவ நிலைமாற்றங்கள் சீரற்ற தன்மையை அடைந்தன என்ற உண்மையை கியோட்டோ அறிக்கை ஏற்றது.

இதனை சரி செய்ய வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட நச்சுவாயுக்களின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், புவி வெப்பமடைதல் இந்த நூற்றாண்டு இறுதிக்குள் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குமேல் உயராமல் பார்த்துக் கொள்வ தென்றும் கியோட்டோவில் முடிவானது.

இவ்வாறு நச்சுவாயுக்களை வெளியிட்டதில் தொழில்துறையில் முன்னேறிய அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சப்பான் ஆகியவை கூடுதல் பங்கு வகிப்பதால் இதனை சரி செய்வதிலும் அவற்றின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். என்பதும் ஏற்கப்பட்டது. இதற்கு “பொது நோக்கு - வேறுபட்ட பொறுப்பு’’ (common but differential responsibilities) என்று பெயர்.

கியோட்டோவுக்குப் பிறகு நடைபெற்ற ஒவ்வொரு பருவ நிலை மாநாட்டிலும் வெவ்வேறு சாகசங்கள் செய்து வல்லாதிக்க நாடுகளின் கூடுதல் பொறுப்பை தட்டிக் கழிப்பதில் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து முனைப்புக் காட்டின. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேரு நாடுகளில் அமைச்சர்கள் அளவிலான பன்னாட்டு மாநாடுகள் பல நாட்கள் நடைப்பெற்ற போதிலும் பேச்சு வார்த்தை இழுபறிகள் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் அறிவியலாளர்கள் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வேகத்தில் பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டு புயல், பெருமழை, கடல் சீற்றம், பெரும்வறட்சி, என தாறு மாறன நிகழ்வுகள் ஏற்பட்டு பேரழிவை உண்டாக்கி வருகின்றன.

குறிப்பாக புவியின் வெப்ப அதிகரிப்பால் துருவங்களில் உள்ள பல்லாயிரம் சதுரகிலோ மீட்டர் பனிப்பாறைகளும், இமயமலை உள்ளிட்ட மலைச்சிகரங்களின் உறைபனிகளும் உருகி பெருவெள்ளம், கடல் மட்ட உயர்வு போன்றவை ஏற்படுவதும், கடல் வெப்பம் அதிகரிப்பதால் உருவாகும் வெப்பச் சலனம் காரணமாக புவிக் கோட்டுப் பகுதிகளில் கடும் வறட்சி ஏற் படுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மிகையாக அதிகரித்துள்ளன.

பருவ நிலையில் ஏற்படும் இம் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளை ஐ.நா. வல்லுநர்கள் தர வரிசைப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் கியோட்டோ அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள மொத்தம் 193 நாடுகளில் அதிகம் பாதிக்கப்படும் முதல் எண் நாடாக வங்காள தேசம் உள்ளது. வங்காள தேசத்தின் போலோ, குதுப்தியா தீவு மாவட்டங்கள் கடல் அரிப்புக் காரணமாக பெருமளவு நீரில் மூழ்கி விட்டன. இன்னும் 20 ஆண்டுகளுக்குள் இத்தீவுகள் முற்றிலும் காணாமல் போய்விடும் என அஞ்சப்படுகிறது. இத்தீவுகளில் வாழும் 20 இலட்சம் மக்களில் பாதி பேருக்குமேல் நிலம் இழந்து, ஊரிழந்து, பருவநிலை அகதிகளாக நாட்டின் உள்பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து விட்டனர்.

இவ்வாறு பாதிப்படையும் தர வரிசையில் 20 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

அதிலும் ஆந்திராவும் தமிழ்நாடும் மிக அதிகப் பாதிப்புகளை சந்திக்கவுள்ள மாநிலங்கள் என அடையாளமிடப்பட்டுள்ளன.

கடந்த 40 ஆண்டுகளில் ஆந்திரா 60 புயல்களைச் சந்தித்துள்ளது. அதன் பாதிப்புகள் தமிழகத்திற்கும் நேர்கிறது.

அண்ணாப் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டுள்ள பருவநிலை குறித்த ஆய்வறிக்கை அதிர்ச்சியான தகவல்களை தெரிவிக்கிறது. 2020க்குள் தமிழ்நாட்டின் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 3.7. டிகிரி செல்சியஸ் உயரும் என்றும் இவ்வாய்வறிக்கைக் கூறுகிறது.

இதன் காரணமாக தமிழ் நாட்டின் 1100 கிலோ மீட்டர் நீளமுள்ள கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் 2020க்குள் 18 செ.மீ அதிகரிக்கும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது. ஏற்கெனவே கடும் கடல் அரிப்புக்கு உள்ளாகிவரும் எண்ணூர், புதுவை, விழுப்புரம், கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகள் இன்னும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும். கடல் அரிப்பு நிலங்களை விழுங்கி அப்பகுதி மக்களை வெளியேற்றும். கடற்கரையை ஒட்டி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாகிப் போவதால் பல தொடர் பாதிப்புகள் ஏற்படும்.

இன்னொருபுறம் ஏற்படும் வெப்பச் சலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் மழை அளவு குறைந்து குடிநீர் பஞ்சமும் வேளாண்மை பாதிப்பும் அதிகரிக்கும் ஆபத்துள்ளது.

இந்த ஆய்வும் இந்திய அரசின் மானாவாரி வேளாண்மை ஆய்வு நடுவம் என்ற இந்திய அரசு நிறுவனத்தின் இன்னொரு ஆய்வும் காவிரி பாசன மாவட்டங்கள் குறித்த அதிர்ச்சியான விவரங்களைக் கூறுகின்றன.

தமிழகத்தில் 7 மாவட்டங்கள் ஈரமண்டலத்திலிருந்து வறட்சி மண்டலமாக மாறி வருகின்றன. என இவ்வாய்வறிக்கைகள் கூறுகின்றன. 1988ஆம் ஆண்டோடு ஒப்பிட காற்றில் ஈரப்பதம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 27 விழுக்காடு குறைந்து அரை வறட்சிப் பகுதியாகி விட்டன என்று இந்த அறிக்கைக் கூறுகிறது.

இது இயல்பாக இயற்கைச் சூழலில் ஏற்பட்ட மாறுதல்களால் விளைந்த விபரீதமல்ல. முதலாளிய அமைப்பின் வரம்பற்ற இயற்கைச் சுரண்டலால் ஏற்பட்ட செயற்கை விபரீதமாகும். அதனால்தான் நாடுகளின் அரசுகள் கூடி இதை தடுத்து நிறுத்துவதற்கு திட்டமிட வேண்டிய தேவை எழுகிறது. அவற்றுள் ஒன்றுதான் வார்சா மாநாடு.

பருவ நிலை குறித்த வார்சா மாநாடு நடந்த பின்னணி கவனிக்கத் தக்கது. 2013 நவம்பர் 8 ஆம் நாள் பல்லாயிரம் தீவுக்கூட்டங்களின் நாடான பிலிப்பைன்சை ஹையானா என்ற பெரும்புயல் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10 இலட்சத்திற்கு மேற்பட்டோர் ஊரிழந்து உண்ண உணவும் குடிக்கநீரும் இன்றி வீதியில் வீசப்பட்டனர்.

இச்சூழலில் நவம்பர் 11 அன்று தொடங்கிய வார்சா பருவ நிலை மாநாட்டில் முதல் பேச்சாளராக பிலிப்பைன்சு நாட்டின் பேராளர்யெப்சானோ (Yeb sano) பேச அழைக்கப்பட்டார். ஹைனா புயல் ஏற்படுத்திய பேரழிவை கண்ணீரும் விம்மலுமாக விளக்கிப் பேசிய சானோ “ இந்த வார்சா மாநாட்டில் உருப்படியான ஒப்பந்தம் ஏதும் ஏற்படவில்லையென்றால் இம் மன்றத்திலேயே எனது உயிர் போகட்டும்’’ என்று கூறி காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் அமர்ந்தார். மனிதர்களின் பேராசைச் சுரண்டலால் ஏற்பட்ட பேரழிவு இது என பல நாட்டுப் பேராளார்களும் பேசினார்கள்.

ஆனால் இதுவரை நடந்த பருவநிலை குறித்த மாநாடுகளிலேயே வார்சா மாநாடு தான் மிகக் கேவலமான போலி உரைகளின் மாநாடாகத் நிகழ்ந்தது.

2009 இல் கோபன் ஹேகனில் நடைபெற்ற பருவ நிலை மாநாட்டில் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா, கியோட்டோ ஒப்பந்தத்தையே திரிபுப்படுத்தி சொற்சிலம்பம் ஆடினார். “பொது நோக்கு-- வேறுபட்ட பொறுப்பு” (common but differential responsibilities) என்பதைத் திரித்து “பொது நோக்கு’’ - வேறுபட்ட எதிர் வினை” (common but differential responses) என்று மாற்றிப் பேசினார்.

அடுத்தக் கட்டப் பித்தலாட்டம் இப்போது வார்சாவில் நடந்தது. “பொது நோக்கு - அனைவருக்கும் பொறுப்பு’’ (Common and universal responsibilities) என்று வார்சா கூட்டறிக்கையில் மாற்றப்பட்டது. அதிகம் மாசுப்படுத்தியவர், அதிகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாடே கைவிடப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட அதிக தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்கள் பொறுப்புகளை கைகழுவினர்.

கடந்த ஆண்டு தோகாவில் நடைபெற்ற 18 ஆவது மாநாட்டில் பருவநிலை மாற்றங்களால் வறிய நாடுகள் அடையும் இழப்புகளை ஈடு செய்வதற்கு வளர்ச்சி அடைந்த நாடுகள் நிதி வழங்குவதற்கான பொறி அமைவை ஏற்படுத்துவது என முடிவானது. இந்த மாநாட்டில் அந்த பொறியமைவுநிறுவுவது குறித்து துல்லியமான முடிவெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 2009 கோபன் ஹேகன் மாநாட்டிலேயே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் 2010 தொடங்கி ஆண்டுக்கு 10 கோடி டாலர் இழப்பீட்டு நிதி வழங்குவதென்றும் 2020க்கு பிறகு ஆண்டுக்கு 100 கோடி டாலராக இதனை உயர்த்துவதென்றும் முடிவானது.

இதன்படி வார்சா மாநாட்டிற்குள் 30 கோடி டாலர் நிதி வந்திருக்க வேண்டும். ஆனால் வந்ததோ 6 கோடி டாலர்தான்.

இது குறித்த வார்சா மாநாட்டில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கேட்ட போது 2015 பாரிசு மாநாடு முடிந்த பிறகு பார்க்கலாம் என அமெரிக்காவும், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கைவிரித்தன.

அதே போல் கோபன்ஹேகனில் தங்கள் நாட்டுக் தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்டைஆக் ஸைடு அளவை 1990 ஆம் ஆண்டை ஒப்பிட 2020க்குள் 25 விழுக்காடு குறைத்து விடுவோம் என்றும், ஆண்டுக்காண்டு அந்த விகிதத்தை வெளிப்படையாக செயல்படுத்துவோம் என்றும் உறுதியளித்த சப்பான் அவ்வாறு ஒரு விழுக்காடு கூட கார்பன் வெளியீட்டை குறைக்காதது மட்டுமல்ல, 3 விழுக்காடு கார்பன்டை ஆக்சைடு வெளியீட்டை தங்கள் நாடு அதிகரித்துக் கொள்ள அனுமதி வேண்டு மென்று வார்சா மாநாட்டில் வலியுறுத்தியது.

ஆஸ்திரேலியாவும் தான் ஏற்றுக் கொண்டவாறு கார்பன் வெளியீட்டை ஒரு விழுக்காடு கூட குறைக்கவில்லை.

1990 ஆம் ஆண்டை ஒப்பிட 40 விழுக்காடு கார்பன்டை ஆக்சைடு வெளியீட்டை குறைத்துக் கொள்வோம் என 2009 இல் உறுதி கூறிய அமெரிக்கா 0.3 விழுக்காடு அளவு தான் குறைத்துள்ளது.

இவ்வாறு எந்த முனையிலும் எள்ளளவு முன்னேற்றமும் இல்லாத நிலையில் இம் மாநாட்டில் பங்கேற்ற சீனா, இந்தியா உள்ளிட்ட 133 நாடுகளின் பேராளர்கள் இம் மாநாட்டில் பங்கேற்ற 150 தன்னார்வ அமைப்புப் பேராளர்கள் ஆக மொத்தம் 4700 பேரில் ஒருவர் விடாமல் 20.11.2013 அன்று வெளிநடப்பு செய்தனர்.

மறுபுறம் பிலிப்பைன்சு அமைச்சர் சானோ 10 ஆவது நாளாக தனது உண்ணாப் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்து கொண்டிருந்தார்.

இந்த இக்கட்டான சூழலில் 22.11.2013 மாநாட்டின் இறுதி நாள் பின்னிரவில் ஒன்றுக்கும் ஆகாத ஒரு தொளதொளப்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.இழப்பீடு குறித்த பொறி அமைவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஒப்புக் கொள்வதாக அறிவித்தன. எவ்வளவு நிதி என்பதை அடுத்த ஆண்டு இறுதியில் தென் அமெரிக்க நாடான பெருதலைநகர் லீமாவில் நடைபெறவுள்ள 20 ஆவது மாநாட்டிற்குள் தெரிவிப்பதாகவும் அனைத்து நாடுகளும் ஒத்துக் கொண்டு கலைந்தன.

கொள்கை அளவில் கோரிக்கை ஏற்கப்பட்டதாக சானோவிடம் வலியுறுத்தி அவரது உண்ணாப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வைப்பதில் அனைத்து நாட்டுப் பேராளர்களும் வெற்றி கண்டனர் என்பதைத் தவிர வார்சாவில் சாதித்தது எதுவுமில்லை.

சுற்றுச் சூழல் இழப்பீடு நிதிக்கு அரசுகளை மட்டும் நாடாமல் தனியார் பெருமுதலாளி நிறுவனங்களையும் அழைக்கலாம் என்ற அமெரிக்காவின் முன் மொழிவின் மீதே அடுத்த மாநாட்டு விவாதங்கள் சுழலும் என்பதற்கான அறிகுறிகளும் இம்மாநாட்டிலிலேயே தெரிந்தன.

மொத்தத்தில் திக்குத் திசை தெரியாத பயணத்திற்கு உலகத்தை அழைத்து செல்வதாகவே பருவ நிலை குறித்த பன்னாட்டு மாநாடுகள் காலத்தைக் கழிக்கின்றன.

வரம்பற்ற தனி முதலாளி இலாபத்தையும், அடுத்த தலைமுறை குறித்துக் கவலைப்படாத நுகர்வு வெறியையும் அனுமதித்துக் கொண்டே தீர்வு தேடும் வரை பருவநிலை மாற்றம் குறித்து உறுப்படியான எந்த முடிவுக்கும் உலகம் வர முடியாது.

இயற்கையோடு இயைந்து செல்லும் சிறு உற்பத்தி முறையும், கொள்ளை இலாபத்தை அனுமதிக்காத நிகரமை நோக்கிய பொருளியல் அமைப்பும் நிறுவப்படாத வரை இச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு ஏது மில்லை.

இந்த உண்மையை உணராமல் கண்ணை மூடிக்கொண்டு இருட்டு அறையில் கருப்புப் பூனையைத் தேடும் வேலையில் உலக நாடுகள் தொடரும் வரை வார்சாவைப் போல மாநாடுகளின் எண்ணிக்கைக் கூடுமே தவிர நடக்கப் போவது எதுவுமில்லை.

Pin It