Sleeping boyஒற்றைக் கண்ணீர்த் துளியென
இரவின் மீதொரு துயரம்

உயர்ந்த கம்பங்களில்
தெறிக்கின்றது வெளிச்சம்

தார்ச்சாலையின் நீண்ட தனிமையில்
கொதிக்கிறது துயில்

இருளடைந்த வயிற்றுக்குள்
நிரம்பியிருக்கின்றன கைகள்

நூலறுந்த பகல்பட்டம் சிக்கிய
இரவின் துன்ப வனத்தில்
எழும்புகிறது பாடக்கனவு

கால்மடக்கி உடல்குறுக்கி
தலைதொங்கி காலத்தின் கைகளில்
பதுங்குகிறது உழைப்புத் தளிர்

இரக்கமற்ற சுரண்டலின்
குன்றாத வெப்பத்தில்
கனறுகிறது துரத்தப்பட்ட சுவாசக் காற்று

உழைத்துப் பசித்த அயர்வில்
தளும்பி நிற்கிறது
சாத்திய இமைகளோடு உயிர் எழுத்து

வெட்கமேயில்லாமல்
இழுத்துப் போர்த்திக் கொண்டு
மல்லாந்து தூங்குகிறது தேசம்

-யாழன் ஆதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.