மனச்சிதைவு நோய் என்பது மிகப் பழங்காலம் முதல் இருந்து வரும் மிகக் கடுமையான மனநோயாகும். மனச்சிதைவு நோயாளர்கள் மக்களால் முன்காலத்தில் துணியின்றி தெருவெங்கும் சுற்றியலைந்து கல்லெறியும் பைத்தியக்காரர்களாக அறியப்பட்டவர்கள் தான். இவர்களைக் குணப்படுத்தத் தெரியாமல் உடலெங்கும் இரும்புச் சங்கிலிகளால் கட்டி பிணைக்கப்பட்டிருந்தார்கள். முதன் முதலில் இவர்களுக்கு ஆசிரமம் அமைத்து, அங்கு மனிதாபிமான முறையில் சிகிச்சை அளிக்க முன் வந்தவர், ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை என்று அறியப்படும் பேராசான் ஹானிமன் அவர்கள் தான்.

மனச்சிதைவு நோய் என்பது ஒரு கடுமையான மனநோயாகவே கருதப்படுகிறது. காரணம், மனச்சிதைவு நோயாளர்களின் சிந்தனை முறை கடுமையான முறையில் பாதிக்கப்படுகின்றது. அவர்களின் சிந்தனை முறையில் மற்றும் உணர்வு முறையில் ஏற்படும் மாற்றங்கள் தான், சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத நடத்தை முறைகளாக மனச்சிதைவு நோயாளர்களிடம் வெளிப்படுகிறது.

மனச்சிதைவு நோயில், நோயாளர்கள் தங்களது நுண்ணறிவுத் திறனை இழந்து விடுவதால்தான், தங்களுக்கு நோய் ஏற்பட்டுள்ளது என்பதை அவர்களால் அறிய முடிவதில்லை. நோயாளர்கள் தங்களது நுண்ணறிவுத் திறனை இழந்து விடுவதால் தான், நோயாளர்களை கவனித்துக் கொள்வதில் அவர்களுடைய குடும்பத்தினருக்குச் சிக்கல் ஏற்படுகிறது.

இந்நோய் சாபத்துக்குரிய ஒரு நோய் என்பதால் தான், இளம் வயதினரை அவர்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளும் சமயத்தில், எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் சமயத்தில், இந்நோய் தாக்கி அவர்களுடைய நம்பிக்கை ஊட்டக்கூடிய வருங்கால வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. மனச்சிதைவு நோயாளர்கள் எப்போதும் நாம் எதிர்பார்க்கும் முறையில் நடந்துக் கொள்ள மாட்டார்கள். அனால்தான் அவர்களை எப்படிச் சமாளிப்பது என்பது அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவதில்லை.

மனச்சிதைவு நோயாளர்களின் மூளையில் இரசாயன மாற்றங்கள் நடைபெறுகின்றன என்று சொல்வதைவிட, அவர்கள் சமூகத்தால் பழிவாங்கப்பட்டவர்கள் என்று சொல்வதே மிகப் பொருத்தமாக உள்ளது. மனிதர்களின் முழு ஆளுமையையும் சிதைக்கும் மிகக் கடுமையான மனநோய் தான் மனச் சிதைவு நோயாகும்.

மனச்சிதைவு நோயாளர்கள் இரவில் நீண்ட நேரம் கண்விழித்துக்கொண்டு எதையாவது படித்துக்கொண்டு இருப்பார்கள் அல்லது ஏதாவது வெட்டி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் காணப்படும் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இவர்கள் சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதேயாகும். அலோபதி மருத்துவ முறையில் அளிக்கப்படும் சிகிச்சை முறை, அவர்களை மேலும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவதாகவே உள்ளது.

மனச்சிதைவு நோயிலிருந்து மீண்டவர்களை, முன்பு மனச்சிதைவு நோய் ஏற்பட என்ன காரணங்கள் சாதகமாக இருந்தனவோ, அதே காரணங்கள் மீண்டும் ஏற்படுமானால் மனச்சிதைவு நோய் மீண்டும் அவர்களுக்குத் திரும்பக்கூடும். மனச்சிதைவு நோய் என்பது எல்லோருக்கும் புரியக்கூடிய சில நோய்க்குறிகளின் சேர்க்கையாகவே உள்ளது.

அந்நோய்க்குறிகளாவன :

 தர்க்கரீதியற்ற சிந்தனைகள்.

 விநோதமான உணர்வுகள்.

 பிறழ்வு நம்பிக்கைகள்.

 மாயக்குரல்கள் மற்றும் மாயக்காட்சிகள்.

 இயக்கங்களில் ஏற்படும் தடைகள்.

தர்க்கரீதியற்ற சிந்தனைகள் 

இவர்களின் சிந்தனை முறையில் குழப்பங்கள் ஏற்பட்டு, உண்மைக்குப் புறம்பான சிந்தனைகளாக மாறுகின்றன. மேலும் இவர்களின் சிந்தனை முறையில் தொடர்ச்சி இருப்பதில்லை. இதன் காரணமாய் இந்நோயாளர்கள் பேசுவதை பிறர் புரிந்து கொள்ள முடிவதில்லை. சில சமயம் இவர்கள் சொன்ன ஒரு கருத்தையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். பிறருடைய கேள்விகளை இவர்கள் புரிந்துக் கொள்வதில் சிக்கல் ஏற்படுவதால், கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் பதில் அளிப்பார்கள். இவர்கள் மனதில் ஒரே நேரத்தில் பல சிந்தனைகள் தோன்றுவதால், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் பதில் அளிப்பார்கள். இவர்கள் சிந்திக்கும் போது சட்டென்று தடை உண்டாவதால், சில சமயங்களில் பிறர் கேட்ட கேள்விகளுக்கு பதிலே சொல்லாமல் பேந்தப் பேந்த விழிப்பார்கள்.

மேலும் மனச்சிதைவு நோயாளர்கள் தங்கள் மனதையும், சிந்தனைகளையும் பிறர் கட்டுப்படுத்துவதாக உணருவார்கள். மேலும் சில நோயாளர்கள் தங்கள் சிந்தனைகளையும், மனதையும் பிறர் படிப்பதாக நம்புவார்கள். இதற்கு மேலும் ஒரு படி மேலே போய், தங்களின் சிந்தனைகளையும், கருத்துக்களையும் உளவுத் துறையினர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவதாக கூறுவார்கள்.

விநோதமான உணர்வுகள் 

மனச்சிதைவு நோயாளர்களுக்கு உணர்வு நிலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். இவர்கள் திடீரென சிரிப்பார்கள். அதே போல் சற்று நேரத்திற்கெல்லாம் திடீரென அழுவார்கள். இதே போல அழவேண்டிய தருணங்களில் சிரிப்பார்கள். சிரிக்கவேண்டிய சூழ்நிலையில் அழுவார்கள். இப்படி தாறுமாறான உணர்வுகள் அடிக்கடி இவர்களுக்கு ஏற்படும். இவர்களுடைய உள் உலகம் விநோதமானது. இவர்களால் புறஉலகில் உள்ளவர்களுடன் இயல்பான முறையில் தொடர்பு கொள்ள இயலுவதில்லை.

பிறழ்வு நம்பிக்கைகள்  

இவர்களுடைய தவறான நம்பிக்கைகளை பிறரால் மாற்ற இயலாது. உண்மை நிலையை எடுத்துக்கூறினாலும் இவர்கள் நம்பமாட்டார்கள். இவர்களுக்கு ஏற்படும் ஆழமான பிறழ்வு நம்பிக்கைகளை, பிறரால் எவ்வளவு தான் நல்ல முறையில் எடுத்துக் கூறினாலும் மாற்றமுடியாது. எவ்வளவு தான் உயர் கல்வி கற்றவர்களாக இருந்தாலும், நோய் நிலையில் இவர்களிடம் ஏற்படும் பிறழ்வு நம்பிக்கைகளை பிறரால் மாற்றவே முடியாது. ஏனெனில் இவர்களால் தர்க்கரீதியில் சிந்திக்க இயலாது. சில மனச்சிதைவு நோயாளர்கள் தாங்கள் கடவுளின் அவதாரம் எனவும், தங்களிடம் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும் மிக ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரையும் நம்ப வைப்பார்கள்.

சில நோயாளர்கள் தங்களோடு சம்பந்தப் பட்ட சிலர், தங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக மிக ஆழமாக நம்புவார்கள். ஆனால் உண்மைநிலை அப்படி இருக்காது. ஆயினும் இந்நோயாளர்கள் கூறுவதை பிறர் கேட்கும்போது நம்பும்படியாக இருக்கும். இந்நோயாளர்களின் கற்பனையாற்றல் அவ்வளவு சிறப்பாக இருக்கும். இதுபோன்ற பிறழ்வு நம்பிக்கைகளால் மனச்சிதைவு நோயாளர்கள் விநோதமான நடத்தைகளில் ஈடுபடுகின்றனர்.

மாயக்குரல்கள் மற்றும் மாயக்காட்சிகள் 

இவை மனச் சிதைவு நோயாளர்களின் புலன் உணர்வுகளில் ஏற்படும் தவறான புலப்பாடுகளால் தோன்றுபவை. இவை உண்மைக்குப் புறம்பான புலன் உணர்வுகளாகும். மனச்சிதைவு நோயாளர்களின் காதுகளில் சில மாயக்குரல்கள் கட்டளையிட்டுக் கொண்டேஇருக்கும். இக்கட்டளைக் குரல்களால் மனச் சிதைவு நோயாளர்கள் படும் துன்பங்கள் சொல்ல முடியாதவை. இவை சில சமயம் நோயாளர்களை மிரட்டும். அவர்களை விமர்சனம் செய்யும். தவறான செயல்களில் ஈடுபட வைக்கும். சில சமயங்களில் இக்குரல்களுக்கு நோயாளர்கள் பதில் அளிக்கவும் செய்வார்கள். இம்மாயக்குரல்கள் இவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளவும் மற்றும் கொலை செய்யவும் தூண்டும்.

மாயக்காட்சிகளும் சில மனச்சிதைவு நோயாளர்களுக்கு தோன்றுகின்றன. தனக்கு அருகில் யாரோ படுத்து இருப்பது போலவும், தங்களை கொலை செய்ய சிலர் ஓடிவருவது போலவும், இறந்து போனவர்களின் ஆவி தங்களுடன் சேர்ந்து உணவு உண்பது போலவும் மாயக்காட்சிகள் தோன்றும். சில அசாதாரணமான காட்சிகளையும், சில அருவருப்பான காட்சிகளையும் சில மனச்சிதைவு நோயாளர்கள் பார்த்ததாகக் கூறியுள்ளனர். மாயச் சுவையுணர்வுகளையும், மாய வாசனை உணர்வுகளையும் கூட சில நோயாளர்கள் அனுபவித்துள்ளனர்.

இயக்கங்களில் ஏற்படும் தடைகள் 

மனச்சிதைவு நோயாளர்கள் சில சமயங்களில் சில நிலைகளில் தொடர்ந்து அசையாமல் அப்படியே பல மணி நேரங்கள் உட்கார்ந்துக் கொண்டே இருப்பார்கள். சிலர் நாட்கணக்கில் படுத்துக்கொண்டே இருப்பார்கள். சிலர் தொடர்ந்து ஏதும் ஆக்கப் பணிகளில் ஈடுபடாமலேயே நாள் முழுவதும் ஓய்வு எடுத்துக்கொள்வார்கள். ஒரு மனச்சிதைவு நோய் தாக்கிய அன்னை தன் கைக் குழந்தைக்கு பால் கொடுக்காமலேயே, அதன் மேல் அக்கறை செலுத்தாமலேயே நாள் முழுவதும் எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள்.

மனதில் மற்றும் உடலில் புற மற்றும் அக அழுத்தங்கள் தான் ஒருவரின் சிந்தனை முறையிலும், உணர்வு நிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. எனவே இப்படிப்பட்ட அழுத்தங்கள் ஒருவருக்கு ஏற்படாமல் தடுத்து விட்டால், மனச்சிதைவு நோய் தாக்காது. ஆனால் மனச்சிதைவு நோய் ஒருவரை தாக்கிய பிறகு, அவரிடம் கீழ்க்காணும் மாற்றங்கள் படிப்படியாக ஏற்படும். இம்மாற்றங்கள் ஏற்படுவதை கவனத்தில் கொண்டு, அவருக்கு நெருங்கியவர்கள் உடனடியாக தகுந்த சிகிச்சையை துவங்கிவிட வேண்டும். அப்படிச் செய்தால் அவரை ஆரம்பநிலையிலேயே மனச் சிதைவுநோய் அதிகமாக பாதிக்காமல் தடுத்து விடலாம்.

செயல்பாடுகளில் மந்தநிலை 

மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து விடும். ஏனெனில் அவர்களால் மனதை ஒருமுகப்படுத்த இயலாது. அவர்களின் செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்படுகிறது. அவர்களின் அறிவுத்திறனில் வீழ்ச்சி ஏற்படுகிறது.

தங்கள் தோற்றம் குறித்த அக்கறையில் வீழ்ச்சி 

மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களின் பௌதீகத் தோற்றம் குறித்த அக்கறை இருக்காது. காரணம், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்த உலகில் இருந்து விலகி, தனிமைப்படுவது தான். உடல் எடை அதிகரிப்பது, எதிர்பாலினர் மீது ஈடுபாடு குறைவது, முகத்தில் பரு தோன்றுவது, தலைமுடியை வெட்டாமல் இருப்பது, முகத்தை மழிக்காமல் இருப்பது போன்ற தங்களின் தோற்றத்தில் ஏற்படும் குறைபாடுகள் மீது அக்கறை செலுத்துவதில்லை.

மனச்சோர்வு மனநிலையால் பாதிப்பு 

மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உற்சாகம் படிப்படியாக குறைந்து விடும். எப்போதும் துயரம் தோய்ந்து காணப்படுவார்கள். இவர்களின் எதிர்பார்க்கும் மனநிலையில் வீழ்ச்சி ஏற்படும், எப்போதும் களைத்துப் போய் காணப்படுவார்கள். எல்லாவற்றிலும் ஆர்வம் இழந்து நிற்பார்கள். வாழ்வது என்பது கடினமான விஷயமாக மாறிவிடும். பசியின்மை மற்றும் தூக்கமின்மை ஏற்படும்.

நடத்தை முறையில் மாற்றங்கள் 

மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறருடன் உறவாடுவதில் சிக்கல்கள் ஏற்படும். அவர்கள் அமைதியின்றி பரபரப்புடன் காணப்படுவார்கள். தெருவில் எங்காவது சுற்றி அலைவார்கள். களைப்புடன் சோர்ந்து காணப்படுவார். காரியமாற்றுவதில் சுறுசுறுப்புத்தன்மை குறைந்து விடும். காரணமில்லாமல் பிறருடன் சண்டை பிடிப்பார்கள். அவர்களுடைய தினசரி நடவடிக்கைகள் ஈடுபாடின்றிக் காணப்படும்.

விநோதமான கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளுதல் 

மனச்சிதைவு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களது மனைவியின் கற்பு நிலையில் சந்தேகம் கொள்வார்கள். தங்கள் அதிகாரிகளின் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். தங்கள் அண்டை வீட்டுக்காரர் தங்களை உளவு பார்ப்பதாகக் கூறுவார்கள். இது போன்ற பல விநோதமான கருத்துக்களை உருவாக்கிக் கொண்டு அவதியுறுவார்கள்.

சிந்தனை முறையில் பாதிப்பு 

மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிந்தனை முறையில் பாதிப்புகள் படிப்படியாக நிகழும். இதனால் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மற்றவர்களால் புரிந்து கொள்ளமுடியாது. இவர்கள் பேச்சில் தத்துவங்கள் பல புதைந்து இருக்கும். விநோதமான விஷயங்கள் நிறைந்திருக்கும். புதிர்கள் புலப்படும். இவர்கள் தங்களுக்குச் சம்பந்தப்படாத விஷயங்கள் குறித்தும் பேசுவார்கள். சில சமயம் அதிபுத்திசாலிகள் பேசுவது போல இவர்கள் பேச்சு அமைந்து இருக்கும்.

மாற்றமடையும் உணர்வு நிலை 

மனச்சிதைவு நோய் மிகவும் கொடூரமான மனநோய் என்பதற்கு முக்கியக்காரணம் நோயாளரிடம் சட்டென்று உறைந்து விடும் உணர்வு நிலையாகும். முகம் எவ்வித உணர்ச்சி யையும் காட்டாமல் மரக்கட்டை போல் மாறி விடும் நிலையாகும். மற்றொன்று, அழவேண்டிய தருணத்தில் சிரிப்பதும், சிரிக்க வேண்டிய சூழ்நிலையில்; அழுவதுமாகும்.

மாயக்குரல்கள் 

திடீரென்று நோயாளர்கள் தங்கள் எதிரே யாருமின்றி பேசுவதும், சிரிப்பதுமாக இருப்பார்கள். நோயாளர்கள் தங்கள் காதில் கேட்கும் மாயக்குரல்களுக்கு பதில் அளிப்பதை மற்றவர்கள் காணநேர்ந்தால் அவர்களுக்கு அது விநோதமாக இருக்கும்.

சிகிச்சை முறைகள் 

மனச்சிதைவு நோயை குணமாக்க இன்று பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. எது மனச்சிதைவு நோயாளருக்கு தனிப்பட்ட முறையில் பொருத்தமாக உள்ளதோ அச்சிகிச்சை முறைத் தேர்ந்தெடுத்து சிகிச்சை அளித்தால் விரைவில் நோயாளரை குணப்படுத்தலாம்.

மனவழிச் சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை : 

இச்சிகிச்சை முறை மூலம் கடுமையாக பாதிக்கப்பட்ட மனச்சிதைவு நோயாளர்களை குணப்படுத்த முடியாது. காரணம் அவர்கள் மூளையில் பதிந்துள்ள உண்மைக்கு மாறான கண்ணோட்டங்களும், கருத்தோட்டங்களும் ஆகும். இச்சிகிச்சை முறையின் மூலம் ஆரம்ப நிலையிலுள்ள மனச்சிதைவு நோயாளர்களையும், குணமடைந்து வரும் நோயாளர்களையும் குணமாக்க முடியும்.

 குழுவழிச் சிகிச்சை

 குடும்பவழிச்சிகிச்சை

 நடத்தை மாற்றுச் சிகிச்சை

 சிந்தனை முறை மாற்றுச்சிகிச்சை

 கலைவழிச் சிகிச்சை

 நாடகவழிச்சிகிச்சை

 தொழில்வழிச் சிகிச்சை

மேற்கண்டவை அனைத்தும் உளவியல் சிகிச்சை முறைகளாகும். மருத்துவச் சிகிச்சை முறைகளில், பெரும்பாலோர் நாடுவது அலோபதி சிகிச்சை முறையையே. ஆனால் இச்சிகிச்சை முறையை நோயாளர் ஆயுள் முழுவதும் அளிக்க வேண்டும். அடுத்து இருப்பது, ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை முறையாகும். இம்முறையில் நோயாளர் விரைவில் பூரணமாக குணமடைவார்.

மனச்சிதைவு நோயைக் குணப்படுத்தும் சில முக்கிய ஹோமியோ மருந்துகள் :

அனகார்டியம், ஆர்சனிகம் ஆல்பம், ஆரம் மெட்டாலிகம், பெல்லடோனா, கார்சினோசின், சைனா, டிரோசிரா, ஹயாசியாமஸ், இக்னேஷியா, காலி புரோமேட்டம், லாச்சசிஸ், மெலிலோட்டஸ், நக்ஸ் வாமிகா, ரஸ்டாக்ஸ், ஸ்டிரமோனியம், சல்பர் மற்றும் வெராட்ரம் ஆல்பம்

- உ.அறவாழி, சென்னை.

Pin It