உலகமே கணிணிமயமாகிவிட்டது. மருத்துவத்துறையும் எண்ணிலடங்காதளவு வளர்ச்சிகளை எட்டியுள்ளது. நோய்களையும் அவற்றின் தன்மைகளையும், வளர்ச்சிப் போக்குகளையும் கண்டறிவதில் எண்ணற்ற கருவிகளும் வழிமுறைகளும் வந்து நிறைந்துவிட்டன. அவைகளுள் மருத்துவர்களுக்கு மிக உதவிகரமாக இருப்பது மருத்துவ ஸ்கேனிங் முறை.

ஸ்கேனில் உள்ள வகைகள் 1. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் 2. சி.டி. ஸ்கேன் 3. எம்.ஆர்.ஐ. ஸ்கேன்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கண்ணுக்குத் தெரியாத, காதுகளுக்குக் கேட்காத நுண் ஒலி அலைகளின் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து திரையில் பார்த்து நோய்களைக் கண்டறியப் பயன்படுகிறது. C.T. ஸ்கேன் (Computerised Tomography) என்பது X-rayவை உடலுக்குள் செலுத்தி கம்ப்யூட்டர் மூலம் திரையில் பார்ப்பது. M.R.I. ஸ்கேன் (Magnetic Resonance Imaging) என்பது சக்தி வாய்ந்த காந்தத்தின் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் திரையில் காண்பது. இவைகளில் குறைந்த செலவில் பார்க்கக்கூடியது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகும்.

இந்த அல்ட்ரா சவுண்ட் எனப்படும் ஸ்கேன் முறையில் கெடுதலோ, பக்கவிளைவுகளோ, பின் விளைவுகளோ இல்லை என்று கூறப்படுகிறது. பொதுவில் ஸ்கேன் செய்து நோயினை கண்டறிவதன் மூலம் அது அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நோயா அல்லது மருந்து மாத்திரைகள் மூலம் சிகிச்சையளிக்கக்கூடிய நோயா என்பதை ஆங்கில மருத்துவமானாலும் சரி, மாற்றுமருத்துவங்களானாலும் அவரவர் வரைமுறைகளுக்கேற்ப தீர்மானிக்க உதவுகிறது.

அக்குப்பங்சர், சித்தா, ஆயுர்வேதம் போன்ற மாற்றுமருத்துவ முறைகளின் பூர்வீக அணுகுமுறை என்பது நாடிபார்த்தல் ஆகும். ஹோமியோபதி, பாச் மலர் மருத்துவ முறைகளின் அணுகுமுறை நோய்க்குறிகளை, நோயாளியின் மனநிலையை ஆராய்தல் ஆகும். ஆயினும் இன்றைய நவீன வாழ்க்கைச்சூழலில் விதவிதமான நவீன சிக்கலான நோய்கள் உற்பத்தியாகின்றன. சற்றே கவனப்பிசகாக, நோய் நிர்ணயம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டாலும், தவறுகள் நேர்ந்தாலும் பெரும்பாதிப்புகளையும் மரணத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வலதுபக்க வயிற்றுப் பகுதியில் வலிகள் தோன்றும் போது சிறுநீரகக் கல்லால் அவதியா குடல்வால் நோயால் அவதியா அல்லது வேறு பிரச்சனையா என்பதை சரியாகக் கண்டறிய வேண்டும். சிறுநீரகக்கல் நோய் என்றால் கற்களின் எண்ணிக்கை, கற்களின் இருக்குமிடம், அளவு போன்றவை ஸ்கேன் மூலம் அறியமுடியும். யூக அடிப்படையிலான சிகிச்சை பயன்தராது.

வயிறு, கழுத்து (தைராய்டு), கணையம், கர்ப்பப்பை போன்ற திண்மனான எந்த உறுப்பையும் ஸ்கேன் செய்யமுடிகிறது. அல்ட்ரா ஸ்கேன் மூலம் கல்லீரல், மண்ணீரல், பித்தப்பையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அறிய முடியும். பித்தப்பையில் கல், பித்தப்பையில் புற்று, கல்லீரல், மண்ணீரல் வீக்கங்கள், சுருக்கங்கள், சிறுநீரக பாதிப்பு போன்றவைகளை எளிதில் கண்டறியலாம்.

அனைத்துக்கும் மேலாக கர்ப்பகாலத்தில் அதிகளவு பயன்படுகிறது. தாயின் வயிற்றில் 7ontentpane">வது வாரத்திலேயே (அல்லது 45 நாட்களில்) குழந்தை இருதயத் துடிப்பைப் பெற்று வளர ஆரம்பிக்கிறது. 3 மாதத்தில் குழந்தையின் எல்லா உறுப்புகளும் முழுமையாக வளர்ந்து விடுகிறது. இந்த நேரத்தில் ஸ்கேன் செய்து குழந்தையின் உடலில் உள்ள ஊனம், மூளை வளர்ச்சி ஆகியவற்றைக் கண்டறிய முடியும். சில பெண்களுக்கு கரு கர்ப்பப்பைக்குள் வளராமல் கர்ப்பப்பைக் குழாயில் தங்கி வளரக்கூடும். இதனால் தாய் அபாயகரமான நிலையைச் சந்திக்க நேரிடும். எனவேதான் கர்ப்பிணிகள் 5 மாத காலத்திற்குள் ஒருமுறையாவது ஸ்கேன் செய்வது தவிர்க்கமுடியாதது ஆகிவிட்டது.

கர்ப்பம் தரித்து 45 நாளிலேயே ஸ்கேனில் இரட்டைக் குழந்தைகளைக் கண்டறிந்தால் அவற்றின் வளர்ச்சியைத் தனித்தனியாகக் கண்காணித்து ஆரோக்கியமாக பிறக்கச் செய்வதற்கு மருத்துவ உதவிகள் செய்ய முடியும்.

குழந்தை இல்லாத பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சியை பாலிக்குலர் ஸ்டடி மூலம் அறிந்து சிகிச்சை அளிக்க முடியும். கர்ப்பப்பையில் கட்டிகளோ, இதர வளர்ச்சிகளோ, சினைப் பையில் நீர்மக் கட்டிகளோ இருப்பதால் பெண்களின் மாதவிடாய் செயல்பாடு வெகுவாக பாதிக்கப்படுகிறது. இவற்றை உரிய காலத்திலேயே ஸ்கேன் மூலம் கண்டறிவதும் சிகிச்சை அளிப்பதும் அவசியம். புற்றுக்கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம்.

மஞ்சள் காமாலை நோய் என்பது வைரஸ் தாக்கத்தினால் அல்லது பித்தப்பையில் கல் அடைப்பு ஏற்படுவதால் தோன்றுகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் யூக சிகிச்சையை ரத்தப் பரிசோதனை மற்றும் தவிர்க்க வேண்டும். ஸ்கேன் செய்தல் மிகவும் அவசியம். நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துள்ள நிலையில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு காமாலை வந்திருக்குமானால் மாற்று மருத்துவ முறைகளில் எளிதில் குணப்படுத்த முடியும். ஆனால் பித்தப்பைக் கல்லால் மஞ்சள் காமாலை வந்திருந்தால் அதற்கும் சேர்த்து தீவிர மருத்துவ சிகிச்சையளிக்க வேண்டும். கல் அடைப்பை சரிசெய்ய அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.

இதனை அறியாமல் மஞ்சள் காமாலைக்கு தாயத்து கட்டுதல், வேர்கட்டுதல் என செயல்பட்டால் ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடும்.

பொதுவாக கர்ப்பப்பை சம்பந்தமான ஸ்கேன் எடுக்கும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வயிறு நீரால் நிறைந்திருந்தால் நீர் ஊடகமாக செயல்பட்டு அதன் அடியிலுள்ள கர்ப்பப்பை தெளிவாகத் தெரிய உதவுகிறது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் இணைக்கப்பட்டிருக்கும் Probe எனப்படும் இணைப்புக் கருவியை வயிறு, மார்பு, கழுத்து போன்றவற்றைச் சோதிப்பதற்குத் தகுந்தவாறு மாற்றி அமைத்து உபயோகிக்கப்படுகிறது. இன்றைக்கு அலோபதிக்கு மட்டுமல்ல இதர மாற்று மருத்துவ முறைகளுக்கும் ஸ்கேன் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

C.T. ஸ்கேன், M.R.I. ஸ்கேன் உதவியுடன் மூளை, தண்டுவடம், நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய்களின் தன்மைகளை கண்டறியமுடியும். ஆனால் அடிக்கடி இந்தச் சோதனைகள் செய்தால் பாதிப்பு ஏற்படும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் பக்க விளைவுகள் இல்லை.

(மாற்று மருத்துவம் அக்டோபர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

 

Pin It