அலை அடிக்கும் பெருங்கடலை
![Srilankan Tamil refugees](/dalithmurasu/jul06/srilankan_refugees_330.jpg)
கடக்க முடியவில்லை துயரத்தை
அகதி என்னும் சொல்லில்
வெளிறிய வான்வெளி எங்கும்
புதைந்திருக்கின்றன ஓலங்கள்
இரவில் அவை ஆந்தைகளின்
குரல்களாய் அலறுகின்றன
போர்க்காலத்தில் தொலைத்த குழந்தையென
அனாதையாய்க் கிடக்கிறது ரத்தம்
தும்பை மலர்களில் தெளித்த
அதன் வாடை
விடாமல் துரத்துகிறது
கரைமீண்ட உடல்கள் எங்கும்
யுத்தக் கொடூரங்கள்
நரம்புகளை நடுங்க வைக்கின்றன
இழந்த மண்ணில் புதைந்த கண்களை
பிடுங்கிவர முடியாமல்
வெற்று திசையெங்கும் வெறிக்கும் வாழ்வில்
தோன்றுகிறது
போரற்ற ஓர் உலகம்
எல்லைகளற்ற மனித சமூகம்
-யாழன் ஆதி