Woman
(சென்னை வண்டலூர் அருகில் உள்ள கீழக்கோட்டையூர் கிராமத்தில் 25.9.2006 அன்று தன்னுடைய பெண் குழந்தையை கொன்று விட்டதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், சாந்தி என்ற பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்துள்ளனர்)
.
முறுக்கிய கயிற்றின் இறுக்கத்தில்
உடைந்து சிதறுகிறது மனிதத் தன்மை

பார்வைகள் குத்திய மேனியெங்கும்
கசிந்து உறைகிறது அவமானம்

தண்டனைகள் சமாதியாகி தூர்க்கின்றன
வாழ்வின் ஆதார ஊற்றுகளை

குற்றங்கள் மீதாடும் வன்முறைகள்
நாகரிகத்தின் நாக்குகளை அறுக்கின்றன

எவ்வடிவத்திலும் சுடுகிறது பெண்ணை
தப்பிக்கும் ஆணதிகார குவிமய்யம்

நிகழ்ந்துக் கொண்டேதான் இருக்கின்றன
தண்டனை வன்கொடுமைகள்
நீதி அதிகார மீறல்கள்
உண்மையை உண்மையென்றும்
பொய்யை பொய்யென்றும் உணராமல் 

-யாழன் ஆதி
Pin It