1. இந்தியா தனது விவசாய நலன்களுக் காக ஒரு துணைக்கோளை ஏவுகிறது.

peranmai-photos-042. புதுடில்லியில் குடியரசு தின அணி வகுப்புக்குச் செல்வதற்கான ஐந்து பேர் கொண்ட குழுவை அனுப்ப, பெண்கள் கல்லூரியின் NCC பிரிவொன்று பயிற்சி யில் ஈடுபட மலைப்பகுதியில் இருக் கும் கல்லூரிக்கு வருகிறது.

3. விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட ஆதிவாசி மக்கள் சமூகத்தைச் சார்ந்த வனக்காவலர் துருவன் (ஜெயம் ரவி)  NCCஇன் பயிற்சியாளர் ஆகிறார்.

4. இந்தியா துணைக்கோள் ஏவுவதைத் தடுக்க அந்நிய நாட்டு ஊடுருவல்களின் மூலம் சதி நடைபெறுகிறது.

காட்டிற்குள் நடக்கும் அந்நிய நாட்டு சதியை முறியடித்து, எந்தத் தடங்கலு மில்லாமல் செயற்கைக்கோள் ஏவுதல் திட்டத்தை ஹீரோ, பெண்களுடன் இணைந்து நிறைவேற்ற உதவுகிறார்.

வழக்கமான அர்ஜூன், விஜயகாந்த் படங்களைப்போல் செய்துவிட்டு கதாநாயகன் மட்டும் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டியிருப் பது மட்டும்தான் வித்தியாசம். இடையில் ஆதிவாசி மக்களுக்குத் திறமையிருந்தாலும் சாதிவகையில் இழித்துரைக்கப்படுகிறார்கள் என்று இயக்குநர் காட்ட முயன்றுள்ளார்.

திறமை X சாதி, மேல் சாதியினர் X ஆதிவாசி என்ற கட்டமைப்பை மேலோட்டமாகப் பயன்படுத்தி பிரதானமான முரண்பாடுகளை வசதியாக மறைத்துவிட்டார். முக்கியமாக ஆதிவாசி மக்கள் யாரும்தாங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று உளரீதியாக எண்ணுவதில்லை. அவர்கள், தாங்கள் இயற்கையின் புதல்வர்கள், மண்ணின் மைந்தர்கள் என்ற பெருமையுடனே வாழ்கிறார்கள். ஆனால் இங்கோ சம வெளியில் நிலை தலைகீழானது. தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களைத் தாழ்த்தப்பட்டவராகவே எண்ண வைக்கும் உளச் சிதைவு நடைபெற்றிருக்கிறது. ஜனநாதன் அந்தச் சமூகத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதபடியால் இதைப் போன்ற காட்சிகளைப் படம் முழுவதும் சித்தரிக்கிறார்.

ஆதிவாசி மக்கள் கண மரபினர், குழுவாய் வசிப்பவர்கள், தலைவன் என்பவன் ஒரு நிர்வாக வசதிக்காக மட்டுமே, மற்றபடி முதிய அனுபவம் நிறைந்தோர்க்கே அதிக மரியாதை அளிப்ப வர்கள். அத்தகைய குழுவினரிடமிருந்து துருவன் (ஜெயம் ரவி) ஹீரோவாகப் புனையப்படுகிறார். பிரிட்டிஷ் ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்கொண்ட சுதந்திரப் போராட்டத்தில் ஆதிவாசிகளின் பங்கு கணிசமானது. சந்தால் போராட்டம் தொடங்கி பல்வேறு உறுதியான, நீண்ட வெற்றிகரப்போராட்டங்கள் அவர்களுடையது. இன்றும் அரசு அடக்கு முறையை எதிர்க்கும், மேற்கு வங்காளமிட்னா பூர், மீசோரம், திரிபுரா, நாகா, மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஒரிஸ்ஸா, ஆந்திரா கர்நாடகாவில் நாகர்ஹோலே, கேரளாவில் முத்தங்கா, பிளாச்சிமடா, கோவை ஆனைகட்டியில் வன உயிரியியல் பூங்காவை எதிர்த்தப் போராட்டம் ஆகியவற்றில் ஆதிவாசி மக்களின் உறுதியும் போராட்ட குணமும் வியக்கத்தக்கது. அவர்கள் தங்கள் இயற்கையையும், மண்ணுரிமையினையும் போராடிப் பாதுகாத்துக்கொள்வது தங்களுக்கு மட்டுமல்ல இந்த மனித குலத்திற்காகவும் தான். இத்தகைய சூழலில் 1980இல் காங்கிரஸ் அரசு தன்னுடைய விஞ்ஞான peranmaiபோர்த் தொழில்நுட்பத் திட்டங்களுக்காக ஒரிஸ்ஸாவில் பாலியபால் என்ற மாவட்டத்தில் ஆதிவாசி மக்களை வெளியேற்றி அங்கு தனது ஏவுகணைத் திட்டத்தை அமைத்தது. இத்தளத்திலிருந்து ஏவப்பட்ட இவ்வேவுகணைகளுக்கும், துணைக் கோள்களுக்கும் அக்னி, ப்ருத்வி, ஆகாஷ், பிரம்மாஸ், ஆர்யபட்டா, பாஸ்கரா என்ற புராண/ பார்ப்பனீய தொடர்புகொண்ட பெயர்களைச் சூட்டுவது குறிப்பிட்டு நோக்கத்தக்கது. இதற்கு மேலும் ஓர்படியாக பா.ஜ.க.வின் வாஜ்பாயி அரசு “புத்தர் புன்ன கைக்கிறார்!'' (?) என்று முரண் நகையாக பொக்ரான் அணுகுண்டு வெடிப்புக்குப் பெயர் சூட்டியதைக் காண வேண்டும்.

வளர்ச்சி, போர் தொழில் நுட்பத்தை கைவரப்பெற்றல், என்ற வகையில் ஆணாதிக்க, பிராந்திய வல்லரசு மனப்பான்மையின் விதைகளாக இவை 70களில் ஊன்றப்பட்டன. அப்போது அதை எதிர்த்த ஆதிவாசி, சுதேசி, இயற்கை ஆர்வலர்கள் அதன் பாதையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இன்றும் ஆதிவாசி மக்களின் காடுகளானவை, மரங்கள், மூலிகைகள், கனிமங்கள், தனிமம், இயற்கைச் செல்வம், கிரானைட் போன்ற வளங்களுக்காகவும், இட ஆக்கிரமிப்பிற்காகவும் சூறையாடப்படுகின்றன. அவர்களின் சுய சார்புத் தன்மையும் கலாச்சாரப் பழங்குடித் தன்மையும் அழித்தொழிக்கப்படுகின்றன.

70இல் ஊன்றப்பட்ட இவ்விதைகள் செடிகளாக மாறிவரும் சூழலில் இன்று இந்தியா பிராந்திய வல்லரசு மனோ பாவத்தில் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 2009 மே 18இல் நடந்த இலங்கை இனப்படுகொலை (ஈழப் போர்) பசில் இராசபட்சே, மகிந்தஇராசபட்சே கூற்றின்படி இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்பதை வைத்துப் பார்த்தால் இந்தியாதான் இராணுவ தொழில் நுட்ப உதவிகளையும் உளவுத் தகவல் பரிமாற்றத்தையும் உடனுக்குடன் வழங்கி போரை வழிநடத்தி வந்தது. இதில் விடுதலைப் புலிகளின் படைப் பிரிவு நடமாட்டங்கள், மக்கள் தொகுதி இடம்பெயரல் போன்ற அனைத்தும், துணைக்கோள் உதவியுடன் பதிவு செய்யப்பட்டு இராணுவ உளவு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களாக இலங்கை ராணுவத்திற்குப் பரிமாற்றப்பட்டன. இலட்சக்கணக்கான தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர்.

போர் முடிந்த மூன்று மாதங்களில் இந்திய அரசின் விவசாயத்துறையின் அறிவிப்பாக, இலங்கையின் உணவு தானிய உற்பத்தி, விவசாயத் தொழில் நுட்பத் தேவை ஆகியவற்றில் கைகோர்த்து இந்தியா இலங்கையுடன் செயல்படும் என்றும் இதன் முக்கிய பொறுப்பில் மூத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் .சுவாமிநாதன் செயல்படுவார் என்றும் வெளிவருகிறது. எம்.எஸ்.சுவாமி நாதன் பசுமைப்புரட்சியின் காரணமாக இந்திய விவசாயத்தை வெளிநாட்டு மலட்டு அறிவியல் முன்னேற்றத்திற்கு அடிமையாக்கியவர். பன்னாட்டு (ஏக போக முதலாளிகளின்) நிறுவனங்களின் பூச்சிமருந்து, செயற்கை உரங்களின் சந்தையாக இந்திய விவசாயத்தை மாற்றிக்கொள்ளை லாபத்தை அவர்கள் அள்ளிக்கொண்டு போக உதவியவர். ரிச்சாரியா தன் வாழ்நாள் முழுதும் இந் தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந் தும், ஆதிவாசி மக்களிடமிருந்தும் சிரமப்பட்டு சேகரித்த அரிய மரபுவகை கொண்ட 1000திற்கும் மேற்பட்ட அரிசி வகைகளை பசுமைப்புரட்சி மூலம் இல் லாதாக்கியவர். இயற்கை விதைகளை அடகு வைத்து அதன் Genome Map  எனப்படும் உயிரி வரைபடத்தை MNC க்களுக்கு கசியவிட்டு அதன் மூலம் அகில உலக அளவில் தனக்குப் பிரதி யுபகாரமாக பன்னாட்டுப் பதவிகளையும், பட்டங்களையும் பெற்றுக்கொண்டவர். இந்தியச் சுயசார்பு விவசாயத்திற்கு ஆணி அடித்தவர் அதை மேலும் மலடாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர். இவர் தான் இந்திய அரசாங்கத்தின் தற்போதைய விவசாய கொள்கை வடிவமைப்பாளர், பிரதம மந்திரியின் விவசாய ஆலோசகர், நவீன தொழில்நுட் பத்தினைக்கொண்டு இந்திய விவசாயத்தினை மாற்றியமைக்க அரும்பாடுபட்டு வருபவர்.

மூன்று மாதங்களுக்கு முன்பு கோவை விவசாயப் பல்கலைக் கழகத்தின் முன்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது என்ற செய்தி...

ஒரு மாதத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள், அரசு அதிகாரி கள் தவிர வேறு யாரேனும் விவசாயத்தைக் குறித்த கருத்துக்களையோ, வகுப்புகளையோ, நடைமுறைகளோ செயல்படுத்தினால் அவர்கள் தண்டிக்கப்படுவர் என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவை இரண்டும் இந்திய விவசாயத்தின் சுயசார்புத் தன்மையும், இயற்கை விவசாயத்தையும் pambuவேரோடு புதைக்கும் செயல்பாடாகும். TNAU எனப்படும், கோவை விவசாயப் பல்கலைக்கழகம், மன்சாண்டோ போன்ற பன்னாட்டுக் கழகங்களோடு தொடர்புகொண்டு இங்கு விதையை சுயமாக எடுத்து அடுத்த விளைச்சலுக்கு உபயோகப் படுத்துவது என்ற நிலையை மாற்றி Genetically Modified – GM  உணவினைத் தரும் மரபீனி மாற்று விதையைப் புழக்கத்தில் விட ஆராய்ச்சி செய்து நடைமுறைப்படுத்தத் திட்டமிடுகிறது. இது மிகவும் அபாயகரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கண்டறியப்பட்டதால் இன்னும் பல மேலை நாடுகள் கூட இத்திட்டத்தை முடக்கிவைத்துள்ளன. ஆனால் மத்திய / மாநில அரசுகளோ இதை எதிர்த்த விவசாயிகளைச் சிறையில் தள்ளின.

வடஇந்தியாவில் இயற்கை சார்ந்த விவசாயத்தைப் பிரபலப்படுத்திவரும் பலேக்கர் என்பவரும், சாய்நாத் என்ற பத்திரிகையாளரும், திவீந்தர் சர்மா என்ற விவசாய உணவுத்துறையின் அறிஞரும், தமிழ்நாட்டில் நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகளும், ஆதாரபூர்வமாக நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்ப பயன்பாடும், பூச்சிமருந்தும், செயற்கை உரமும், மரபீனி நுட்பமும், மலட்டு விதைகளும், வணிகம் சார் பயிர்களும் (ஜட்ரோபா விளைச் சல்) ஓரினப் பாலை முறையும் எப்படி இயற்கைக்கும், உயிர்ச்சூழலுக்கும், மனிதகுலத்திற்கும் பெருந்தீங்காக முடியும் என்பதை நிரூபித்து இயற்கை விவசாய விஞ்ஞானத்திற்கு வலுவூட்டி வருகிறார்கள்.

இயற்கை சார்ந்த இவர்களை எம்.எஸ். சுவாமிநாதன் வகையறாவும், MNC களும், TNAU, அரசும் எதிரியாக எண்ணி பீதியுற்றிருப்பதன் விளைவே தமிழ் நாடு அரசின் புதிய சட்டம்.

ஆக, பெரும் செலவைக் கொண்டும் முதலீட்டைக் கொண்டும் தீட்டப்படும் நவீன தொழில்நுட்ப விவசாய முறைகள் MNCயும் சில குழுக்களும் மட்டுமே பயனடைய உதவியாகவுள்ளது. மற்ற படி பெருமளவில் சுயசார்பு வேளாண் தொழிலுக்கும் இயற்கை விவசாயத்திறகும் எதிராயுள்ளது என்பது நிதர்சனம்.

ஆனால் ஜனநாதனோ இந்த இந்திய துணைக்கோள் இயற்கை விவசாயத்திற்கு உதவி செய்யும் என "கேழ்வரகில் நெய் வடிந்த கதை'யாகக் காதில் பூச்சாற்றுகிறார். இத்தகைய சாட்டிலைட் டின் உதவியுடன் அமெரிக்காவில் விவசாயம் செய்து வரப்படுகிறது. அங்கு உள்ள நிலை நமக்கு உண்மையை அறிய உதவும்.

1960களில் அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகையில் விவசாயிகள் 50 சதவீதம் பேர். ஆனால் இன்றோ விவசாயிகள் 2 சதவீதத்திற்கும் குறைவு. பெரும் நிலங்களை ஆக்கிரமித்து விவசாயத்திற்குப் பல்வேறு தொழில் நுட்பக் கருவிகளையும், விதைதூவ, மருந்து தெளிக்க, ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி விவசாயம் செய்தாலும் மேலைநாட்டு மக்கள் GM உணவையும் உர, பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட உணவையும் தவிர்க்கின்றனர். மேலும் மண்வளம் குறைவது காரணமாய் மகசூலும் சத்தும் குறைகிறது.

இதேபோல் இந்தியாவில் சிறு விவசாயிகளை நகர்புறம் சார்ந்த பிச்சைக்கார்களாய் மாற்றிவிட்டு, அவர்களின் சுயசார்பு விவசாயத்தை அழித்து, வெளிநாட்டு உணவு மற்றும் விதைகளை இறக்குமதி செய்து புதிய நவகாலனீய அடிமை நாடாய் மாற்றும் முயற்சிகள் தொடர்கின்றன.

இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றோர் தளபதியாய் விளங்க ஜனநாதனோ இவர்களின் கலை இலக்கிய ஊது குழலாகிறார். துணைக்கோள் ஆராய்ச்சிகள் எந்நாளும் விவசாயிகளுக்கு வசந்தத்தைக் காட்டப்போவதில்லை. ஆதிவாசிகளுக்கு விடியலைத் தரப்போவதுமில்லை. ஜனநாதனோ (ராக்கெட்) ஏவுகணையின் சுடு தீப்பிழம்பை சூரியன் எனக் கண்டு மயங்குகிறார்.

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் Nilgiri Biosphere கர்நாடக – கேரளா -  தமிழ்நாடு எல்லைப்பகுதிகள் கூடும் இடத்தில் அமைந்துள்ளது. இதை உலகில் மிக முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக உயிரியலாளர்கள் கணிக்கின்றனர். பல்வேறு உயிரிகள் கூடி முயங்கும் இவ்விடத்தில் மலைகளின் உச்சியில் புல் வெளிகளைக் காணலாம். கீழே ஓடைகளும், என்றும் வற்றா நீர் வளமும், சதுப்புப் பகுதிகளும் இணைந்து மிகவும் அற்புதமான, வளங்கொண்ட பகுதியாக இது விளங்கி வந்தது, பிரிட்டிஷாரின் காலனி ஆட்சி ஏற்படும்வரை.

1800 களின் துவக்கத்தில் நீலகிரியை ஜான் சலிவன் கண்டறிந்த(!)போது, மலைத்த அவர், ஆங்கிலேயர்களுக்கு ஏற்ற காலநிலை நிலவுவதைக் கண்டு அவர்களுக்கான இடமாக மாற்ற Jul15women_protesting_nude2முனைந்தார். பின்னர் வந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கண்ணிற்கு, மேகத்தின் நீர்பிடித்து அனுப்பும் புல்வெளிகளும், என்றும் வற்றா ஓடைகளும் தேவையற்றவை என்று தோன்றின. பல்உயிரிவகை சார்ந்த மரங்கள் தச்சு மர வேலைக்காகாதென, தேக்கு, யூகலிப்டஸ், வாட்டில் (சாயத்திற்கு உபயோகப்படும்) என்ற ஓரினப்பாலைகளை இயற்கையை அழித்து உருவாக்கினர். அப்போது வளர்ந்துகொண்டிருந்த உலகத் தேயிலைச் சந்தை அவர்கள் கண்ணை உறுத்த, காடுகள் வெட்டப்பட்டு தேயிலையும், காப்பியும் பயிரிடப்பட்டது. இன்று நீலகிரி, மூணாறு, வால்பாறை, குடகு போன்ற இயற்கை ததும்பும் குளிர் சூழலில் பயிராகும் இவற்றைப் பற்றி இயற்கை சூழலியல் விஞ்ஞானிகள் பச்சை பாலை என்ற ழைக்கின்றனர். உலகின் இரண்டாவது சிரபுஞ்சியான தேவாளா (கூடலூர் நீலகிரி மாவட்டம்) வருடம் 9 மாதங்கள் மழை பெய்யுமிடம், இன்று மழையில்லாமல் தவிக்கிறது. இத்தகைய சீர்கேட்டை ஏற்படுத்தும் தேயிலைத் தொழிலை ஐரோப்பிய, வெளிநாட்டுச் சந்தைக்காக பூச்சி மருந்தையும், உரத்தையும் தவிர்த்து Organic Tea ஆக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தேயிலைத் தோட்டத்தின் காட்சி கண்ணுக்கு அழகு என்பதால் ஜனா இதைப் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கதாநாயகனை வைத்து "ஓயம்மா, யம்மா' "ஓயம்மா, யம்மா' "ஓயம்மா, யம்மா' என்று பாடி ஆட வைத்திருக்கிறார். ஏனெனில் ஆதிவாசிகளின் காட்டையும், வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் அழித்து அவர்களை கூலி உழைப்பாளியாக்குவது தேயிலைக் காடு. உணர்வுள்ள எந்த ஆதிவாசியும் அதை எதிரியாகவே காண்பான். இதில் என்ன கொடுமை என்றால் அத்தோட்டத்தின் பெயர் பிரிட்டிஷ் ஆர்கானிக் டீ (ஆர்கானிக் என்று சேர்த்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைத்திருப்பார் போலும்) என்று தட்டி எழுதிக் காட்டுகிறார்கள்.

“காட்டுப் புலியடிச்சு காட்டு ராசன் கொண்டு வராண்டா....'' காடு என்பது பன்மய உயிர்ச்சூழல். அது வயலைப் போன்று நெற்கதிரையோ, தென்னை, பாக்கு மட்டும் கொண்ட தோப்பைப் போன்றதோ அல்ல. அங்கு பல்வேறுபட்ட மண், மரங்கள், செடி கள், கொடிகள், தாவரங்கள், பட்சிகள், நீர் நிலைகள் விலங்குகள், ஊர்வன, பூச்சிகள், நுண்ணுயிர்கள் என மொத்த உயிர்ச் சூழலையும் தன்னகத்தே கொண்டது. காட்டில் தாவரங்கள் அதிக அளவிலும் அதற்கடுத்து மரங்களும், அதையடுத்து பூச்சிகள் விலங்குகள் என அமையும். விலங்குகளை எடுத்துக் கொண்டால் மான்கள் அதிகமாகவும் அதை உண்ணும் நரி, செந்நாய், சிறுத்தை, புலி ஆகியவை எண்ணிக்கை குறைவாகவும் இருக்கும் அவற்றின் இனப்பெருக்க விகிதமும் அவ்வாறே அமையும். “மான் அதிகமானால் காடழியும்''. இது ஆச்சரியமாக உள்ளதல்லவா. மான் எண்ணிக்கையில் அதிகரித்தால் அங்குள்ள தாவரங்கள் உணவாக்கப்படும், வன வளம் குன்றும், மற்ற உயிர்களுக்கு தாவர உணவு குறையும் எனவே காடழியும். எனவேதான் ஆதிவாசி மூதுரை கூறுகிறது. “புலி அழிந்தால் காடழி யும்'' என்று. புலி உயிர்ச் சூழல் நாற்கரத்தின் (பிரமிட்) உயர்புள்ளி. 25 சதுர கிலோ மீட்டருக்கு ஒரு புலி இருந்தாலே அக்காடு வளமிகுந்ததெனக் கொள்ளப்படும் எனச் சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புலிகள் தற்போது அழிந்துவரும் இனப்பட்டியலில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் பிராணியினத்தைச் சேர்ந்தவை. பல்வேறு ஆசிய நாடுகள் புலிகளைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உலகில் நிலநடுக் கோட்டுப் பகுதியில் மட்டுமே அகன்ற இலைக் காடுகள் செழித்து வளருகின்றன. இங்கு மட்டுமே புலிகள் உள்ளன. (சைபீரிய புலிகள் வேறுவகை). பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்குப் பிறகு, உலகெங்கும் நாடுபிடித்தலும், நவீன தொழில்நுட்ப துப்பாக்கி வளர்ச்சியும் வரும்போது யானைகளைக் காட்டிலும் அதிகம் பாதிக்கப்பட்டது புலிகள்தான். புலிகளை வேட்டையாடிக் கொன்று தோளில் துப்பாக்கியுடன் அதன் உடல்மேல் கால்வைத்தபடி “போஸ்'' கொடுப்பது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும், ஜமீன்தார்களுக்கும் கௌரவ பொழுதுபோக்கு. மேலும் தோலுக்காகவும், மருத்துவப் பயன்களுக்கும் அழிக்கப்பட்ட புலிகள் ஏராளம். இன்று எண்ணிக்கையில் அடங்கிவிடக்கூடிய அளவிலே புலியினம் இந்தியாவில் உள்ளது. ஆதிவாசிகளுக்கு புலி தெய்வம் (நமக்குத்தான் அது கொடிய விலங்கு எனப் பயிற்று விக்கப்பட்டுள்ளது). அவர்கள் அதைத் தம் வாழ்வின் ஒரு பகுதியாகப் பார்க்கின்றனர். சம வெளிக்கு வந்த மனிதன் கூட ஐயப்பன், காளி என்று புலியை வணங்கி வந்திருக்கிறான். ஆனால் இயற்கையையும் ஆதிவாசிகளையும் உயர்த்திப் பேசுவதாகக் கூறும் பேராண்மை திரைப்படத்திலோ “காட்டுப் புலியடிச்சு காட்டு ராசன் கொண்டு வராண்டா'' என்று புலியடித்த வீர காவியத்தைக் கூறும் மடமையைச் செய்து அதற்கு ஆதிவாசிகள் ஆடுவதாய் வேறு காட்டியிருக்கின்றனர்.

2009 மே மாதம் முள்ளி வாய்க்காலில் நடந்த போரில் / இனப்படுகொலையில் புலிகள் வீழ்த்தப்பட்டனர். வெண் கொடி ஏந்தி வந்த அரசியல் தொடர்பாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனைத்துப் போர் நியமங்களையும் மீறி மக்கள் சிதிலமாக்கப்பட்டனர். இந்நிகழ்வை அக்டோபர் 2009இல் வெளியான இப்படம், முள்ளி மலையில் மக்களைக் கொன்றுதின்று அச்சுறுத்திய புலி காட்டில் திரிய அதைப் பிடிக்கச் சென்ற ஆதிவாசி துருவன் மூன்று நாட்களாய் அலைந்து ஒற்றையாளாய் புலியை வீழ்த்தி வலையில் இட்டுத் தூக்கி வருவதாகப் புனைகிறது. புலியை வெற்றிகொண்ட வீரனைப் பாராட்டி பாட்டுப்பாடி, மாலையிட்டு வரவேற்கின்றனர், ஆதிவாசி மக்கள். எவ்வளவு கொடூரமான சித்தரிப்பு. தென் இலங்கையிலே இராசபட்சே வைப்பாராட்டி அவரது கட்சியினரும், சிங்களக் காடையினரும் செய்கின்ற செயலை, உலகில் மக்கள் நேயமுள்ள, அன்பு கொண்ட எவரும் செய்வதற்குக் கூசும் செயலை ஜனநாதன் (பிம்பங்களாக்கி பதிவு) செய்திருக்கிறார். படத்தின் தொடக்கத்தில் முள்ளி (வாய்க் கால்) மலையில் புலியைப் பிடித்தவர், படத்தின் இறுதியில் தமிழ் (நிலத்திலிருந்து) மலையிலிருந்து சண்டையிட்டுப் பாதுகாத்து இந்தியாவின் / இந்திய மக்களின் (MNC, முதலாளி, அரசியல்வாதிகளின்) நன்மைக்காக வெள்ளி மலையிலிருந்து ("இந்திய தேசத்தின் உச்சமாக உருவகப்படுத்தப் பட்ட வெள்ளி (பனி) மலையான இமய மலையை பாரதியார் பாடலின் வழியாக நினைவு கொள்க') ஏவப்படும் துணைக் கோளிற்கு வந்த ஆபத்தை நீக்கி வானில் ஏவச் செய்து தமிழன் பெருமையை விண்ணில் நிலைநாட்டுகிறார். இக்கதையாடல் மூலமாகத் தமிழ் அடையாளத்தை / தொல் அடையாளத்தை அழித்துத் தேச அடையாளத்தின் மீது ஏற்றுகிறார்.

“சிகரத்திலிருந்தும் நாங்க வளராம இருக்கோம்'' என்ற வைரமுத்துவின் வரிகள் எப்படி இவர்களின் நகரமயச் சிந்தனைகளிலிருந்து ஓர் ஆதிவாசி வாழ்க்கையைக் கண்டு தங்களின் கருத்துக்களை அவர்கள் மேல் சுமத்துகின்றனர் என்று பார்த்தால் இவர்கள் அனுபவ வறட்சியை நினைத்தும் "வளர்ச்சி' என்பது குறித்த சிந்தனைகள் கண்டும் நமக்குக் கோபம் எழுகிறது.

கூட்டு வாழ்வு, பொதுஉடைமை போன்ற இணைந்த வாழ்க்கையிலிருந்து வெளிவந்து இன்று தனி நுண் அலகுக் குடும்பம், தேவைக்கான வகையில் மட்டும் உறவு, பணம் மற்றும் லாபம் சார்ந்த நோக்கு, அன்பிலாத உறவுகள் என்று பல்வேறு சிக்கல்களும், மனம் சார்ந்த உடல் உபாதைகளையும் கொண்டு தனியாக கழிவிரக்கத்தில் எதன் மீதும் நம்பிக்கையோ பாசமோ, அன்போ, ஆதரவோ காட்டாத தனி மனிதர்களாய், மக்கள் மாற்றப்பட்ட சூழலில் ஆதிவாசிகளைப் பார்த்து “நாங்கள் வளராம இருக்கோம்'' என்று அவர்களைக் கூற வைப்பது எவ்வளவு பெரிய மடமை. உங்களது ஏவுகணைகளும், உயிரித் தொழில்நுட்பமும், மரபீனி விதையும், டி.வி.யும், விமான, கார் போக்குவரத்தும், செல்போனும், மெக்காலே கல்வியும், மனச்சிதைவும், உடல் உபாதைகளும், தற்கொலைகளும், பைத்தியக்காரத்தனமும் (ஆதி வாசிச் சமூகங்களில் மனச்சிதைவும், பைத்திய நோயும், தற்கொலையும் இல்லை) போரும், நயவஞ்சகமும், அழித்தொழித்தலும் சிறையும், கைதும், மரண தண்டனையும், இனப்படுகொலையும் தான் வளர்ச்சியா? இல்லை, நாம் இவற்றை வீக்கம் என்றே கொள்ள முடியும். இதைப்பார்க்கில் ஜனா தனது நோக்கத்தில் முற்றுமாகத் தோல்வியுற்றுள்ளார் என்பதே பொருந்தும். நாம் பேசிய விஷயங்களைத் தாண்டி இப்படத்தினை அரசியல் நோக்கில் பொருத்திப் பார்த்தால் மார்க்சியத்தைக் குறித்த தவறான சவலைப் பிள்ளைப் புரிதலைத்தாண்டி எதையும் வெளிக்கொணரா அரசியல்தான் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

மே 2009இல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தங்களின் தொன்ம நிலத்தில் தங்கள் சனங்கள் லட்சக்கணக்காக கொல்லப்படுவதைக் கண்டு திகைத்த னர், துயறுற்றனர். அழுது புலம்பி கண்ணீர் வடித்தனர். துயரின் மற்றொரு காரணம் இந்தியா அந்தப் போரை பின்னிலிருந்து சகல உதவிகளும் கொடுத்து இயக்கியது. இதற்கு ஆளும் (மத்திய அரசு) காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளே முக்கியக் காரணம். அகில இந்திய அளவில் இப்படு கொலையைப் பற்றி மூச்சுவிடாத கட்சிகள் இரண்டு, முதல் கட்சி காங்கிரஸ், இரண்டாவது கட்சி சிபிஎம். தொடக்கம் முதலே புலிகளையும், தனிஈழம் கோரிக்கைகளையும், எட்டிக் காயைப்போல் பார்த்து வந்த கட்சி சிபிஎம். அது இறுதிவரை ஒன்று பட்ட இலங்கையையே கோரி வந்தது.

உலக மெங்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சியை விரும்பும் சிபிஎம் மார்க் சிஸ்டுகள் இலங்கையில் மட்டும் மகிந்த இராசபட்சேவின் பின் அணிவகுத்தனர். அங்கு ஓடிய செங்குருதி கொண்டு தம் கொடிகளில் மேலும் சிவப்பை ஏற்றிக் கொண்டனர். இவர்கள்தாம் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, விளிம்பு நிலை மனிதர்களுக்காய் குரல் எழுப்புபவர்கள், இவர்கள்தான் இந்தியாவின் இராணுவத் தலையீட்டை இலங்கையில் எதிர்க்காதவர்கள், இவர்கள் அமெ ரிக்கத் தன்மையையோ, அமெரிக்காவின் வளர்ச்சி குறித்த பார்வையையோ எதிர்க் காமல், வெறும் தேசமென அமெரிக்காவை மட்டுமே எதிர்க்கும் பக்கவாதம் கொண்ட மார்க்சியர்கள். மற்றபடி இவர்களுக்கு அணு ஆயுத வல்லரசு, இராணுவ வல்லாதிக்கம், கார்க்கில் போர், காஷ்மீர் அடக்குமுறை, ஈழம் மீதான போர், எம்.எஸ்.சுவாமிநாதன், விவசாயத்தில் தொழில்நுட்பப் புரட்சி, SEZ காக, பாலியபால் ஏவுகணைத் தளத்திற்காக, TATA வின் நானோ தொழிற் சாலைக்காக, சலீமின் கனிமத் தாதுவிற்காக, ஆதிவாசிகளையும் மக்களையும் வெளியேற்றுவது என்பது எல்லாம் உவப்பானதுதான். அதனால்தான் புலியைப் பிடித்துக் கொண்டாடி, பாட்டுப் பாடி, தமிழ் நிலத்திலிருந்து பசுமை என்னும் பெயரில் செயற்கைக்கோள் செலுத்தி இந்திய தேசிய பார்ப்பனீய பனியா கட்டமைப்பின் மேன்மைக்காக ஆதிவாசி துருவனை போர்களம் காணச் செய்திருக்கிறார் ஜனநாதன்.

இதற்காக மாவட்ட வாரியாக ஜனநாதனுக்கு த.மு.எ.ச. அமைப்புகள் விழா எடுத்து கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பின்னே ஒரே படத்தில், ஆதிவாசிப் பிரச்சனையைச் சொல்லியாச்சு, வேளாண்மையைப் பத்தி பேசியாச்சு, தொழில்நுட்ப வளர்ச்சி வேணும்னு கோரிக்கை வைச்சாச்சு, பெண்களுக்கு 82 சதவீதம் கொடுத்தாச்சு, இலங்கைத் தமிழர் துயர் துடைச்சாச்சு (புலியை அழித்து), ராக்கெட் விட்டாச்சு, இந்திய அரசைக் காப்பாத்தியாச்சு. இந்த மாதிரி மார்க்சியக் கருத்துகளை இன்னும் கட்சி கூட வெளிப்படையா சொல்ல முடியலையே.

பெண்கள் கல்லூரியிலிருந்து  NCC (தேசிய மாணவர் படை) குழுவினர் மலைப்பகுதிக்கு பயிற்சிக்கு வருகின்றனர். சிறப்பாக பயிற்சி பெற்ற ஐவரைத் தேர்ந்தெடுத்து டில்லியில் நடக்கும் குடியரசு தின அணி வகுப்பு விழாவிற்கு அனுப்புவார்கள். ஆனால், இப்படத்திலோ சிறப்பாக பயிற்சி பெற்ற ஐவரை விடுத்து, மோசமாக பயிற்சியெடுத்த ஐவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

கல்லூரிப் பேருந்தில் மாணவிகள் கேலி, கிண்டல் பேச்சு தொடங்குகிறது. மொத் தமாக 50க்கும் குறையாத மாணவிகள் இருக்க ஐவர் மட்டும் முன்னிலைப் படுத்தப்படுகின்றனர். மற்ற மாணவிகள் வகுப்பிலும், பயிற்சியிலும் சரியாகச் செயல்பட, இவர்கள் மட்டுமே துடுக்குத்தனமாகவும், துருவனுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்புணர்வைக் காட்டி சிரமங்களையும் ஏற்படுத்துகின்றனர். இதற்கு சாதியுணர்வு முக்கியப் பங்காற்றுவதாகக் காண்பிக்கப்படுகிறது. கிராமத்தில் ஆதிக்க சாதி மனோபாவம் தொடர்ச்சியாக ஊட்டப்படும் போதும், சாதி ஆதிக்கத்திற்கான தேவைகளை நிலை நாட்டும்போது தான் சாதிய அடக்கு முறை வெளிப்படும். ஆனால், இங்கு காண்பிக்கப்படுவதோ நகர்புறம் சார்ந்த, தமிழில் கடிதம் எழுதுவதற்குக் கூட தெரியாத மாணவிகள் இவர்களைத் தான் சாதி மனோபாவம் கொண்ட பெண்களாகக் காட்டுகிறார் இயக்குநர். இவர்களுக்குப் பயிற்சி அளிப்பவரின் பெருமை தெரியவில்லை, எருமைக் கன்று ஈனுவதை மருத்துவம் பார்க்கும் மகத்துவம் தெரிவதில்லை, ஆதிவாசி இளைஞன் துப்பாக்கிச் சுடுதல், கூடைப் பந்து, கால்பந்து விளையாடுதல், வகுப்பெடுத்தல், பயிற்சி அளித்தல் என சகல கலைகளிலும் சிறந்து விளங்குவதில் மரியாதை வருவதில்லை என்று காட்டி விட்டு கூலிப்படையில் ஒருவனைக் கொல்வதைப் பார்த்து மதிப்பு வரும்படி காட்டியுள்ளனர். இந்தப் பண்பையுடைய பெண்கள் தான் தேசம் செலுத்தும் ஏவுகணைக்கு பிரச்சனை என்றவுடன் உடனடியாக துப்பாக்கி தூக்கி சல்யூட் அடித்து உறுதி பூண்டு தேசம் காப்போம் ! என சபதம் செய்து கிளம்புகிறார்கள். ஜெய் ஹிந்த்!

1. ஏய்! என்னுடைய ஜட்டியைக் காணோம், என ஆரம்பித்து மஞ்கள் ஜட்டியா... இவ போட்டிருக்கிறத பாத்தேன்! என்று கூறி அதை அணிந்திருந்த பெண்ணிடமிருந்து கட்டாயப்படுத்தி உருவி அவிழ்த்து அதை முகர்ந்து பார்த்து ஐயே! என முகத்தைத் திருப்புவது ஓர் அழகுக் காட்சி.

2. துருவன் தனது கைத்துப்பாக்கியைத் தொலைத்துவிட்டு தேடுகையில், அவரிடம் உங்ககிட்ட நிஜமாகவே துப்பாக்கி இருக்கா சார் என்று அன்பாகக் கேட்பது.

3. துருவனை சிக்க வைப்பதற்காக இரவு 12 மணிக்கு விடுதிக்கு வரச் சொல்லி, காட்டுக்குள் போகணும்னா நிர்வாணமாக வரச் சொல்கிறார் என ஒரு பெண்தானே முன் வந்து நிர்வாணமாய் நடப்பது ஒரு தீரம் மிகுந்த காட்சி.

4. விடுதி அறைக்குள் ஆண்/பெண் கொஞ்சும் விரச ஒலிகளை எழுப்பி வார்டன் வடிவேலுவைத் தூண்டும் குறும்பு மிகுந்த காட்சி.

5. மெதுவடை நல்லாயிருக்காம்! சாருக்கு ரொம்பப் பிடிக்கும்போல இருக்கு என்று இதமாய்ச் சொல்வது.

6. மலை உச்சி டெண்டில் குளிர்கின்ற இரவில், சார் பாம்பு காட்டறேன்னு சொன்னீங்க, இதுவரை காட்டலையே என்று ஆசையாய் கேட்பது.

7. காட்டுக்குள்ள போறதால நம்ம கற்புக்கே ஆபத்து வரும் கற்புன்னா என்னடி? என்று வெகுளியாய் கேட்பது.

8. சார் நீங்க குளிருக்கு நெருப்பு போட்டு சூடாக்கிட்டீங்க, எங்ககுளி ருக்கு என்ன பண்ணுவீங்க? என்று நடுக்கத்துடன் கேட்பது.

9. மலைக் கிராம செக்போஸ்ட்டின் அருகேயுள்ள பெட்டிக்கடையில் பலூன் எடுப்பதுபோல் ஆளுக்கொரு ஆணுறை வாங்கி, காட்டுக்குள்ள போறோம், ஏதுக்கவாதுன்னா இது வேண்டாமா? என்று முன்யோசனையுடன் கேட்பது

போன்ற பெண் விடுதலைக் கருத்துக்களைப் படம் முழுதும் வைத்திருக்கிறார் ஜனா. இதற்காக வேணும் அவரைத் தனியாகப் பாராட்டவேண்டும் (ஜனநாயக மாதர் சங்கத்தினர் மன்னிப்பீர்களாக). எல்லா குட்டி நகரங்கள் முதற்கொண்டு பெருநகரங்கள் வரை ஒரு கதை உலாவும். பெண்கள் ஹாஸ்டலில் பால் கொடுக்கும் பால்காரன் மர்மமாய் இறந்துவிட்டான், ஹாஸ்டலில் கொலை செய்யப்பட்டுவிட்டான். ஆணுறுப்பு விரைத்து காயம்பட்டுக் கிடந்த நிலையில் இறந்திருக்கிறான் (நினைவுக்கு : அண்ணாமலை ரஜினி படம்) என. பெண்கள் கூட்டமாய் இருந்தால் எதையும் செய்யத் துணிவார்கள். தனியாக இருக்கும் பெண் அவள் யாராக இருந்தாலும் ஓர் ஆணைத் தன் காம வலையில் சிக்க வைப்பாள் மனுநீதி வழிவந்த ஆணின் பெண் குறித்த அச்சம்; இவை நமக்கு போதித்து வந்திருக்கும் பெண் குறித்த பிம்பங்களை எந்தவிதக் கேள்வியுமின்றி கையாண்டிருக்கிறார் ஜனா. இதன்மூலம் ஆணாதிக்கச் சமூகக் கருத்துக்களை, பெண்ணின் உடல், மொழி, மனம், காமம் குறித்த பதிவுகளை மீள் கட்டமைப்பு செய்திருக்கிறார். ரவியை (பேரா) ஆண்மை உடையவனாகக் காண்பிப்பதற்கு மற்ற பெண்களை வில்லி போலச் சித்தரித்துள்ளார்.

என்ன இருந்தாலும் இறுதியில் ஆண் மகனிடம் அடங்கித்தானே ஆகவேண்டும் என்ற எம்ஜிஆர் பார்முலாவில் தேசபக்தி கீதம் பாடி இவர்களை ஒன்றிணைப்பது அற்புதம்! பெண்ணின் தனித் தன்மையான பெண்ணியத் தன்மைகளோடு படைக்காமல் அவளையும் ஆண் தன்மைக்கு / ஆணியப் பார்வைக்கு ஏற்ப வார்த்தல் என்ற அபத்தச் சமநிலையை ஜனா முன் வைத்திருக்கிறார்.

தேசிய மாணவர் படை பயிற்சிக்கு வரும் ரோசா கல்லூரி மாணவிகளில் ஐந்து பேர்களுக்கு peranmai-photos-02மட்டும்தான் கதையாடல் முக்கியத்துவம் தருகிறது. இந்த முக்கியத்துவம் சில வேலைகளில் இந்தப் பெண்கள் பயிற்சி பெறுவதை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதாகப் புனைந்திருக்கிறார்கள். தேசிய மாணவர் படை பயிற்சி, துணை ராணுவ பயிற்சிக்கு இணையானது. அது பெண்ணுடலை எங்ஙனம் மாற்றம் கொள்ளச் செய்கிறது. எங்ஙனம் உடல்களை ஒரு குறிப்பிட்ட பயிற்சிக்கு ஆட்படச் செய்வதால் அவற்றை உள ரீதியாக மாற்றம் கொள்ளச் செய்ய முடியும், எவ்வாறு போரற்ற காலங்களில் போருக்கான ஆயத்தங்கள் உடலையும் மனதையும் தயாரிக்கின்றன என்பது போன்ற பிரச்சனைகளுக்கு கதையாடலில் இடமில்லை. பெண்ணை அவள் சிந்தனையை அவள் உடலைக் கட்டமைக்கும் நுண் அதிகார முறைமைகளை கதையாடல் கேள்விக்குட்படுத்தாததால் அவற்றை இயல்பாய், இயற்கையாய் பாவிக்கிறது எனப் புரிந்துகொள்ள இடமளிக்கிறது. பயிற்சிக்கு வந்த பிற பெண்களின் அனுபவங்களை இந்த ஐவரின் மூலமாக கதையாடலின் நகர் பிம்பங்கள் (படிமங்கள்) உணர்த்த முனையவில்லை. இந்த ஐவரின் தனிப்பட்ட அனுபவங்களையும் வெளிக்கொணர எத்தனிக்கவில்லை. கதையாடலின் சம்பவக் கோர்வைக்குள் வந்துபோகும் இவர்கள் “இவன்தான் நாயகன்'' “இவன்தான் நாயகன்'' என் பதைப் பார்வையாளனுக்கு உணர்த்து கிற, சராசரி வணிக சினிமா, கட்டமைக்கிற கதாநாயகித்துவ கூறுகளாகத்தான் செயல்படுகிறார்கள். இந்த சம்பவங்களின் முதல் பகுதி தங்களது பயிற்சியாளராக வரும் நாயகன் தங்களது குருவாக இருக்கத் தகுதியில்லாதவர் காரணம் அவன் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவன். இனத்தையும் சாதியையும் வேறுபடுத்த முடியாத அறிநிலை அல்ல இங்கு பிரச்சனை. அறிநிலை செயல்பட வாய்ப்பே இல்லாத வெறுப்பை உமிழ் கிற உடல்களாய் தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள். நாயகனை பயிற்சியாளன் அந்தஸ்திலிருந்து விலக்க அவர்கள் தற்கால அதிகார கட்டமைப்பை இயக்குபவரான வன அதிகாரியை பயன்படுத்திக் கொள்கிறார்கள். மரபான அதிகார கட்டமைப்பான குடும்பத்தையும் தம்பிகளைத் தங்களின் பாது காவலனாக நாயகனின் மீது வன்முறை செலுத்தச் செய்கிறார்கள். தங்களுக்குள்ளே நாயக வெறுப்புக்கு எதிர்ப்புக் குரல் கிளம்பும்போது, “கேவலமாக கிசு கிசுப்போம். உன்னையும் அவனையும் சம்பந்தப்படுத்தி பாத்ரூமில் எழுதி வைப்போம்'' என உடனடி அதிகார மையத்தின் மூலம் தங்களின் பயத்தை (வீரமாய்) மறைத்துவிடுகிறார்கள். தங்களைப் பாதிப்பிற்கு ஆட்பட்டவர்களாய் வெளிப்படுத்தி தற்கால, மரபான உடனடி அதிகார மையங்களை நாயகனை வீழ்த்தவென திருப்புகிறார்கள். மொத்தத்தில் இவ்வதிகார மையங்கள் பெண்ணை அவள் சிந்தனையை, உடலை எவ்வாறு ஆயிரம் விதங்களில் கட்டமைக்கிறது என்கிற வரலாற்றுத் துயரை எதிர்கொண்டு மாற்றுகிற திராணியற்று, பொதுபுத்தியில் தங்கியிருக்கும் “பெண்கள் பாதிப்பிற்கு ஆட்பட்டவர்களாக வேஷம் போடுகிறவர்கள்'' என்கிற பிம்பத்தை இப்படத்தின் முதல்பாதி கதையாடல் மறு உருவாக்கம் செய்திருக்கிறது. இந்த மரபான, தற்கால, உடனடி அதிகார மையங்களைத் தங்களின் வெறுப்பை நியாயப்படுத்தப்  பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இவற்றைவிட்டுப் புறத்தே திரிவதாகக் காட்டிக்கொள்ள மொழி, உடல் விளையாட்டுகளை கதையாடலில் இணைத்து வணிக சினிமா கதையாடலிருந்து மாற்றாக அல்லாமல் மற்றொன்றாய் ஆக்கியிருக்கிறார்கள். கேட்க : ஜீப் தறிக்கெட்டு ஓடும்போது அவர்களின் அபயக் குரல்களை காலம் காலமாக வணிக சினிமாவில் வெளிப்படும் பெண் பயந்தவள் என்கிற குரலின் சமிக்ஞை. (பார்க்க Charlie’s angel என்ற ஹாலிவுட் திரைப்படம்).

அதிகாலையின் அமைதி என்ற ருஷ்ய நாவலை / ருஷ்ய படத்தையும் மறந்து விட்டு கதையாடலின் இரண்டாம் பகுதிக்கு நகரும்போது, விண்கல பாதுகாப்புக்கான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, முதல் பகுதி கதையாடலின் தொடர்ச்சி வெளிப்படாமல் இருக்க காளி, பரா சக்தி, முகமூடியை அணிவித்திருக்கிறார்கள். முதல்பகுதியின் குணரூபத் தொடர்ச்சியே இரண்டாம் பகுதியிலும் வெளிப்படுகிறது. துணை ராணுவ பயிற்சி எனும் புதிய தளத்தில் பெண்ணின் சிந்தனையை, உடலை எவ்வித நுண் அதிகாரம் கட்டமைக்கிறது என்ப தல்லாமல் நாயகிகளை சில வித்தைகளைக் கற்றவர்களாக மட்டுமே (அறிநிலை வெறுப்பால் முடங்கி கிடக்கிறது என்பதையே) முதல் பகுதியில் வெளிப்படுத்தினார்கள். இரண்டாம் பகுதியிலும் பயிற்சியாளரின் கொலைத் திட்டங்களுக்குத் துணை நிற்பவர்களாக, போர்க் கருவிகளை இயக்குபவர்களாக, தங்களின் சகதோழியின் உயிருக்காக பழி/லி வாங்குபவர்களாகக் காட்டினுள் ஊடாடுகிறார்கள். இவர்கள் மொத்தத்தில் தேசத்தின் சொத்தைப் பாதுகாக்க கருவிகளை இயக்கும் பயிற்சி கொண்ட இராணுவத்தையே ஞாபகப்படுத்துகிறார்கள். இவர்கள் தேசப் பாதுகாப்பு ராணுவ கருவிகளாக தங்களையே மாற்றிக் கொண்டவர்கள். தேசப் பாதுகாப்பு பூதாகரப் பிரச்சினையாக முன்வைக்கப்படுதால் இவர்கள் கருவிகளை இயக்கும் பயிற்சிக் கொண்ட இராணுவத்தின் கருவிகள் என்பது இயல்பாக்கப்படுகிறது. இந்த இயல்பாக்கமும் தோழியின் கொலைக் கெதிரான பழி வாங்கும் நடவடிக்கையாக வணிக சினிமா பாணிக்குள் சுருண்டு விழுகிறது. தேசப் பாதுகாப்பு அபாயத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளின்போது, முதல் பாதியின் நாயக வெறுப்பு, பிற்பகுதியில் நாயகன் எதிரணியைத் தாக்கும் செயலாக்கத்தினால் நாயகப் பெருமிதமாக உருமாறுகிறது. இந்தப் பெருமிதத்தோடு மீண்டும் தங்கள் இயல்பாக்கப்பட்ட நிலைமைக்கு, எந்த அனுபவமும் கேள்விக்கு உட்படுத்தாத சிந்தனைகளோடு / உடல்களோடு, பெண்கள் ராணுவ மிடுக்குடன் சோகமான நினைவுகளின் காயங்களுடன் (சீக்கிரமாக ஆறிடும் சாமி) செல்கிறார்கள்.

கதையாடலில், ஆதிவாசிகளின் மீதான தாக்குதல் மற்றும் இடப்பெயர்ப்பு, பயிற்சிக்காக வந்த தேசிய மாணவர் படை மாணவிகளின் கதி என்னவாயிற்றோ என ரேஞ்சரின் தேடுதல் வேட்டையின் போது நிகழ்கிறது. இனத் தூய்மையின் உருவகமாக கற்பு கொள்ளப்படுகிறது. அது பாதிப்புக்குள்ளாகிறது என்கிற யூகம்கூட, மாற்றினத்தாருக்கு எவ்வித இடமும் இல்லாமல் அப்புறப்படுத்துவதாலேயே தன் இனம் காக்கப்படும் என வெறியாட்டம் கொள்கிறது. இந்த இனவெறி, அரசு அதிகாரமாக வெளிப்படுவது குரூரத்திலும் குரூரம். எந்த இனம் பாதுகாக்கப்பட உகந்தது என்பதை அரசு தேர்வு செய்யும்போது, அந்த தேர்வின் அநியாயத்தை எடுத்துரைத்தால் கூட, கேள்வி கேட்கும் இனத்தை அழித்தொழிக்கும் நியாயத்தை அரசு கற்பித்துக் கொள்கிறது. ஓர் அரசின் இனவெறி யார் வாழத் தகுதியுள்ளவர்கள் /தகுதியில்லாதவர்கள், என்பதில் தீர்மானமாக இருக்கும்போது, செயல்பாட்டில் இருக்கும் பல்வேறு இன வெறியை வெளிப்படுத்தும் நுண் அதிகார மையங்களைத் தனது அதிகாரத்திற்கெனப் பயன் படுத்திக்கொள்ளும்.

ஒரு குடிமகளி/னின் பிறப்பு எவ்வினத்தில் நிகழ்ந்தது என்பது அவள் / ன் வாழும் தகுதியைத் தீர்மானிப்பதால், ஒவ்வொரு இனமும் மற்ற எல்லா இனங்களின் வாழ்வுக்கு எவ்வாறு பங்க ளித்துள்ளன என்கிற வரலாறு காணாமல் போகச் செய்யப்பட்டு, உயர்ந்த / தாழ்ந்த இனங்கள் எனும் ஏற்றத் தாழ்வை இயல்பாக்க அப்புள்ளியை ஆரம்பமாக கொள்கிற பேரின வரலாறு ஒன்று எழுதப்படும். இந்தப் பேரின வரலாறு பொதுபுத்தியைத் தீர்மானிக் கும்போது மேலிருந்து கீழாக எல்லாத் தளங்களிலும் இனவெறி இயல்பாக்கப்படும். எல்லா தளங்களிலும் செயல்படும் இந்த பலதள வன்முறையை வெறும் திறமையைப் புரிந்துகொள்ளாத மனப் பிரச்சனையாக, அறிநிலை குறைபாடாகக் கதாநாயகிகளின் மூலம் கதையாடலில் மாற்றியிருக்கிறார்கள். இந்தப் பலதள வன்முறையைப் பற்றி கேள்விகள் எழாதவாறு தேசப் பாதுகாப்பைக் கடமையாகத் தேர்ந்து கொண்ட அரசு ஊழியராக, தேசப்பாது காப்பைப் பயிற்றுவித்து செயல்படச் செய்யும் பயிற்சியாளராக நாயகனின் செயல்பாட்டையும் கதையாடலில் மாற்றியிருக்கிறார்கள். (நம்ம சக்திகளை எதிரிகளை அழிக்கத்தான் பயன்படுத்தணும்) எனவே, கதையாடலில் காதல் மட்டுமல்ல, இந்தப் பலதள வன்முறையும் ஒரு காட்சியாக மட்டுமே வந்து போகிறது.

பேராண்மை படத்தலைப்பின் முன் வரையப்பட்டுள்ள பாம்புச் சின்னம், அசப்பில் பார்த்தால் குறிபார்த்துச் சுடும் இலக்குப் பலகையின் தோற்றம் போலிருக்கும். ஆதிவாசி கதாநாயகன் நவீன ராணுவ உடையணிந்து உயர்வகை தொழில்நுட்ப அம்பு வில்லுடன் குறி பார்த்து நிற்பதாகத் தோற்றம், காட்டுகிறது.

தன் வாலை தானே விழுங்கும் பாம்புப் படமானது, மிகப் பழமை வாய்ந்த சித்த ஆன்மீக மரபுகளிலும், நாகர் வழிபாட்டிலும் தொடர்ந்து வரும் சின்னம் சார்ந்த தொன்மத்தில் ஒன்று. ஒரு பாம்பு தன் வாலைத் தானே முழுங்குதல் என்பது தன்னை, தன் மனத்தை அறிதல், அடங்குதல் என்ற புலனறிவைக் கடந்த அக விழிப்பைச் சித்தரிக்கும் பரிபாஷையைக் கொண்டது. ஆனால் இங்கோ (பேராண்மை படத் தலைப்பில்) இந்தப் பாம்பானது இரு தலையுடன் மண்ணுள்ளிப் பாம்பைப் போன்று அதுவும் துப்பாக்கி சுடும் இலச்சினையாக உரு மாற்றம் பெற்றிருப்பது மரபுகளின் வேர் நுனியைக் கூடப்பிடிக்காமல் தொன்மங்களின் அர்த்தத்தையும் அறியாமல் புரியாத் தன்மைகளைப் பிரம்மாண்டமாகவும் (பேராண்மையாகவும்) விளம்பரம் செய்வதால் வரும் வீழ்ச்சியாகும்!

"அகந்தையை அழித்தல்' என்ற குறி உள்நோக்கிச் செல்வது. குறிதானல்ல. புறத்தில் உள்ளது என்ற பார்வை "புறத்தை அழிக்கும்'... தன்னைச் சுடும், வீக்கத்தை வளர்ச்சியெனக் காணும். அழிவை வெற்றியெனப் பார்க்கும். இந்தப் படம் தொடக்கத்தில் இருந்தே அந்தத் தவறைச் செய்துள்ளது.

ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் வரலாற்று நோக்கில் ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், “பழங்குடிகள், பொதுவுடைமைப் பண்பு கொண்ட குழுக்கள், இனக் குழுக்கள், சிற்றரசுகள் ஆகியவற்றைத் தங்களுடைய பண்பிலிருந்து பெரிய அளவும், வலிவும் கொண்ட நாடாக மாற்றுவது என்பது அவசியமாயிருந்தது. அப்போது இயற்கையையும், பாம்பு, குரங்கு, புலி போன்றவற்றை வழிபட்டு வந்த மக்கள் கூட்டத்தை உள்ளிழுத்து ஒரு பெரிய நாடுபோல் நிர்வகிக்கத் தேவை எழுந்தது. அதற்காக மக்களைக் காட்டிலிருந்து நாட்டிற்கு இழுக்கவும், சமவெளிச் சமுதாயத்தை நிர்வகிக்கவும் தேசம் அவசியமாயிருந்தது. அதற்குக் காவலுக்கு அணி, ஆயுதங்கள், போருக்குப் படை, நிர்வகிக்க அரசு வேண்டியிருந்தது. அரசு அதிகாரம் ஒரு சிறு குழுவின் கட்டுப்பாட்டிலிருக்க, ஒற்றை தலைமைத் தன்மை, பரம்பரை மூலம் வழிவழியாக வரும் அரச பதவி போன்ற முறைகளையும், அரசனே தெய்வம் என்ற பிம்பங்களையும் ஏற்படுத்த வேண்டியிருந்தது. இதற்காக இனக் குழு சமுதாயங்கள், கூட்டு சமூகங்கள் ஆகிய வற்றை ஒருவன்/ ஒருத்தி என்ற சிறு குடும்ப அலகாக மாற்ற இராமன் போன்ற ஒரு புனித கதாநாயகனின் தேவை வேண்டியிருந்தது என்று விவரிக்கிறார்கள். இந்த ஒற்றை பிம்பத்தின் மூலமாக சிறு, குறு சமுதாயங்களை ஒரு பெரிய தேசப்பிம்பத்தில் இணைப்பது என்பது சாத்தியமானது. வாலி, சுக்ரீவன் (குரங்கு), ஜடாயு (பறவை), ஜாம்பவான் (கரடி) என்ற சிறு தெய்வ, இயற்கை வழிபாட்டுக் குழுக்களை ஒன்றிணைத்து அல்லது வெற்றி கொண்டு ஐம்பு நாவலந்தீவிலிருந்து படை கிளம்பிச் சென்று இலங்கையை வென்றது புராணம்.

இதுவே பின்னர் மகாபாரதம் மூலம் தயாதி சண்டைகளில் ஆட்சியைப் பிடிக்கவும், இரத்த சொந்தங்களை போரில் கொல்வது தர்மம்தான் என்று பரிணமித்து பின்னர் மனுநீதியாக வடி வெடுத்து ஒற்றை ஆணாதிக்க ஆட்சி மட்டுமல்லாமல், மதச் சிந்தனையாக வும் உருவாகி இன்றுவரை இந்திய மனங்களில் கெட்டித் தட்டிப் போய் உறைந்திருக்கிறது.

எனவேதான், ஜன சங்காகத் தன்னைப் புறத்தே காட்டிக்கொண்ட ஆர்.எஸ்.எஸ். 1983இன் நாடாளுமன்ற தேர்தலில் 2 இடங்களைப் பிடித்த பாஜக.யின் மூலமாக அகண்ட இந்திய தேசக் கனவின் (நேபாளம், திபெத், காஷ்மீர், பாக்கின் பகுதி போன்றவை இணைந்த பழைய வரைபடம்) நாயகனாக அம்புறாத்தூணி தோளில் தொங்க வில்லேந்தி, குறி பார்க்கும் ஆதர்ச நாயகனாக ராமனை முன்னிறுத்தி ஒன்றைச் சொல்லாலுடன் கூடிய குறு, சிறு தெய்வவழிபாட்டை ஓரம்கட்டி (உள்ளிழுத்து, சீரணம் செய்து) இந்துத்துவ அரசியலாகத் தலையெடுத்தது. (காண்க: ஆனந்த் பட்வர்த Father, Son, Holywar என்ற Docufiction) முன்னாள் காக்கி அரைக் காலாடை ஊழியர் நரசிம்மராவ் பிரதமர் பதவியிலிருந்த போது, நாட்டின் நல்லிணக்கத்தைக் குலைத்து மக்களை இரு துருவங்களுக்குத் தள்ளியதும், இன்று வரை பல்வேறு பிரச்சனைகளின் ஆணி வேராய் விளங்குவதும் எளிதில் ஆற்ற முடியாத புண்ணாக இருக்கும் பாபர் மசூதி இடிப்பு நடைபெற்றது. இவற்றை நாம் ஜனாவின் சலனப் பிம்பங்களை காணும்போது நிழல் தட்டுகிறது.

பேராண்மை திரைப்படம் எடுத்துக் கொண்ட, படைப்பயிற்சி, ஆதிவாசி இனப்பிரச்சனை போன்ற கருவைக் கையாண்ட உலகப்படங்களை ஒப்பு நோக்கினால்:

Full Metal Jacket ( Director Stanley Kubrick)  இன்படி அமெரிக்க அரசு தன் படைக்கு ஆள்சேர்ப்பதையும், அப்படை வியட்நாமில் அப்பாவி மக்களுக்கெதிராக செயல்படும் நேரத்தில் அது எவ்வாறு இளைஞர்களின் சிந்தனைப் போக்கையும், சுதந்திரத்தையும் நொறுக்கி போருக்காக ஓர் இயந்திர மனிதனை உருவாக்குகிறது என்று துல்லியமாய்க் காண்பித்திருப்பார். அப்படத்தில் பயிற்சி எடுக்கு இளைஞர்கள் “எஎஎஎஸ்ஸ்ஸ்ஸார்'' என்றும் “ஓகேகேகே ஸாõõõõர்'' என்று, அடி வயிற்றியிலிருந்து உரக்கச் சொல்வதும், மனிதர்கள் கேள்வி கேட்காமல் அதிகாரத்திற்குத் தலைவணங்கும் பண்பைக் கொண்டவர்களாக, வார்க்கப்படுதலைக் காணமுடியும். இவர்களைக்கொண்டே முன்பின் தெரியாதவனை, ஒரு பாவ மும் அறியாதவனின் தலையைக் கொய்ய முடியும், கையைக் கட்டி முதுகில் பூட்ஸ் காலால் உதைத்துக் கீழே தள்ளி குருவியைப்போல் சுட்டுக் கொல்ல முடியும். அப்பாவி மக்களைக் கரப்பான் பூச்சியெனக் கருதித் தேய்க்க முடியும். இலங்கையில் இலட்சக்கணக் கான மக்கள் இரசாயன குண்டுகள் வீசப் பட்டு கொத்துக்கொத்தாக அழிகையில் ஜனா  NCC மூலம் ஆளெடுத்துக் கொண்டிருக்கிறார்.

Aguirrie, The Wrath of God  வெர்னர் யஹர்சாக்கின் உன்னதத் திரைப்படம். ஸ்பானிஷ் படை ஆதிவாசி மக்களிடத்தை ஆக்கிரமிப்பு நடத்தும்போது அவர்கள் காட்டிய வீரத்தைக் கூறுகிறது.

Rabbit Proof Fence இல் ஆதிவாசி குழந்தைகள் சிறைப்படுத்தப்படுவர். தப்பிக்க வேண்டுமெனில் 1200 மைல்கள் கடக்க வேண்டும். கொக்கையும், பறவையையும் வழிகாட்டியாய் பார்த்து தங்கள் சொந்த மண்ணிற்கும் மக்களுக்கும் ஏங்கி, அதைத் திரும்ப அடைய நினைக்கும் உண்மைக் கதை.

காப்பெல்லோவின் Apocalypse Now  மார்லன் பிராண்டோ நடித்தது. போர் தளபதியாய் இயங்கிய ஒருவன் போர் சம்பவங்களின் ஊடே வாழ்வின் அர்த்தம் உணர்ந்து போர் புரியச் சென்ற மண்ணில் வாழ்ந்து வருகையில், அமெரிக்க அரசுப்படை அவருக்கு எவ்விதமான தீர்ப்பை வழங்குகிறது என்ற படம்.

தமிழின் "எரியும் பனிக்காடு' என்ற நாவல் பச்சைத் தேயிலையின் நிறம் சிவப்பு என்று பதைக்கிறது. "சோளகர் தொட்டி' நாவல், காக்கி அதிகாரத்திற்கும், ஆதிவாசி மக்களுக்கும் இருக்கும் எதிரிடை நிலையை விளக்குகிறது.

இதெல்லாம் ஜனாவிற்குத் தெரியாதா? தெரிந்தும் என்ன செய்வது? குத்தாட்டத்திற்கு பதிலாக நல்ல வடிவாக 5 இளம்பெண்கள், கவர்ச்சியாக பாத்ரூம் பேச்சுக்கள், அருவிக் குளியல்கள், கார் சேஸிங் சண்டைப்பட காட்சிக்காக, ஜீப் மலையில் விழும் காட்சி (ஸாரி அதற்காகவேணும் ஒருமுறை Wages of Fear  1960இல் வெளிவந்தது பாருங்கள்), நாட்டை அழிக்கும் வில்லன்களிடமிருந்து ராக்கெட்டை பாதுகாக்க ஆக்ரோ சண்டை (இறுதியில் அனைத்து ஏரோ நாட்டிக்ஸ் ஹைடெக் லாஞ்சிங் கல்வியெல்லாம் கற்று எதிர் ஏவுகணையின் திசை மாற்றும் சாகசம்). ஹாலிவுட் படங்களின் தன்மையைக் கொடுக்க வாட்டசாட்டமான வெள்ளைத் தோலுடையக் கூலிப்படை வில்லன்கள். முழு மையான ஒரு மசாலா பட அளவுக்குப் பேராண்மை வரக்காரணம் புரியவில்லை; இல்லை தன்னம்பிக்கை குறை கொண்ட இப்படைப்புகள் தமிழுக்கு சாபக்கேடா என்று தெரியவில்லை. மூலதனத்தைப் பற்றி வகுப்பெடுக்கும் ஜனா லாபக்கணக்கை அதைவிடத் தெளிவாகப் போட்டிருக்கிறார் என்று தான் இப்படம் உணர்த்துகிறது.

படத்தைத் தொகுத்துக் கூறினால், சமூகத்தில் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட ஆதிவாசி சமூகப்பிரதிநிதியைக் கொண்டு உரிமைகள் மறுக்கப்படுகின்ற பெண்ணினத்தைத் தேர்ந்து, (நினைவு கூர்க: இந்திய ராணுவத்தின் பாலியல் வன்செயல்களை எதிர்த்து மணிப்பூர் பெண்களின் / தாய்மார்களின் நிர்வாணத்தை (போர் ஆயுதமாய்) ஆடையாய் அணிந்த வீரமிகு போராட்டம்). இவ்விரு கூட்டத்தையும் அந்நிலைக்குக் கொண்டுவரக் காரணமான போர்ப் படைத் தொழிலுக்கு (ஆணாதிக்கம் / போர் / ராணுவம் / மையப்படுத்தப்பட்ட ஒற்றை அரசு) ஆள்பிடிக்கும் வேலையைச் செய்திருக்கிறது ஜனாவின் பேராண்மை படம்.

இதற்காக ஜனாவிற்கு பிராந்திய, தேசிய விருதுகள் வழங்கப்படும். மோகன்லால் போன்று NCCயில் சிறப்பு கமாண்டர் அந்தஸ்து கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தக் கதை தமக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்று உள்ளூர அர்ஜுனுக்கும், விஜயகாந்திற்கும் ஏக்கமாய்த் தானிருக்கும்.

அந்தக் குறையை நீக்க செயற்கைக் கோள் பசுமை 1 னைத் தொடர்ந்து பசுமை 2 வருவதைப் போல், பேராண்மை பகுதி 2யும் ஜனா எடுப்பார் என நம்புகிறோம். தஹினே, பாயே, தஹினே, பாயே, பீச்சே மூட் (ஹிந்தியில்).

-கோபித்திரு

Pin It