Singala army's atrocity

(வவனியாவில் 12.03.2007 அன்று,அடையாளம் தெரியாத ஒரு தமிழர் துப்பாக்கி ஏந்திய போலிஸ்காரால் சுட்டு கொல்லப்பட்டு கிடக்கிறார்.புகைப்படம்:மகாமுனி சுப்ரமணியம்,இலங்கை)

வன்மத்தின் கைகளில்
கிளம்பிய
கொடூரத்தின் புகைமண்டி
கிடக்கிறது வானம்

ரத்தமுறிஞ்சிய புல்வெளி
காய்ந்து
துயருறுகின்றது
பிணவாடையுடன்

துப்பாக்கி வாங்கிய
உயிர்களின் எண்ணிக்கையில்
கணக்கிடப்படுகிறது காலம்

வெறிபிடித்த
ஆதிக்கத்தின் நரம்புகள் புடைத்த
கைகளுக்கு
இரையாகும் மனித உடல்கள்
ஒதுக்கப்பட்டு கிடக்கின்றன.

துருவேறிய துயரத்தின்
மிச்சங்களை வீசியெறிந்து
சுழல்கின்றது வன்முறைக்கான
ஆதிக்க உலகம்

வீழ்ந்த உடல்களின்
கொப்பளிக்கும் குருதியில்
மாள்கிறது மாந்த நேயம்

புறாக்களை சுட்டு வீழ்த்திவிட்டு
புறங்கைகளை துடைத்துக் கொண்டு
சமாதானத்துக்காய்
சர்ப்பங்களை உற்பத்தி செய்கின்றன
கொலைகளுக்காய் கட்டப்பட்ட
அரசதிகாரப் புற்றுகள்

-யாழன் ஆதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.